ணபதி என்றிட கவலை தீரும்! - மும்பை ராமகிருஷ்ணன்

"கணபதி என்றிட கலங்கும் வல்வினை

கணபதி என்றிட காலனும் கைதொழும்

கணபதி என்றிட கருமம் ஆதலால்

Advertisment

கணபதி என்றிட கவலை தீருமே.'

ஆவணி மாத சுக்லபட்ச (வளர்பிறை) சதுர்த்தி திதியை விநாயகர் அவதார தினமாகக் கொண்டாடுகிறோம்.

இறைவனது அவதாரங்கள் அனைத்தும் காரண காரியங்களோடு நிகழ்ந்தவையே.

Advertisment

குதிரைமுக அரக்கனை அழித்து வேதங்களை மீட்க மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரைத் தலையுடன்) அவதரித் தார். பூமியை மீட்க வராக (பன்றி முகம்) அவதாரம் எடுத்தார் விஷ்ணு. ஹிரண கசிபுவை அழிக்க வினோத நரசிம்ம அவதாரம். இராவணாதியர்களை அழிக்க மனித வடிவில் இராம அவதாரம்.

மஹிஷாசுரனை அழிக்க பிரம்மா, விஷ்ணு, சிவ சக்திகள் ஒன்றிய துர்க்கை அவதாரம். சிவபக்த சூரபத்மாதியரை அழிக்க, சிவனது மறுவுருவாக கந்தனின் தோற்றம்.

அரக்கி மஹிஷியை அழிக்க ஹரிஹர புத்திரனாக மணிகண்டன் என்னும் ஐயப்பன் அவதாரம்.

கஜமுகாசுரனை அழிக்க யானைத் தலை யுடன் கணபதி அவதாரம்.

ஒருசமயம், பார்வதிதேவி நீராடச் செல்லும்முன், தன் உடலிலிருந்த மஞ்சள் பூச்சுகளைத் திரட்டி உருவம் கொடுத்து, அதற்கு உயிரூட்டி காவலாக இருக்குமாறு பணித் தாள். அப்போது அங்கேவந்த சிவபெருமான் உள்ளே செல்ல எத்தனித்தபோது காவலுக் கிருந்த சிறுவன் தடுத்தான். கோபம்கொண்ட சிவன் அவனது தலையைத் துண்டித்தார். இதுகண்டு பார்வதி கோபம் கொள்ள, விவரமறிந்த சிவன் ஒரு யானையின் தலையை வெட்டி அவனுட லில் பொருத்தினார். எனவே நாம் பரவலாகக் காணும் கணபதி யானைத் தலையுடனே காட்சியளிப்பார்.

ss

மனிதமுக கணபதியை பூந்தோட்டம்- கூத்தனூர் அருகேயுள்ள செதலபதியில் (தில தர்ப்பணப்புரி) தனிச் சந்நிதியில் தரிசிக்கலாம். சில கோவில்களில் தூண்களிலும் காணலாம். சிதம்பரம் தெற்கு விதியிலும், திருச்சி மலைக் கோட்டையிலும் நரமுக (மனிதமுக) கணபதி யைக் காணலாம்.

கணபதியின் தலையை வெட்டியதற்குப் பரிகாரமாக, சிவபெருமான், "கணங்களுக் கெல்லாம் தலைவனாக விளங்குவாய்' என கணபதிக்கு வரமருளினார். விபுகணம், வசுகணம், ருத்ரகணம், யக்ஷகணம், ஸாத்ய கணம், மருத்கணம், ஆதித்யகணம், ஸுத்த கணம், சாரணகணம், குஹ்யகணம், அஸ்வினி கணம் என்று சாஸ்திர, புராணங்கள் கூறுகின் றன. அனைத்து கணங்களுக்கும் தலைவன் என்பதால் அவருக்கு மகாகணபதி என்று பெயர். எல்லா நாயகர்களுக்கும் முதன்மையானவர் என்பதால் அவர் விநாயகர்.

மேலும், "எந்த செயலையும் செய்யத் தொடங்குவதற்குமுன் கணபதியை வணங்க வேண்டும். இல்லையெனில் அச்செயலானது வெற்றிபெறாது' என்றும் சிவன் வரம் தந்தார்.

எனவே எந்தப் பூஜை செய்வதென்றாலும் முதலில் மஞ்சளில் கணபதியைப் பிடித்து வைத்த பிறகே தொடங்கும் வழக்கம் உள்ளது.

"விக்னங்களை (தடங்கல்கள்) உருவாக்குபவரும், அவற்றை நீக்குபவரும் அவரே' என்று கணபதி துதி கூறுகிறது.

"ஸர்வ விக்னகரம் தேவம்

ஸர்வ விக்ன விவர்ஜிதம்

ஸர்வஸித்தி ப்ரதாதாரம்

வந்தே அஹம் கணநாயகம்.'

எனவே அவர் பெயரும்

விக்னேஸ்வரன். மகா கணபதியை அதிகமாகக் கொண்டாடும் மகாராஷ்டிரத் தில் அவரை விக்னராஜா, விக்னஹர்த்தா (விக்னங்களை அகற்று பவர்) என்பர்.

இதனை உணர்த்த மூன்று சம்பவங்களை நினைப்போம்.

திரிபுராசுர வதம்

திரிபுராசுரர்களை அழிக்க சிவபெருமான் தேரில் ஏறிப் புறப்பட்டார். அப்போது அவரது தேரின் அச்சு முறிந்தது. இது எதனால் நிகழ்ந்தது என்று யோசித்த சிவபெருமானுக்கு, தான் விநாய கருக்குத் தந்த வரம் நினைவுக்கு வந்தது. அதன் பின்னர் விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை வணங்கிவிட்டுப் போருக்குப் புறப்பட்டார்; அசுரர்களை அழித்தார். இந்த நிகழ்வு நடந்த இடம் அச்சிறுபாக்கம் எனப்படுகிறது. (மேல்மருவத்தூர் அருகே உள்ளது.) இதை அருணகிரிநாதர், "முப்புரம் எரிசெய்த அச் சிவனுறை ரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா' என்று பாடுகிறார்.

கணபதியே தன் சகஸ்ரநாமத்தைக் கூற, அதை சிவபெருமான் துதித்தாராம். இது கணேச தந்திரத்தில் உள்ளது. துதிப்போருக்கு மிகுந்த பலன்தர வல்லது.

அமிர்தம் கடைதல்

தேவர்களும் அசுரர்களும் இணைந்து, வாசுகிப் பாம்பைக் கயிறாகவும், மந்தர மலையை மத்தாகவும் கொண்டு அமிர்தம் பெறவேண்டிப் பாற்கடலைக் கடைந்தனர். ஆனால் வெளிப் பட்டதோ ஆலகாலம் எனும் கடுமையான விஷம். அதன் வெப்பத்தைத் தாங்கமுடியாமல் அனைவரும் துடித்தனர். மகாவிஷ்ணு கருமை நிறமாகிவிட்டார். அனைவரும் பரமேஸ் வரனிடம் சென்று முறையிட்டனர். அனைவரையும் காக்கும் பொருட்டு சிவபெருமான் அந்த கொடிய நஞ்சை உட்கொண்டார். அது கழுத்துக்குக் கீழே செல்லாதவாறு பார்வதி தேவி இறுக்கிப் பிடித்தார். விஷம் கழுத்தி லேயே தங்கிவிட, சிவன் நீலகண்டனானார்.

ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என அனைவரும் யோசிக்க, கணபதியை வணங்காமல் பாற்கடலைக் கடைய முற்பட்டதை உணர்ந்த னர். பின்னர் கடல் நுரையையே விநாயகராக வடித்து வழிபட்டு பாற்கடலைக் கடந்து அமிர் தம் பெற்றனர். அந்த வெண்ணிற விநாயகர் சுவாமிலை அருகேயுள்ள திருவலஞ்சுழியில் அருள்பாலிக்கிறார். கடல் நுரையாலான கணபதி என்பதால் அவருக்கு தினசரி அபிஷேகம் கிடையாது. ஆனால் விநாயகர் சதுர்த்தியன்று தேனால் அபிஷேகம் செய்வர். அவ்வளவு தேனையும் கணபதியின் திருவுருவம் உறிஞ்சிவிடும்.

"வக்ரதுண்ட மஹாகாய

சூர்யகோடி ஸமப்ரப

நிர்விக்னம் குருமேதேவ

ஸர்வகார்யேஷு ஸர்வதா.'

நாம் எந்த செயலைத் தொடங்கும்முன்பும் மேற்கண்ட துதியைச் சொன் னால் காரிய வெற்றி கிட்டும்.

மற்றொரு அவதாரம்

பண்டாசுரனை அழிக்கவே லலிதாதேவி அவதாரம் நிகழ்ந் தது. இதையறிந்த பண்டாசுரன், விசுக்ரன் உள்ளிட்ட அசுரர்கள் "ஜயவிக்னம்' என்னும் எந் திரத்தை ஸ்தாபித்துவிட்டனர்.

தேவியின் படையினர், "நாம் ஏன் போரிட வேண்டும்; அதனால் நமக்கென்ன பயன்?' என்று யோசித்தனராம். அதனால் மனவலிமை, உடல்வலிமை இழந்தனராம்.

இதனையுணர்ந்த லலிதாதேவி காமேஸ் வர சிவபெருமானை நோக்க, அந்த நொடியே விக்னேஷ்வரர் தோன்றி அசுரர்கள் ஸ்தாபித்த விக்ன எந்திரத்தை உடைத்தெறிந்தார். அதன் பின்னர் தேவியின் படைகள் புத்துணர்வு பெற்று, மனவலிமை, உடல்வலிமை, தைரியம் உடையவர்களாகி அசுரர்களுடன் போரிட் டனர். இதனையே லலிதா சகஸ்ரநாமம்-

"காமேஸ்வர முக ஆலோக

கல்பித ஸ்ரீ கணேஷ்வர

மஹாகணேச நிர்பின்ன

விக்ன யந்த்ர ப்ரஹர்ஷிதா'

என்று கூறுகிறது.

கணேச புராணம்

வியாசர் பதினெட்டு புராணங்கள் இயற்றி யுள்ளார். ஆனால் கணபதிக்கென்று தனியாகப் புராணம் எழுதவில்லை! எனவே கணபதியே தன் புராணத்தை எழுதினாராம்.

எவ்வாறு?

பிரம்மதேவரின் மானச புத்திரன் ஆங்கீரச மகரிஷி. அவர் தனக்கு ஒரு மகன் வேண்டி விநாயகரை வழிபட, அவர் அருளால் அவரது அம்சமாகப் பிறந்தவர் முத்கல மகரிஷி. அவர் மயிலாடுதுறை அருகேயுள்ள திருவெண்காடு (ஸ்வேதாரண்யம்) தலத்திலுள்ள யோக தட்சிணாமூர்த்தியை வணங்கி ஞானசித்தி பெற்று "முத்கல புராணம்' எழுதினார். (இதனை மகாராஷ்டிர அஷ்ட விநாயகர்- மயூரேச விநாயகர் தலத்தில் எழுதினார் என்பர். வேத வடிவான மயிலே அங்கு விநாயகருக்கு வாகனம். எனவே மயூரேசர் எனப்படுகிறார்.)

முத்கல புராணம் கணபதி பெயராலேயே ஒன்பது காண்டங்கள் கொண்டது. இதனைப் பாராயணம் செய்ய கீழ்க் கண்ட குற்றங்கள் நீங்கும்.

வக்ரதுண்ட காண்டம்- மாத்சர்யம்.

ஏகதந்தர் காண்டம்- மதம்.

மகோதர காண்டம்- மோகம்.

கஜானன காண்டம்- லோபம்.

லம்போதர காண்டம்- குரோதம்.

விக்னராஜ காண்டம்- மமதை.

தூம்ரவர்ண காண்டம்- அகந்தை.

விகட காண்டம்- காமம்.

யோகசித்தி காண்டம் கிடைக்கவில்லை.

பிருகு முனிவர் வியாசரிடம் அருள்பெற்று "பார்கவ விநாயக புராணம்' எழுதியுள்ளார். அதனை திருவாவடுதுறை கச்சியப்ப முனிவர் தமிழில் இயற்றியுள்ளார்.

கணபதி பரப்பிரம்மம்

பஞ்சாயதன பூஜை என்பார்கள். கணபதி நடுவில் இருக்க, சிவன், அம்பாள், மகாவிஷ்ணு, சூரியன் ஆகியோர் அவரைச் சுற்றி நான்கு மூலைகளில் இருப்பர். யாவருமே பரப்பிரம்மம். சென்னை அடையாறு மத்திய கைலாஷ் ஆலயத்தில் இதைக் காணலாம்.

ஹேரம்ப கணபதி

மகாவிஷ்ணு, கிருஷ்ணர், இராபிரான் ஆகியோருக்கு ஒரு முகம். அக்னி பகவானுக்கு இரு முகங்கள். தத்தாத்ரேயருக்கு மூன்று முகங்கள். பிரம்மதேவருக்கு நான்கு முகங்கள். முருகப் பெருமானுக்கு ஆறு முகங்கள். சிவபெருமான், காயத்ரி தேவி, அனுமன் ஆகியோருக்கு ஐந்து முகங்கள் உண்டு.

அதுபோல கணபதிக்கும் ஐந்து முகங்கள் உண்டு. அவர் ஹேரம்ப கணபதி என அழைக்கப்படுகிறார்.

"ஹே' என்றால் எளியவர்; "ரம்ப' என்றால்

அருள்பவர். எனவே அவர் எளிதில் அருள்புரிபவர். இவரது வாகனம் மூஞ்சூறு அல்ல; சிங்கம். சிவன், சக்தி, பிரம்மா, விஷ்ணு, சூரியன் ஒன்றிய வடிவமே ஹேரம்ப கணபதி.

கணபதியிடமிருந்தே சிவன், சக்தி, பிரம்மா, விஷ்ணு, சூரியன் தோன்றியதாக முத்கல புராணம் கூறுகிறது. நாபியிலிருந்து பிரம்மாவும், முகத்திலிருந்து சிவனும், கண்களிலிருந்து சக்தியும், வலப்புறத்திலிருந்து சூரியனும், இடப்புறத்திலிருந்து மகாவிஷ்ணுவும் தோன்றினராம். படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் எனும் ஐந்தொழில்களைச் செய்பவர் ஹேரம்ப கணபதி.

இதனையே வேறுவிதமாக- ஹேரம்ப கணபதியின் கிழக்கு முகம் சூரிய அம்சம், மேற்கு முகம் விஷ்ணு அம்சம், வடக்கு முகம் சக்தி அம்சம், தெற்கு முகம் பிரம்ம அம்சம், மேல்நோக்கிய முகம் சிவன் அம்சம் என்றும் கூறுகிறார்கள். ஆக, பஞ்சாயதனம் ஒன்றிய அம்சமே ஹேரம்ப கணபதி என்பர்.

கணபதி மணமானவரா?

கணபதியை மனைவியருடன் காண்பதரிது. சென்னை- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலையொட்டிய வெள்ளீஸ்வரர் கோவில், பாண்டிபஜார் அகத்தியர் ஆசிரமக் கோவில், தி.நகர் சிவ- விஷ்ணு கோவில், திருவலிதாயம் (பாடி) போன்ற சில தலங்களில் சித்தி, புத்தியுட னான விநாயகரை தரிசிக்கலாம்.

பழனியாண்டவனின் கதை அனைவரும் அறிந்ததே. ஞானப் பழத்துக்கான போட்டியில் விநாயகர் வெல்ல, முருகன் கோபித்துக் கொண்டுவந்த கதை. அதையே சிவ புராணம், முத்கல புராணம், ஸ்ரீசைல தலபுராணம் வேறுவிதமாகக் கூறுகிறது.

ஒரு சமயம் கயிலையில் சிவனும் பார்வதியும், "மகன்கள் இருவருக்கும் திருமணம் செய்யவேண்டும்' என்று பேசிக்கொண்டிருந்தனர். இதைக்கேட்ட கணேசனும் கந்தனும், "முதலில் எனக்கே செய்யவேண்டும்' என்றனர். அப்போது சிவன், "உலகை முதலில் வலம்வருபவருக்கே திருமணம்' என்றார். முருகன் மயிலேறிச் செல்ல, விநாயகர் சிவ- பார்வதியை வலம்வந்து, "உலகம் உங்களுக்குள் அடக்கம். எனவே உங்களை சுற்றி வந்துவிட்டேன். எங்கே மணப்பெண்?' என்றார். இதைக்கேட்ட பிரம்மா தன் மகள்களான சித்தி, புத்தியைத் தர திருமணம் நடந்ததாம்.

இதையறிந்த மகாவிஷ்ணு தனது மகள்களான மோதா, பிரமோதா, சுபதா, சுந்தரி, நந்தினி, மனோரமா, மங்களா, மோஹினி, சாந்தா, சாருஹாசா, சுமத்யமா, காமதா ஆகிய பன்னிருவரையும் கணபதிக்கு மணம் செய்வித்தாராம்.

இதன் தத்துவம் என்னவென்றால், கணபதியை வணங்கினால் எண்ணிய யாவும் ஈடேறும் என்பதே!