"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்

தெய்வத்துள் வைக்கப் படும்.'

-திருவள்ளுவர்

தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்பவராகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.

Advertisment

நெல்லித்துறையில் வசித்து வந்தார். ஒரு வாழைப்பழ வியாபாரி. தினமும் கூடையில் வாழைப்பழம் எடுத்துச் சென்று நகரில் வியாபாரம் செய்துவந்தார். மாலையில் வீடு திரும்பும்போது நகர எல்லையிலுள்ள ஆலமரத்தடியில் அமர்ந்து அன்றைய கணக்கை சரிபார்ப்பார். ஒருநாள் ஆலமரத்தில் வசித்த இரண்டு குரங்குகள் அவரை உற்றுப்பார்த்தன. மீதமிருந்த வாழைப்பழங்களை அவற்றுக்கு உண்ணக் கொடுத்தார்.

இதனால் குரங்குகள் தினமும் வியாபாரியை எதிர்பார்க்க ஆரம்பித்தன. ஒருநாள் வாழைப்பழம் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. வெறும் கூடையுடன் திரும்பினார் வியாபாரி. குரங்குகள் ஏங்கி ஏமாந்ததைக் கண்டார். தினமும் பத்துப் பழங்களை எடுத்துவர ஆரம்பித்தார். இப்படியே இரண்டு ஆண்டுகள் ஓடின. வியாபாரியுடன் குரங்குகள் அன்யோன்யமாகி விட்டன. சில நாட்களாக வாழைப்பழ வியாபாரி அந்த இடத்திற்கு வரவில்லை. அவருக்காக காத்திருந்த குரங்குகள் எப்படியும் வியாபாரி வந்து விடுவார் என்று நம்பின. மாதங்கள் கடந்தன.

வியாபாரி வராததால் குரங்குகள் கவலையோடு இடம்பெயர்ந்தன. மரத் துக்கு மரம் தாவி கால்போன போக்கில் நடந்தபோதும் வியாபாரி நினைவு வாட்டி யது. சில நாட்களுக்குப்பின் எப்போதும் போல வியாபாரி வாழைப்பழம் விற்க நகருக்குச் சென்றிருந்தார். சந்தையில் அபாரமாக கூட்டம் கூடியிருந்தது. நெரிசலில் சில திருடர்கள் சந்தைக்கு வந்த பெண்களின் நகைகளைத் திருடிவிட்டனர்.

Advertisment

dd

அதைப் பார்த்தவர்கள் திருடர்களைப் பிடிக்க விரட்டினர். பயத்தில் ஓடியபோது வியாபாரியின் கூடையில் நகைகளைப் போட்டு மறைந்துவிட்டனர் திருடர்கள். துரத்திப்பிடிக்க வந்தவர்கள் "வியாபாரிக்கும் திருடர்களுக்கும் தொடர்பு இருக்கிறது; அதனால் தான் நகைகளை இந்த கூடையில் போட்டுச் சென்றுள்ளனர்' என்று குற்றம் சாட்டி. அரண்மனைக் காவலரிடம் ஒப்படைத்தனர் வியாபாரியிடம் உண்மை யைக் கேட்காமல் நகருக்கு வெளியில் சிறையில் அடைத்தார் மன்னர்.

குரங்குகள் இரண்டும் மரங்களில் அந்தப் பகுதிக்கு வந்தன. கைதியாய் அடைக்கப் பட்டிருந்த வியாபாரியைப் பார்த்தன. குரங்குகளால் என்ன செய்ய முடியும்? சிறைக்குள் இருந்த வியாபாரியை சுற்றிச் சுற்றி வந்து கண்ணீர் வடித்தன. இந்த நிகழ் வைப் பார்த்த சிறைக் காவலர்கள் அந்த குரங்குகளை விரட்டினர். அவ்விடத்தைவிட்டு அவை அகல மறுத்தன. கண்ணீர் வடிய சிறைக் கம்பிகளைப் பற்றி அரற்றின. இதைக் கண்ட காவலர்கள் செய்தியை மன்னரிடம் தெரிவித்தனர்.

kasilangam

மன்னர் வந்து ஆய்வு செய்தார்.

குரங்குகள் நெகிழும் காட்சியைக் கண்டதும், "அந்த வியாபாரியை விடுதலை செய்யுங்கள். ஐந்தறிவு படைத்த விலங்குகள் அவருக்காத கண்ணீர் வடிக்கின்றன என்றால், தவறு செய்திருக்க மாட்டார். அன்பே சிவம் என்பார்கள். உயிரினங்களிடம் இவ்வளவு அன்பு காட்டுகி றாரே'' என்று சொல்லி, வியாபாரியை அரண் மனைக்கு அழைத்துச் சென்று வெகுமதி கொடுத்து அனுப்பினார். குரங்குகள் ஆனந்தத்தில் கூத்தாடின.

அரசர் ஒருவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். தனக்குப் பின் நாட்டையாளும் தகுதி யாருக்கு இருக்கிறது; யாருக்கு பட்டம் சூட்டு வது என்ற குழப்பம் ஏற்பட்டது. மூவருமே குதிரை ஏற்றம், வில்லித்தை போன்றவற்றில் சிறந்து விளங்கினர். காட்டில் தவம் செய்துகொண்டிருந்த தன் ஆஸ்தான குருவை சந்தித்து யோசனை கேட்டார் மன்னர்.

"மூன்று பிள்ளைகளுக்கும் தேர்வு வைப்போம். அதில் யார் ஜெயிக்கிறாரோ அவருக்கு பட்டம் சூட்டலாம்...'' என்றவர்; என்ன தேர்வு வைக்கலாம் என்பதையும் சொல்லி அனுப்பினார் துறவி.

அரண்மனைக்குத் திரும்பிய அரசர், தனித்தனி மாளிகையில் வசித்து வந்த தன் மூன்று மகன்களையும் அழைத்து, மூன்று பேருக்கும் சமஅளவு பணத்தைக் கொடுத்தார். "ஏழு நாட்களுக்குள் உங்கள் மாளிகைகளை என்ன பொருள் வாங்கி நிரப்புகிறீர்களோ தெரியாது. மாளிகை முழுதும் நிரம்பியிருக்க வேண்டும். யாருடைய மாளிகை நிரம்பியிருக்கிறதோ, அவனே எனக்குப் பின் நாட்டை ஆளத் தகுதியுடையவன்'' என்று அறிவித்தார்.

kasilangam

"கொடுத்திருக்கிற பணமோ மிகக் குறைவு. மாளிகையோ மிகப்பெரியது. எதை வாங்கி நிரப்புவது?' என மூவரும் யோசனை செய்தனர். ஊரிலுள்ள குப்பைகளை எல்லாம் அள்ளி வந்து மாளிகைக்குள் குவித்தான் முதலாமவன். மேலும், அரசர் கொடுத்த பணத்தில் அண்டை நாட்டிலிருந்து குப்பைகளை வாங்கி நிரப்பினான்.

இரண்டாவது இளவரசனோ புல் மற்றும் வைக்கோலால் மாளிகையை நிரப்பப் பார்த்தான். பாதிகூட நிரம்பவில்லை. அதற்குள் ஏழு நாட்கள் முடிந்து விட, அரசரும் குருவும் ஒவ்வொரு மாளிகையாகப் பார்த்த படி வந்தனர்.

முதல் மாளிகையை நெருங்குவதற்கு முன் துர்நாற்றம். மூக்கைப் பிடித்தபடி வேகமாக கடந்து சென்றுவிட்டனர்.

இரண்டாவது மாளிகையில் பாதி அளவுக்குதான் வைக்கோல் அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தனர். மூன்றாவது மாளிகைக்குள் சென்றனர். மாளிகையில் எந்தப் பொருளும் இல்லை. ஏற்கெனவே இருந்த பொருட்களும் அகற்றப்பட்டிருந்தன. "இங்கு ஒன்றுமே... இல்லை..'' என்றார் மன்னர். குருவுக்குப் புரிந்து விட்டது.

ராஜாவிடம் அங்கு எரிந்து கொண்டிருந்த அகல் விளக்குகளைக் காட்டி, "மாளிகை முழுதும் தீப ஒளியால் நிரம்பியிருக்கிறது'' என்று விளக்கினார் குரு. மாளிகையை ஒளியால் நிரப்பிய மகனே. நாட்டையும் ஆளத் தகுதியுடையவன் என, அவனையே தனக்குப் பின் மன்னனாக அறிவித்தார்.

தன்னையும் மற்றவர்களையும் வாழவைக்க அன்பு கலந்த அறிவுதான் சிறந்த செல்வம். அத்தகைய அன்பையும் அறிவையும் தந்து அளப்பரிய ஆற்றலையும் தந்தருளும் உன்னதமான திருத்தலம்தான் மேட்டுப்பாளையத்தில் எழுந்தருளியிருக்கும். காசி லிங்கேஸ்வரர் திருக்கோவில்.

இறைவன்: காசி லிங்கேஸ்வரர்.

இறைவி: விசாலாட்சியம்மை.

விசேஷமூர்த்தி: பஞ்சலிங்கம்.

புராணப்பெயர்: கரட்டுமேடு. (தற்போது சத்தியமூர்த்தி நகர்). மாதேஸ்வரன் கோவில் ஊர்: மேட்டுப்பாளையம்.

தீர்த்தம்: பவானி தீர்த்தம்.

தலவிருட்சம்: வன்னி மரம், வில்வ மரம்.

சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், காசிக்குச் சமமானதாக ரிஷிகள் கண்டறிந்த பெருமை வாய்ந்ததும், முக்தி நிலையை அடையச் செய்வதும், அன்றாட வாழ்வில் ஈசன் பல மகிமை களை நிகழ்த்துகின்ற பெருமை வாய்ந்ததும், வைப்புத் தலங்களில் ஒன்றாகத் திகழ்வதுமான இவ்வாலயம், மாதேஸ்வரர் அறக்கட்டனை நிர்வாகக் குழுவினரால் நன்றாகப் பராமரிக்கப்பட்டு தினமும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

தலப் பெருமை

சில நூற்றாண்டுகளுக்குமுன் ஓடந்துறையில் விஜயன், விமலன் என்ற சிவபக்தர்கள் வாழ்ந்து வந்தனர்.

இதில் விஜயன் என்பவர். "சிவாய நம' என்று மனதில் உச்சரித்துக்கொண்டே தனது பணிகளை மேற்கொள்வார். எவராவது அவரிடம் ஒரு பிரச்சினையைச் சொன்னால், "தங்கள் பிரச்சினையை என்னிடம் கூறிவிட்டீர்கள் அல்லவா. நான் நமச்சிவாயத்திடம் விண்ணப்பம் வைத்துவிடுவேன்.

அவர் பார்த்துக்கொள்வார்'' என்பார். காசி விஸ்வநாதரை மனதில் தியானித்து எவ்விடத்திலிருந்தாலும் சிவவழிபாடு மேற்கொண்டபின் தான் உணவுன்பார் விஜயன். மற்றொருவர் விமலன் பசிதாங்காதவர்.

இவர்கள் இருவரும் கட்டுசாதம் கட்டிக்கொண்டு ஒருநாள் தேக்கம்பட்டி, நெல்லித்துறை பகுதிகளுக்குச் சென்றுவர குதிரையில் பயணம் மேற்கொண்டனர்.

kasilangam

அப்போது ஒரு குறிப்பிட்ட இடம் வரும்போது விமலனுக்கு பசி வாட்டியது. "ஏம்ப்பா... இங்கு சாப்பிட்டுச் செல்வோமா'' என்று விமலன் கேட்க, அதற்கு விஜயன், "சிவபூஜை செய்தபின்தான் உணவுண்பேன் என்பது உமக்குத் தெரியுமல்லவா?'' என்றார். அதற்கு விமலன், "அதனால்தான் இங்கே சாப்பிடலாம் என்று சொன்னேன். அதோ பார். மலைக்குன்றின்மேல் ஈசன் உள்ளார். அங்கே போவோம்'' என்றார். குதிரைகளை ஓரிடத்தில் நிறுத்தி, "அருகிலுள்ள பவானி நதிக்கரையில் நீராடி வருகிறேன்'' என்று சொல்லிச் சென்றார் விஜயன்.

விஜயன் வருவதற்குள் குதிரையின் கொள்ளு வைக்கின்ற பையில் மணல் நிரப்பி, அதைக் கீழே லிங்கம்போல் மணல், நீர் கலந்து செய்து, குன்றிலுள்ள வில்வ இலைகள், மலர்களை வைத்து தயார் நிலையில் இருந்தார் விமலன். விஜயன் வந்ததும் மந்திரங்கள் உச்சரித்து வழிபாட்டை முடித்து இருவரும் வயிறார கட்டுசாதம் சாப்பிட்டு, சற்று நேரம் ஓய்வெடுத்தனர். அப்பொழுது விமலன் விஜயனிடம், "என்னை மன்னித்துவிடு'' என்று உண்மையை எடுத்துரைத்தார். பிறகு இருவரும் போய் அந்த லிங்கத்தை கலைக்க முயற்சித்தனர்; முடியவில்லை. "இதுதான் ஈசன் செயல்'' என்று விஜயன் விமலனிடம் சொல்ல. "காசியில் உள்ள விஸ்வநாதரை எண்ணி வழிபட்டேன். அவரே இங்கு எழுந்தருளி அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார்'' என்றார். சிவாய நம என உச்சரித்து தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.

தல வரலாறு

சுமார் 400 ஆண்டுகளுக்குமுன் வனவிலங்குகள் வசிக்கும் இந்த கரட்டுமேடு என்ற பகுதி (இன்று சத்தியமூர்த்தி நகர்) அடர்ந்த காடாக இருந்தது. ஒரு சிறிய குன்றின் இடப்புறத் தில் வற்றாத ஜீவ நதியான வசந்த பவானி நதி ஓடுகிறது. கர்நாடகாவில் உள்ள லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பல சாதுக்கள், ரிஷிகள் மற்றும் முனிகள் இந்த மலையை வழிபாட்டிற்கான புனித இடமாகத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் பவானி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட மூன்று லிங்கங்கள் (பாணலிங்கம்) கொண்ட குகைக்கோவிலை செதுக்கினர். இறைவனின் இருப்பிடத்தை எடுத்தவர்கள் உண்மையில் மோட்சம் அடைந்ததாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

அதன்பின் சுமார் 120 ஆண்டுகள்முன்பு இந்தப் பகுதியில் கிருஷ்ண தேவர் என்பவர் வாழ்ந்தார். அவர் இறைவனை மிகவும் நேசித்தார். அவர் குகைக் கோவில், உள் கருவறை மண்டபம் மற்றும் மிக முக்கிய மூலவிமானத்துடன் கூடிய சிவாலயமாக மாற்றினார். அவருடைய மகன் மகாதேவரும் இந்த கோவிலின் பராமரிப்பில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவர் வாழ்ந்த பகுதி (குன்றின் அடிவாரம்) மகாதேவபுரம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணா, மகாதேவர் காலத்திற்குப்பின் பல ஆண்டுகளாக இந்த கோவிலில் பராமரிப்பு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டதால் கோவில் வளாகம் திருடர்கள் மற்றும் குற்றவாளிகளால் பயன்படுத்தப்பட்டது. 1982-ல் (11-7-1982) மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவர் திருச்சபை என்ற பெயரில் சிறிய வழிபாட்டுக்குழு அமைத்து, கோவிலை சுத்தம் செய்தனர். கும்பாபிஷேகம் நடத்த கோவை கௌமார மடத்தைச் சார்ந்த முனிவர் சுந்தரசுவாமி அடிகளார் முன்வந்தார்.

இந்த கோவிலில் காசியின் தெய்வீக புவியியல் உள்ளது என்று கூறப்படுகிறது. மலையின் மீது சிவன்கோவில் உள்ளது. இடப்புறத்தில் ஒரு மயானம் உள்ளது. மற்றும் பவானி நதியும் உள்ளது.

14-7-1987-ல் இக்கோவில் கௌமார மடாலயத்தின் முனிவர் சுந்தர சுவாமி அவர்களால், பராசக்தி, பாலமுருகன், பஞ்சலிங்கம் ஆகியோருக்கு சன்னதிகள் கட்டப்பட்டன. 2003-ஆம் ஆண்டு (4-6-2003) இக்கோவிலில் நிலையை பூர்ண சிவாலயமாக உயர்த்தி முனிவர் குமரகுருபர சுவாமிகளால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2009-ல் வெள்ளியங்கிரி ஆண்டவர் திருச்சபையும் அனைத்து இந்து சமுதாயசங்கமும் இணைந்து நந்தவன ஸ்ரீ மாதேஸ்வர ஆலய அறக்கட்டளை என்ற புதிய அமைப்பை உருவாக்கினர். 2-2-2015 தை மாதம் 19-ஆம் நாள் குடமுழுக்கு கண்டு பொலிவுடன் விளங்குகிறது.

சிறப்பம்சங்கள்

ப் இறைவனின் திருநாமம் காசி லிங்கேஸ்வரர். இறைவியின் திருநாமம் விசாலாட்சி அம்மை ஆசீர்வாத கணபதி, க்ஷேத்திரி விநாயகர், வன்னி மர விநாயகர் என மூன்று விநாயகர் உள்ளனர்.

ப் யோகிகள், ஞானிகள், தவசிகள், சித்தர்கள், முனிவர்கள் அனைவரும் தாம் செய்யும் தவத்தால் சித்திகளை அடைகிறார் கள். எந்தவிதமான விருப்பு வெறுப்புமில்லா மல் சித்தத்தை சிவன்பால் வைத்து தவம் செய்கிறார்கள். அந்த வகையில் கிருஷ்ண தேவர் காலத்தில் நஞ்சுண்டா சுவாமிகளும், மகாதேவர் காலத்தில் சிவகிரி சுவாமிகளும் அருந்தொண்டாற்றி இத்தலத்தில் மோட்சம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப் இத்தலத்திலுள்ள கோசாலையில் உள்ள பசுமாட்டிற்கு அமாவாசையன்று அகத்திக்கீரை வழங்குவதால் வீட்டில் ஏற்படும் கஷ்டம் நீங்கும். திருமணத் தடை, குழந்தையின்மை போன்ற தடைகள் நீங்கி, வாழ்வில் சிறந்து விளங்கிட முன்னோர் ஆசி கிடைக்கும். அகத்திக்கீரை போன்றே பசுமாட்டிற்கு ஒரு பிடி அறுகம்புல்லைக் கொடுப்பதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.

ப் சிவபெருமானின் மூன்று கண்ணிலிருந்து தெறித்த கண்ணீர்ச் சொட்டுகளே ருத்ராட்சங்களாயின என்பதால் ருத்ராட்ச மானது சிவனின் அம்சமாகக் கருதப்படுகிறது. சிவனின் கண்களிலிருந்து 38 விதமான ருத்ராட்சங்கள் தோன்றின. வலது கண்ணில் இருந்து 12 மஞ்சள் நிற ருத்ராட்சங்களும், இடது கண்ணில் இருந்து 16 வெண்ணிற ருத்ராட்சங்களும், நெற்றிக் கண்ணிலிருந்து 10 கருப்பு வண்ணத்தில் ருத்ராட்சங்களும் தோன்றின. அந்தவகையில் ஒருமுகம் முதல் 21 முகம் வரை கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன.

ருத்ராட்சத்தை ஒருநாள் முழுவதும் பன்னீரில் ஊறவைத்து பூஜை செய்து அணிந்து கொள்ள ருத்ராட்சத்திலிந்து நல்ல சக்திகள் கிடைக்கும். அதை அணிவதற்குமுன்

"ஓம் ருத்ர தேவாய நமோ நமஹ

ஓம் சிவாய நமஹ'

என்ற மந்திரத்தைக் கூறி அணிவது சிறப் பாகும்.

ருத்ராட்சம் அணிந்து தினமும் குளிக்கும் போது கங்கையில நீராடிய புண்ணியம் கிடைக்கும். காசிக்கும் சமமான தலம் என்பதாலும், ரிஷிகள், சாதுக்கள் தவமிருந்த இடம் என்பதாலும் இத்தலத்தில் வந்து ருத்ராட்சம் அணிபவர்கள் நல்ல பலன்களைப் பெற்று வாழ்வர் என்பது கண்கூடு.

ருத்ராட்சம் உடலோடு ஒட்டிக்கொண்டி ருப்பதால் உடலுக்குள் தோன்றும் பல்வேறு நோய்க் கிருமிகளை அழிக்க வல்லதாகத் திகழ்கிறது.

மன அழுத்தம், சர்க்கரை வியாதி, இதய நோய்கள், புற்றுநோய்களை போக்கக் கூடியதாகவும், எதிர்மறை சிந்தனைகளை அண்டவிடாமல் தடுக்கும் கவசமாகவும் ருத்ராட்சம் செயல்படுகிறது.

நட்சத்திர அடிப்படையில் அறிய வேண்டிய ருத்ராட்ச விவரத்தைக் கீழே காண்போம்.

அஸ்வினி- ஒன்பது முகம்.

பரணி- 6 முகம், 13 முகம்.

கார்த்திகை- 12 முகம்.

ரோகிணி- இரண்டு முகம்.

மிருகசீரிடம்- மூன்று முகம்.

திருவாதிரை- எட்டு முகம்.

புனர்பூசம்- ஐந்து முகம்.

பூசம்- ஏழு முகம்.

ஆயில்யம்- நான்கு முகம்.

மகம்- ஒன்பது முகம்.

பூரம்- ஆறுமுகம், 13 முகம்.

உத்திரம்- பன்னிரண்டு முகம்.

அஸ்தம்- இரண்டு முகம்.

சித்திரை- மூன்று முகம்.

சுவாதி- எட்டு முகம்.

விசாகம்- ஐந்து முகம்.

அனுஷம்- ஏழு முகம்.

கேட்டை- நான்கு முகம்.

மூலம்- ஒன்பது முகம்.

பூராடம்- ஆறுமுகம், 13 முகம்.

உத்திராடம்- பன்னிரண்டு முகம்.

திருவோணம்- இரண்டு முகம்.

அவிட்டம்- மூன்று முகம்.

சதயம்- எட்டு முகம்.

பூரட்டாதி- ஐந்து முகம்.

உத்திரட்டாதி- ஏழு முகம்.

ரேவதி- நான்கு முகம்.

மேற்குறிப்பிட்ட அவரவர் நட்சத்திரத்திற் கேற்ப முகம் கொண்ட ருத்ராட்சங்களை இத்தல ஈசனிடம் பூஜித்து அணிவது மிகுந்த பலனைத் தரும். பலன் பெற்றவர்கள் ஏராளம் என்கிறார் ஆலய அர்ச்சகர்.

ப் தல விருட்சமான வன்னி மர விநாயகரை அவிட்ட நட்சத்திரம் வருகிற நாளில் நெல் பொரியினால் அர்ச்சனை செய்தால் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். திருமணம் கைகூடும். க்ஷேத்திர விநாயகருக்கு தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல் நைவேத்யமாகப் படைத்து பிரசாதம் கொடுத்தால் தீராத கடன் நிவர்த்தி யாகும். வணிகர்களுக்கு வளர்ச்சி கூடும்.

ப் நீத்தார் கடன், இறுதிச்சடங்குகள், 16-ஆவது நாள், வருடாந்திர நிகழ்வுகள், அஸ்திகரைத்தல் போன்ற நிகழ்வுகள் நந்தவனத்திலும், பவானி ஆற்றங்கரையிலும் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

"தங்கள் குடும்பத்திலோ, உறவினர் நண்பர்களோ விபத்தில் அகால மரண மடைந்து மன அழுத்தத்தைச் சந்தித்து குழப்பத் துடன் வாழ்பவர்கள் இத்தல காசிலிங்கேஸ் வரிடம் விண்ணப்பம் வைத்தால் ஆரோக் கியம் சீராகி மன அழுத்தமின்றி வாழ்வர். காசிக்கு சென்றுதான் அறிந்தோ அறியா மலோ செய்த பாவங்களை தீர்க்கவேண்டும் என்பதில்லை. இத்தல ஈசன் கங்கையில் இருந்து வரவழைக்கப்பட்டவர் என்பதால் இவரை வழிபடுபவர்கள் ஆனந்த நிலையை அடைவர் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலயப் பிரதான அர்ச்சகரான சதீஷ் குருக்கள்.

கவலைகளைக் களைந்து கஷ்ட நஷ்டங் களை போக்கி இஷ்டப்படி அருள்புரியும் கரட்டுமேடு ஸ்ரீ காசி லிங்கேஸ்வரை பிரதோஷ நாளில் வழிபடுவோம். பிரகாச வாழ்வுடன் வளமோடு வாழ்வோம்.

காலை 6.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: சதீஷ் குருக்கள், அலைபேசி: 98943 62280. ஸ்ரீ காசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் (மாதேஸ்வரன் கோவில்), சத்தியமூர்த்தி நகர், மேட்டுப் பாளையம்- 641 305. கோயம்புத்தூர் மாவட்டம்.

அமைவிடம்: கோவை மாவட்டம் மேட்டுபாளையத்திலிருந்து, தேக்கம்பட்டி, வனபத்தரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில், மேட்டுப்பாளைய பேருந்து நிலை யத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆற்றங்கரை, நந்தவனம் பேருந்து நிறுத்தம் இறங்கினால் நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது ஆலயம். பேருந்து, ஆட்டோ வசதியுண்டு.

படங்கள்: போட்டோ கருணா