துளசியின் மகிமை முனைவர் இரா. இராஜேஸ்வரன் பகவான் கிருஷ்ண பரமாத்மா தனது மனைவிகளான சத்யபாமா, ருக்மிணிக்கிடையே சிலசமயங்களில் சிறுசிறு சண்டை வருவதை எப்படி நிறுத்துவதென யோசித்தார். சண்டைக்கு அடிப்படைக் காரணம், தங்கள் இருவரில் யார்மீது அவர் அதிக அன்பு வைத்துள்ளார் என்பதுதான்.
ஒருநாள் சத்யபாமா, ருக்மிணி இருவரையும் அழைத்த கண்ண பரமாத்மா, ""உங்களில் யாருடைய அன்பு உயர்ந்ததென்று ஒரு போட்டி வைக்கப் போகிறேன்'' எனக்கூற, இருவரும் சம்மதித்தனர்.
துலாபாரத்தின் ஒரு தட்டில் கண்ணன் அமர, அதை சமன் செய்யுமளவு யார் பொருளை வைக்கிறார்களோ அவர்களுக்கே கண்ணன்மீது அதிக அன்பு என்பது போட்டியின் தீர்வு. அதன்மூலம் கண்ணனின் அன்பையும் அறியலாம்.
அதன்படி துலாபாரத்தில் கிருஷ்ணர் ஒரு தட்டில் அமர, மறுதட்டில் சத்யபாமா பட்டுத்துணிகள், தங்கம் மற்றும் வெள்ளிப்பாத்திரங்கள், ஆபரணங்கள், வைரம், ரத்தின ஆபரணங்கள், பொற்காசுகள் விலைமதிப்புமிக்க பல செல்வங்களைக் குவித்தாள். ஆனால் தராசுத்தட்டு சமநிலைக்கு வரவேவில்லை. இதனால் சத்யபாமா கவலையடைந்தாள். அடுத்து ருக்மிணியின் முறை வந்தபோது, தட்டில் ஒரே ஒரு துளசி இலையை மட்டும் பக்தியுடன் வைக்க, தராசுத்தட்டு உடனே சமநிலைக்கு வந்து விட்டது. தனது தோல்வியை ஒப்புக்கொண்ட சத்யபாமா அன்றே தன் கர்வத்தை விட்டாள். துளசி இலைக்கு எவ்வளவு மகிமை என்பதை சத்யபாமா, ருக்மிணிமூலம் உலகிற்கு உணர்த்தினார் கண்ணன்.
இதுபோன்று பத்மபுராணத்தில்- துளசி மஹாத்மியத்தில், ஒரு துளசி இலையானது பொன்னுக்கும் பொருளுக்கும் சமமானது என்பதை உணர்த்தும் நாரத மகரிஷியின் கதை ஒன்றுள்ளது.
சிவபெருமானின் பூஜைக்கு வில்வம் எவ்வளவு உயர்நிலையைப் பெற்றிருக்கிறதோ அவ்வளவுக்கு விஷ்ணு பூஜைக்கு துளசி உயர்நிலை பெற்ற புனிதமான ஒன்றாகும். சிவபெருமானே தன் மகனான முருகனிடம் துளசியின் தெய்வீக சக்தியைப் பற்றி உபதேசித் தார். இப்படி புனிதத் தன்மையும், மருத்துவ குணமும் வாய்ந்த துளசி என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு "தன்னிகரில்லாதவள்' என்று பொருள். இது தமிழில் துளவம், திருத்துழாய் என்றும், ஆங்கிலத்தில் பேசில் (இஹள்ண்ப்) என்றும், தாவரப் பெயராக ஆஸிமம் ஸேங்க்டம் (ஞஸ்ரீண்ம்ன்ம் நஹய்ஸ்ரீற்ன்ம்) என்றும் பெயர் பெறுகிறது.
முன்னொரு காலத்தில் துளசிதேவி பிருந்தா என்னும் பெயரில் பூலோகத்தில் ஜலந்தரன் என்னும் அசுரகுல மன்னனின் மனைவியாக வாழ்ந்துவந்தாள். அலந்திரன் தன் தவத்தின் பயனாக சாகாவரத்தை பிரம்மதேவனிடம் கேட்டுப் பெற்றான். இதனால் அவன் தேவர்களையும், முனிவர்களையும் மற்றும் பொதுமக்களையும் துன்புறுத்திக்கொண்டே இருந்தான்.
அவனது செய்கையால் மனம்வருந்திய தேவர்கள், முனிவர்கள் சிவபெருமானிடம் முறையிட, அவனைக் கொல்ல கயிலையிலிருந்து புறப்படத் தயாரானார். சிவபெருமானின் வருகையை அறிந்த ஜலந்தரன் அவரிடம் போரிட பெரும்படையுடன் புறப்பட்டான்.
"முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்' என்னும் பழமொழிக்கேற்ப, எந்த வகையிலும் சாகாமல் இருக்கும்படி தந்திரமாக வரம் பெற்றவனை தந்திரமாகதான் கொல்லமுடியும் என்பதை அறிந்த சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் சேர்ந்து ஒரு திட்டத்தைத் தீட்டினார்கள். அதன்படி சிவபெருமான் வயதான மனிதர் வடிவில் ஜலந்தரனுக்குமுன்பு எதிர்ப்பட்டார். அவர் அவனிடம், ""நான் சொல்லும் ஒரு சிறு காரியத்தைச் செய்யமுடியுமா?'' என கேட்க, அவன் ஒப்புக்கொண்டான். உடனே அந்த வயதான மனிதர் தரையில் முழங்காலிட்டு அமர்ந்து, கால் கட்டை விரலை மையமாக வைத்து முழங்காலால் தரையைச் சுற்றி ஒரு சக்கரம்போல வட்டமிட்டார். பின்னர், ""நான் வட்டமிட்ட இடத்தைப் பெயர்த்து தலையில் தாங்கிநிற்க முடியுமா?'' என கேட்டார்.
அதற்கு ஜலந்தரன், ""சே! இவ்வளவுதானா?'' என ஏளனமாக சிரித்துக்கொண்டே வட்டமிட்ட இடத்தைப் பெயர்க்க முயன்றான். எவ்வளவோ முயன்றும் அவனால் இயலவில்லை. அதனால் மேலும் ஆத்திரமுற்ற அவன் பலவாறு முயன்று, இறுதியில் ஒருவழியாக தன் இரு கரங்களால் கஷ்டப்பட்டுப் பெயர்த்து அதைத் தன் தலையில் தாங்கினான். உடனே அந்த வட்டவடிவமான நிலப்பகுதி ஒரு சக்கரமாக மாறி ஜலந்தரனை இருகூறுகளாகப் பிளந்தது. தரையில் வீழ்ந்தான் ஜலந்தரன். பிரம்மா தந்த வரத்தாலும், தன் மனைவி பிருந்தாவின் தூய கற்புத்திறனாலும் ஜலந்தரனின் உயிர் உடனே பிரியவில்லை.
இதற்கிடையில், சிவபெருமானிடம் போரிடச்சென்ற கணவன் பல நாட்களாகியும் திரும்பாததை எண்ணி வருத்தத்தில் இருந்த பிருந்தா முன்பு, மகாவிஷ்ணு ஜலந்தரன் வடிவில் வந்தார். அன்புக்கணவரைக் கண்டவுடன் ஆசையுடன் தழுவினாள். பின்னர் வந்தது தன் கணவனல்ல என்பதை உணர்ந்து விலகினாள். ஆனாலும் பிருந்தாவின் செய்கையால் அவளது கற்புத்திறன் உடனே குறைந்தது. மனைவியின் கற்புத்தன்மை குறைந்தால்தான் ஜலந்தரனின் உயிர்போகும் என்கிற பிரம்மதேவனின் வரம் நிறைவேற, ஜலந்தரனின் உயிர் பிரிந்தது.
மகாவிஷ்ணுவின் தந்திரத்தால்தான் தன் கற்பு குறைந்தது; தன் கணவர் இறக்க நேரிட்டது என்பதை அறிந்த பிருந்தா மனம் கலங்கி தீக்குளித்து உயிரைவிட்டாள். தன்னால் ஒரு குற்றமும் செய்யாத பதிவிரதையான பிருந்தா, விதியின் பயனாக உயிர்விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை எண்ணி மகாவிஷ்ணுவும் மிக வருந்தினார். அவரது மனத்துயரத்தை அறிந்த பார்வதிதேவி சிவபெருமானிடம் இதற்கு உதவும்படி கேட்க, சிவபெருமான் தன் சக்தியால் ஒரு சிறு விதையை உருவாக்கி அதை பிருந்தா உயிர்விட்ட இடத்தில் நட்டு நீர் ஊற்றினார். காலப்போக்கில் விதை துளிர்த்து செடியொன்று முளைத்தது. அந்தச் செடிதான் புனித துளசிச் செடி ஆகும். அச்செடியிலிருந்து எடுத்த துளசியை மாலையாக்கி மகாவிஷ்ணுக்கு அணிவிக்க, அவரும் மனம் குளிர்ந்து ஏற்றார்.
அன்றுமுதல் மகாவிஷ்ணுவுக்குப் பிடித்த பொருளாக துளசி மாறியது. வராக புராணத்தில் குறிப்பிட்டுள்ளபடி மகாவிஷ்ணுவுக்குப் பிடித்த பொருட்களான அச்வத்த விருட்சம், காராம்பசு வரிசையில் துளசிச்செடியும் சேர்ந்தது. மூன்று தளங்கள் கொண்ட துளசியால் "ஓம் விஷ்ணுவே நம:' என்று பக்தியுடன் சமர்ப்பித்தால் அதுவே புண்ணியத்தைத் தரும்.
துளசிச் செடி பிறக்கக் காரணமாக இருந்த இடம்தான் திருவாரூர்- மயலாடுதுறை சாலையில் கங்களாச்சேரிக்கு அடுத்திருக்கும் "திருவிற்குடி வீரட்டேசம்' எனும் ஊராகும். இங்கிருக்கும் ஏலவார்குழலி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் சிவபெருமானின் வீரத்தைக் குறிக்கும் "அஷ்டவீரட்டம்' எனப் போற்றப்படும் எட்டுக் கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் தலவிருட்சமாக துளசிச்செடிதான் உள்ளது. இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானை மகாவிஷ்ணு வழிபட்டு துளசியைப் பெற்றதால், தல விருட்சம் என்கிற பெரும் பாக்கியத்தை இந்த துளசிச் செடி பெற்றது.
திருஞான சம்பந்தர் திருவிற்குடி வீரட்டானம் பற்றி தனது இரண்டாம் திருமுறையில்,
"வடிகொள் மேனியர் வானமா மதியினர்
நதியினர் மதுவார்ந்த
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர்
உடைபுலி யதளார்ப்பர்
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை
விற்குடி வீரட்டம்
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை
அருவினை யடையாவே'
என்று பாடியுள்ளார்.
அதேபோன்று திருநாவுக்கரசர்,
"தூங்கான் துளங்கான் துழாய்கொன்றை
துள்ளிய செஞ்சடை மேல்'
என்கிற பாடலின் வரியில் துளசியை "துழாய்'
என குறிப்பிட்டுள்ளார். திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வார்,
"ஓம் புள்ளேறி சூடும் தண்டுழாய்...'
என பாடியுள்ளார். அதேபோன்று குலசேகர ஆழ்வார் அருளிய பெருமாள் திருமொழியில்,
"மாலையற்ற கடல் கிடந்தவன்
வண்டு கிண்டு நறுத்துழாய்'
என்கிற பாடலில், அரங்கநாதப்பெருமாள் வண்டுகள் தேடிவரும் நறுமணம் மிக்க துளசிமாலையை தன் மார்பில் அணிந்துள்ளார் என்கிற பொருளில் பாடியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிச்செடிகள் நிறைந்த நந்தவனத்தில் பெரியாழ்வார் கோதை என்னும் ஆண்டாளைக் கண்டெடுத்தார். மன்னர் கிருஷ்ண தேவராயர் தெலுங்கில் எழுதிய "ஆமுக்த மால்யத' காவியத்தில் ஆண்டாள் சரித்திரத்தைச் சொல்லும்போது மேற்படி செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். பெருமாளுக்குச் சூட்டவேண்டிய துளசி மாலையை ஆண்டாள் சூடிக்கொண்டு மகிழ்ந்தாள். தனது பக்தை சூடிய அந்த மாலையை அரங்கநாதப் பெருமாள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
மகாலட்சுமியின் அம்சமான துளசிச் செடியை வீட்டு மாடத்தில் வளர்த்தால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை. துளசியானது மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச்செடியாகும். ரத்தம் சுத்தியடைதல், இருமல், சளி, சருமநோய் போன்றவற்றிற்கு நல்ல மருந்தாகும். வீடுகளில் துளசிச் செடியை வளர்த்தால் தூய்மையான காற்றைப் பெறமுடியும்.
பூஜைக்காக துளசியை பறிக்கையில் "துளஸீ அமிர்த ஜன்மாஸி சதாத்வம் கேசவப் பிரியே' என்கிற சுலோகத்தைச் சொல்லிக்கொண்டே, கட்டை விரலையும் பவித்ர விரலையையும் (சுண்டு விரல்) பயன்படுத்தி நகம் படாமல் பறிக்கவேண்டும். துளசியை செடியிலிருந்து உருவியும் எடுக்கக்கூடாது. பொதுவாக துவாதசி, சதுர்த்தி திதிகளிலும், வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளிலும் துளசியைப் பறிக்கக்கூடாது. அதே போன்று இரவு நேரங்களில் பறித்தலையும் தவிர்க்கவேண்டும்.
தீபாவளிக்குப்பின் வரும் துவாதசி திதியன்று மணப்பெண்ணான துளசிச் செடிக்கும், மணமகனான நெல்லி மரத்திற்கும் (விஷ்ணுவின் அம்சம்) முறைப்படி பூஜை செய்து திருமணத்தைச் செய்வார்கள். சுமங்கலிப் பெண்கள் வாரந்தோறும் வெள்ளிக் கிழமையன்று துளசி மாடத்தை மூன்றுமுறை வலம் வந்து செடிக்கு நீரூற்றி பூஜை செய்தால் வீட்டில் சகல வளங்களும் கிட்டும். துளசி கவசத்தைப் பாராயணம் செய்தால் கூடுதல் பலன் கிட்டும். தெய்வீகத் தன்மையும், மருத்துவ குணமும் வாய்ந்த துளசிச்செடியை வீட்டில் நாமும் வளர்க்கலாமே!