னித உடல் இறைவனால் உருவாக் கப்பட்ட இயந்திரம். அதில் இளமைபாதி, முதுமைபாதி, முறுக்கேறிய உடம்பு, மெருகேறியமுகம். இரும்பைக்கூட முறிக்க நினைப்பதும், வானத்தைத் தொட்டுவிட நினைப்பதும் இளமைப்பருவம். எதையும் சாதித்துவிடலாம், எப்படியும் வாழ்ந்துவிடலாம், இந்த இளமை எப்போதும் இப்படியே இருந்துவிடும் என்ற இறுமாப்புடன் இருப்பது இந்த இளமைப் பருவம்.

ஆட்டம், பாட்டம், ஆர்ப்பார்ட்டம், ஆனந்தக்கூத்து, காதல் என்றெல்லாம் வயப்படும் வயது இளமை வயது. தீய செயல்களில் ஈடுபடுவதும், தரையில் நடந்துபோவதை கொஞ்சமும் விரும்பாமல், அதிவேகத்தில் "பைக்கிலும்', "காரிலும்' பறந்து செல்ல விரும்புவது இந்த இளமைப் பருவம். ஆன்மிகத்தைக் கிண்டல் செய்வதென்பதும், ஆசிரியர்களைக் கேலிசெய்து விளையாடுவதும் இந்த இளமையில்தான். அதேசமயம் அறிவாற்றலில் சிறந்து விளங்குவதும், ஆக்கப்பூர்வமாக எதையும் முடித்து சாதனைபுரிவதும் இந்த இளமையில்தான்.

vv

சிறிது தூரம் நடக்கவே கைத்தடி ஒன்றை துணையாகத் தேடுவது முதுமை. வயது முதிர்ச்சி, உடல் தளர்ச்சி, சக்கரை வியாதி, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் எந்த ஒரு உணவையும் ஆசையோடு சாப்பிட அச்சப்படுவதும், உணவைவிட மருந்து மாத்திரைகளையே அதிகம் சாப்பிட விரும்புவதும், மருத்துவ மனையைக் கண்டால் ஆசையோடு சென்று படுத்துக்கொள்வதும் இந்த முதுமையில்தான். இளமையில் எதுவெல்லாம் சுகமாகத் தெரிந்ததோ அவை யெல்லாம் வெறுப்பாகத் தோன்றுவ தும் முதுமையில்தான். அமைதியை அதிகம் விரும்புவது, இறைவன்பால் அதிக ஆர்வம் காட்டுவதும் முதுமையில்தான். எல்லாவற்றையும் அனுபவத்தில் கண்ட பெரியவர் என்ற மரியாதைக்குரிய பதவி யைப் பெறுவதும், பெருமிதமாக நடந்து கொள்வதும் முதுமையில்தான். முதுமை யில் படுக்கையில் விழும்போது, இறந்த பின்னாலே தேடுகின்ற அமைதி, முந்திக் கொண்டு வந்துவிடுகிறது. முதுமையில் வாழ்க்கையே வெறுத்துப்போகிறது.

இன்றையநாளில் நமது நாட்டிற்கு, இளைஞர்களின் பங்கு அதிகம் தேவைப் படுகிறது. அவர்களால்தான் எதையும் சாதிக்கமுடியும். இதை நன்றாகத் தெரிந்திருந்தும் இன்றைய இளைஞர்கள் திசைமாறிப் போகிறார்கள். அவர்கள் செல்லுகின்ற பாதை வெளிச்சத்தில் இருக்கிறது. சிலசமயம் இருட்டில் செல்கிறது. வெளிச்சத்தில் சென்றவன், பாதை மாறாமல் அவன் போய்ச் சேர வேண்டிய ஊருக்குப் போய் சேருகிறான். இருட்டில் சென்றவனோ பாதை விலகி தட்டுத் தடுமாறி போய்ச் சேரவேண்டிய ஊருக்குப் போகாமல் எங்கோ போய் மாட்டிக்கொள்கிறான்.

Advertisment

மேலே குறிப்பிட்ட வெளிச்சம் என்பது நல்ல ஒழுக்கம், பணிவு, பெரியோர் சொல்கேட்டு மதித்து அதன்படி நடத்தல் என்பதாகும். அதேபோல இருட்டு என்பது கெட்ட பழக்க- வழக்கங்கள், பெரியவர்களை மதியாதது, சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு சிறைச்சாலைவரை செல்வது போன்றவையாகும். நல்ல ஒழுக்கமுள்ள இளைஞன் "அப்துல் கலாம்' போல வருகிறான். ஒழுக்கம் தவறியவன் "அட்ரஸ்ஸே' இல்லாமல் போய் விடுகிறான்.

எந்த ஒரு இளைஞனுக்கும் கடவுள் பக்தி வரவேண்டும். அந்த பக்தி வருவதற்கு அவன் பக்குவப்படவேண்டும். அவன் தாய்- தந்தையர்கள் அவனை வளர்க்கும்போதே அவனுக்குக் கடவுள் பக்தியையும் சேர்த்து வளர்க்கவேண்டும். சிலருக்கு தந்தையே குருவாக இருக்கவேண்டும். தாயே தெய்வமாகத் தெரியவேண்டும். ஆகவே ஒரு இளைஞனின் முன்னேற்றம் அவன் வளர்ப்பு எப்படியோ அப்படியேதான் கடைசிவரையில் இருக்கும்.

ஒரு இளம்வயது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி இவர்கள் காலையில் படுக்கையைவிட்டு எழுந்ததுமுதல், மீண்டும் படுக்கைக்குச் செல்லும்வரை எத்தனையோ வேலைகளில் ஈடுபடுகிறார் கள். எண்ணற்ற செயல்களைச் செய்கிறார் கள். அதில் ஏதாவது ஒன்றாவது கடவுள் சார்ந்த செயல் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கவேண்டும். அப்படி ஒன்றுமில்லையென்று தெரிந்தால் அடுத்தநாள் முதல் கோவிலுக்குப் போவது அல்லது வீட்டிலேயே கடவுளை நினைத்து வழிபாடு செய்வது, பக்திப் பாடல்களைப் பாராயணம் செய்வது என்று முடிவெடுக்கவேண்டும். எடுத்த முடிவின்படியே நடந்துகொள்ள வேண்டும். இதற்குப் பெற்றோர்களும் உறுதுணையாக இருக்கவேண்டும்.

Advertisment

vv

பட்டாம்பூச்சி போல பறந்து திரிந்து வரும் இளைஞனைப் பார்த்து ஒரு முதியவர் இளைஞர்களெல்லாம் இப்படித் தான் இருக்கவேண்டுமென்று அறிவுரை கூறினார். அதைக்கேட்ட இளைஞன் பதிலுக்கு "முதலில் முதியவர்கள் நீங்கள் அதற்குத் தகுந்தபடி நடந்துகொள்கிறீர் களா?'' சிந்தித்துப் பாருங்கள் என்று நெற்றியில் ஓங்கி அடித்தார்போல் பதில் கூறினான். அதைக்கேட்ட அந்த முதியவர் அப்படியே ஆடிப்போய்விட்டார். அந்த இளைஞன் கருத்தாளமிக்க பதிலைத் தான் கூறி இருக்கிறான். எப்படியென்றால் இன்றைய முதியவர்கள் நடந்துகொள்ளும் விதம் அப்படியிருக்கிறது. முதியவர்கள் காலையில் எழுந்ததும் இறைவன் பெயரை வாயால் உச்சரிக்கவேண்டும். நேரத்தே குளித்து நெற்றியில் மதச் சின்னத்தை இட்டு கோவிலுக்குப் போக வேண்டும். கடவுளை வழிபடவேண்டும். ஓய்வு நேரத்தில் புராணங்களைப் புரட்டிப் பார்த்துப் படிக்கவேண்டும். அதன்பிறகு தேவைப்பட்டால் வீட்டு வேலைகளைச்செய்து, உதவிபுரிய வேண்டும். மாலையில் பகவத் காரியங் களில் ஈடுபட்டு, சத்சங்கத்தில் இணைந்து, கூட்டுப் பிரார்த்தனை செய்து கடவுளின் கருணையைப் பெறவேண்டும். இதைச் செய்யாமல் கோவில் வளாகத்தில் அரசியல், சினிமா என்று ஏதேதோ பேசி பொழுதைக் கழிக்கின்றனர். எளிமையாக, எல்லாரிடமும் கண்ணியமாக நடந்து கொள்ளவேண்டும். பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். முதியவர்கள் இதையெல்லாம் விட்டு விட்டு அதிகாலையில் அரைடிராயர் அணிந்துகொண்டு, "டீ' சர்ட்டை போட்டுக் கொண்டு, "வாக்கிங்', "ஜாக்கிங்' என்றெல்லாம் போவது. அவர் முதுமையிலும் இளமை யாக இருப்பதாகக் காட்டிக்கொள்வது, சமூகசேவை என்ற பெயரிலே செய்யக் கூடாததையெல்லாம் செய்து ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்வது என்றெல் லாம் போடாத ஆட்டம் போடுகிறார்கள். அதிகாலையில் கோவில் பிராகாரத்தை நாலு சுற்று சுற்றினாலே "வாக்கிங்', "ஜாக்கிங்' எல்லாம் நடந்துவிடுமே. இப்படி முறையற்ற முறையில் நடந்துகொண்டால் இது முக்கியமான நேரத்தில் நமக்கு ஆக வேண்டிய காரியத்தைக்கூட ஆகவிடாமல் தடுத்துவிடுமென்று சாஸ்திரம் கூறுகிறது. இது மட்டுமா எண்பது வயதில் "டூவீலரில்' சென்று கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்படுத்திக்கொள்வது, ஓடிப்போய் பஸ், ரயிலில் ஏறுவது, இறங்குவது, அதனால் அடிபட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிப்பது போன்ற தேவையில்லாதவற்றில் ஈடுபட்டு, தங்களையும் மற்றவர்களையும் வருத்துவது போன்றவற்றை முதியவர்கள் தவிர்க்கவேண்டும்.

இளமை, செல்வம் இவையெல்லாம் நிலையற்றவை. கல்வி, செல்வம், புகழ், புண்ணியம் இவற்றையெல்லாம் இளமை யில் சேர்த்துவைக்கப் பழகிக்கொள்ள வேண்டும். நல்லவரிடம் சேர்க்கை வைத்துக் கொள்ளவேண்டும். மற்றவர்கள் மனதை எக்காரணம் கொண்டும் புண்படுத்தக் கூடாது.

இளைஞனுக்கும், முதியவர்களுக்கும் இறைவன் அருள்தான் பாதுகாப்புக் கவசம். இதைப் புரிந்துகொள்ளவேண்டும். முதியவர்கள் தங்கள் அனுபவத்தில் கண்ட நல்லது- கெட்டதை இளைஞர்களுக்கு எடுத்துச்சொல்லித் திருத்தவேண்டும். தாய் சொன்னால் மகளுக்குப் பிடிப்பதில்லை. தந்தை சொன்னால் மகனுக்குப் பிடிப் பதில்லை. தங்கள் பிள்ளைகள் கெட்டுப் போக எந்தப் பெற்றோரும் விரும்பு வதில்லை. எனவே, இளைஞர்கள், முதியோர்கள் சொல்கேட்டு அதன்படி நடக்கவேண்டும்.

இளைஞர்கள் போற்றும்படி முதியவர் களும் நடந்துகொள்ள வேண்டும். முதுமை எதையும் எதிர்பார்க்கக்கூடியது. இளமை அந்த எதிர்பார்ப்பை செய்து கொடுக்கக் கூடியது. இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை இருக்கவேண்டும். முதியவர்களுக்கு இறை நம்பிக்கை வளரவேண்டும். எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நாளை என்ன நடக்கும் நமக்குத் தெரியாது. அதைத் தெரிந்துவைத்திருப்பவன் கடவுள் மட்டுமே. எனவே, கடவுள்மீது நம்பிக்கை வைத்து, காலத்தைப் போக்கவேண்டும். இளமையில் கல்வியென்பது வாழ்க்கையில் வெற்றியைத் தேடித்தரும். கல்வி ஒன்றையே குறியாக வைத்து செயல்படுங்கள். தெய்வத்தின்மீது நம்பிக்கை வையுங்கள். நல்லதோ- கெட்டதோ தெய்வம் பார்த்துக் கொள்ளும்.