ஓங்கி உயர்ந்த கோபுரங்களுடன், மாமதுரை மாநகர நாற்புற வீதிகளுக்கு நடுவே, ஒளிவீசும் மாணிக்க மூக்குத்தியுடன், கண்கொள்ளாக் காட்சியாக, கோடானுகோடி பிரகாசத்துடன் ஒளிர்பவள் மதுரை மீனாட்சியம்மன்.
வரகுண பாண்டியன் என்ற மன்னன் மதுரையை ஆண்டுவந்த காலத்தில், ஒருசமயம் வைகை நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதனால் வைகைக் கரையில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. அதனால் மதுரையிலுள்ள ஒவ்வொரு வீட்டிலிருக்கும் ஆடவர் ஒரு நாளைக்கு ஒருவராக வந்து நதிக்கரையில் ஏற்பட்ட உடைப்புகளை அடைக்கவேண்டும் என்று பாண்டிய மன்னன் உத்தரவிட்டிருந்தான்.
வைகைக்கரை ஓரத்தில், ஒரு குடிசையில் வசித்துவந்தாள் "வந்தி' என்ற வயதான கிழவி.
அவளுக்கு உறவினர் என்று யாருமில்லை. பிட்டு செய்து விற்று, அதில் வரும் வருமானத்தில் தனது வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு நாளும் முதன்முதலில் செய்த பிட்டை மதுரை சோமசுந்தரேஸ்வரருக்கு நிவேதனம் செய்து, அதற்குப் பின்பே விற்பது வழக்கம்.
தான் மட்டுமே தனித்திருந்து வாழ்க்கையை நடத்திவரும் அவளுக்கு, பாண்டிய மன்னனின் கட்டளை ஒரு சோதனையாகிவிட்டது. யாருமே இல்லாத அவள் இல்லத்திலிருந்து ஒரு ஆடவரை எவ்வாறு அனுப்பிவைப்பது என்று வேதனைப்பட்டுக்கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில் வாட்டசாட்டமான ஒரு ஆடவன், தனது தலையில் ஒரு கூடையைக் கவிழ்த்துக்கொண்டு, ஒரு மண்வெட்டியைத் தோளில் வைத்துக்கொண்டு, வந்திக் கிழவியின் குடிசைமுன் வந்து, "தாயே! நான் ஒரு கூலி வேலைக்காரன்.
அவ்வப்போது கிடைக்கும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து பிழைப்பவன். இந்த ஊரில் எனக்கு எங்கு போனால் வேலை கிடைக்கும்?'' என்று கேட்டான்.
அவன் அப்படிக் கேட்டதும் வந்திக் கிழவிக்கு மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒரு ஆள் வைகைக்கரை உடைப்பை அடைக்கக் கிடைத்துவிட்டான் என்று கருதி, "என் வீட்டின் சார்பாக வைகைக்கரை உடைப்பை அடைக்கச் செல்கிறாயா?'' என்று கேட்டாள். அந்தக் கூலிக்காரனும் அதற்கு ஒப்புக்கொண்டு, "எனக்கு என்ன கூலி தருவாய்?'' என்று கேட்டான். அதற்கு வந்தி, "நான் என்னப்பா கொடுக்கமுடியும். பணமாகக் கொடுக்கமுடியாது. வேண்டுமானால் இந்த உதிர்ந்தபோன பிட்டைக் கொடுக்கிறேன். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டுப் போய் மன்னர் இட்ட கட்டளைப் படி வைகைக்கரை அடைப்பை அடைத்துவிட்டு வா!'' என்றாள்.
அதற்கு அந்த கூலிக்காரன், "பாட்டி... நீ சொல்கிறபடியே நான் போய் அந்த வேலைச் செய்கிறேன். இப்போது எனக் குப் பசிக்கிறது. பிட்டைக்கொடு'' என்று கேட்டான்.
அந்தக் கிழவியும் தான் வைத்திருந்த உதிரிப் பிட்டுகளை ஒன்றுசேர்த்து சாப்பிடக் கொடுத்தாள். அதை வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, வைகையாற்றின் கரையை அடைக்கச் சென்றான்.
அங்கே ஒரு அரசமரம் உயர்ந்து வளர்ந்திருந்தது. மரத்து நிழல் பரவியிருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. உண்ட மயக்கம் எல்லாருக்கும் உண்டு. வயிறு நிறைய உண்ட அந்தக் கூலிக்காரனுக்கு அந்த மரத்து நிழலும், காற்றும் அப்படியே கண்களைச் செருகியது. மண்வெட்டியையும், கூடையையும் ஒரு பக்கம் வைத்துவிட்டு தலையில் கட்டியிருந்த துண்டை விரித்து காலை நீட்டிப்படுத்து, படுத்த அரை நொடியில் தூங்கிப்போனான்.
உடைப்பெல்லாம் சரியாக அடைக்கப் பட்டு வருகிறதா என்பதை நேரில் கண்டு ஆய்வுசெய்ய பாண்டியன் கரையோரமாக வந்து கொண்டிருந்தான். அப்படி வந்தபோது அந்த அரசமர நிழலில் ஒரு கூலிக்காரன் வேலை செய்யாமல் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆவேசப்பட்டான். "வேலை செய்யாமல் உறங்கிக்கொண்டிருக்கிறானே.
எந்த வீட்டைச் சார்ந்தவன்'' என்று கோபத்தோடு கேட்டான். உடன் வந்தவர்கள், "இன்றைய கட்டளைப்படி அந்த பிட்டுவிற்கும் வந்திக் கிழவியின் ஆள்தான் இவன்...'' என்றனர். "உடனே அந்தக் கிழவியை அழைத்துவாருங்கள்'' என்று கட்டளையிட்டான் அரசன்.
அரை நாழிகையில் அந்தக் கிழவியை அழைத்துவந்தனர். அவளிடம் விசாரித்த பொழுது, அவள் நடந்த அனைத்தையும் கூறினாள்.
அரசன் தன்கையில் வைத்திருந்த பிரம்பால் உறங்கிக்கொண்டிருந்த கூலியாளின் முதுகில் ஓங்கி அடித்தான்.
அவன் முதுகிபட்ட அடி அரசனின் முதுகிலும் பட்டது. துடிதுடித்துப் போனான் அரசன். அந்த பிரம்படி மதுரையிலுள்ள அனைத்து மக்களின் முதுகிலும் பளீர் என்று பட்டது.
பிரம்படி பட்டதும் அந்த கூலியாள் எழுந்து கொண்டான். அரசன் அவனைப் பார்த்து, "நீ யார்? உன் முதுகில் நான் அடித்ததும் அந்த அடி என்மீதும் பட்டது. அப்படியானால் நீயென்ன மந்திரவாதியா சொல்'' என்று கொதித்தெழுந்தான் அரசன். கூலியாள் மௌனமாக நின்றான்.
உடனே வந்திக் கிழவியைப் பார்த்து அரசன், "இவனை உனக்குத் தெரியுமில் லையா? நீ அனுப்பிய ஆள்தானே இவன்....'' என்று கேட்டான். வந்திக் கிழவியோ, "எனக்கு இவனைத் தெரியாது'' என்று நடுங்கினாள். சற்ற யோசித்து விட்டு அரசன் சேனாதிபதியைப் பார்த்து, "சேனாதிபதியாரே... இவனைக் கைது செய்து இவனைப்பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யுங்கள்'' என்று ஆணையிட்டான்.
இதுவரை அமைதியாய் இருந்த கூலிக்காரன் அரசனைப் பார்த்து, "என்னைப் பற்றி நானே சொல்கிறேன்'' என்று கூறி, சுயரூபமான பரமேஸ்வர ரூபத்தைக் காட்டினான். பரமேஸ்வரனைக் கண்டதும் அரசன்முதல் அனைவரும் நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்து வணங்கினர். "இந்த வந்திக் கிழவி என் பக்தை. தினமும் முதல் பிட்டை எனக்குக் கொடுத்த பின்புதான் வியாபாரத்தைத் தொடங்குவாள். மன்னனின் கட்டளைக்குத் தக்க ஆளில்லாமல் அவதிப்பட்ட என் பக்தைக்கு உதவிபுரியவே யாம் வந்தோம்'' என்று கூறி மறைந்தார் சிவபெருமான்.
இதில் கவனிக்கத் தக்கது, ஒரு அரசன் ஒரு ஆணையைப் பிறப்பிக்கும்போது, அது மக்கள் அனைவருக்கும் பொருந்துகிறதா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். வந்தி ஒரு வயதான கிழவி.
அவளைத் தவிர வேறு யாரும் வீட்டிலில்லை. ஆகவே இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு அந்த உத்தரவிலிருந்து விலக்களித்து ஆணை பிறப்பிக்கவேண்டும். ஆனால் அரசன் அதைச் செய்யவில்லை.
அடுத்து, நாட்டில் ஒரு வேலையைச் செய்ய அரசன் உத்தரவிட்டுவிட்டு, அவன் அரண்மனையிலேயே இருந்துவிடக்கூடாது. வேலை நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று, அனைத்து வேலையாட்களும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா? எந்த அளவுக்கு வேலை முடிந்துள்ளது என்பதையெல்லாம் தணிக்கை செய்து வேலையை முடுக்கிவிடவேண்டும். வேலை செய்யாமல் தூங்கிக்கொண்டிருந்த ஆளைத் தட்டி எழுப்பி பிரம்படி கொடுத்ததே இதற்குச் சான்று.
தன்னுடைய பக்தர்களை இறைவன் கைவிடமாட்டான்; காப்பாற்றுவான் என்பதைக் காட்டவே இறைவன் கூலியாளக வந்து தனது பக்தையைக் காப்பாற்றினான். அதுமட்டுமல்ல; ஒரு வேலை செய்ய கூலி வாங்கிக்கொண்டு வேலையைச் செய்யாமல் இருப்பதும், வேலை செய்யவேண்டிய நேரத்தில் தூங்கிக்கொண்டிருப்பதும் கூடாது.
இப்படியாக பலவற்றை நிரூபணம் செய்யவே பரமேஸ்வரன் கூலியாளாக வந்து "பிட்டுக்கு மண் சுமந்து' காட்டினான். மக்கள் இதைப் புரிந்துகொண்டு அதன்படி நடக்கவேண்டும். மனிதன் தான் நினைப் பதை சாதிக்க எண்ணுகிறான். ஆனால் அவனுக்கும் மேலே இருந்து அதை நடக்க வைப்பதும், தடுத்து நிறுத்துவதும் போன்ற செயலை இறைவன் செய்கிறான் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
இன்றும் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் இந்த நிகழ்ச்சியைப் பிட்டுத் திருவிழா என்று ஆவணி மூலத் திருவிழாவாக க் கொண்டாடுகிறார்கள்.