விநாயகர் சதுர்த்தி 31-8-2022
ராம நவமி, கோகுலாஷ்டமி போன்று திதியை வைத்துக் கொண்டாடப்படுவது விநாயகர் சதுர்த்தி. இந்த விழா இந்தியா வின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப் படுகிறது. மகாராஷ்டிராவில் இது மகோன்னதமான விழாவாகத் திகழ்கிறது. காரணம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காகப் போராடியபோது, மக்களை ஒன்றிணைக்க பாலகங்காதர திலகர் இவ்விழாவை ஏற்படுத்தினார்.
அப்போது இதுவொரு மூடுமந்திர விழாவாக இருந்தது. இப்போது விநாயகர் விழாவாக அமோகமாகத் தொடர்கிறது.
விநாயகரைப்பற்றி சிந்திக்கும்முன் அவரது 16 நாமங்களை நினைப்போம்.
"ஸுமூக ஏகதந்த கபில கஜகர்ணக
லம்போதர விகட விக்னராஜ விநாயக
தும்ரகேது கணாத்யக்ஷ பாலசந்த்ரோ கஜானன
வக்ரதுண்ட சூர்ப்பகர்ணோ ஹேரம்ப ஸ்கந்த பூர்வஜ.'
ஒவ்வொரு நாமத்துக்கும் கதை, காரணங் கள் உண்டு. தற்போது அதனுள் புகவில்லை. திரிபுராந்தகர்களை அழிக்க சிவபெருமான் புறப்பட்டபோது, தான் முன்பு கூறியபடி கணபதியை வணங்காததால் அவரது தேரின் அச்சு முடிந்தது. பின்னர் கணபதியை வணங்கி திரிபுராதியர் வதம் நடைபெற்றது. அவ்விடம் அச்சிறுபாக்கம்; சென்னை அருகில் உள்ளது. இதனை அருணகிரியார் திருப்புகழில்,
"முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா'
என்று பாடுகிறார். எனவே மேற்கண்ட 16 நாமங்களில் கணபதியே வணங்குவோம்.
"சர்வ விக்னகரம் தேவம் சர்வ விக்ன விவர்ஜிதம்
சர்வ சித்தி பிரதாதாரம் வந்தே அஹம் கணநாயகம்.'
விக்னங்கள், தடங்கல்களை ஏற்படுத்து பவனும் அவன்; அவற்றை நீக்கி காரியவெற்றி அருள்பவனும் அவனே. ஔவையாரின் கணபதி துதியும் சிந்தித்திடுவோம்.
"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கே.'
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா.'
வியாசர் 18 புராணங்கள் எழுதினார். பெரிய இதிகாசமான மகாபாரதத்தை விநாயகரைக்கொண்டு எழுதவைத்தார். விநாயகர் புராணம் என்று தனியாக வியாசர் எழுதவில்லை. எனவே விநாயகரே முத்கலர் என்னும் பெயருடன், பிரம்மாவின் மானசபுத்திரரான ஆங்கீரச மகரிஷி- ஸ்ம்ருதி தேவி தம்பதியின் புதல்வனாக அவதரித்தார். அவருக்கு தந்தையே அத்வைத சித்தாந்தம், ஏகாக்ஷரம் உபதேசித்தார். அதனில் அவர் ஆழ்ந் தார். அப்போது கணபதி அவருக்கு தரிசனம் தந்து முத்கல புராணம் என விநாயகர் புராணத்தை எழுதுமாறு அருளினார். முத்கலர் 428 அத்தியாயங்கள், 24 ஆயிரம் துதிகள்கொண்ட கணபதி புராணத்தை எழுதினார். எழுதிய இடம் சீர்காழி அருகே திருவெண்காடு. அது கையெழுத்து வடிவில் வெளிப்படாமல் இருந்தது.
பூனா அருகே மோர்காவ் என்னுமிடத்தில் மயூரேச கணபதி ஆலயம் உள்ளது. இந்த கணபதிதான் முருகனுக்கு மயில் வாகனம் தந்தாராம். ஸ்ரீ யோகீந்த்ர சுவாமிகள் என்பவர் இந்த கணபதியை வழிபட்டுவந்தார். அவர் 1429 முதல் 1727 வரை வாழ்ந்ததாகக் கூறுவர். கோவில் அருகிலேயே அவரது சமாதி உள்ளது. இவருக்கு கணபதி அருளால் முத்கலர் எழுதிய புராணம் கிடைத்தது. பின்னர் அது மும்பையில் 1976-ல் நூலாகப் பதிப்பிக்கப்பட்டு, 2006-ல் மறுபதிப்பு கண்டது.
அந்தப் புராணம் வக்ரதுண்டர்- 54
அத்தியாயங்கள்; ஏகத்தந்தர்- 74 அத்தியாயங் கள்; மகோதரர்- 51 அத்தியாயங்கள்; கஜான னர்- 52 அத்தியாயங்கள்; லம்போதரர்- 45 அத்தியாயங்கள்; விகடர்- 45 அத்தியாயங்கள்; விக்னராஜர்- 16 அத்தியாயங்கள்; தூம்ர வர்ணர்- 50 அத்தியாயங்கள்; யோக சரிதம்- 41 அத்தியாயங்கள் என மொத்தம் 428 அத்தி யாயங்களைக் கொண்டுள்ளது.
மத்ஸய புராணம், சிவ புராணம், ஸ்கந்த புராணம், பிரம்மாண்ட புராணம், வராக புராணம், லிங்க புராணம் போன்ற புராணங்கள் கணபதியின் அவதாரம் குறித்து வெவ்வேறாகக் கூறுகின்றன. நாம் சிவ புராணம் கூறுவதைக் காண்போம்.
பார்வதி தேவி ஒரு பொம்மை செய்து அதற்கு உயிரூட்டினாள். அதுவும் சக்திபெற்று நன்கு விளங்கியது. (மனிதமுக கணபதியை கூத்தனூர் அருகே செதலப்பதியில் தனிக் கோவிலில் காணலாம்.) பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், முனிவர்கள், கிரகங்கள் என பலரும் வந்து குழந்தையை தரிசித்து ஆசிதந்தனர்.
"உன்னை வணங்கும் பக்தர்களுக்கு எங்களால் எந்த துன்பமும் நேராது'' என்று வரமளித்த னர். அப்போது பார்வதி, "எல்லாரும் வந்து வாழ்த்துகிறீர்கள். சனைச்சரனை (சனி) காணவில்லையே. அவனை வரச் சொல்லுங் கள்'' என்றாள். சனைச்சரனுக்கு வர விருப்ப மில்லை. ஆனால் பார்வதியின் கட்டாயத் திற்காக வந்து தரிசித்தான். சனி பார்வை பட்டதால் குழந்தையின் தலை அறுபட்டது.
பார்வதி துயரப்பட்டாள். அப்போது சிவபெருமான், "கவலை வேண்டாம்'' என்று சொல்லி, சிவகணங்களை அழைத்து, "உடனே சென்று வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுத்திருப்பவர் தலையை வெட்டி வந்து இந்த உடலில் ஒட்டுங்கள்'' என்றார்.
சிவ கணங்கள் அவ்வாறே செய்தனர். குழந்தை யானை முகத்துடன் கஜமுகன், கணபதி ஆனது. சனி பகவானும் வணங்கி, "உம்மை வணங்குபவர்களை நான் பீடிக்க மாட்டேன்; நன்மையே செய்வேன்'' என்று கூறினான்.
சிவனும் யானைமுக கணபதியைப் பார்த்து, "நீயே யாவருக்கும் நாயகன்; விநாயகன். முதலில் வழங்கப்பட வேண்டிய வன். வணங்காவிட்டால் தடங்கல்கள் ஏற்படுத்தும் விக்ன விநாயகன். வணங்கினால் வரம், காரியசித்தி தரும் வரசித்தி விநாயகன்'' என்றருளினார்.
ஏன் இந்த வினோத வடிவம்? நரசிம்மர், குதிரை முக ஹயக்ரீவர்போல் என்றால், யானைத் தலையுடைய கஜமுகசுரன் என்னும் அசுரனை அழிக்கவே. ஆயுதமும் அவரது ஒடிந்த தந்தமே.
இப்போது ஔவைக்கு வருவோம்.
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்; ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்று சிறுசிறு வரிகளில் உபதேசம் செய்தவர் ஔவைப் பிராட்டி. ஔவை என்றால் ஆழ்ந்த அறிவுடைய தவப்பெண் என்று பொருள். ஔவையென்றால் மூதாட்டியென்று எண்ணுகிறோம்; அது சரியல்ல. கி.பி. இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த அதியமான் என்னும் அரசனுக்கு ஒரு நெல்லிக்கனி கிடைத்தது. அதை உண்டால் அமிர்த சஞ்சீவினி உண்டதுபோல பல்லாண்டுகள் உயிருடன் வாழலாம். அரசன் அதை தான் உண்ணாது, தற்செயலாக அங்கு வந்த ஔவைக்குக் கொடுத்தானாம்.
அவர் வேண்டாமென மறுக்க, "நீவிர் உண்டால் மக்களுக்கு பல வருடங்கள் போதனை செய்வீர்கள்'' என்றானாம். சங்கப் புலவர்களில் இவர் ஒன்பதாவதாகத் திகழ் கிறார்.
அவர் பிறந்த குறிப்பு கிட்டவில்லை. சீரடி சாய்பாபா, கபீர்தாசர் போன்று, பிறந்ததும் இவரை அனாதையாய் விட்டுவிட்டார்களாம். பிறந்த குழந்தை "ஆண்டவன் என்னைக் காப்பாற்றுவான்' என்று பேசியதாம். கவி பாடும் ஒரு நாடோடி குழந்தையைக் கண்டு வளர்த்தான். ஆக, இவரும் கவிபாட ஆரம்பித்தார். அதியமான்- தொண்டைமான் அரசர்களிடையே ஏற்பட்ட போரை சமாதானம் பேசித் தவிர்த்தாள்.
ஔவை என்பவர்கள் பலர் வாழ்ந்துள் ளனர். கிபி 10, 12-ஆம் நூற்றாண்டுகளிலும் இருந்துள்ளனர். விக்ரம சோழன் காலத்தில் வாழ்ந்த ஔவை ஆத்திச்சூடி, நல்வழி, கொன்றை வேந்தன், மூதுரை போன்றவற்றைப் பாடியுள்ளார். கம்பர், ஒட்டகூத்தர் காலத்திலும் இருந்துள்ளார். அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்று 59 பாடல்கள் ஔவையின் பெயரில் இடம்பெற்றுள்ளன.
கணபதியை நிலைத்தால் ஔவையையும் நினைத்தே ஆகவேண்டும்.