வழிபாட்டின் உன்னதங்களை உணராமல், வெறுமனே ஆலய வழிபாட்டில் கலந்துகொள்வதிலும், வழிபாட்டின் வழிமுறைகளை இம்மிபிசகாமல் பின்பற்றுவதிலும் ஒரு பயனுமில்லை. இவற்றை உணர்ந்தால் மட்டுமே உயர்பேற்றை அடையமுடியும் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதனா லேயே அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம், ஆராதனை என்ற ஐந்துவகை உபச்சாரங்களுடன் ஆலயங்களில் இறைவனுக்கு ஆறுகால பூஜை நடத்தப்படுகிறது.
பந்தபாசங்கள், சிற்றின்பங்கள், ஆசைகளின் மீதான பற்றை விட்டுவிட்டு இறைவனின் உலகத்திற்குள் வரும்போது, நம்முடைய தவறான எண்ணங்களை பலி தருவதற்காக அமைந்திருப்பது பலிபீடம்! ஆலயத்திற்குள் பலிபீடத்திற்கு அருகில் விழுந்து வணங்கும்போது, "என்னுடைய கீழான எண்ணங்களை எல்லாம் பலிகொடுத்துவிட்டேன். இனி அவை தலைதூக்க வாய்ப்பே இல்லை' என நினைக்கவேண்டும். அவ்வாறே எழும்போது, "என் கீழான எண்ணங்களை எல்லாம் விழச்செய்துவிட்டு மேலான எண்ணங்களுடன் எழுகிறேன்' என்ற எண்ணம் கொள்ளவேண்டும். விழுந்து வணங்குதலைவிட மேற்சொன்னவாறு "எண்ணுதல்' முக்கியம்.
கர்ப்பக் கிரகத்தில் குருக்கள் வேத மந்திரங்களை உரக்கச் சொல்லி அர்ச்சனை செய்கிறார். சமஸ்கிருதத்தில் அவர் உச்சரிக்கும் அர்ச்சனை வரிகளுக்கு அர்த்தம் தேடுவதைவிட, அந்த வரிகள் ஒவ்வொன்றின் முடிவிலும் சொல்கின்ற "நமஹ' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொண்டாலேபோதும்;
அர்ச்சனைக்கான அர்த்தம் புரிந்துவிடும். "நமஹ' என்ற சொல்லுக்கு "என்னுடையது அல்ல' என்று பொருள். பற்றற்று இருத்தலின் வெளிப்பாடு அர்ச்சனை!
பரம்பொருளை அடைவதற்கான மார்க்கங்களுள் முக்கியமானது பற்றற்று இருத்தல். அதனாலயே ஆலயங்களுக்குச் செல்லும்போது அந்தந்த தெய்வத்திற்கு உகந்த, உரிய பொருட்களை வாங்கிச்செல்ல வேண்டும் என்றனர். "கைவீசம்மா கைவீசு' என வெறுங்கையோடு ஆலய வழிபாட்டிற் குச் செல்வது அழகல்ல.
இருள்சூழ்ந்த கர்ப்பக் கிரகத்திற்குள் ஒளியாய், ஒலியாய் விக்கிரகமாக உறைந்திருக் கின்ற இறைவனைக் கண்டுணர்வதற்காக அங்கு சிறிய விளக்கு ஏற்றி வைக்கப்பட் டுள்ளது. ஒளியின்மூலம் இறைவனைக் கண்டுணர முடியும் என்பதற்கு கார்த்திகை தீபவிழா, மகரஜோதி ஆகிய இரண்டும் மகத்தான உதாரணங்கள்!
ஒரு நிறுவனத்திற்கும், அதைச் சார்ந்த மற்றவர்களுக்கும் தொடர்பு மையமாக அந்த நிறுவனத்தின் மக்கள் தொடர்பு (பி.ஆர்.ஓ.) அலுவலகம் செயல்படுவதைப்போல, இறைவனுக்கும் மனிதனுக்குமான தொடர்பு மையமாக இருப்பது நெருப்பு. அதனாலயே ஐம்பூதங்களுள் நெருப்பு மையமாக அமைந்திருக்கிறது. விளக்கின் ஒளியில் கண்டுணர்ந்த இறைவனோடு நாம் தொடர்பை உருவாக்கிக் கொள்வதற்காக சூடம் ஏற்றி தீபாராதனை காட்டப்படுகிறது.
சூடம் என்பது ஆத்மாவைக் குறிக்கும். சூடத்தை ஏற்றியவுடன் அது தீபம்போல எரிந்து ஆத்மா சிவகர்ணம் பெற்று நிற்பதைக் காட்டும். ஆனால், இறுதியில் ஒன்றுமில் லாமல் கரைந்து போய்விடும். அதுபோல ஆத்மா உடலுக்குள் இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தாலும், இறுதியில் அதை விட்டுவிட்டு இறைவனிடமே வந்துசேரும் என்பது இதன் தத்துவம்.
நம் ஆத்மாவானது இறைவனை அடைய வேண்டுமானால், நம்முடைய அஞ்ஞான மலத்தினை ஞானம் என்ற அக்கினியில் எரித்து அழிக்க வேண்டும் என்பதற்காகவே வழிபாட்டின் முடிவில் விபூதி தரப்படுகிறது. அப்படி உணர்ந்ததை "எந்த நிலையிலும், எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்வேன்' என்பதன் அடையாளமாக விபூதியை நெற்றி, மார்பு என தலை முதல் கால்வரை பதினாறு அங்கங்களில் பூசிக் கொள்கிறோம்.
தோஷங்களில் பயங்கரமானது பார்வை தோஷம். கலியுகக் காதலைப்போல பார்த்ததும் பற்றிக்கொள்ளக்கூடியது. சிலரின் பார்வை தீட்சண்யமாக இருக்கும். அது பிறரின்மேல் பட்ட மாத்திரத்தில் தன் வேலையைக்காட்ட ஆரம்பித்துவிடும். சிருதகர்மாவின் தீட்சண்யப் பார்வை பட்டதாலயே விநாயகர் தன் தலையை இழக்கவேண்டி இருந்தது. இழந்த தலைக்கு மாற்றாய் அவருக்குப் பொருத்திய யானைத் தலையால் அவர் "கஜமுகன்' ஆனார் என்று புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
எனவே பார்வை தோஷத்திற்கு விதிவிலக்கானவர்கள் எவருமில்லை. அத்தகைய பார்வை தோஷம் ஆலயத்திற்கு வந்தவர்களுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதாலேயே மற்றவர்களின் பார்வைபடும் புருவங்களுக்கு மத்தியில்- நெற்றியில் வைத்துக்கொள்ள தேவியின் நிறத்தையும் அருளையும் குறிக்கக்கூடிய குங்குமம் தரப்படுகிறது.
இவையெல்லாம் நிகழ்ந்தபின் இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்தவற்றை பிரசாதமாகத் தருவார் கள். அதுவரையிலும் அப்பம், பொரி, கடலை என தனித்தனிப் பெயர்களில் அழைக்கப்பட்டவை இறைவனுக்குப் படைத்தபின் பிரசாதம் என்றாகிவிடும். நம்முடையதாய் இருந்தது இறைவனுக் குரியதாகிவிடுகிறது. அதாவது மற்றவர் களுக்கு உரியதாகி பிரசாதமானது. தன் பெயரினை இழந்த பொருள் பிரசாதம் என்ற உயர்பேற்றைப் பெற்றதைப்போல, "நான்' என்னும் அகந்தையை இழந்து உயர் நிலையைப் பெறவேண்டும் என்பது இதன் தத்துவார்த்தம்.
தன்னிடம் கொடுத்ததை எல்லாருக்கு மாகப் பிரித்துக் கொடுப்பது இறைவனின் குணம். தன்னிடம் கொடுத்ததை கொடுத்தவனுக்குக்கூட திருப்பித்தர மறுப்பது மனிதனின் குணம். தன்னுடைய குணத்திலிருந்து மாறி இறைவனின் குணத்திற்கு வரவேண்டும் என்பதால் பிரசாதத்தை பிறருக்குக் கொடுத்த பிறகே சாப்பிடவேண்டும் என்றனர்.
ஆலய வழிபாட்டின்போது வேறு எந்த சிந்தனைகளும் இல்லாமல் எண்ணங்கள் முழுவதும் இறைவனை நோக்கியே இருக்கவேண்டும். கண் காணும் தேவ ஆராதனையின்போது காது கேட்க மணி ஓசை, சங்கநாதம், வேத மந்திரங்கள் ஒலிக்கப்படுகின்றன. மூக்கு நுகர வாசனை மலர்கள் தரப்படுகின்றன. நாக்கு ருசிக்க பிரசாதம் தரப்படுகிறது. மொத்தத்தில் மனம், மொழி, மெய் ஆகிய திரிகரண சுத்தியுடன் வழிபாட்டில் ஈடுபட்டால் மட்டுமே அதன் உச்சத்தில் ஆத்ம சொரூபத்தை அடைய முடியும்.
"இறைவா! என்னுடைய வாழ்வும், முயற்சியும் உன்னுடைய வாலறிவிலும், வல்வினையிலும் அடங்கி இருக்கட்டும். என் முயற்சி உன் திட்டத்திற்கேற்ப இருக்குமேயானால் நான் வெற்றிபெறுவேன். ஒருவேளை நான் தோல்வியடைந்தாலும் அதை உன் ஆணையாகவே ஏற்றுக்கொள்வேன்' என்று, வழிபாட்டின்மூலம் பெற்ற மனநிலையை இறைவனோடு உண்டாக்கிக் கொள்வதற்காகவே, வழிபாட்டின் இறுதியில் ஆலயத்தை வலம்வருகிறோம். வலம்வருதல் பிராணா யாமத்தின் அடையாளம். நாம் பெற்ற மேலான எண்ணங்களால் மனம் பிராணா யாமத்திற்குத் தயாராகிறது. அந்த எண்ணத் தால் உருவாகும் மாற்றங்களால் சுவாசம் சீரடைகிறது. சீரான சுவாசம் ஆத்மாவை ஆனந்தமடைய வைக்கிறது. இதன் அடை யாளம் ஆலயக் கொடியேற்றம்.
ஆலயத்தை வலம்வரும்போது எண்ணம் மட்டுமின்றி நம்முடைய உடம்பு என்ற பூதப்பொருளும், அதனுள் இருக்கக்கூடிய ரத்தம், எலும்பு, நரம்பு, சதை, நீர், வாயு முதலியவற்றோடு, சொல்லும் செயலும் இறையருளைப் பெற்று விளங்குவதாக பாவனை செய்துகொள்ளவேண்டும். அப்படிச் செய்ய பேச்சு பெரும் தடையாக இருக்கும் என்பதாலயே ஆலயத்தை மௌனமாக வலம் வரவேண்டும் என்ற பொருளில், "நாக்கை அடக்கி நாணைப் (மூச்சை) பிடி' என்றனர்.
ஆனால், பலரும் நாக்கையும் அடக்கு வதில்லை; நாணையும் பிடிப்பதில்லை!
ஆலயத்தை மூன்றுமுறை வலம் வரவேண்டும். மூன்று என்பது தீர்க்கத்தைக் குறிக்கும். வழிபாட்டின் உன்னதங்களை நாம் உணர்ந்துகொண்டதன் அடையாளமாகவே ஆலயத்தை மூன்றுமுறை வலம்வருகிறோம்.
சுற்றிவந்த கையோடு வீட்டை நோக்கி நடையைக் கட்டிவிடக்கூடாது. ஆலயத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்த பின்பே வீட்டிற்குக் கிளம்ப வேண்டும்.
நம் வீட்டிற்கு வந்த விருந் தினர் திரும்பிச் செல்லும் போது, நம் பிள்ளையை அவர் களுடன் சென்று வழியனுப்பிவிட்டு வரச்சொல்லி அனுப்பி வைப்போம். அதற்கு விருந்தினர், "வேண்டாம்; நான் போய்விடுவேன். சிரமம் ஏதுமில்லை... நீ இங்கேயே இரு' என நம் பிள்ளையின் கையைப் பற்றிப் பக்குவமாக மறுப்புச் சொல்லிவிட்டு நம்மிட மிருந்து விடைபெறுவர். அதேபோல, வழி பாட்டிற்கு ஆலயத்திற்கு வந்த நாம் விழுந்து வணங்கி வீட்டிற்குச் செல்லத் தயாரானதும், நம்மை வழியனுப்பிவிட்டு வரச்சொல்லி இறைவன் நம்மோடு பூதகணங்களை அனுப்பி வைப்பார். விருந்தினரைப்போல நாம் அதற்குச் சம்மதிக்காமல், "நான் சென்று விடுவேன். இறைவனின் துணை எனக்கிருப்ப தால் பயமில்லை. எனவே நீங்கள் இங்கேயே இருங்கள்' என அந்த பூதகணங்களிடம் மறுப்புச் சொல்லி இறைவனிடம் விடைபெறு வதற்காக, வீட்டிற்குக் கிளம்பும்முன் ஆலயத் தில் சிறிதுநேரம் அமர்ந்திருந்து செல்ல வேண்டும்.
(தொடரும்)