காங்கரா சாமுண்டா தேவி ஆலயம் இமாச்சலப் பிரதேசத்திலிருக்கும் காங்கரா என்னும் இடத்தில் அமைந்துள்ளது. பொதுவாக இமாச்சலப் பிரதேசத்தை "கடவுளின் இல்லம்' என்று அழைப்பார்கள். இந்த மாநிலத்தில் 2,000-க்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. அவற்றுள் மிகவும் புகழ்பெற்ற ஆலயமிது.

51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. வட இந்தியாவிலிருக்கும் ஒன்பது சக்தி பீடங்களில் இரண்டாவது பீடமிது.

1. வைஷ்ணவி தேவி, 2. சாமுண்டா தேவி, 3. வஜ்ரேஸ்வரி, 4. ஜ்வாலா தேவி, 5. சிந்த பூரணி, 6. நைனா தேவி, 7. மானஸா தேவி, 8. காளிகா தேவி, 9. சாகம்பரி தேவி ஆகியவையே அந்த ஒன்பது சக்தி பீடங்கள்.

gangara

Advertisment

இந்த புகழ்பெற்ற சாமுண்டா தேவி ஆலயத்தைத் தேடி உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். தங்களின் விருப்பங் கள் நிறைவேறுவதற்காக அன்னை சாமுண்டாவை பக்திப் பெருக்குடன் வழிபடுகிறார்கள்.

இந்த ஆலயம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. தர்மசாலாவிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில், பங்கர் என்ற ஆற்றின் கரையில் இந்த அற்புத ஆலயம் அமைந்திருக்கிறது. சுற்றுலாத் தலமாகவும் இது விளங்குகிறது.

இந்த அன்னைக்கு மகாகாளி என்ற பெயரும் உண்டு. பூலோகத்தில் மக்களை அரக்கர்கள் துன்புறுத்தும்போது, இந்த அன்னை அவர்களை சம்ஹாரம் செய்வாள்.

முன்பொரு சமயம் தேவர்களுக்கும் அசுரர்களுக்குமிடையே போர் நடைபெற்றது. அதில் அசுரர்கள் வெற்றிபெற்றுவிட்டனர்.

மகிஷாசுரன் என்னும் அசுரன் மன்னனாகி விட்டான். தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட, தேவியை வணங்கும்படி அவர் கூறினார். "எந்த தேவியை?' என்று அவர்கள் கேட்டனர்.

அதையடுத்து பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு சக்தியை உருவாக்கினர். ஒளி வடிவில் தோன்றிய அந்த தேவிக்கு கடவுள்கள் ஒவ்வொரு சக்திகளையும் அளித்தனர்.

சிவன் சிங்கத்தை அளித்தார். விஷ்ணு தாமரையைத் தந்தார். இந்திரன் சிந்தாமணியை அளித்தார். மாலையைக் கடல் அளித்தது. தேவியை தேவர்கள் அனைவரும் வழிபட்டனர். அதைத் தொடர்ந்து மகிஷாசுரனுடன் போரிட்டு அவனை தேவி அழித்தாள். அதனால் "மகிஷாசுர மர்த்தினி' என்ற பெயர் தேவிக்கு உண்டானது. அந்த அன்னைதான் இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் சாமுண்டா தேவி.

மகாவிஷ்ணு தன் சக்ராயுதத்தினால் சதி தேவியின் உடல் பாகங்களை அறுத்திட, அவை பூவுலகில் 51 இடங்களில் விழுந்தன.

அவையே சக்தி பீடங்கள் என்று அழைக் கப்படுகின்றன. கால் பகுதி விழுந்த இடமே இது.

இந்த அன்னையைப் பற்றி இன்னொரு கதை...

பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு பூலோகத்தில் சும்ப, நிசும்பர் என்ற இரு அரக்கர்கள் தேவர்களுக்கு சிரமங்களைத் தந்தனர். அவர்களுக்கிடையே நடைபெற்ற போரில் தேவர்கள் தோற்றுவிட்டனர்.

தங்களை அரக்கர்களிடமிருந்து காப்பாற் றும்படி அவர்கள் அன்னை துர்க்கையை வழிபட்டனர். அப்போது அன்னையானவள் மகாகாளி, அம்பை என்ற இரு உருவங்களை எடுத்தாள். மகாகாளி உலகைச் சுற்றிக்கொண்டிருக்க, அம்பை இமயமலையில் இருந்தாள். அவள் அரக்கர்களுடனும், சண்ட முண்டருடனும், ரக்தபீஜன் என்ற அரக்கனுடனும் போரிட்டு, அவர்களின் தலைகளை வெட்டி தன் கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டாள். சண்ட முண்டரை அழித்ததால், அந்த அன்னைக்கு சாமுண்டா தேவி என்ற பெயர் உண்டானது.

இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் இங்கிருக்கும் ஆற்றில் குளிக்கலாம்.செடிகள், கொடிகள், மரங்கள் வளர்ந்திருக்கும் அழகிய சூழலில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. ஆலயத்தின் மத்திய பகுதியில் அமர்ந்து பக்தர்கள் தியானம் செய்கின்றனர். இங்கிருக்கும் ஆற்றில் நீராடினால் சரீரம் புனிதமாகும் என்பது நம்பிக்கை. ஆஞ்சனேயர், பைரவர் ஆகியோருக்கும் இங்கு ஆலயங் கள் இருக்கின்றன.

இந்த ஆலயத்திற்கு அருகிலிருக்கும் விமான நிலையம் காகல். அங்கிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் கோவில் உள்ளது. சென்னையிலிருந்து செல்பவர்கள் டில்லிக்குப் பயணிக்க வேண்டும். பயண தூரம் 2,195 கிலோமீட்டர். அங்கிருந்து 472 கிலோமீட்டர் தூரத்தில் இந்த "காங்கரா சாமுண்டா தேவி மந்திர்' என்னும் ஆலயம் இருக்கிறது.