"இயற்கை எப்போதும் அமைதியானது.
கடலுக்கு அடியிலாகட்டும் அல்லது மலை களுக்கு அடியிலாகட்டும் மிக சக்திவாய்ந்த எரிமலைகள் எவ்வித ஆரவாரமின்றி மிகவும் அமைதியாகப் புகைந்துகொண்டிருக்கின்றன. அமைதியான எரிமலை குமுற ஆரம்பித்தால் அதன் விளைவுகள் மிகக் கொடூரமானதாக இருக்கும். எனவேதான் இயற்கை அமைதி யானது.
அதைப்போன்றே இப்பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கத்திற்கும் காரண கர்த்தாவான சிவமும் மிகவும் ஆழ்ந்த அமைதி யானது. இயற்கையை இயற்கை ஒருபோதும் அழிக்காது. ஆனால் இந்த அமைதிக்கு குந்தகம் ஏற்படும்போது இறைவனுள் இருக்கும் அமைதியானது தனது சமநோக்குப் பார்வையை வெளிப்படுத்தும். சிவம் தனது சமநோக்குப் பார்வையை வெளிப்படுத்தும்போது பிரபஞ்சத்தில் உருவாக்கப்பட்ட இயற்கைக்கு முரணான விஷயங்கள் சீரமைக்கப்பட்டு பஞ்சபூதங்களின் செயல்பாடுகள் மாசற்றதாகி நிலைபெற்றுவிடும்.
இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். அதே வேளையில் இந்த கண்டுபிடிப்புகள் பயனாளிகளுக்கு பயன்தரும் வகையில் இருக்கவேண்டும். பாதகமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடாது. ஒரு மரத்திலிருந்து விழும் இலைகளோ கிளைகளோ பூமிப் பந்திற்கும் பிரபஞ்சத்திற்கும் கேட்டினை உண்டாக்காது. அதைப்போன்று நிலப்பரப்பில் விளைந்த எண்ணற்ற செடி, கொடி, குறுஞ்செடி வகைகள் விழுந்து பின்பு அழிந்து மண்ணோடு மண்ணாக மக்கி உரமாகிவிடும். ஆனால் இயற்கை உருவெடுத்த மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் உபயோகப்படுத்த முடியாத (பயனற்ற) நிலையானது, பிரபஞ்சத்தைக் கெடுக்கும் மாபெரும் கழிவுகளாக மாறிவிடும். எனவே நாம் நமது அறிவின் அடுத்த கட்டமான பகுத்தறிவாற்றலைப் பயன்படுத்தவேண்டும்.
நவீன அறிவு (விஞ்ஞானம்), "பஞ்ச பூதங்களின் செயல்பாடுளை நாங்கள் முன்கூட்டியே கண்டறிந்து விடுவோம்; கட்டுப்படுத்தி விடுவோம்' என்று சொல்வதெல்லாம் அவ்வளவு எளிமையான விஷயமல்ல. உதாரணமாக கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட பெருமழையை ஏன் சரியாக கணிக்க முடியவில்லை? அரசாங்க வானிலை ஆராய்ச்சியாளர் ஒரு கருத்தையும், இயற்கை வானிலை ஆராய்ச்சியாளர் ஒரு கருத்தையும் பதிவிடுகின்றனர். இரண்டும் இருவேறு கருத்துகள். ஆனால் நிகழ்ந்தது பெருமழை. விஞ்ஞானத்துடன் மெய்ஞ்ஞானமும் சேர்ந்து செயல்படவேண்டும். கடந்த வருடம் அமெரிக்காவிலுள்ள லூசியானா மாகாணத்தைத் தாக்கியது "ஜடா' எனும் புயல். அந்தப் புயலின் தாக்கத்தால் நியூ ஆர்லியன்ஸ் நகரம் சின்னாபின்னாமானது.
அவசரகால நிலை பிரகடனம் செய்யப் படும் சூழ்நிலை உருவானது.
ரயில் போக்கு வரத்து, விமானப் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. மின் இணைப்புகள், தகவல் தொடர்பு இணைப்புகள் ஆயிரக்கணக்கில் துண்டிக்கப்பட்டன. லட்சக்கணக்கானோர் வீடிழந்து, உடமைகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதுதான் இயற்கையின் சீற்றம்; இயற்கையின் கோபம். இவ்வாறு பூமிப்பந்திலுள்ள ஏதாவதொரு நாடு, ஏதேனுமொரு காரணத்தால் இயற்கைப் பேரிடரை சந்திக்கும் சூழல் உருவாகிறது. கடந்த காலங்களில் நடந்ததைக் காட்டிலும், நிகழ்காலத்தில் நிகழும் பேரிடர் ஆபத்துகள் மிக மோசமாக- கவலையளிக்கும் விதமாக உள்ளது. உலகிலேயே மிக உயரிய அறிவியல் ஆராய்ச்சி மையமான "நாசா' அமெரிக்காவில்தான் உள்ளது. ஏன் "ஜடா' புயலின் விபரீதத்தை முன்கூட்டியே தடுக்க முடியவில்லை. ஏனென்றால் நாம் அறிவை மட்டுமே பயன்படுத்து கிறோம். பகுத்தறிவைப் பயன்படுத்தும்போது மட்டுமே மெய்ஞ்ஞானம் வெளிப்படும். அவ்வாறு மெய்ஞ்ஞானத்துடன் கூடிய விஞ்ஞானமே பேராற்றலுடன் வெற்றிபெறமுடியும்.
இப்போது மீண்டும் கொரோனா வின் மூன்றாம் அலை உருவாகிவிட்டது என்கிறார்கள். நோய்க் காரணியின் பெயர் ஒமிக்ரான். கண்ணுக்குப் புலப்படாத கோடிக்கணக்கான வைரஸ்களும். பாக்டீரியாக்களும் பிரபஞ்சம் முழுவதும் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. இதனை அறிவியல் மறுக்கமுடியாது. காற்றின் மூலமாக மூக்கின் வழியாகவும், சில நேரங்களில் வாய்வழியாகவும் இத்த கைய கிருமிகள் நமது உடலினுள்ளே சென்றுவிடுகின்றன. சிலசமயம் நுரையீரலே அதனை எதிர்த்து செயல்பட்டு அழித்து விடுகிறது. சில நேரங்களில் வயிற்றுப் பகுதியில் அமைந்துள்ள இரைப்பையில் சென்று விழுகிறது. அமைதியாகக் கனன்று கொண்டிருக்கும் இரைப்பை எத்தகைய கிருமிகளையும் சம்ஹாரம் செய்துவிடும். இது இயற்கை மனிதனுக்கு அளித்த மாபெரும் கொடை.
எனவே இப்போது எதைக்கண்டும் அஞ்சவேண்டிய அவசியமில்லை. கோழை வாழ்ந்ததாகவும் சரித்திரமில்லை; வீரன் வீழ்ந்ததாகவும் வரலாறில்லை. இயற்கையின் எழுதப்படாத விதியான நேர்மறை ஆற்றலை நாம் மீறும்போது, அதற்கெதிரான எதிர்மறை ஆற்றலுக்குக் கொண்டாட்டமாகிவிடும். நாம் நேர்மறை ஆற்றல் நிரம்பப் பெற்ற வீரனாக செயல்படுவோம். பயம் தேவையில்லை.
ஆனால் விழிப்புணர்வு தேவை. எச்சரிக்கை யுடன் அரசு வழிகாட்டுதலுடன் பாதுகாப் பாக இருப்போம். நோய்க் கிருமையை ஒழிப்போம்.
உதாரணமாக, ஒரு வயல் இருக்கிறது. வயலில் விளைந்துள்ள நெற்பயிர்களை அழிக்க பூச்சிகள் நினைக்கின்றன. அந்தப் பூச்சிகளை அங்கே வாழும் தவளைகள் கபளீகரம் செய்கின்றன. விளைந்த தானியங்களை அழிக்க எலிகள் தயாராக இருக்கின்றன. எலிகளை வதம் செய்ய பாம்புகள் காத்திருக்கின்றன. பாம்புகளைக் கட்டுப்படுத்த கீரிப்பிள்ளைகள் தயாராக இருக்கின்றன. இப்படி இது ஒரு சுழற்சி முறையில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும்.
பூச்சிகளை அழிக்க ரசாயனங் களைப் பயன்படுத்துகிறோம். ரசாயனம் பயன்படுத்தப்படுவதால் நிலமும் தன் வளத்தை இழக்கிறது. விளைந்த பொருட்களும் விஷமுடையதாகவும் சத்தற்றதாகவும் இருக்கின்றன. இப்படிப்பட்ட உணவை உண்ணும் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்படுகிறது. மனித சமுதாயம் உணவு வறுமையிலிருந்து மீள வேண்டாமா? ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் களைய வேண்டாமா? ஆரோக்கியத்தில் சிறக்க வேண்டாமா? இதற்குப் பகுத்தறிவு செயல்படவேண்டும். அறிவு எப்படி செயல்பட வேண்டும் என்று குறள் கூறும் கருத்தினைப் பார்ப்போம்.
"அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.'
அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழக் கூடியதை முன்னதாகவே அறிந்துகொள்ளும் வல்லவராக இருப்பர். அறிவில்லாதவர் எதிர்காலத்தில் நிகழக்கூடியதை அறியும் ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பர்.
அறிவு, இறைவனால் இயற்கையாக அனைத்து உயிரினங்களுக்கும் (84 லட்சம் ஜீவராசிகள்) வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மனித இனத்திற்கு மட்டுமே ஆறாவது அறிவு கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஒருவன், இறைவனால் வழங்கப்பட்ட இவ்வறிவின் அடுத்த கட்டமான பகுத்தறிவுடன் செயல்படவேண்டும். பகுத்தறியும் தன்மை ஒருவனுக்கு இருக்கும்போது அவன் எதிர்மறை எண்ணங்களை நீக்கிவிட்டு நேர்மறை ஆற்றலுடன் செயல்படுவான். அதனால் அவனும், அவனது சுற்றத்தினரும் மகிழ்ச்சிகரமாக வாழ்வார்கள். மனம்போன போக்கில் செயல்படமாட்டார்கள். மனதை எவ்வாறு பகுத்தறிவுப் பாதையில் செலுத்த வேண்டும் என்பதை பின்வரும் திருக்குறள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
"சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.'
மனமானது தனது விருப்பப்படி செயல்படக்கூடியது. அத்தகைய மனதை அது நினைக்கும் இடமெல்லாம் செல்ல விடாமல், தீயவழியை நீக்கி நல்லவழியில் செலுத்துவதே அறிவாகும்.
பகுத்தறியும் தன்மையை ஒருவன் உணர்ந்து செயல்படும்போது அவன் அறவழியில் பயணிக்கமுடியும். பகுத்தறிவைப் பயன்படுத்தும்போதுதான் மனமானது நேர்மறை ஆற்றலோடு செயல்படும்.
"மன சந்நிதியில் கண்டமன் நனவாகும்
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுறா ஆனந்தம் மீதொழிவு என்ப
இனம் உற்றான்நந்தி ஆனந்தம் இரண்டே'
என்கிறது திருமந்திரம்.
மனமானது ஐம்புலன்கள் வழியாகவும் (மெய், வாய், கண், மூக்கு, செவி) உலகப் பொருட்களில் இன்பம் கண்டு விழிப்பு நிலையில் மகிழ்வடைவது நனவாகும். பொறி வழியாக இல்லாமல் தூக்கத்தில் கண்டு இன்புறுவது கனவாகும். இப்படி நனவிலும் கனவிலும் காணுகிற ஆனந்த மல்லாது, வேறொரு ஆனந்த நிலை உண்டு. அது உயிர்களுக்கு சிவபெருமானின் மறுபதிப்பான நந்தியெம்பெருமான் அருளிய மனத்தால் நனவிலும் கனவிலும் காணும் இன்பம், பகுத்தறிவால் உணர்ந்து அறியும் இன்பம் என்னும் இரண்டுமாகும்.
மனிதன் ஞானோதயம் பெறவேண்டும். ஞானோதயம் என்பதற்கு, தான் வேறு; சிவன் வேறென்று எண்ணாமல், தானே சிவன் என்னும் ஞானம் அடையப்பெறுதல் என்பது பொருளாகும். ஒருவன் சிவத்தன்மை பெற, பகுத்தறிவோடு நேர்மறை ஆற்றலைப் பயன்படுத்தி அறவழியில் பயணிக்க வேண்டும். அத்தகைய பயணமானது இயற்கையைக் கெடுக்காது; பேரிடர்கள் வராது. பேரிடர்கள் வந்தாலும் அது சிவப் பரம்பொருளால் சம்ஹாரம் செய்யப்படும்.
எனவே பிற உயிர்களை அழிக்கும் செயல்களிலோ அல்லது கண்டுபிடிக்கும் செயல்களிலோ ஈடுபடும்போது அதற்கான காரணியே இறுதியில் அழிந்துவிடும்.
"அறம்செய விரும்பு' என்பது ஔவையின் ஆத்திச்சூடி கூறுவது. அறம் செய்ய மனம் விரும்பவேண்டும். பின்பு அதுவே செயல்பாட்டுக்கு வரும்போது பரம்பொருளின் அருள் பார்வையானது அதற்கான நற்பலனை நல்கும்.
இன்னமும் பார்த்தோமானால் தொடர்ந்து பலவிதமான வைரஸ்களின் அச்சுறுத்தல்கள், பேரிடர்கள் என்று தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்கு பயப்படவேண்டிய அவசியமில்லை. ஆனால் இறைவன் அளித்துள்ள பகுத்தறிவைப் பயன்படுத்தி எச்சரிக்கை உணர்வுடனும் பாதுகாப்பாகவும் இருக்கவேண்டியது நமது கடமையல்லவா? இத்தகைய பெருந்துன்பங்களிலிருந்து விடுபட இயற்கைமீது அன்புடனும் இறைவன்மீது பற்றுடனும் இருந்தால் துன்பங்கள் அனைத்தும் தொலைந்து போகும். சிவனருளைப்பெற திருமந்திர விளக்கத்தைப் பார்ப்போம்.
"அறியகிலேன் என்று அரற்றாதே நீயும்
நெறிவழியெ சென்று நேர்பட்ட பின்னை
இருசுடர் ஆகி இயற்ற வல்லானும்
ஒருசுடரா வந்து என் உள்ளத்து ள்ளாமே.'
"எனக்கு இறையருள் கிட்டவில்லையே, என் துன்பம் தீரவில்லையே, இறைவனின் கருத்து என்னவென்று என்னால் அறியமுடியவில்லையே' என்று நீ ஏன் வீண் கூச்சல் போடுகிறாய்? அறவழிதன்னில் நியாயமாக நடந்தொழுகினால் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சிவப் பரம்பொருள் உனக்கு நேர்நின்று அருள்வான். அவன் அருளைப் பெற்றால், இரு ஒளிச்சுடராக விளங்கும் ஆருயிரையும் பேருயிரையும் இயக்கும் அச்சிவப் பரம்பொருளே ஒப்பற்ற ஓர் ஒளிச்சுடராகத் தெரிவான். இப்படிதான் சிவன் வந்து என் உள்ளத்துள்ளே இடங் கொண்டிருக்கிறான்.
எனவே எண்ணமெல்லாம் இறை நினைவாகட்டும்; சிந்தனையெல்லாம் சிவசிந்தனையாகட்டும்; நேர்மறை ஆற்றல் செயலாகட்டும்; எம்பெருமான் சிவபெருமானின் அருளாசி எதிர்மறை நிகழ்வுகளைத் தவிடுபொடியாக்கிடும். எல்லாரது இல்லங்களிலும் அம்மையப்பர் ஆசியோடு ஆரோக்கிய ஆனந்தம் பொங்கிப் பெருகட்டும்.