சிவாலய உற்சவங்களின் சில விவரங்களை இங்கு காண்போம்.
ஏகாஹ உற்சவங்கள் (ஒருநாள் விழாக்கள்)
ஒருநாள் மட்டும் செய்யப் படுகிற விழாவானது கோஷணம், கேவலம் என்று இருவிதமாகும்.
அதாவது ஆகமப்படியான கிரியைகளில் பேரீதாடனத் தோடும், ரட்சாபந்தனத் தோடும், சூர்ணோற்சவம் மற்றும் தீர்த்தோற்சவத்தோடும் செய்யப்படுகிற ஒருநாள் விழாவானது கோஷணம் எனப்படும். ரட்சாபந்தனமும் பேரீதாடனமும் இன்றி, மற்ற கிரியைகளைச் செய்யும் ஒருநாள் விழா கேவலம் எனப்படும். இதனை "பலிஹோமாதிகம் ஹித்வா பிரமணம் கேவலம் துவா' (உத்தர காமிகாமம் 6-418) எனும் கூற்றால் அறியலாம். இவற்றில் கோஷணம் என்ற விழாமுறை சர்வசித்தியையும், கேவலம் எனும் விழாமுறை முக்தியையும் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
கோஷணமான ஒரு நாள் விழாவை கர்த்தாவினுடைய பிறந்த தினம், அவர் முக்தியடைந்த தினம், கர்த்தா விரும்பும்நாள், மாதாந்திர திருவாதிரை நட்சத்திரம், சங்கராந்தி (12 மாதங்களின்) மாதப்பிறப்பு, இருபட்ச சதுர்த்தசி திதி (சிவனின் திதி), இருபட்ச அஷ்டமி, சித்திரைப் பருவகால தமனோற்சவம், பவித்ரோற்சவம், நட்சத்திரமாத பூஜோற்சவம், கிருத்திகா தீபோற்சவம், சிவராத்திரி புண்ணியகால உற்சவம், வருட ஆரம்பகாலம், டோலோற்சவம் (ஊஞ்சல்), உடுபோற்சவம் (தெப்பம்), வசந்தோற்சவம் (பூங்காவனவிழா, ஸ்தானோற் சவம்), பர்வதாதி- விஜயோற்சவம், பக்தோற்சவம் (அடியார்கள் விழா), மேலும் விவசாயத்திற்காக- நதிநீர்ப் பாசனத்திற்கான புதுநீர் வரத்தின்போதும், அறுவடைக்குப் பின்பு புத்தரிசி படைக்கிறதான நவநைவேத்ய உற்சவம், காம்யோற்சவம், நட்சத்தி ரோற்சவம், ஆடிப்பூர உற்சவம், வாரோற்சவம், மாசிமக தீர்த்தம், துலாவிஷு தீர்த்தம் முதலியவற்றின் தீர்த்தோற்சவத்தையும், மற்றைய மங்கள காரியங்களையும் ஒருநாள் உற்சவ மாகச் செய்யலாம் என்று உத்தரகாமிகாகமம் கூறியுள் ளது.
ஆகமப்படி பரம்பொருள் என்பது சிவம் என்ற ஒன்றே என்பதால், ஒருநாளில் செய்யப்படுகிற விழா சைவோற்சவம் என்றே பெயர் பெறுகிறது. இவ்விழாவானது சர்வமங்களத்தையும், ராஜ விருத்தியையும், முக்தியையும் தரவல்லது.
மேலும் இந்த சிவோற்சவம் என்பது சிவப்ரீதியையும் தரவல்லதாகும். இதனை முதல்நாள் மாலையில் துவங்கி, மறுநாள் காலையில் உற்சவத்தில் தீர்த்தம் அளித்திடுமாறு இருவேளையில் செய்யும் முறையில், ஆலய ஆசாரியர் விருப்பப்படி நாளை நிச்சயித்துச் செய்யவேண்டும் என்று மகுடாகமம் கூறுகிறது.
ஒருநாள் விழா தினத்திற்கு உற்சவ தின அதிதேவதை சதாசிவர் ஆவார். இது யாவரும் எளியமுறையில் அதிகம்செய்து பயன்பெறக்கூடிய விழா வகையாகும். இதில் காலையில் தீர்த்தம் செய்து மாலையில் ஒருமுறை வீதிவலத்தைச் செய்யலாம்.
ஒருநாள் விழாவை ஒருநாளில் மட்டுமே செய்வதற்கு கோவிலில் பகலில் பூஜையையும் ஹோமத்தையும் செய்து, அன்று இரவில் ஊர்வலத்துடன் (வீதி உலாவருதலை) உற்சவத்தைச் செய்வதாகும். இதில் மற்றொருமுறை, ஒரு வேளையிலேயே பலியுடன் காலையில் மட்டுமே அனைத் தையும் செய்து, உற்சவத்தையும் செய்வதும் ஏகதின உற்சவம் எனப்படுவதாகும்.
ஒருநாள் உற்சவமானது செய்முறையால் மூவகைப் படும். அவை கொடியேற்றமின்றி அங்குராதி தீர்த்தாந்த மாகச் செய்யபடுவது பாவனோற்சவமம் என்றும், பலிஹோமங்களை நீக்கி இருவேளையில் செய்வது சாந்திகோற்சவம் என்றும், பகலில் மட்டும் ஒருவேளை செய்யப்படுவது மாங்கள்யோற்சவம் என்றும் பெயர் பெறுவதாக உத்தர காரணாகமம் தெரிவிக்கிறது.
திரிதின உற்சவம் (மூன்றுநாள் விழா)
சைவாலயங்களில் மூன்று நாட்களில் செய்யப்படுகிற உற்சவமானது முக்குணங்களைக் குறிப்பதால் கௌணோற்சவம் என்றும், சுத்தமான சாத்விக குணத்தவரே சிவனாவதால் இவரது மூன்று நாள் உற்சவம் சாத்விக உற்சவம் என்றும் பெயர் பெறும். கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரையிலான பல கிரியைகைளை உடையதே உற்சவம் என்பதையே "த்வஜாரோஹாதிய வரோஹாந்தா கிரியா உத்ஸவ உச்யதே:' என்கிறது உத்தரகாமிகம். ஆகமங்கள் ஏழுநாள் உற்சவம் முதலானவற்றிற்கே கொடியேற்றத்தைக் கட்டாய விதியாக்கியுள்ளன. காமிகம், சுப்ரபேதம் முதலிய சில ஆகமங்கள் மூன்று நாள் மற்றும் ஐந்து நாளில் செய்யப்படுகிற உற்சவத்துக்கு ஒரு வாய்ப்பளித்து, நாம் விரும்பினால் இதனைக் கொடியேற்றத்து டனும் செய்யலாம் என்கின்றன. தீர்த்த தினத்தை நிச்சயித்து, அத்தினத்திற்கு முன்தினத்திற்கு முன்தினத்தில் மாலையில் துவங்கி, தொடர்ந்து ஆறு காலங்களில் தினதேவதை மற்றும் திக்தேவதைகளின் பலிகளை அளித்து, இந்த மூன்றுநாள் உற்சவத்தைச் செய்யலாம். நான்காம் நாள் காலையில் தீர்த்தோற்சவத்தைச் செய்யவேண்டும்.
சுப்ரபேதாகமப்படி ருத்ரர், ஈச்வரர், சதாசிவர் ஆகிய மூவரும் இந்த மூன்று நாள் உற்சவத்தின் மூன்று தினங்களின் அதிதேவர்கள் ஆவர். சிவப்ரீதியையும், கிராமரட்சையையும், இஷ்டசித்தியையும் மூன்றுநாள் உற்சவத்தின் பயனாகப் பெறலாம்.
பஞ்சாஹ உற்சவம் (ஐந்துநாள் உற்சவம்)
ஐந்து நாட்களில் செய்யப்படுகிற உற்சவம், பஞ்சபூத வடிவங்களான பஞ்சகலைகளைக் குறிப்பதால், இது பௌதிக உற்சவம் எனப் படுகிறது. ஆகமங்களுள் சுப்ரபேதம் இதனைக் கொடியேற்றத்துடன் செய்திடுமாறு கூறுகிறது. இது கொடியேற்றத்துடனும், கொடியேற்றமின்றியும் இருவகையாகவும் செய்யத்தக்கது என பல ஆகமங்கள் கூறுகின்றன.
போகத்தையும், பூத ரட்சையையும் ஐந்துநாள் உற்சவம் தருமென்று பயன் கூறப்படுகிறது. மேலும் ஏழு நாளிலோ, ஒன்பது நாளிலோ உற்சவத்தைச் செய்ய இயலாத பொழுதில் மட்டுமே மேற்கூறிய ஐந்துநாள் விழா, மூன்றுநாள் உற்சவம், ஒருநாள் உற்சவத்தைச் செய்யவேண்டும் என்றும், முதல் மூன்றா கிய 9, 7, 5 ஆகிய மூவகை உற்சவ நாட்களுக்குக் கொடியேற்றம் உண்டு என்றும், மூன்றுநாள் மற்றும் ஒருநாள் உற்சவங் களுக்கு கொடியேற்றம் இல்லையென்றும் சுப்ர பேதாகமம் கூறுவதுடன், ஐந்துநாள் விழாவிற்கு கொடியேற்றத்தை விதித் துள்ளது.
ஐந்துநாள் செய்யப்படுகிற விழாவில் முறையே, பிரம்மா, விஷ்ணு, ருத்ரர், ஈச்வரர், சதாசிவர் ஆகியோர் ஐந்து தினங்களின் அதிதேவர்கள் ஆவர். இவ்விழாவை மாலையில் துவங்கி, பத்துகாலம் பலியிட்டு, ஆறாம் நாள் காலையில் தீர்த்தோற்சவத்தைச் செய்துமுடிக்கவேண்டும். ஐந்துநாள் விழாவானது போகத்தின் பொருட்டு செய்யப்படுவதாகும் என்பதால், பஞ்சாஹ உற்சவத்தின் பயன் சுகபோக வாழ்வைப் பெறுவதாகும்.
சப்தாஹ உற்சவம் (ஏழுநாள் உற்சவம்)
ஸ்ரீமத் காரணாகமமும், சூட்சுமாகமமும் ஏழுநாள் உற்சவமானது ஏழு வகை உலகைக் குறிப்பதால் இதனை பௌவன உற்சவம் (புவனம்- உலகம்) என்கின்றன. இதனை எல்லா ஆகமங்களுமே கொடியேற்றத்துடனேயே செய்யவேண்டும் என்கின்றன. "நவாஹே அஷ்டாதச பலிம் ஸப்தாஹே ரு சதுர்தச' (சுப்ரபேதம் 14-8) எனும் வசனப்படி, இவ்விழா ஏழு நாட்களில் பலி எண்ணிக்கை 14 ஆகும். இவ்வுற்சவத்திற்கு தீர்த்த தினத்தை முதலில் நிச்சயித்து, முன்னதாக மாலையில் துவங்கி, பதினான்கு காலங் களில் தொடர்ந்து பலி அளித்து, தீர்த்தம் முடிவாக உற்சவத்தைச் செய்து, எட்டாம் நாள் காலையில் இதற்கான தீர்த்தோற்சவத் தைச் செய்க. இதனால் சிவ ப்ரீதியும், உமையின் பிரீதி யும் ஏற்படும். இந்த ஏழு நாட்களுக்கும் உரிய தின அதிதேவர்கள் முறையே, ரிஷிகள், இந்திரன், பிரம்மா, விஷ்ணு, ருத்ரர், ஈச்வரர், சதாசிவர் ஆகிய ஏழு மூர்த்திகளாவார்கள்.
நவாஹ உற்சவம் (ஒன்பதுநாள் விழா)
ஒன்பதுநாள் உற்சவத்தை பூர்வகாரணாகமம் சௌக் கியோற்சவம் என்றும், உத்தரகாரணாகமம் தைவிகோற்சவம் என்றும் கூறுகின்றன. இவ்விழாவுக்கு முதலில் தீர்த்த தினத்தை நிச்சயித்து, அந்நாளை விடுத்து அதற்குமுன்பு ஒன்பதாம் நாளில் மாலையில் ஆரம்பித்து இருவேளையுமாக பதினெட்டுகாலம் பலி தானம் செய்யவேண்டும். கொடியேற்றம் முதல், கொடியிறக்கம் வரையில் செய்யப்படுவதே மஹோற்சவம் ஆகும். பத்தாம் நாளில் பகலில் தீர்த்தம் செய்யப்படவேண்டும். ஒன்பது உற்சவ நாளிலும் இரவில் தினமும் ஒன்பது தினதேவதைகளையும் ஒன்பதுவகை சிறப்புப் பொருட்களால் பலிகொடுத்து திருப்தி செய்யவேண்டும். முதல் நாளிலிருந்து முறையே கணபதி, பூதங்கள், ரிஷிகள், இந்திரன், பிரம்மா, விஷ்ணு, ருத்ரர், ஈச்வரர், சதாசிவர் என்பவர்கள் ஒன்பது தினங்களின் அதிதேவதைகளாவர். இந்த உற்சவமானது லோகரட்சையையும், உலக அமைதியையும் பயனாக அளிக்கும்.
ஏகாதசாஸ உற்சவம் (பதினோரு நாள் விழா)
இந்த பதினோரு நாள் உற்சவத்திற்கு தீர்த்தத்தை முதலில் நிச்சயித்து, அதற்கு முன்பாக மாலையில் யாகாரம்பம் செய்து இருபத்திரண்டு காலம் பலியளித்து, 12-ஆவது நாள் காலையில் தீர்த்தோற்சவத்தைச் செய்யவேண்டும். இது சுபபோகத்தைத் தருவதாகும்.
துவாதசாஹ உற்சவம் (12 நாள் விழா)
இந்தப் பெருவிழாவை பூர்வ காரணாகமம் "பைத்ருகம் த்வாதசாஹம்து' என்று கூறி, பைத்ருக உற்சவம் என்று கூறியுள்ளது. தினசங்கியை என்பதை கொடியேற்றம் முதலாகக் கொள்வதும் ஒருமுறை. அவ்வாறாயின், அதிவாச காலம் நாள் கணக்கிலும், பலி கணக்கிலும் விடுபடும். நாள் ஒற்றைப் படை இலக்கத்திலும், பலிதான காலம் இரட்டைப்படை இலக்கத்திலும் அமைவது ஆகம மரபாகும். இதன் பயனாக மக்களுக்கு மகிழ்ச்சியும், தேவர்களின் பிரீதியும், முக்தியும் ஏற்படும். காமிகாகமம் முதல்நாளிலிருந்து முறையே கணபதி, பைசாசர்கள், பிரம்மா, சுந்தர்வர், பூதங்கள், முருகன் (கந்தர்), ரிஷிகள்,
நாகங்கள், இந்திரன், விஷ்ணு, ராக்ஷஸர்கள், சிவன் ஆகியோரை 12 தினங்களின் அதி தேவதைகளாக சிறப்பு பலி பூஜைக்கென கூறியுள்ளது.
மேலும் இவற்றில் கடைசியிலிருந்து ஏற்பதாக முறையே 1, 3, 5, 7, 9 நாட்களுக்கு தினதேவதையை விழாவகைக்கேற்ப அறிந்துகொள்ளுமாறு வேறுவகையையும் கூறுகிறது. 12 நாள் உற்சவம் சகலருக்கும், சகல தேவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகும். பித்ருதேவதைகளின் அனுக்ரஹத்தால் வம்சவிருதி ஏற்பட்டு மக்கள் மகிழ்ந்து வாழ்வார்கள்.
திரயோதாஹ உற்சவம் (13 நாள் விழா)
காமிகம், காரணம், சூட்சுமம் முதலான ஆகமநூல்கள் பதின்மூன்று நாளில் செய்யப்படுகிற மஹோற்சவத்தை "கௌமார் உற்சவம்' என்று குறிப்பிடுகின்றன. இதற்கான கிரியைகளை மாலையில் துவக்கி, தொடர்ந்து இருவேளைகளிலுமாக இருபத்தாறு காலத்திற்கு 26 பலியிட்டு, பதினான்காம் நாள் காலையில் தீர்த்தோற்சவத்தைச் செய்ய வேண்டும். 13 நாளுக்கும் முறையே, கணேசர், பூதங்கள், ரிஷிகள், இந்திரன், பிரம்மா, விஷ்ணு, ருத்திரர், ஈஸ்வரர், சதாசிவர், கந்தர், லக்ஷ்மி, சண்டேசர் ஆகியோர் தின அதிபதிகளாக பூசிக்கத்தக்கவர்கள் ஆவர். இவர்களுக்கு சிறப்புப்பொருளால் பலிதருதல் வேண்டும். இந்த உற்சவமானது கோவில் தெய்வங்களின் சாந்நித்தியத்தைத் தருவதுடன் சர்வசித்தியைத் தருவதாகும்.
பஞ்சதசாஹ உற்சவம் (15 நாள் விழா)
பதினைந்து தின உற்சவத்தை உத்தர காரணாகமம் "பக்ஷம ஸாவித்ர மித்யுத்தம்' என்று உத்தம திரயத்தில், உத்தமாதம பட்சத்தில் "ஸாவித்திரம்' என்ற பெயரில் கூறுகிறது. காமிகம் இதனை சௌக்கியம் தருகிற பக்ஷோற்சவம் என்று கூறுகிறது. இவ்விழாவை கொடியேற்றத்திற்கு முன்தினம் மாலையில் துவங்கி, முப்பது காலம் பலியிட்டு, பதினாறாம் நாள் காலையில் தீர்த்தோற்சவத்தைச் செய்வதுமுறை. இது மக்களுக்கு சௌக்கியத்தைத் தருவதாகும். இதில் முன்புபோலவே தினதேவதைகளுக்கு பலிதரப்படவேண்டும்.
சப்த தசாஹ உற்சவம் (17 நாள் விழா)
பதினேழு நாளில் செய்யப்படும் இதனை உத்தர காரணாகமம், "சாந்திரம் ஸப்த தசாஹகம்' எனும் வசனத்தால் சாந்திரோற்சவம் என்கிறது. இதற்கு முதலில் தீர்த்தோற்சவ தினத்தை நிச்சயித்து, இவ்விழாவை மாலையில் துவங்கி, முப்பத்து நான்கு காலம் 34 முறை பலியிட்டு, பின்பு பதினெட்டாம் நாள் காலையில் தீர்த்தோற்சவத்தைச் செய்க. இதன் பயனாக தேசமக்கள் செல்வச் செழிப்பாகிய வளத்தைப் பெறுவார்கள்.