இணையற்ற இறைசக்தியால் மட்டுமே எதையும் சாதிக்கமுடியும் என பண்டைக் காலத்தில் ஆட்சிபுரிந்த மன்னர்கள் கருதினார்கள். அதற்காக ஏராளமான ஆலயங்களை உருவாக்கினர். அவற்றில் தஞ்சை மாவட்டத்திலும் அரியலூர் மாவட்டத்திலும் சோழ மன்னர்கள் கட்டுவித்த கோவில்கள் வரலாற்று ஆவணங்களாகத் திகழ்கின்றன.
அவற்றுள் ஒன்றே இராஜேந்திரசோழனால் கட்டப்பட்டதும், அரியலூர் மாவட்டத்தின் பழமையான சிவாலயங்களில் ஒன்றானதுமான விக்ரமங்கலம் எனப்படும் விக்கிரம சோழமங்கலம் பூரணசந்திர கலாம்பிகை உடனுறை சோழீசுவரர் ஆலயம்.
முதலாம் இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட இவ்வூர் சோழர் காலத்தில் "கடாரங்கொண்ட சோழவளநாட்டு மதுராந்தக வளநாடு' என்ற நாட்டுப் பிரிவின் கீழ் இருந்துள்ளதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. வணிக நகரமாகவும், துணை நகரமாகவும் உருவாக்கப்பட்ட இவ்வூர் இராஜேந்திர சோழனின் பட்டப்பெயர்களில் ஒன்றான விக்ரமசோழன் என்பதை நினைவுபடுத்தும்விதமாக விக்கிரம சோழபுரமென்று பெயரிடப்பட்டது. பின்னர் சோழ மன்னர்கள், அதிகாரிகள் வந்து தங்கும்விதமாக அரண்மனைகள் கட்டப்பட்டன. இந்த அரண்மனையில் விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகிய மன்னர்கள் தங்கி யிருந்து அரசாணைகள் வெளியிட்டதை கீழப் பழுவூர், வேலூர், அச்சிறுபாக்கம், பிரம்ம தேசம், திருப்புலிவனம், அய்யன்பேட்டை, ஆலங்குடி ஆகிய ஊர்களில் உள்ள கல் வெட்டுகள் தெரிவிக்கின்றன.
சோழர்காலத்தில் தலைநகரங்களாக விளங்கிய தஞ்சாவூரையும், கங்கைகொண்ட சோழபுரத்தையும் இணைத்த பெருவழி (நெடும்பாதை) இவ்வூர் வழியே சென்றது இவ்வூருக்குரிய சிறப்பாகும். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு, திருமானூர், விளாங்குடி, கீழப்பழுவூர், விகைகாட்டி, விக்கிரமங்கலம், மூட்டுவாஞ்சேரி, கோவிந்தபுரம், ஸ்ரீபுரந் தான், மதனத்தூர் வழியாக கங்கைகொண்ட சோழபுரத்தைச் சென்றடைந்த அப்பெரு வழியை விளாங்குடிப் பெருவழி, குலோத் துங்கசோழப் பெருவழி என்றழைத்தனர்.
முதலாம் இராஜேந்திர சோழனுக்குப் பின் கி.பி 1068-ல் பட்டத்திற்கு வந்த வீர ராஜேந்திரன் காலத்தில், கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்த ஒரு மடத்திற்கு இவ்வூர் இறையிலியாகக் கொடுக்கப்பட்டதை மற்றொரு கல்வெட்டு கூறுகிறது. இவ்வூர் வணிக நகரமாக உருவாக்கப்பட்டதால், ஏராள மான வணிகர்கள் வாழ்ந்துள்ளனர். பல்வேறு தொழில்கள் சிறப்புற நடந்துள்ளன. வணிகர் கள் குடியிருந்த தெருக்கள் கடாரங்கொண்ட சோழப் பெருந்தெரு, மதுராந்தகப் பெருந் தெரு என்றழைக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த செட்டியார்கள் சோழபுர செட்டியார் என்ற பட்டப்பெயருடன் பல்வேறு ஊர்களில் இன்றளவும் வசிக்கின்றனர்.
இவ்வூருக்கு அருகிலுள்ள ஆலவாய் என்ற ஊர் சோழர் காலத்தில் உலோகப்பொருட்கள் தயாரிக்கப்படும் மிகப்பெரிய உலைக் களமாக (தொழிற்கூடமாக) இருந்து, படைக் கருவிகள், செப்புத் திருமேனிகள் மற்றும் பிற உலோகப் பொருட்கள் உற்பத்தி செய்யப் பட்டன. தற்போது இவ்வூர் உலைக்களமேடு என அழைக்கப்படுகிறது.
இராஜேந்திர சோழீச்சுவரம் எனப்படும் பழமையான சிவாலயத்தைக் கொண்டது. சோழர் காலத்தில் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிகக் குழுவால் வழிபடப்பட்டு, தற்போதும் பாதுகாக்கப்பட்டுவரும் சமணர், புத்தர் சிலைகளைக் கொண்டது உள்ளிட்ட சிறப்புகளைக்கொண்ட இவ்வாலயத்தின் மூலவர்- சோழீசுவரர்; அம்மன்- பூரண சந்திரகலாம்பிகை; தல விருட்சம்- வில்வம்; தீர்த்தம்- கங்கா தீர்த்தம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கங்கையும் கடாரமும் வென்று புகழ் ஈட்டிய முதலாம் இராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட இவ்வூரில், இராஜேந்திர சோழீச்சுவரம் என்ற பெயரில் அம்மன்னனால் இச்சிவாலயம் கட்டப் பட்டதாகக் கூறப்படும் வரலாற்றைத் தவிர வேறெந்த புராண வரலாறும் இவ்வாலயத்திற்கு இல்லை.
சோழீசுவரர் கோவிலில் முதலாம் குலோத்துங்கன், மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் பிற்கால கல்வெட்டுகளும் ஒரு செப்பேடும் இடம்பெற்றுள்ளன.
ஊரின் வடகிழக்குப் பகுதியில் நான்கு பெரிய ராஜவீதிகளுடனும், கம்பீரமான மதிற்சுவர்களுடனும், திருக்குளமுமாக கிழக்குநோக்கி அமைந்திருக்கும் இவ்வாலயத் தின் முன்பக்க ஐந்துநிலை ராஜகோபுரத்தை தரிசித்து உள்ளேச் செல்ல, இரண்டாவது பிராகாரத்தில் பலிபீடத்தைத் தொடர்ந்து நந்தியெம்பெருமான் அருள்பாலிப்பதை தரிசிக்கலாம். அடுத்ததாக மூன்று நிலை உட்கோபுரத்தைக் கடந்து உட்பிராகாரம் செல்ல, பிரகாரச் சுற்றில் கோடிவினாயகர்,
வள்ளி, தெய்வானை உடனுறை முருகப் பெருமான், கஜலட்சுமி, சண்டிகேசுவரர், நவகிரகங்கள், பைரவர், சூரியன், சந்திரன், சனீசுவரர் சந்நிதிகளுடன் ஆலயக் கிணறும் இடம்பெற்றுள்ளன.
கருவறைக் கோட்டத்திலுள்ள நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கா ஆகியோரை தரிசித்து, பத்துக்கும் மேற்பட்ட அழகிய சிற்ப வேலைப் பாடுகள்கொண்ட முன்மண்டபத்திற்குவர, மண்டபத்தின் வடபாகத்தில் தனிச்சந்நிதியில் அம்பாள் தெற்குநோக்கி நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறாள். அவரை வழிபட்டு மகாமண்டபத்தின் வாயிலின் இருபுறத் திலுமுள்ள மகாகணபதி, வினாயகர் மற்றும் வடபக்கத்திலுள்ள சிவ- பார்வதி மூர்த்தங்களை தரிசித்து, மகாமண்டபத்திற்குள் நுழைகிறோம். மகாமண்டபக் கூரையிலுள்ள ஓவியங்கள் விஜயநகர, நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவைகளாகும். இம்மண்டபத்தின் கூரையில் 12 ராசிகளைக் குறிப்பிடும் ராசி மண்டல சிற்பங்கள் உள்ளன. தொடர்ந்து அர்த்தமண்டபமும், அதனைத் தொடர்ந்து கருவறையும் உள்ளன. கருவறையில் அனைவருக்கும் அபயமளிக்கும்விதமாக சிவலிங்க வடிவில் சோழீசுவரர் அருள்பாலிக்கிறார்.
பிரதி மாதப் பிரதோஷம், விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி அன்னாபிஷேகம் மற்றும் தமிழ்மாதப் பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
வெள்ளிக்கிழமைதோறும் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற மாலை 7.00 மணிமுதல் 8.00 மணிவரை சிறப்புப் பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன. இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இங்குள்ள சனீஸ்வரர் சந்நிதியில் ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் தாமரை, அரளி போன்ற பூக்களைக்கொண்டு அர்ச்சனை செய்து, எள் தீபமேற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நிவர்த்தியாவதுடன், திருமணத் தடைகள் நீங்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். பைரவர் சந்நிதியில் வழிபாடுகள் செய்தால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி வளமான வாழ்க்கை அமையுமென்பதும் ஐதீகமாக உள்ளது. இக்கோவில் அம்பாள் சக்திநிறைந்த அம்மனாகும்.
தினசரி காலை 7.00 மணிமுதல் 11.00 மணிவரையிலும்; மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந் திருக்கும்.
அரியலூர் மாவட்டம், தா. பழுவூரிலிருந்து முட்டுவாஞ்சேரி, விகைக்காட்டி வழியாக அரியலூர் செல்லும் பேருந்து மார்க்கத்தில் அமைந்துள்ளது இவ்வாலயம்.
விக்கிரமங்கலத்தைச் சுற்றி பல வரலாற்று சிறப்புடைய ஊர்கள் உள்ளன. நாகமங்கலம் என்ற ஊர் ராஜேந்திர சோழனின் மனைவி வானவன் மாதேவி என்பவரின் பெயரால் வானவன் மாதேவி சதுர்வேதிமங்கலம் என அழைக்கபட்டது. இவ்வூரிலுள்ள ஏரி, அம்பிகாபதி ஏரி என்றழைக்கப்பட்டது. இது கம்பரின் மகன் அம்பிகாபதியை நினைவுபடுத்துகிறது. செட்டித்திருக்கோணம், பெரிய திருக்கோணம் ஆகிய ஊர்கள் ஒன்றுசேர்ந்து மதுராந்தகபுரம் என்னும் பெயரால் மிகப்பெரிய வணிக நகரமாக இருந்தது. உடையவர் தீயனூர் மனுகுலகேசரி நல்லூர் என அழைக்கப்பட்டது. மனுகுல கேசரி என்பது ராஜேந்திரசோழனின் மகனான சோழகேரளன் என்பவரின் பட்டப் பெயராகும். ஸ்ரீபுரந்தான் என்ற ஊர் முதலாம் பராந்தக சோழரின் காலத்தில் ஸ்ரீபராந்தக சதுர்வேதிமங்கலம் என அழைக்கப் பட்டது. உத்தமசோழன், ராஜராஜன் ஆகியோரி டம் உயரதிகாரியாகப் பணியாற்றிய அம்பலவன் பழுவூர் நக்கன் என்பவரின் பெயரால் உருவான ஊரே அம்பலவர் கட்டளையாகும்.