சுமார் 61 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த "பாவ மன்னிப்பு' என்னும் படத்தில், கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள் மனிதனின் மனநிலையை தோலுரித்துக் காட்டும் வகையில் இருந்தது.
"வந்தநாள் முதல் இந்தநாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும்
கடல் காற்றும் மலரும்
மண்ணும் கொடியும்
சோலையும் நதியும் மாறிவில்லை
மனிதன் மாறிவிட்டான்
நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அது வேதன் விழி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான்
மதத்தில் ஏறிவிட்டான்...'
மதம் என்றால் திமிர் என்று ஒரு பொருளுண்டு. யானைக்கு மதம் பிடித்துவிட்டால் அதை திமிர் என்று சொல்லமுடியுமா? இல்லை. அது யானைக்கு ஏற்பட்ட மனநல பாதிப்பு. இது இப்போது மனிதனுக்கு ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு இன்னல் களைச் சந்தித்தாலும், எவ்வளவு கொடூரமாக மனித உயிர்கள் பறிபோனாலும், எத்தகைய கொடிய விபத்துகளைச் சந்தித்தாலும், மிகக் கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும்- மனிதனே மனித சமூகத்திற்கு போர் எனும் பெயரில் உண்டாக்கும் அழிவுகள் மனித மனதின் பேராசையால் தலைவிரித்தாடுகிறது.
ஒரு மரணம் நிகழ்ந்தபின் 30 நாட்களுக்குள் அதற்கு செய்யவேண்டிய காரியங்கள (பரிகாரங்கள்) செய்யும்வரை மனித மனம் சித்தாந்தம், வேதாந்தம் எல்லாம் பேசுகிறது. அதன்பிறகு அப்படி ஒரு துயரமான நிகழ்வே ஏற்படாததுபோல் மனித மனம், வேதாளம் முருங்கை மரம் ஏறிக்கொள்வதைப்போல், ஆசை, பேராசை எனும் மாய வலைக்குள் சிக்கிக் கொள்கிறது. அதிலிருந்து மீண்டு வரவேண்டு மென்று முயற்சிப்பதில்லை. இந்த மானிடப் பிறப்பை இறைவன் ஏன் உருவாக்கியிருக்கி றான் என்னும் உண்மையை உனர மறுக்கிறது! அவ்வைக் குறள் பின்வருமாறு கூறுகிறது.
"பிறப்பினால் பெற்ற பயன் ஆவதெல்லாம்
துறப்பதாம் தூநெறிக்கட் சென்று.'
மனிதப் பிறவி எடுத்ததன் பயனென்பது, நல்லவழியில் சென்று நல்வாழ்வு வாழ, தீமைகளைத் தவிர்ப்பதும் (துறப்பதும்) விட்டொழிப்பதுமே ஆகும் என்பதாகும்.
உடம்பு, மனம், புத்தி இம்மூன்றில் உடம்பிற்கு ஒன்றும் தெரியாது. நகைச்சுவை நடிகர் வடிவேலுபோல காரணமே இல்லாமல் மனம், புத்தியானது மாறி மாறி அடி வாங்கும். மனம் நினைத்தபடி புத்தியை வசப்படுத்தி உடலைத் தன் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்கும். இறுதியில் உடல் உபயோகமில்லாமல் அழிந்தே போய்விடும். "ஆண்டாண்டு அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வரமாட்டார்' என்பது வழக்கு மொழியாகும். புலன்களின் செயல்பாடு எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பற்றி திருவள்ளுவர் கூறியதைப் பார்க்கலாம்.
"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.'
ஐம்பொறிகளின் வழியாக- அதாவது மெய், வாய், கண், காது, மூக்கு வழியாகப் பிறக்கும் ஐவகை ஆசைகளையும் விட்ட இறைவனது பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர் நெடுநாள் நிலைபெற்று வாழ்வார்.
எனவே கண்ணுக்குப் புலப்படாத மனதையும், கண்ணுக்குப் புலப்படும் அறிவையும் (மூளை) நட்புளாக்கிவிட்டால் உடம்பு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மனதைப் பற்றி திருமந்திரச் சிற்பி திருமூலர் வழங்கியுள்ளதைப் பார்ப்போம்.
"மனத்துறை மாகடல் ஏழும் கைநீந்தித்
தவத்திடை யாளர்தம் சார்வத்து உவந்தார்
பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலும் ஆமே.'
மனத்துக்குள்ளே இருக்கும் ஆசை, பாசம், காமம், கோபம், குரோதம் போன்ற எண்ணங்கள் ஓயாது அலைபோல் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. இதனால் மனதை அலை ஓயாத கடல் என்பர். திருமூலரும் மனதை ஏழுகடல் என்றே குறிப்பிடுகிறார். இந்த ஏழு கடல்களையும் நீந்திக் கடந்து கரையேறுவது எல்லாருக்கும் எளிதானதல்ல. எனவே தவம் செய்ய முற்பட்ட சிலரும்கூட தவமுயற்சியைப் பாதியில் விட்டு விட்டு, தம்மைச் சுற்றியுள்ள பொருள்களின்மீதே பற்றுக்கொண்டு வாழ்வார்கள். மீண்டும் மீண்டும் பிறந்து இளைக்கின்ற பாவாத்மாக்கள் இவர்கள். இவர்கள் அன்புகொள்ளத்தக்க நல்லவர் ஆகார். இவர்கள் சொல் கேட்பதும், ஏவல் கேட்பதும்கூட பாவமாகும். இவர்கள் பரம்பொருளான சிவத்தின் முகத்தில் விழிக்கவும் தகுதியற்றவர்கள் ஆவார்கள். மனதிலுள்ள பித்தம் தெளிய சித்தத்தை சிவன்பால் வைப்போம்.
இன்று மன இறுக்கம் மனித குலத்தைப் பிடித்துள்ள ஒரு மாபெரும் நோயாக மாறி விட்டது. யாரிடமும் மகிழ்ச்சியில்லை. மகிழ்ச்சி யாக இருப்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தாங்களே தங்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். மனதின் செயல்பாடு சரியாக இல்லாததால் இன்று இளைஞர்களுக்கு- குறிப்பாக மாரடைப்பு என்பது வெகு சாதாரண மாகிவிட்டது. விஞ் ஞான உலகமும், மருத் துவ உலகமும் பல கார ணங்கள் கூறுகிறது. நம்மைப் பொருத்த வரையில் அனைத்துத் துன்பங்களுக்கும், அனைத்து நோய்களுக்கும் மன அழுத்தமே காரணமாக இருக்கிறது.
கொரோனாவின் தாக்குதலுக்குப்பின்பு இப்போது வீட்டிலிருந்தே வேலை (ரர்ழ்ந் ச்ழ்ர்ம் ஐர்ம்ங்) எனும் நடைமுறை பல இடங்களில் வந்துவிட்டது. இதில் வீட்டிலிருந்தபடி வேலை பார்ப்பவர்கள், அலுவலகம் சென்று வேலை பார்ப்பவர்கள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அதாவது அலுவலக அழுத்தம், வேலைப்பளு அதிகரித்துவிட்டது. உட்கார்ந்த இடத்தில் வேலை எனும் நிலை- இதனால் உடலுக்கு சிறு அசைவுகள்கூட இல்லாத நிலை உருவாகிவிட்டது. யாருக்கும் பசியுணர்வு இல்லை. பசியெடுப்பதில்லை. ஆனாலும் நேரத்துக்கு வயிற்றை நிரப்பிவிடுகிறோம். உடலுறுப்புகளில் கண்ணும், நாக்கும் மிகவும் ஆபத்தான பேர்வழிகள். கண்ணானது ஒரு உணவுப் பொருளைப் பார்த்துவிட்டு, நாக்கினை உசுப்பேற்றி விட்டு எதுவும் நடக்காததுபோல் இருந்துவிடும். ஆனால் நாக்கு அப்படியா? கண் பார்த்த உணவை வாய்க்குள் தள்ளினால்தான் சந்தோஷப்படும். பசிக்கிறதோ இல்லையோ வயிறு விரும்புகிறதோ இல்லையோ- கண்ட கண்ட நொறுக்குத் தீணி களை (எஹள்ற் எர்ர்க்) துரித உணவுகளை அசுர கதியில் உள்ளே தள்ளி வயிற்றை நிரப்பிக் கொண்டே இருக்கிறோம்.
விளைவு உடல் பருமன் உண்டாகிறது. கெட்ட கொழுப்பு அதிகரிக்கிறது. கூடவே எண்ணங்களிலும், சிந்தனைகளிலும் ஏற்படும் தவறான நிலைப்பாடுகளால் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுகிறது. உணவுப் பழக்கம் தவறாக இருப்பதால் அது உடற் பருமனையும், கெட்ட கொழுப்பையும் அதிகப்படுத்துகிறது. இதற்குமுன்பு இதய நோயைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை, கெட்ட கொழுப்புகளின் அளவீடு, இ.சி.ஜி. (ஊஈஞ ஈர்ழ்க்ண்ர்ஞ்ழ்ஹம்) போன்ற பரிசோதனைகள் போதுமானதாக இருந்தன.
தற்போது சி.ஏ.சி (ஈ.ஆ.ஈ) என்ற டெஸ்ட்மூலம் இதய அடைப்பைக் கண்டறிய அறிவுறுத்து கிறது. சி.ஏ.சி. (கரோனரி ஆர்ட்டரி கால்சியம் ஸ்கோரிங்) எனும் பரிசோதனையை மேற்கொண்டால் இதய நோயிலிருந்தும், மாரடைப்பில் இருந்தும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும்.
ஒரு விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். "ஊனுடம்பு ஆலயம், உள்ளமும், மனமுமே கருவறை' என்கிறார் திருமூலர்.
அப்போது நம் இதயக் கமலத்தில்தான் இறைவன் ஈசன் பரம்பொருள் குடியிருக்கின்றான் என்னும் உண்மை புரியவேண்டாமா?
மூச்சுப் பயிற்சியைப் பற்றி ஔவையார் தனது குறளில்-
"வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுட் பெருக்கம் உண்டாம்.'
என்று குறிப்பிடுகிறார்.
சுவாசக் காற்றை அதன் இயல்பறிந்து உள் வாங்கி, வெளிவிடும் அளவறிந்து உள்ளடக்கிச் செயல்பட்டால், வாழ்நாள் கூடும். ஆயுட்காலம் அதிகமாகும்.
மேலும் ஔவையார் ஆசனத்தைப்பற்றி-
"ஆசனத்தைக் கட்டி அரன்தன்னை
அர்ச்சித்துப் பூசனை செய்துள்ளே புணர்'
என்கிறார்.
மிக முக்கியமான அறுபத்து நான்கு ஆசனங் களில் பத்மாசனத்திலாவது, சுகாசனத்திலா வது இருந்து (அமர்ந்து) சிவப் பரம்பொருளை நினைத்து பூசித்து வழிபாடு செய்து, சிவனோடு சிந்தையில் ஒன்றியிருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது மனம் ஆனந்தமடையும்.
"காயக் கிலேசம் உணர்ந்த பயனன்றே
ஓயா உணர்வு பெறல்.'
உடலால் வரும் துன்ப வாதைகளையும் அதற் கான காரணங்களையும் உணர்ந்து தெளிந்து, தவத்தின் (தியானம்) மூலம் அழிவதில்லாத நல்லறிவைக் கொண்டு உள்ளுணர்வைப் பெறுவதாகும்.
எனவே மனிதனின் எண்ணம், சொல், செயல் இம்மூன்றும் ஒரு நேர்க்கோட்டில் இருந்து இயங்கவேண்டும். இதற்கு அருமையான மருத்துவ அறிவியல் உபகரணம் ஆசனம், பிரணாயாமம், தியானம் ஆகிய மூன்றுமாகும். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், பிச்சைக்காரன், மனநோயாளி போன்ற எந்த பாகுபாடும் மரண தேவனுக்குத் தெரியாது. எனவே இது இல்லையென்று எண்ணி எண்ணி வருந்துவதைவிட, "ஆஹா... இவையெல்லாம் கடவுள் நமக்கு வழங்கியிருக்கிறானே' என்று, நமக்குக் கிடைத்ததிலும் நம்மிடம் இருப்பதிலும் மனநிறைவு பெற்றவனே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாகிறான்.
அரனைத் தொழுவோம்; ஆரோக்கிய ஆனந் தம் பெறுவோம்.