புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்குத் தெற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிற்றூர் வேந்தன்பட்டி. நகரத்தார் என்று சொல்லப்படும் நாட்டுக் கோட்டை செட்டியார்கள் மிக அதிகமாக வாழும் ஊர். இங்கு ஆறு கோவில் நகரத்தார் வாழ்கின்றனர்.
இவ்வூரிலுள்ள சிவன் கோவிலில் நந்தியெம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக அருள்பாலிக்கின்றார். அதனால் இவ்வூர் தனிச்சிறப்பு பெறுகிறது.
இவ்வூருக்குள் நுழைந்து பஸ்ஸைவிட்டு இறங்கியதும் நம் கண்ணுக்குத் தெரிவது நெய் நந்தீஸ்வரர் கோவில்தான். இவ்வூரைச் சார்ந்த நகரத்தார் பெருமுயற்சி செய்து இக்கோவிலை உருவாக்கியுள்ளனர். நிர்வாகப் பொறுப்பையும் இவர்களே ஏற்றுள்ளனர்.
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் எட்டுமுறை கும்பாபிஷே கம் கண்டுள்ளதாம். சிவபெருமானும் உமா தேவியும் மீனாட்சி- சொக்கலிங்கேஸ்வரர் என்னும் பெயரில் இக்கோவிலின் மூலஸ்தானக் கடவுளர்களாக அருள்பாலிக் கின்றனர். இவர்களைத் தவிர விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவகிரகங்கள் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக் கின்றனர். என்றாலும் நெய் நந்தீஸ்வரரே இக்கோவிலின் சிறப்புக் கடவுளாக உள்ளார். அதனால் நந்திகோவில் என்றே இவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது.
ஊரின் நடுவே அழகுற அமைந்துள்ளது கோவில். உள்ளே நுழைந்ததும் நெய்மணம் கமகமக்கிறது. சிவனாரின் சந்நிதியை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கிறார் நெய் நந்தீஸ்வரர். இவரின் மேனி முழுவதிலும் பசுநெய் உறைந்துபோயிருக்கிறது. எவ்வளவு நெய் பூசினாலும் இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில் லையாம். மிகவும் சக்திவாய்ந்தவர் இவர். கவியரசர் கண்ணதாசன் இவரைப் போற்றிப் பாடியுள்ளார்.
* வேந்தன்பட்டியிலும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் பசு வைத்திருப்ப வர்கள் பால் கறந்து காய்ச்சி நெய்யெடுத்து, நெய் நந்தீஸ்வரருக்கு காணிக்கையாக செலுத்தியபிறகுதான் பாலை விற்கவோ- சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளவோ செய்கின்றார்கள். இன்றும் இப்பழக்கம் இவ்வூர் மக்களிடம் இருந்து வருகிறது.
* நந்தியெம்பெருமானுக்கு "தனப்பிரியன்' என்னும் பெயரும் உண்டு. அதனால்தானோ என்னவோ இவ்வூர் மக்கள் நெய் நந்தீஸ்வர ரின் நெற்றியில் காசுகளை பொட்டுகளாக வைப்பதையும், பண நோட்டுகளை கயிற்றில் கட்டி நந்தீஸ்வரரின் கழுத்தில் மாலையாகப் போடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
* வருடந்தோறும் தை மாதத்தில் மாட்டுப் பொங்கலன்று அதிகாலை 4.00 மணிக்கு நெய் நந்தீஸ்வரருக்கு நந்தி விழா என்னும் விழாவினை இவ்வூர் மக்கள் நடத்திவருகிறார்கள். அந்த தினத்தன்று நெய் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, 30 வகையான மாலைகளால் அலங்கரித்து தீபாராதனைகள் காட்டி வழிபடுகின்றனர். இந்த அதிசய விழா தமிழகத்தில் திருவண்ணாமலையிலும் வேந்தன்பட்டியிலும்தான் நடைபெறுகிறது.
* நெய் நந்தீஸ்வரரின் இரு கொம்புகளுக்கு நடுவே சக்கரம் ஒன்றுள்ளது. இது இயற்கை யாகவே அமைந்தது. (பொதுவாக இந்த அமைப்பு நந்தியெம்பெருமானின் தோற்றத் தில் இருப்பதில்லை).
* நெய் நந்தீஸ்வரருக்கு பசு நெய்தான் காணிக்கைப் பொருள். எனவே இவரைப் பார்க்க வருகிறவர்கள் கலப்படமில்லாத சுத்தமான பசுநெய் கொண்டுவரவேண்டும். நெய் நந்தீஸ்வரருக்கு மணி சாற்றுதல் இந்த வேண்டுதலை நெய் நந்தீஸ்வரருக்கு இவ்வூர் மக்கள் நடத்திவருகிறார்கள். பெரும் பாலோர் தங்களின் சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ நோய்கள் தோன்றினாலோ நெய் நந்தீஸ்வரருக்கு மணி சாற்றுவதாக வேண்டிக்கொள்கி றார்கள். அவை தீர்ந்தபிறகு வெண்கல மணியொன்றும், பட்டுத்துண்டு ஒன்றும், மாலையொன்றும் வாங்கி நெய் நந்தீஸ்வர ருக்கு சாற்றித் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
பிரதோஷ விழா
நெய் நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் நந்தியைப் பசு நெய்யினால் அபிஷேகம் செய்வர். அபிஷேகம் செய்த நெய் நந்தீஸ்வரரின் உடல் முழுவதிலும் நிறைந்து தரையில் வழிந்து அப்படியே தேங்கி நிற்கும்.
மறுநாள் அதையொரு பாத்திரத்தில் எடுத்து நந்தவனத்திலுள்ள நெய்கிணற்றில் கொட்டுவார்கள். நெய் கிணற்றினுள்ளே பல ஆண்டுகளாக நெய் உறைந்து போயிருக்கி றது. இதனுள்ளே இருக்கும் நெய்யில்கூட ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் மொய்ப்பதில்லை யாம்.
பக்தி மணம் கமழ வருவோரெல்லாம் மீனாட்சி- சொக்கலிங்கேஸ்வரரை தரிசிப்ப தோடு, சிவகுடும்பத்துப் பிள்ளையான நந்தி கேஸ்வரரையும் நெய்மணம் கமழ தரிசித்து மகிழ்கிறார்கள். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறிய சந்தோஷத்தை நன்றியாகச் சொல்ல திரும்பத் திரும்ப வருகிறார்கள்.
காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணி வரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.