ஆதிசங்கரர் அத்வைதம், ஞானம், பக்தி, ஷண்மதம் என போதித்தார். பல நூல்களையும் துதிகளையும் எழுதினார். 32 வயதே வாழ்ந்தார். இந்து மதத்துக்குப் புத்துணர்ச்சி ஈந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆழ்ந்த பக்தஞானி. 50 வயதே வாழ்ந்தார். (1836-1886). அவரது பிதற்றல் கள் வேதம், ஞானம், பக்தி, சமரசம் போன்றவற்றை போதித்தது.
பரமஹம்சரின் சீடர் சுவாமி விவேகானந்தரோ ஒரு கர்மயோகி, ஞான யோகி. சமூகம், பெண்கள் முன்னேற்றம், அவதிப்படுபவர் களுக்கு ஆதரவு போன்றவற்றுக்காக உழைத்தார். அமெரிக்கா மற்றும் பல வெளிநாடுகளில் பக்தி, கர்மம், ஞானம், யோகம், வேதாந்தம் போன்றவற்றை முழங்கியவர். 39 வயதே வாழ்ந்தார். (1863-1902).
அவரது சமகாலத்தவரே ஸ்ரீராம தீர்த்தர். இவரும் விவேகானந்தரைக் கண்டபின் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று இயற்கை வேதாந்தம் (டழ்ஹஸ்ரீற்ண்ஸ்ரீஹப் யங்க்ஹய்ற்ஹ) போதித்தார். இந்திய இளைஞர்களின் கல்வி முன்னேற் றத்திற்கு அமெரிக்கா சென்றிட ஊக்குவித்தவர்; உழைத்தவர். இவர் வேதாந்தி; கிருஷ்ண பக்தர்; கிருஷ்ண தரிசனம் கண்டவர். நாட்டுப்பற்று அதிகம் கொண்டவர். 33 வயதே வாழ்ந்தார். (1873-1906). மிகமிக் குறைவான வாழ்விது. இந்தியாவின் துரதிர்ஷ்டமே! அவர் சரிதத்தை சற்று சிந்திப்போமா...
தீபாவளி தினத்தை இந்தியா விலுள்ள பல மாநில மக்கள் விதவித மாகக் கொண்டாடுவர். அதுவொரு மகிழ்வைத் தரும் பொன்னாள். இராமபிரான் இராவணன் முதலானவர்களைக் கொன்றபின்பு அயோத்தி திரும்பிய நாள். மக்கள் வீடுகளில் விளக்கேற்றி அவரை வரவேற்ற நாள் என்பதும் ஒருவகை மகிழ்ச்சி. ஒளி வர இருள் மறைவதுபோல அஞ்ஞானம், அறியாமை அழிந்து மனத் தெளிவு, ஞானம் பெருகும் நாள் தீபாவளி.
அந்த தீபாவளி நன்னாளில் 20-10-1873 அன்று, "ராமசரித மானஸ்' எழுதிய பக்த துளசிதாஸ் வம்சாவளியாக, ஹீரா னந்த கோஸ்வாமிக்குப் பிறந்தவர் தீர்த்த ராம். இவர் பாகிஸ்தானிலுள்ள முரளிவாலா கிராமத்தில் (குஜ்ரன்வாலா வட்டம்) பிறந்தவர். தந்தை ஏழை பூசாரி. தனது சிறு வயதி லேயே தாயை இழந் தார். அவரது அண்ணன்- அண்ணியால் வளர்க்கப் பட்டார். இளம் வயதி லேயே படிப்பதில் ஆழ்ந்த ஆர்வம்கொண்டார். பஜனை, சத்சங்கம், ஆன்மிகப் பிரவசனங் கள் போன்றவற்றிலும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது.
விட்டகுறை தொட்ட குறை என்பார்களே, அப்படித்தான் இருந் தார். நேரம் போனால் திரும்பக் கிடைக்கா தென, நேரத்தை வீணடிக்காமல் படித்து விசாலமான அறிவுபெற விழைந்தார்.
பணவசதி மிகக் குறைவே. ஒரு நோட்டுப் புத்தகத்தில், "வறுமையென்பது கடவுள் பிரசாத அருளே. அந்தக் கண்ணீரானது கடவுளையடைய ஒரு ஏணியாகும்' என எழுதி வைத்தாராம். குந்திதேவி கண்ணனி டம், "கஷ்டங்களைக் கொடு; அப்போது தான் உன் நினைவு வரும்' என அடிக்கடி கூறுவாளாம். விவேகானந்தர் மிகுந்த வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை இறந்தபின் அவரது குடும்பமும் வறுமைக்கு ஆளானது. இது வினோதமே!
தீர்த்த ராம் தன் தந்தையின் நண்பரான பகவத்தான் ராம் என்பவரின் ஆதரவில், குஜ்ரன்வாலாவில் உயர் நிலை பள்ளிப்படிப்பை முடித்தார். பகவத்தான் ராம் ஒரு பிரம்மச்சாரி. திருமணம் செய்துகொள்ளவில்லை. தயாள குணமுடையவர். அவர் தீர்த்த ராமுக்கு ஒரு மகான்மூலம் யோகம் கற்பித்தார். பகவத்கீதையும் யோக வாசிஸ்டமும் போதித்தார். இராமருக்கு விசுவாமித்திரர்போல இந்த தீர்த்த ராமுக்கு பகவத்தான் ராம் அமைந்தார். ஆன்மிகம், பக்தி ஆகியவற்றுக்கு ஆதாரமாக விளங்கியதால் அவரை தீர்த்த ராம் தனது குருவாகவே மதித்தார். பின்பு கடிதத் தொடர்புகளும் இருந்தது.
தீர்த்த ராமுக்கு பத்து வயதிலேயே திருமணம் செய்தனர். பின்னர் இரண்டு குழந்தைகளும் பிறந்தன. தீர்த்த ராம் உயர்ந்த மனிதர்களின் சரிதம் படிப்பதில் தீவிர ஆர்வம் காட்டினார். துளசிதாஸ், கபீர் தாஸ், சூர் தாஸ், குருநானக், மீரா, துகாராம் போன்றவர்களின் சரிதங்கள், அவர்களது பகவத் ஈடுபாடுகள், பாடல்கள் போன்றவை இவர் மனதை மிகவும் ஈர்த்தன. "விளையும் பயிர் முளையிலேயே' என்பார்கள். "அவனருளாலே அவன் தாள் வணங்கி,' "சிவனவன் என் சிந்தையில் நின்ற அதனால்' என்றபடி, "பிரம்மை வாஹம், அகம் பிரம்மாஸ்மி' என்னும் உபநிடத வாக்குகள் உண்மை என்பதுபோல விவேகம், வைராக்கியம், ஆன்மிக ஆழத்துடன் விளங்கினார். ஆன்மிகத்துடன் கணக்கிலும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
எம்.ஏ தேர்வுபெற்று 1896-ல் கணக்குப் பேராசிரியராக லாகூர் கல்லூரியில் பணிபுரிந்தார். தனது ஆன்மிக வாழ்வுக்கு மேலும் நேரம் வேண்டுமென்று பேராசிரியர் பதவியைவிட்டு விலகி, விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். அந்த வேலைக்கு அப்போது குறைந்த நேரம் போதும். அந்த சமயங்களி லெல்லாம் லாகூரில் ஆன்மிக சொற்பொழிவு கள் நடத்தினார். பகவத் கீதையில் ஆழ்ந்ததால் கண்ணனின் தரிசனமும் கண்டாராம்.
அவர் ஆழ்ந்த பக்திக்கு மற்றொரு சான்று- அவர் மனைவி கூறியது. காலையில் பார்த்தால் அவரது தலையணை நனைந்திருக்குமாம்.
அத்தகைய ஆழ்ந்த பக்தி. கிருஷ்ண சைதன் யார்போல கிருஷ்ண நாமம், புல்லாங்குழல் நாதம் கேட்டால் "தன்மயம்' ஆகிவிடுவார். ஒரு அஞ்சலட்டை வாங்கக்கூட இயலாமல் சிரமப்பட்டிருக்கி றாராம். "முயற்சி திருவினையாக்கும்' என்பர் விடாமுயற்சிக்கு ஈடு எதுவுமில்லை. "மரம் வைத்தவன் நீர் ஊற்றுவான்' என்பதுபோல அவர், "இதுவரை காப்பாற்றியதுபோல இறைவன் காப்பாற்றுவார்' என்பாராம். "நமே: பக்க ப்ரணஸ்யதி' என்பது பகவத்கீதை வாக்கு. "எனது பக்தன் துன்பப்பட மாட்டான்' என்று பொருள். பாஞ்சாலியின் துகிலுரியும் சமயம் காப்பாற்றியது யார்?
விவேகானந்தரும் அவ்வாறுதானே சிரமப்பட்டார். அவருக்கு அரசாங்கத்தில் பெரிய பதவி கிடைத்ததாம். ஆனால் அவரோ, "நான் அடிமையாகப் பணிபுரிய மாட்டேன். படித்ததை, அறிந்ததை மற்றவர்களுக்கு எடுத்துரைத்து கல்வி, ஞானம், ஆன்மிகம் வளர்க்க விரும்புகிறேன்' என்றாராம். ந்ய்ர்ஜ்ப்ங்க்ஞ்ங் ள்ட்ர்ன்ப்க் க்ஷங் ள்ட்ஹழ்ங்க்; ய்ர்ற் ள்ற்ர்ழ்ங்க் என்பார்கள். அத்தகைய ஆழமுள்ள அவரது விவேகத்தை, பரந்த மனப்பான்மையை நாம் மதிக்கவேண்டும்; பாராட்டவேண்டும். இவர்களெல்லாம் அதிசயப் பிறவிகள் என்றே கூறவேண்டும்.
தீர்த்த ராம் லாகூர் கல்லூரியில் பணிபுரிந்தபோது 1899-ல் விவேகானந்தரை சந்திக்க நேர்ந்தது. இனம் இனத்தோடு சேரும் என்பர்; அந்த நிலை. விவேகானந்தரின் சந்நியாச உடை, உயர்நோக்கிய பேச்சுகள், அவர் 1893-லேயே அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் சென்றது, ஆன்மிகப் பிரச்சாரம் செய்ததுபோன்ற அனைத்தும் இவரது மனதைக் கவர்ந்தன. தானும் இந்த வேலையை விட்டுவிட்டு ஆன்மிகத் தில் ஆழவேண்டும், சந்நியாசம் ஏற்க வேண்டும், வெளிநாடு களில் வேதாந்தம் பேசவேண்டும் என்னும் தீவிர எண்ணம் கொழுந்துவிட்டெ ரிந்தது. ஒரு விளக்கிலிருந்து மற்ற விளக்குகளை ஏற்றுவதுபோல!
1900-ல் வேலையை விட்டார். கோவர்த் தன பீட சங்கராச்சாரியார் சந்நியாசம் தந்தார் என்றும், இல்லை; அவர் தானே மொட்டையடித்து காவி உடை ஏற்றார் என்றும் இருவித கருத்துகள் கூறப்படுகின்றன. ரமணர் சந்யாச தீட்சை எடுக்கவில்லையே.
தீர்த்த ராமின் சந்நியாச நாமம் ராம தீர்த்தர் என்றாயிற்று. சந்நியாச தர்மத்தைக் கடைப்பிடித்தார். சந்நியாசி கடல்கடந்து செல்லக்கூடாது என்பதைக் கடைப்பிடிக்கவில்லை. அதுவே அவரது பரந்த நோக்கம்.
அவரது ஆன்மிகப் பேச்சுகள் கம்பீரமாக, கோர்வையாக, மென்மையாக, கேட்பவர் உள்ளத்தைக் கவரும் வண்ணம் இருந்தது. மேலும் கேட்கவேண்டும் என்னும் ஆர்வம் அதிகமாகும்படியும் இருந்ததாம். தன் அனுபவத்தையொட்டி விளக்கங்களைத் தெளிவாகத் தந்ததால் ரசித்துக் கேட்பவர்கள் கூட்டம் அதிகரித்தது.
நாட்டுப்பற்று பற்றியும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் அதிகம் வலியுறுத்தி னார். "இயற்கை, மண், செடி, கொடி, மலை, நதி, மக்கள், நாடு ஆகியவற்றில் பற்று வையுங்கள்; அன்பு செலுத்துங்கள். நீங்களே நாடு என்று எண்ணுங்கள்' என சமூக முன்னேற்றத் திற்கு வலியுறுத்தியுள்ளார். "எல்லாரிடமும் அன்புடன் பழகு; தவறுகளைக் கண்டிக்காதே; சாதுரியமாக அவர்கள் மனதை மாற்று' என்றும் போதித்தார். "சோம்பேறித்தனம் ஒழி; படி; நன்கு வேலை செய்' என்றார். அனைவருக்கும் மனத்தெளிவு, புத்துணர்ச்சி ஊட்டினார். அவர் கூறியவையனைத்தும் பகவத்கீதை வாக்குகள்தானே.
அவருக்கு ஆங்கிலம், இந்தி, உருது, வடமொழி, பார்ஸிய மொழிகள் சரளமாகப் பேசத் தெரியும். கோர்வையாக, நகைச்சுவையோடு, பொருள் நழுவாமல் பேசுவார்.
"சச்சிதானந்த நிலையை எய்துதல் யாவருக்கும் சாத்தியமே. சந்நியாசம் ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. ஆயின் அந்த நிலையயடைய ஆழ்ந்த ஆர்வம் தேவை. அந்த ஆர்வமே செல்லவேண்டிய வழியைக் காட்டும்' என்று கூறியுள்ளார்.
அவர் புதிய முறை, புதிய யோகம், தியானம் என்று எதையும் வரையறுக்கவில்லை. புதிய முறை என்றால் இதுவா அதுவா என்னும் சர்ச்சை வருமே!
ஜப்பான், பின்பு சான் பிரான்சிஸ்கோ என இரண்டு வருடங்கள் அவரது ஆன்மிக சொற்பொழிவுகள் நடந்தன. அதற்கு அமோக வரவேற்பு இருந்ததாம். விவேகானந் தருக்குப்பிறகு அவரைப் போன்றே இவரது சொற்பொழிவுகளுக்கும் முன்னேற் பாடுகளை ஊக்கமுள்ளவர்கள், ரசிகர்கள் செய்ய ஆரம்பித்தனர். இந்திய இளைஞர்கள் அமெரிக்கா சென்று மேல்படிப்புகள் படிக்க வழிவகுத்தார்; வற்புறுத்தினார். எகிப்திய முகம்மதியர் மசூதியில் பேசியுள்ளார் எனில் அவரது சமத்துவ உணர்வை நாம் உணரவேண்டும். இஸ்லாம் மதமும் அத்வைதமே.
பகவத் கீதையின் கர்ம- பக்தி- ஞான யோகத்தையே ஆழ்ந்து பிரவசனம் செய்தார். "முக்திநிலை, சச்சிதானந்த நிலை உங்களது சொத்து; உரிமை என்று உணர்ந்து செயல்படவேண்டும்' என்று நயமாக வலியுறுத்துவது அவர் பாணி.
அமெரிக்காவில் பேசிய அவரது வாக்குகளை சுவாமி யோகானந்தர் பின்பு புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
ரமண மகரிஷி, "கோஹம்- நான் யார் என்று விசாரித்தால் அது சோஹம்- அதுவே நான் என்பதில் முடியும்' என்று கூறுவார். அதையே இவர் பிரம்மை வாஹம்- நானே ஒளி என்று வற்புறுத்தினார்.
மகாத்மா காந்தி, "சுவாமி ராம தீர்த்தரின் ஆன்மிகப் பொன்மொழிகளைப் பிரகாசப்படுத்த வேண்டும். அவர் இந்தியா மட்டுமல்லாது உலகுக்கே சிறந்த ஆன்மிக வழிகாட்டி' என்று கூறியுள்ளார்.
17-10-1906 தீபாவளி நாளன்று, இமாலயத்தில் சிவானந்த ஆசிரமத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் கங்கையில் தன் உடலை விட்டார். தீபங்கள் மிகுந்தநாளில் அவர் உடல் மறைந்தது.
33 வயதிலேயே அவரது மறைவு ஆன்மிகத்திற்கு பெரிய இழப்பு. அவரது சீடர் நாராயண சுவாமி லக்னோவில் "ராம தீர்த்த பப்ளிகேஷன்ஸ் லீக்' என்று, தீர்த்தரின் வாக்குகளைப் பதிவுசெய்துள்ளார். தீர்த்தரின் சந்ததியார் இன்றும் லக்னோ, சண்டிகரில் உள்ளனர். டேராடூனில் ஒரு ஆசிரமமும், மறைந்த இடத்தில் ஒரு ஆசிரமமும் உள்ளன.
அயோத்தி அரசன் இராமர் இராவணனை வதைத்துத் திரும்பிய நாள் தீபாவளி எனில், தீர்த்த ராம் என்ற ஞானதீபம் உதித்துப் பிரகாசித்து கங்கையில் தீபாவளியன்றே மறைந்ததே! அவரை வணங்கி குருவருள் பெறுவோம்.