தேவாரம் எனும் பக்திப் பாடல்களைப் பாடிய மூவர் முதலிகளில், திருநாவுக்கரசர் (அப்பர்) பாடிய தேவார வைப்புத் தலங்களில் ஒன்றுதான் கருங்குயில்நாதன் பேட்டை. (தமக்கென்று தனிப்பதிகம் பெறாமல், மற்றொரு தலத்தின் பதிகத்தில் வைத்துப் பாடப்பட்டிருக்குமாயின் அத்தகைய தலங்கள் வைப்புத் தலங்கள் எனப்படும்.)

இத் தலத்தைப் பற்றி-

"கயிலாயமலை யெடுத்தான் கரங்க ளோடு

சிரங்களுரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்

Advertisment

பயில்வாய பராய்த்துறை தென்பாலைத் துறை

பண்டெழுவர் தவத்துறை வெண் குறையெம் பொழிற்

குயிலாலந் துறை சோற்றுத் துறைபூந் துறை'

Advertisment

எனப் பாடியுள்ளார். இப்பாடலில் இடம்பெற்றுள்ள "குயிலாலந்துறை' என்பது கருங்குயில்நாதன் பேட்டை திருத்தலமே.

தருமை ஆதீனத்தின்கீழ் இயங்கும் இக்கோவிலுக்கு சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவிலில் வீற்றிருக்கும் ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை சக்திபுரீஸ்வரர் சுவாமியை கருணை வடிவமாக பக்தர்கள் வழிபடுவதால், இத்தலம் கருணாபுரம், கருணாபுரி என்றும் அழைக்கப்படுகிறது. "உத்திர கங்கையின் ஓங்கிய பொன்னி' என, கங்கைநதியைவிட மேலான நதி எனப் போற்றப்படும் மயிலாடுதுறை காவேரி நதியின் வடகரையில் பழமையான இக்கோவில் அமைந்துள்ளது.

படைக்கும் தொழிலை நடத்திவந்த பிரம்மதேவனின் மகனான தட்சன் (தக்கராஜன்) சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றான். அதில் ஒன்றுதான் பார்வதிதேவி தன் மகளாகப் பிறக்குமாறு வேண்டிப் பெற்ற வரம். அதன்படி பார்வதிதேவி தாட்சாயணி எனும் பெயரில், தட்சனுக்கு மகளாகப் பிறந்தாள்.

சிவபெருமானுக்கும், தாட்சாயணிக்கும் திருமணம் முடிந்தபிறகு, தட்சன் ஒரு பெரிய யாகத்தை திருப்பயறிலூரில் வேதவிற்பனர்கள், முனிவர்களை அழைத்து நடத்த திட்டமிட்டான். அதன்படி பெரிய யாகம் நடக்கும்போது மருமகனான சிவபெருமானை, ஆணவத்தாலும், எதோ ஒரு காரணத்தாலும் அழைக்காமல் அவதிமதித்தான். தன் கணவருக்குத் தகுந்த மரியாதை தராமல், அழைப்பும் விடுக்காமல் யாகம் நடப்பதையறிந்து தட்சனின் மகளான தாட்சாயணி (பார்வதிதேவி) மனம்வருந்தி தந்தையிடம் சென்று முறையிட்டாள். ஆணவத்தின் உச்சியிலிருந்த தட்சன் மகளின் வேண்டுக்கோளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து யாகத்தை நடத்தினான்.

ss

இத்தனை நிகழ்வுகளையும் அறிந்து சிவபெருமான் தட்சனுக்குத் தகுந்த பாடத்தை உணர்த்த எண்ணினார். சிவபெருமானின் சினத்தால், அவரது நெற்றிக்கண்ணிலிருந்து வீரபத்திரர் தோன்றினார். (வீரபத்திரரை வடமாநிலங்களில் "வீரோபா' (Viroba) என அழைப்பதுண்டு. மகாராஷ்டிர மாநிலத்தில் வீரபத்திரருக்கு ஸ்ரீராஜ வீரபத்திரா எனும் பெயரில் பெரிய கோவில் ஒன்றுள்ளது.

யாகத்திற்கு வந்தவர்களையும், ஏற்பாடுகளை செய்தவர்களையும் வீரபத்திரர் விரட்டியடித்தார். இதனால் முனிவர்கள், வேதவிற்பனர்கள் பயந்து ஓடினார்கள். சிறப்பான இந்த யாகத்தைக் காண இந்திரனும் வந்திருந்தான். தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், தன்னையும் சிவபெருமானின் பிரதிநிதியாக வந்த வீரபத்திரர் அழித்துவிடுவார் என அஞ்சினான். சிவபெருமானின் கோபத்திற்கு ஆளானவர்களில் இந்திரனும் ஒருவனாக இருந்தமையால், தன்னுடைய (தேவர்களுக்கான) தெய்வீகத் தன்மையை இழந்து கருங்குயிலாக மாறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சிவநிந்தனை செய்த குற்றத்தை தட்சன் மற்றும் இந்திரன் உள்ளிட்டோர் உணர்ந்து, தங்களை மன்னிக்குமாறு சிவபெருமானிடம் வேண்டினார்கள். அன்பே சிவமான சிவபெருமான் கோபம் தணிந்து அமைதி யானார். தன்னைக் காக்குமாறு இறைவனை வேண்டிவந்தான் இந்திரன்.

தேவகுருவான பிருகஸ்பதி இந்திரனின் நிலையைக்கண்டு மனம்வருந்தி, அதற்குத் தக்க வழியையும் சொன்னார். அதன்படி இத்தலத்தில் சிவபெருமானை நோக்கி தவமிருந்து, கருணா தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு, இந்திரன் கருங்குயில் உருவத்திலிருந்து தன்னுடைய பழைய உருவத்தை மீண்டும் பெற்றான்.

ss

தன்னை ஆட்கொண்டு அருளியது போன்று இத்தலத்தில் எழுந்தருளி பக்தர் களுக்கு கருணையுடன் ஆட்கொள்ள வேண்டும் என இந்திரன் சிவபெருமானிடம் வேண்டினான். இறைவனும் அவ்வாறே அருளினார். இந்திரனால் இத்தலத்திற்கு கருங்குயில்நாதன் பேட்டை என்னும் பெயர்வந்தது.

இக்கோவிலின் நுழைவுவாயிலின் இடப்புறத்தில் விநாயகர் சந்நிதியும், வலப்புறத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. சப்த மாதர்களான பிராம்பி, சாமுண்டீஸ்வரி, கவுமாரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி ஆகியோர் சிலைகள் உள்ளன. அதில் மகேஸ்வரி இத்தலத்தில் வீற்றிருக்கும் கருணாபுரத்துநாதனை வழிபட்டுப் பேறுபெற்றதாக-

"சிரத்து மாமதி சூடிய தேவனைக் கருணா

புரத்து நாதனைப் புண்ணிய மூர்த்தியைப் புகழ்சா

லுரத்து மேம்படு மயேச்சுரி யுஞற்றி

வரத்து மேதகு சிறப்பெலாம் பெற்றனள் வாழ்ந்தாள்'

என்னும் செய்தியை மாயூர புராணத்தின் சத்தபுரப் படலத்தில் கூறப்பட்டுள்ளது.

தருமை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவில் காமிக ஆகமப்படி தினந்தோறும் நான்குகால பூஜைகள், வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகிறது. மாத சிவராத்திரி, மாதம் தோறும் பிரதோஷம், மகாசிவராத்திரி, சோமவார பூஜை, திருவாதிரை போன்ற நாட்களில் சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவதுண்டு.

இறைவனே கருணை வடிவமானன். அதிலும் கருணாபுரி என்று அழைக்கப்படும் கருங்குயில்நாதன் பேட்டையில் வீற்றிருக்கும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ சக்தி புரீஸ்வரரை வழிபட்டு அவனின் திருவடி களை சரணடைவோம்!