அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடுபவர்கள் இலங்கையிலுள்ள கதிர்காமம் என்ற தலப்பெயரை அறிந்திருப்பார்கள். 14-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர், கதிர்காம கந்தனை 13 பாடல் களால் பாடியுள்ளார். ஒருசில மனதை ஈர்க்கும் பதங்களை ரசித்து விட்டு கதிர்காம தலத்தின் பெருமை யைக் காணலாம்.
"இதய வாரிதிக்குள் உறவாகி
எனதுளே சிறக்க அருள்வாயே
கதிரகாம வெற்பில் உறைவோனே!'
"சோதி சிவஞானக் குமரேசா
தோமில் கதிர்காமப் பெருமானே!
"கதிரகாம மூதூரில் இளையோனே!'
"இதமொழி பகரினும் தேமொழி
பகரினும்
ஏழைக்கிரங்கும் பெருமாளே!'
"உனதருள் க்ருபா சித்தம் அருள்
கூரவேணுமே
அரிய கதிர் காமத்தில் உரிய
அபிராமனே!'
"மருவும் அடியார்கள் மனதில்
விளையாடும்
மரகத மயூரப் பெருமாள் காண்
மணிதரளம் வீசி அணி அருவி
சூழ
மருவு கதிர்காம பெருமாளே!'
"கதிர்காம மேவிய பெருமாளே
க்ருபை சித்தமு ஞான போதமும்
அழைத்துத் தரவேணும்
ஒருநாளே!'
(15-8-2016 அருணகிரிநாதர் விழா என, அருணாசலமலையை திருப்
புகழ் பாடி வலம்வருவர்.)
அருணகிரி பாடலி-ருந்து கதிர்காமத்தைப் பற்றிய தலபுராணம் அறியமுடியவில்லை. கடைசி பாடலில் அனுமன் இலங்கை சென்று சீதையை சந்தித்து மோதிரம் அளித்ததை நினைவுகூர்கிறார்.
ராமாயண காலத்திலிருந்து இலங்கையும் இந்தியாவும் கடலால் பிரிக்கப்பட்டிருந்தாலும் முன்பு இவையிரண்டும் ஒன்றியிருந்தனவாம்! கதிர்காமம் இலங்கையின் கொழும்பு நகரிலிருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில், அம்பான்தோட்டை மாவட்டத்தில் உள்ளது. இத்தலம் 2,500 வருடங்களுக்கு முந்தையதாம். 100 வருடங்களாகத்தான் சாலை, மின்சாரம், நீர்வசதிகள் வரவே மக்கள் நடமாட்டமும் தலமும் விரிவடைந்துள்ளதாம்.
கதிர்காமக் கோவில் அமைந்தவிதம், வழிபாடு ஏற்பட்ட முறை எல்லாம் புதிராகவே உள்ளன. இலங்கைத் தமிழர்கள், பௌத்த மதத் தைச் சார்ந்தவர்கள், ஆஸ்திரேலியாவிலிருந்து வந்ததாகச் சொல்லப் படும் வேடுவர்கள், முகம்மதியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைவருமே பேதமின்றி இங்கே வழிபடுகிறார்கள்.
கதிர் என்றால் சூரியன்; காமம் என்றால் அன்பு. இவையிரண்டும் அனைவருக்கும் பொதுவானதுதான். மேலும் சிவனின் நெற்றிக்கண் களிலிருந்து வெளிப்பட்டவனல்லவா கந்தன். எனவே கதிர்காமம் என்னும் பெயர் இந்த தலத்துக்கு மிகப்பொருத்தமானதே. இலங்கை யில் "கதரகாம' என்றழைக்கிறார்கள்.
தொல்காப்பியம், நற்றிணை, பரிபாடல், நக்கீரரின் திருமுருகாற்றுப் படை போன்ற சங்க இலக்கியங்களில் கந்தனி, குரவைக்கூத்து, வேலன் கொடியாட்டம் என்றெல்லாம் கந்தன் வழிபாடு குறிப்பிடப் பட்டுள்ளது. அத்தகைய வழிபாட்டை இன்றும் காணவேண்டுமென் றால் கதிர்காமம் செல்லவேண்டும். அந்த வழிபாடுகளில் அவர்கள் காட்டும் ஈடுபாடு, வைராக்கியம், அசாத்தியமான சடங்குகள் எல்லாம் பிரம்மிக்கச் செய்கின்றன.
ஆடி அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் ஆரம்பித்து, ஆடிப்பௌர்ணமி வரை பதினான்கு நாட்கள் மிகச்சிறப்பாக விழா நடக்கும். பௌர்ணமிக்கு மறுநாள், நாம் தீர்த்தவாரி உற்சவம் செய்வதுபோல, அங்குள்ள மாணிக்க கங்கை நதியில் சில சடங்குகள் செய்கிறார்கள்.
பொதுவாக ஆலயங்களில் கருவறை விக்ரகம், உற்சவ விக்ரகங் களுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். உற்சவர் பல்வகை வாகனங்களில் வீதியுலா வருவார். கதிர்காமத்திலோ கருவறை விக்ரகமும் இல்லை; உற்சவ விக்ரகமும் இல்லை. வள்ளி, தெய்வானை யுடன் வீற்றிருக்கும் முருகன் ஓவியத்தை ஒரு திரையில் தீட்டியிருக்கிறார் கள். அதைத்தான் நாம் தரிசிக்கமுடியும். கருவறைக்குள் ஒரு பெட்டி உள்ளது. அங்கு பூசாரிகள் மட்டுமே செல்லமுடியும். அவர்கள் "கப்புரால' என்ற மரபினர்; பௌத்த மதத்திற்கு மாறியவர்கள்.
கருவறையிலுள்ள பெட்டிக்குள் என்ன இருக்கிறதென்பது ரகசியம்.
சண்முகச் சக்கரம் உள்ளதாக சிலர் குறிப்பிடுகின்றனர். அந்தப் பெட்டிக்கே "மஹா பெரஹரா' என்னும் ஆடி உற்சவம் நடைபெறு கிறது. அந்தப் பெட்டியை யானைமீது ஏற்றி ஊர்வலமாக வந்து வள்ளி யம்மன் கோவிலில் சேர்ப்பர். உற்சவத்தின் கடைசிநாள் அப்பெட்டி யுடன் மாணிக்க கங்கை நதிக்குச் சென்று, நீரை வாளால் வெட்டுகிறார் கள். பெட்டி மீண்டும் கருவறை சென்று சேர்கிறது. இந்த உற்சவத் தில் கலந்துகொள்ள இனம், மொழி, மத வேறுபாடின்றி அனைவரும் வருகின்றனர். எங்கும் "அரோகரா' கோஷம்தான். (இதோபோல கந்தசஷ்டி, பங்குனி உத்திர சமயங்களிலும் சிறப்பாக உற்சவம் நடக்கும்.) விரதம் மேற்கொண்டவர்கள் தீமிதித் தல், காவடி எடுத்தல், அலகு குத்திக்கொள் ளுதல் போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்துகிறார்கள். கதிர்காம முருகன் அழைத்ததால் இந்த விழாவுக்கு வந்தோம் என்கிறார்கள் பக்தர்கள்.
கந்தபுராணப்படி, முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்தது திருச்செந்தூ ரில். ஆனால் அங்குள்ள தட்சிண கைலாச மகாத்மியம் என்னும் நூல், சூரசம்ஹா ரம் நிகழ்ந்த இடம் கதிர்காமம் என்கிறது.
இங்கே, வள்ளிமலையில் முருகப்பெரு மானிடம் வள்ளியைப் பற்றிய தகவலை நாரதர் சொன்னதாக அறிகிறோம். அது போல கதிர்காமத்தில் வள்ளிமலையில் வள்ளிக்குகை உண்டு. கதிர்காமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள "செல்லா' என்ற இடத்தில், யானை உருக் கொண்டு வள்ளியை பயமுறுத்திய கணபதிக்கு கோவில் உள்ளது.
வள்ளியிடம் கந்தன் தினைமாவு உண்டாரல்லவா? அதனால் தினைமாவை நன்கு பிசைந்து, அதில் தீபமேற்றி வழிபடுகின்றனர். அந்த தினைமாவையே பிரசாதமாக உண்கிறார்கள்.
முருகன் ஆலயத்தில் பௌத்த பூசாரி களே வாயில் வெள்ளைத் துணியைக் கட்டிக்கொண்டு பூஜை செய்கிறார் கள். நாம் தரும் பிரசாத தட்டுகளை வாங்கி திரையிலிருக்கும் முருகனுக்கும் கருவறைக்கும் காட்டிவிட்டு, விபூதிப் பிரசாதத்துடன் நம்மிடம் தருகிறார்கள்.
இவ்வாலயம் பற்றிய செய்திகளெல் லாம் செவி வழியாகவே உள்ளன. புத்தர் தியானித்த 16 புனிதத் தலங்களில் இதுவும் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. புத்தர் மூன்றாவது முறையாக இலங்கை சென்றபோது (கி.மு. 580) மகாசேனன் என்ற மன்னன் அங்கு ஆட்சி செய்துள்ளான். அந்த அரசன் பௌத்த மதத்தைத் தழுவி யுள்ளான். புத்தர் அங்கு காவல் தெய்வமா னார். கதிர்காமன் (முருகன்), உபலவான் (மகாவிஷ்ணு), நாத (புத்தர்), பத்தினி (கண்ணகி) ஆகியோர் அங்கு காவல் தெய்வங்கள்.
கதிர்காமம் முருகன் ஆலயத்தில் நடைபெறும் தீமிதி விழாவில் முஸ்லிம்களும் பங்குகொள்கின்ற னர். முகம்மது நபிக்கு முந்தைய முசாநபியின் (மோசஸ்) ஞானகுரு அல்காதிர் என்னும் இறைத் தூதர். அவரே கதிர்காமத்தில் உருவமற்றவராக இருக்கிறார் என்பது அவர்களின் நம்பிக்கை. காதிர் மட்டுமின்றி முரிக் (மிருக்) என்ற பெயரும் இஸ்லாமியர்களுக்குப் பரிச்சயம். செவ்வாய் கிரகத்துக்கு அரேபிய மொழியில் முரிக் என்றே பெயர். "மார்ஸ்' எனப்படும் செவ்வாயே எல்லா மதத்தினராலும் போர்புரியும்- காக்கும் தெய்வமா கக் கருதப்படுகிறார். நமக்கும் செவ்வாய் என்றால்- அதற்கு அதிபதி தேவசேனாதிபதியான முருகனே.
இவ்வாலயத்துக்கு காணிக்கையாக ஏராளமான பொன்னையும் மணியையும் பக்தர்கள் அளித்துள்ள னர். இதையறிந்த போர்ச்சுக்கீசியர்கள் 150 பேர், சுமார் 2,000 போர்வீரர்களுடனும், வழிகாட்ட சில சிங்கள நாத்திகர்களுடனும் ஆலயத்தைக் கொள்ளையடிக்க வந்தனர். 1642-ஆம் ஆண்டில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கந்தன் மகிமை யால், வழிகாட்டவந்த அந்த நாத்திகர்கள் ஒருவர் பின் ஒருவராக பைத்தியம் பிடித்து மடிந்துபோக, போர்ச்சுக்கீசியர்களின் எண்ணம் ஈடேறவில்லை என்று "ரிபெய்ரோ'வின் குறிப்புகள் கூறுகின்றன.
இலங்கைக்கு வந்த கிரேக்கர்களும் ரோமனி யர் களும் கதிர்காமக் கடவுளை தங்கள் தெய்வம் போன்றே கருதி வழிபட்டனராம்.
இங்கே கந்தன், கணபதி, வள்ளியம்மை, தேவ சேனை, கிரிவஹோரா (புத்தர்), வைரவர் ஆகியோ ருக்கு தனிக்கோவில்கள் உள்ளன. இவற்றில் தேவ சேனையின் கோவிலில் மட்டும் அந்தண குருக்களால் ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.
கல்யாணகிரி சுவாமிகளின் சமாதிக் கோவிலும் இங்குண்டு. அதற்கொரு வரலாறு உண்டு.
முருகப்பெருமான் வள்ளியை மணந்து கொண்டு கதிர்காமத்தில் தங்கிவிட, தேவசேனை கல்யாணகிரி சுவாமிகளின்முன் தோன்றி முருகப் பெருமானை அழைத்துவரும்படி பணித்தாராம். (இவர் கி.பி. 17-ஆம் நுற்றாண்டில் வட இந்தியா வில் வாழ்ந்தவர். கிரி, பூரி, பாரதி, ஆஸ்ரம, தீர்த்த, அரண்ய, பர்வத, ஸரஸ்வதி, வன, பாரதி தீர்த்த என்னும் பத்து சம்பிர தாயங்களில், சிருங்கேரி பரம் பரை கிரி சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்.) அதன்படி கதிர்காமம் வந்த கல்யாணகிரி சுவாமிகள் ஷட் கோண யந்திரம் செய்து கடும் தவம் செய்தாராம். அவருக்கு ஒரு வேடுவ இளைஞனும் இளம்பெண்ணும் அவ்வப் போது பணிவிடை செய்து வந்தனர். 12 ஆண்டுகள் தவம் செய்தும் முருகப் பெருமான் காட்சிதராததால் சுவாமிகள் மிகவும் வேதனையுற்றார். கடும்தவத்தின் விளை வாக ஆழ்ந்த தூக்கம் அவரைத் தழுவியது. அப்போது வேடுவ இளைஞன் அவர் தூக்கத்தைக் கலைக்க, கோபம்கொண்ட அவர் இளைஞனைத் துரத்தி னார். ஓடிச்சென்ற அவன் மாணிக்க கங்கையில் இறங்கி முருகனாகக் காட்சிதந்தான். சுவாமிகள் முருகனைப் பலவாறு பணிந்து, தான் அங்கு வந்த காரணத்தைக் கூறினார்.
அப்போது வேடுவப் பெண் ணானவள் வள்ளியாக காட்சிதந்து, தங்களைப் பிரிக்க வேண்டாம் என்று சொல்லி, சுவாமிகளை யும் அங்கேயே தங்கிவிடும்படி கூறினாராம். அதன்படியே சுவாமிகளும் தங்கிவிட்டாராம்.
அந்த கல்யாணகிரி சுவாமிகள், இரண்டாவது ராஜசிங்கம் மன்னன் காலத்தில் (கி.பி. 1627-79) கதிர்காமக் கோவிலில் கல்யாண மண்டபமும் தேவசேனைக்கு தனிக்கோவிலும் கட்டினார் என்பர். அவர் வழிபட்ட ஷட்கோண யந்திரமே முருகன் கருவறைப் பெட்டிக்குள் இருப்ப தாகச் சொல்கிறார்கள்.
சுவாமிகள் சமாதியடைந்ததும் அவர் உடல் லிங்கமாக மாறியதாம். முத்துலிங்கம் என அது அழைக்கப்படுகிறது. அவரைத் தொடர்ந்துவந்த பரம்பரை சுவாமிகளின் சமாதிகளும் இங்குள்ளன. பக்தர்களுக்கு மனோலயம் தரும் இடமாக சுவாமிகளின் சமாதி விளங்குகிறது.
இவ்வாலயத்துக்கும், பதினெண் சித்தர் களில் ஒருவரான போகருக்கும் சம்பந்தம் உண்டு என்கிறார் கள். கி.மு. 500-ல் இங்கிருந்து சீனா சென்ற போகர், அங்கு இறந்துவிட்ட ஒரு சீனனின் உடலில் புகுந்து, முதலில் போலியின், பிறகு லாவேலித்ஸு என்னும் பெயருடன் "டாவோ ஸிம்' என்னும் மதத்தை உருவாக்கி 200 ஆண்டுகள் இருந்தாராம். பிறகு இந்தியா வந்து நவபாஷானங்களைக் கொண்டு பழனி முருகனை உருவாக்கினார். அதன்பின்னர் இலங்கை சென்று கதிர் காமத்தில் தங்கி ஷண்முக ஷடாட்சர யந்திரம் ஸ்தாபித் தார் என்பர்.
கிரியாயோகி பாபாஜி என்று அழைக்கப் படும் சித்தர், கதிர்காமத்திலும் தவம் புரிந்துள்ளாராம். அதன் காரணமாக, கதிர்காமத்தில், தேவயானை கோவிலருகே பாபாஜிக்கு சந்நிதி அமைக் கப்பட்டுள்ளது.
எல்லாமே இங்கு புதிராக இருந்தாலும், கதிரொளி, ஞான ஒளி வீசி, மக்களை ஈர்த்து அருள் வழங்கும் தலமாக கதிர்காமம் திகழ்கிறது. அருணிகிரி யாரின் கந்தரனுபூதிப் பாடலுடன் இக்கட்டுரையை நிறைவு செய்வோம்.
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.'