"தெளிவு குருவின் திருமேனி காண்டல்' என்னும் திருமூலரின் பாடல்படி குருவைப் பார்த்தாலே அதற்குத் தகுந்த பலனுண்டு. அதிலும் குருவின் கருணையான அருட்பார்வை நம்மீது விழுந்தால் அதற்கு இன்னும் பலன் அதிகமென்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
சிருங்கேரி மடத்தின் குரு பரம்பரையில் 34-ஆவது பீடாதிபதியாக அலங்கரித்த மகான் ஸ்ரீசந்திரசேகர பாரதி (1892-1954) ஸ்வாமிகளின் கருணையால், கடவுள் நம்பிக்கையும், குருமீது சற்றும் மரியாதையும் இல்லாத ஒருவர் அவர் பார்வை பட்டதும் மனம்மாறி, இறைவன்மீதும் குருவின்மீதும் முழுநம்பிக்கை கொண்டார். அதுமட்டுமின்றி குரு சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு குருமீது துதிப்பாடல்களை இயற்றவும் செய்தார். இம்மகான் ஸ்ரீசதாசிவப் பிரம்மேந்திரர் போன்று ஜீவன் முக்தர் மட்டுமின்றி, சர்வக்ஞ ஞானியாகப் போற்றப்பட்டவர்.
"சங்கரதேசிக விரசித பீடாதிப
மாலிகா மஹாரத்னம் ப்ரணமாமி
சந்த்ரசேகர பாரத்யபிதான தேசிகம் ஹ்ருதயே'
என்னும் "ஸ்ரீசந்திரசேகர பாரதி நவரத்னமாலிகா' ஸ்லோகப்படி சிருங்கேரி குருப் பரம்பரையில் மகாரத்னமாகத் திகழ்ந்தவர்.
இறைவனுக்கும் நமக்குமிடையே ஒரு பாலமாக இருந்து நம்மை ஞானமார்க்கத்திற்கு அழைத்துச் செல்பவரே குரு. எனவேதான் மாதா, பிதாவுக்கு அடுத்த இடத்தில் குருவை வைத்துள்ளோம். அந்த குருவைப் போற்றுவதற்காகத்தான் "குரு பூர்ணிமா'வை வருடந்தோறும் இந்துக்கள் கொண்டாடிவருகிறார்கள்.
புனிதமான சிருங்கேரி மலையில் கோபால சாஸ்திரி- லட்சுமியம்மாள் தம்பதியர் வாழ்ந்துவந்தனர்.
கோபால சாஸ்திரி வேத, சாஸ்திரங்களில் மிகப்பெரிய பண்டிதர். இத்தம்பதியினருக்குத் தொடர்ந்து பிறந்த பதின்மூன்று குழந்தைகளும் ஏதோ ஒரு காரணத்தால் இறந்துவிடவே, மிகுந்த மனவேதனையடைந்த தம்பதியர் அப்போதைய சிருங்கேரி பீடாதிபதியாக இருந்த ஸ்ரீசச்சிதாநந்த சிவாபிநவ நரசிம்மபாரதி ஸ்வாமிகளிடம் தங்கள் மனக் குறையைத் தெரிவிக்க, அவர் "கோகர்ணம் சென்று மஹாபலேஸ்வரை வணங்கிவந்தால் ஆயுள், ஆரோக்கியத்துடன் குழந்தை பிறக்கும்' எனக் கூறினார்.
அதன்படி இருவரும் கோகர்ணம் சென்றுவந்தனர். அதன்பயனாக சிவபெருமானின் அருளால் 1892-ஆம் ஆண்டு ஏகாதசி திதி, மக நட்சத்திரம் கூடிய ஞாயிற்றுக் கிழமையன்று (அக்டோபர்-16) ஆண் குழந்தை பிறந்தது. குழந் தைக்கு குருவின் பெயரையே சூட்ட விரும்பி நரசிம்மன் எனும் பெயரைச் சூட்டினார் கோபால சாஸ்திரி.
இளம்வயதிலேயே இப்பாலகன் இறை நம்பிக்கையிலும், ஆத்ம சிந்தனையிலும் திளைத்திருப்பார். ஒருநாள் பெற்றோர் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிவர அனுப்பியபோது, இப்பாலகன் தன்னையறியாமல் "மூகபஞ்சகதி' ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டே ஊர் எல்லையைக் கடந்து சென்றுவிட்டார். வழியில் பார்த்த பாலகனின் உறவினர், "எங்கு வந்தாய்?' எனக் கேட்க, பாலகனோ, "தற்போதுதான் ஐம்பதாவது ஸ்லோகத்திற்கு வந்துள்ளேன்' எனக் கூறினார். பிறகு அந்த உறவினர் நரசிம்மனை வீட்டுக்கு அழைத்துவந்து பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். இப்படி சிறுவயதிலேயே தன்னை மறந்த நிலையில் இறையுணர்வுடன் இருந்தார்.
சிருங்கேரியில் ஆங்கில வழி ஆரம்பக் கல்வியைப் பயின்ற நரசிம்மனுக்கு, 12-ஆம் வயதில் அன்றைய பீடாதிபதியான ஸ்ரீசச்சிதாநந்த சிவாபிநவ நரசிம்மபாரதி ஸ்வாமிகளின் பரிபூரண அருளாசி கிட்டியது. அதன்பயனாக ஆங்கிலவழிக் கல்வி கற்பதை நிறுத்தி விட்டு சிருங்கேரி மடம் சார்பாக நடத்தப்படும் ஸத் வித்யா ஸஞ்ஜீவினீ வேதபாடசாலையில் சேர்ந்தார். சிறுவயது முதற்கொண்டே நரசிம்மன் தமது வயதுக்குமீறிய அறிவும், நல்ல குணநலன்களையும் உடையவராகத் திகழ்ந்தார். இந்த நற்பண்புகளையும் அறிவாற்றலையும் கண்ட 33-ஆவது பீடாதிபதியான சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள், நரசிம்மன்மீது தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்தார். பின்னர் வேத சாஸ்திரத்தில் உயர்படிப்பிற்காக பெங்களூரில் சிருங்கேரி மடம் சார்பில் நடத்தப்படும் பாரதீய கீர்வாண ப்ரௌட வித்யா வர்த்தினீ என்கிற வேத பாடசாலையில் சேர்ந்தார். தமக்குப் பின்பு சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக நரசிம்மன் வரவேண்டும் என்கிற எண்ணம் பீடாதிபதிக்கு இருந்தது. அதை நிறைவேற்றித் தருமாறு ஸ்ரீசாரதாம்பாளை தினமும் வேண்டிக்கொண்டார்.
1912-ஆம் ஆண்டு ஸ்ரீசச்சிதாந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் சித்தியடைந்தபிறகு, நரசிம்மனுக்கு அவ்வாண்டு ஏப்ரல் 7-ஆம் தேதியன்று முறைப்படி சந்நியாசம் கொடுக்கப்பட்டு "ஸ்ரீசந்திரசேகர பாரதி' என்னும் யோகப்பட்டமும் வழங்கப்பட்டது. மறுநாள் பீடாதிபதிக்கான பட்டா பிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் அன்றைய மைசூர் மகாராஜா நால்வடி ஸ்ரீகிருஷ்ணராஜா உடையார் கலந்துகொண்டார். சிருங்கேரியிலிருக்கும் ஸ்ரீசாரதாம்பாள் திருக்கோவிலை விரிவுபடுத்தி, அழகாகக்கட்டி 1916-ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினார்.
பீடாதிபதியாக இருந்தபோதிலும் மடத்தின் நிர்வாகத்தில் நாட்டமின்றி எப்பொழுதும் ஆழ்ந்த தியானத்திலும், பூஜை செய்வதிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக ஸ்ரீசந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் இருந்தார். அதிலும் தன்னை மறந்த நிலையில் வெகுநாட்கள் தவமிருந்தார். இதனால் அவருடைய உடல் மெலிந்தது. ஆனால் தெய்வீக தேஜஸ் கூடிக்கொண்டே வந்தது. ஒளிவீசும் கண்களையும், அருள் ததும்பும் பார்வையையும் கண்ட பக்தர்களுக்கு ஒருவித ஆன்மிக அதிர்வலை Vibration)ஏற்பட்டது.
ஸ்வாமிகள் பல நாட்கள் தொடர்ந்து அந்தர்முக நிலை யில் (ஆழ்ந்த தவம்) இருப் பார். திடீரென அறையிலிருந்து வெளியே வந்து பக்தர் களுக்கு தரிசனம் கொடுப்பார்.
பக்தர்களின் வேண்டுகோளை யேற்று 1924-ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் விஜய யாத்திரை மேற்கொண்டார். ஸ்ரீஆதிசங்கரர் அவதரித்த கேரள மாநிலத்திலுள்ள காலடி கிராமத்தில் சிருங்கேரி மடம் சார்பில் வேதாந்த சாஸ்திர பாடசாலையை ஏற்படுத்தினார். இதற்கு திருவிதாங்கூர் சமஸ்தானம் பெரிதும் உதவியது. விஜய யாத்திரை முடித்துக் கொண்டு 1927-ஆம் ஆண்டு சிருங்கேரிக்குத் திரும்பினார். யாத்திரையின்போது தன்னை அணுகிய பக்தர்களின் மனக்குறையைத் தீர்த்துவைக்க தகுந்த வழியைச் சொல்லி, ஆங்காங்கே தர்மப்பிரச்சாரம் எனும் அருளுரையை வழங்கி மக்களை நல்வழிப்படுத்தினார். சிருங்கேரிக்கு வந்தவுடன் மீண்டும் தனிமையில் தவம்செய்வதையே விரும்பினார். இருப்பினும் மடத்தை நிர்வகிக்க பீடாதிபதி என்ற ஒருவர் அவசியம் என்பதால், தகுந்த சீடரான 14 வயது பாலகனான ஸ்ரீனிவாசன் என்பவருக்கு 1931-ஆம் ஆண்டு சந்நியாசம் அளித்து, ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்தர் என்னும் யோகப்பட்டத்தைச் சூட்டி மடத்தின் முழு நிர்வாகத்தையும் கவனிக்க ஏற்பாடு செய்தார்.
பக்தர்களின் கோரிக்கை ஏற்று 1938-ஆம் ஆண்டுமுதல் 1940 வரை மீண்டும் விஜய யாத்திரை மேற்கொண்டார். யாத்திரைக்குப்பின்பு பல நாட்கள் அந்தர் முகமாக தியானத்தில் இருந்தார். 15-8-1947-ல் நாடு விடுதலையடைந்த அன்று, நாட்டின் முன்னேற்றத்திற்காக ஸ்ரீசாரதாம்பாளுக்கு சிறப்புப் பூஜை செய்து நாட்டு மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தார். ஸ்ரீஆதிசங்கரர் இயற்றிய "விவேக சூடாமணி' எனும் நூலுக்கு உரை (பாஷ்யம்) எழுதினார். அதுமட்டுமின்றி "ஸாம்பாஷ்டகம்' உள்ளிட்ட சில அரிய ஸ்தோத்திரங்களை எழுதினார்.
ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் தம்முடைய தபோபலத்தால் பல அற்புதங் களை நிகழ்த்தினார். அதில் ஒன்று தான் மதுரையைச் சேர்ந்த நாத்திக சிந்தனையையுடைய எம்.எஸ். மந்திரேசுவர சர்மா என்பவரை நல்வழிப்படுத்திய சம்பவம். இதுகுறித்து சர்மா எழுதிய அனுபவக் கட்டுரையில், "நான் பம்பாயில் பணிபுரிந்து வந்தேன். விடுமுறையில் 1926-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சொந்த ஊரான மதுரைக்குவந்த சமயத்தில், எனது குடும்ப நண்பரான வக்கீல் கே.ஆர். வெங்கடராமன் என்னை பக்கத்து கிராமத்திற்கு வருகை தந்துள்ள சிருங்கேரி சங்கராச்சார்ய ஸ்வாமி களை தரிசனம் செய்யவருமாறு அழைத்தார்.
ஆங்கிலப் படிப்பு, மேலை நாகரிகத்தின்மீது மோகம்கொண்ட நான், கடவுள்மீது நம்பிக்கையில்லாமல் இருந்தேன். அதிலும் சந்நியாசிகள்மீது கொஞ்சம்கூட நம்பிக்கை யும் மரியாதையும் இல்லாமல் இருந்து வந்தேன். எனவே, நான் அவர் அழைப்பை நிராகரித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து வலியுறுத்தவே ஐரோப்பிய பாணி உடை யணிந்து ஊத்தங்குடி முகாமுக்குச் சென்றேன்.
நான் அங்குசென்ற சமயத்தில் சங்கராச் சார்ய ஸ்வாமிகளை தரிசனம் செய்ய திருவிதாங்கூர் சமஸ்தான திவான் சி.பி. ராமசாமி, சுப்ரீம் கோர்ட் நீதிபதி என். சந்திரசேகர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர் களும், அரசு அதிகாரிகளும் வந்திருந்தனர்.
அவர்களெல்லாம் ஒரு சந்நியாசி காலில் விழுந்து வணங்குவதையும், அவருக்கு காட்டும் பக்தியையும், மரியாதையையும் கண்டு எனக்கு சிரிப்புதான் வந்தது. "ஒரு சந்நியாசிக்கு இவ்வளவு மரியாதையா?' என என் நண்பரிடம் கேட்டேன். அவரோ "அமைதியாக இரு' எனக் கூறி என்னைப் பேசவிடாமல் தடுத்தார்.
அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. எல்லாருக்கும் தரிசனம் கொடுத்துவிட்டு ஸ்வாமிகள் பக்கத்து அறைக்குச் செல்ல முயன்ற சமயத்தில் அவருடைய அருட் பார்வை ஒதுங்கி நின்றிருந்த என்மீது பட்டது. ஒரு விநாடி நேரத்தில் என் கண்களில் நீர் வர, அப்படியே சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கினேன். என்னுடைய கர்வம், வீண் அகங்காரம் முதலிய தீய எண்ணங்கள் அந்த நொடியே என்னைவிட்டுப் போயிற்று. அதன் பிறகு மீண்டும் மீண்டும் நான் நமஸ்காரம் செய்யத் தொடங்கினேன். இதைக்கண்ட ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் என்னை அழைத்து விசாரித்தார். பேச முடியாத அளவுக்கு அழுகைதான் வந்தது. என்னை ஆசுவாசப்படுத்திய பின் அவர் என்னைப் பற்றி விசாரித்தார். பிறகு புன்முறுவலுடன், "நாளை மாலை மதுரை முகாமுக்கு வா' எனக் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். என்னுடைய நாத்திக சிந்தனை அடியோடு அந்த நொடியோடு போயிற்று. குருமீதிருந்த அவநம்பிக்கை மாறி, அவர்மீது முழு நம்பிக்கையும் பக்தியும் ஏற்பட்டது.
பிறப்பில் அந்தணர் குலத்தைச் சார்ந்த நான் முறைப்படி பூணூலை அணிந்து, தலைமுடியை மாற்றிக்கொண்டு, பஞ்சகச்சம் கட்டி ஒரு வைதீகர் கோலத்தில் அவர் சொன்ன வண்ணம் மதுரைக்குச் சென்றேன். அதன்பிறகு பலமுறை அவரை தரிசனம் செய்து அவருக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் பெற்றேன். 1954-ஆம் ஆண்டு சிருங்கேரிக்கு முதலாவது ஜனாதிபதி பாபு இராஜேந்திர பிரசாத் வருகை தந்தபோது உடனிருந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யு மளவுக்கு என் மனநிலையை மாற்றிவிட்டார். அவருடைய தரிசனத்திற்குப்பிறகு என் வாழ்க்கையில் ஏற்றம்தான் இருந்தது' என எழுதியுள்ளார். "குருவின் கடைக்கண் பார்வையாலே எனக்கு சிரேயஸ்யமும் (நன்மை), குரு கடாக்ஷமும் கிடைத்தது' என அவர் அடிக்கடி கூறுவார்.
"கைவல்ய நவநீதம்' எனும் நூலில், குரு தன் சிஷ்யனுக்குச் செய்யும் தீட்சை (தீக்ஷை) பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. ஸ்மரண தீட்சை, சாக்ஷுஷ தீட்சை, ஸ்பர்ச தீட்சை என மூவகையான தீட்சையில், மந்திரேசுவர சர்மாவுக்கு கண் பார்வையாலே தீட்சை கிடைத்தது. அந்த மகானின் கண் பார்வைக்கு அந்தளவு சக்தி இருந்தது.
26-9-1954, ஞாயிற்றுக்கிழமை நவராத் திரிக்கு முதல் நாள் மஹாளய பட்ச அமாவாசை தினத்தன்று, விடியற்காலையில் ஸ்ரீசந்திர சேகர பாரதி ஸ்வாமிகள் தன் தனி உதவி யாளருடன் துங்கா நதியில் தினமும் குளிப்பது போன்று அன்றும் சென்றார். நீரில் நின்றவாறு பிராணாயாமம் செய்துவிட்டு ஒரு முறை மூழ்கி மேலே எழுந்தார். அடுத்த முறை மூழ்கி எழுந்திருக்கவேண்டிய சில விநாடிகளில் வெள்ள நீர் அவரை அடித்துச் செல்வதைப் பார்த்து பதறிய உதவியாளரும் மற்றும் சிலரும் நதியில் குதித்து, பத்மா சனத்தில் அமர்ந்த நிலையில் இருந்த அவரு டைய உடலை வெளியே கொண்டுவந்தனர்.
ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்து விட்டிருந்தது. பின்பு அவரது புனிதவுடல் நரசிம்மவனத்தில் அடக்கம் செய்யப்பட்டு அங்கு அதிஷ்டானக் கோவில் கட்டப் பட்டது.
நம் பாரத தேசத்தில் அவதரித்த பெரும் ஞானிகளில் ஸ்ரீசந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் மிகவும் அபூர்வமான ஞானியாவார். அவரு டைய தெய்வீகத்தன்மைக்கு ஈடிணை ஏதுமில்லை. அவருடைய 65-ஆம் ஆண்டு ஆராதனை இவ்வாண்டு 28-9-2019 அன்று வருவதால், அன்று அவரை வணங்கி அவரது அருளாசியைப் பெறுவோம்.