மேன்மை கொள் சைவநீதி விளங்கும் விதமாக சிவாலயங்களை ஆங்காங்கே எழுப்பிய சான்றோர் பெருமக்கள், அதற் கான ஒரு மூர்த்தியின் சிறப்பையும் எடுத்து வைத்துள்ளனர். அவ் வகையில் அமைந்தது தான் சிதம்பர விநாய கர் தலம்.

காரைச்செடிகள் நிறைந்ததால் காரைக் குடி என்றும், சோழ வளநாட்டிலிருந்து நகரத்தார் மக்கள் வந்து குடியமர்ந்ததால் முன்னொரு காலத்தில் ஓம்காரக்குடி என்ற பெயரிலும் இருந்தது. "கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று ஔவையின் சொல் வாக்கைக் கேட்ட இந்த நகரவாசிகள் ஊருக்கே கோவிலூர் என்று பெயர் வைத்துவிட்டனர்.

cc

Advertisment

பழைய பெயர் "கழனி' என வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ளது. ஒரு சமயம் சுவேதன் என்னும் மன்னன் தனது பிறவியில் அன்னதானம் செய்யாத பாவம் நீங்கிட, இந்த ஊர்ப்பகுதியில் குடியேறி, வனங்களை வெட்டி விளைநிலமாக்கி, கழனியாக்கிப் பயிரிட்டான். அந்த காலகட்டங்களில் "சமி' என்னும் வன்னிமரங்கள் நிறைந்திருந்ததால் சமிலி வன்னிவனம் என்ற பெயரில் அழைக் கப்பட்டது. ஏழு ஊர்க் கோவில்களை ஒட்டி வாழ்ந்த நகரப் பெருமக்கள், பாண்டிய மன்னன் அவர்களுக்குக் கொடையாக அளித்தவற்றை ஒன்பதாக்கி நகரச் சிவாலயங் களை அமைத்தார்கள். சுந்தரேஸ்வரர்-

மீனாட்சி என்று இறைவன்- இறைவியர்க்குப் பெயர் வைத்தனர்.

கோவிலூர் கொற்றவன்

கி.பி. 12-ஆம் நூற்றாண் டில் கூரைக் கொட்டகை யிலும், மண் சுவர் அமைத்த கூடாரத்திலும், செம்பூரான் என்னும் ஒருவகைக் கல்லிலும் ஆக்கப்பட்ட கோவில் எளிமையாக இருந்துள் ளது. ஒருசமயம் குறுமுனி வர் அகத்தியர் பாண்டிய மன்னன் கனவில் தோன்றி, இத்தலத்தின் பெருமையை எடுத்துரைத்தபோது, ஈசனை எழுந்தருளச் செய்து சிவலிங்கத் திருமேனியில் விளங்கச் செய்தான். இத்தலத்தில் இறைவனிடம் மன்னன் அன்புப் பரிசாக வாள் பெற்றதால், கொற்றவாளீஸ்வரர் என்னும் திருப்பெயரை இட்டான்.

உடனுறையும் தேவியும் சும்மா இருக்கவில்லை. கழனியில் பயிரிட்ட நெல்மணிகளைக் காவல்காத்து வந்ததால் இறைவி திரு நெல்லை என்னும் அழகுப் பெயரால் அழைக்கப்படுகிறாள். முற்காலத்தில் காரைக்குடி பகுதியில் சிவன் கோவில்கள் இல்லாமல் மண் மேடுகளில் மட்டுமே வழிபாடுகள் நடைபெற்று வந்து போது, அப்பகுதியில் வாழ்ந்த முத்துராமலிங்கம் என்னும் சிவனருட் செல்வர், கோவிலூர் இறைவனுக்குக் கருங்கல்லாலான கருவறை, கோவில் மண்டபங்களைக் கட்டித் திருப்பணிகளைச் செய்து, திருக்கோவிலைச் சுற்றி அன்னதானச் சத்திரங்கள், மடங்கள், விடுதி களை உண்டாக்கினார். இவரே கோவிலூர் ஆண்டவர் என்று புகழ்பெற்ற ஞானி!

cc

Advertisment

கோவிலூர் ஆலயப் பழமை

திருக்களர் ஆண்டவர் என்னும் சிவனடியார் பராமரித்து வந்த காலத்தில் 1834-1911-ஆம் ஆண்டுகளில், மிகப்பெரிய மிகப்பெரிய குடமுழுக்கு விழா மூன்றாவது முறையாக 1908-ல் நடைபெற்றது. பிறகு 1977, 2010-ல் குடமுழுக்கு நடைபெற்று நிறைவுற்ற செய்திகள் தற்காலக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

முன் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் ஆண்டவன் சுவாமிகள் என்பவர் 1818-1847-ஆம் ஆண்டுகளில் வேதாந்த மடத்தை நிறுவி, ஜாதி, மதம், இன வேறு பாடில்லாத அடியார்கள் தங்கி திருமுறைகள், பாசுரங்கள், தேவாரம் பயில, பல இடங்களில் திருமடம் அமைத்து அருட்பணிசெய்து வந்தார்.

கோவிலூர் ஆலய மரபினை விளங்கச் செய்திடவும், வடமொழி அறியாத மக்கள் அதன் சிவனருள் சிறப்பை விளங்கவைக்கவும் அரும்பணி செய்துவருகின்றனர்.

கோவிலூர் மடாலய பீடம், கோவிலூர் ஆதீனம் ஆகியவற்றுக்கு நினைவுச் சின்னமாகத் திகழ்வது 96 திருவூர்கள்கூடி இறைப்பணியாற்றும் மகாமண்டபமே கயிலாசக் கொட்டகை.

நம் இந்திய கலாச்சாரங்கள் பற்றி தகவல் பரப்பி அருட்பணியாற்றும் அறிவு நூலகம், காட்சியகம், ஆண்டவன் சுவாமி அதிஷ்டானம், கல்வி வளர்க்கும் கூடங்கள், அருமையான சிற்பங்கள் அமைந்த கலைக் கோவிலாகிய கொற்றவாளீஸ்வரர்- திருநெல்லையம்மன் ஆலயங்களைக் காண நமக்கு பூர்வ புண்ணிய வேண்டும். இங்கே வழிபடவரும் ஆண்மகன் மற்றும் கன்னிப் பெண்களுக்கு திருமணத்திற்குத் தடை இருப்பின் நீங்கும் என்று ஆலய அர்ச்சகர் கருத்து கூறுகிறார்.

ஸ்ரீவாஸ்து விநாயகர் சிறப்பு

இலங்கை வேந்தன் இராவணன், இராமபிரானின் தர்மபத்தினியைக் கவர்ந்துசெல்ல வரும்போது, ஒருமுறை வெறுங்கையுடன் திரும்பிச் செல்லாமல் இரண்டு விநாயகர் சிலைகளை எடுத்துச்சென்றான்.

அப்போது அதில் ஒன்றை கோவிலூர் பூமியில் விட்டுச் சென்றதாகவும், அதுதான் இந்த சிதம்பர விநாயகர் மூர்த்தி என்றும் ஆலய வரலாறு கூறுகிறது. மாப்பிள்ளை விநாயகர், தெற்கு ஊரணிப் பிள்ளையார் என்ற பெயர்களும் உள்ளன.

தங்கள் பிரச்சினைகள், கஷ்டங்களை பக்தர்கள் வந்து கூறும்போது நீதிபதிபோல கேட்டுக்கொண்டு தீர்வுகூறுவார். சொன்ன தகவலை ரகசியமாக வைத்திருப்பதால்- சிதம்பர ரகசியம்போல பாதுகாப்பதால் சிதம்பர விநாயகர் என்று போற்றப் படுகிறார். தன்னை நாடிவந்து, "நல்ல வரனை- ஆண்மகனைக் கணவனா கத் தா' என்று வேண்டுவோர்க்கு அருள்வதால் மாப்பிள்ளை விநாயகர் என்று கன்னிப் பெண்களால் அழைக்கப்படுகிறார்.

பூமி, நிலம், நீர், இயற்கை சீற்றங் களால் ஆபத்துகள் வராமல் தென் பகுதியைக் காத்துநிற்பதால் தெற்கு ஊரணி விநாயகர் என்றும் போற்றப்படுகிறார்.

cc

வாஸ்து சங்கு வழிபாடு

இன்றைக்கு சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிதம்பர விநாயகரின் மூர்த்தச் சிறப்பு வித்தியாசமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் வாஸ்து பகவான் உறக்கத்திலிருந்து எழுகின்ற எட்டு விசேட தினங்களான சித்திரை-10, வைகாசி-21, ஆடி-11, ஆவணி-6, ஐப்பசி-11, கார்த்திகை-8, தை-12, மாசி-22 ஆகிய நாட்களில் கணபதி பெருமானுக்கு விசேட யக்ஞம், ஜெபம், அபிஷேகம் நடத்தப்படுகிறது. தரிசிக்கும் பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக சங்கு தீர்த்தம் வழங்குகிறார்கள். வீடு, மனை, கடைகள், தொழிற்சாலைகளில் ஏற்படும் தடைகள், பூமி சல்லிய தோஷங்கள் அகன்று மங்களகரமானதும் மகிழ்ச்சியளிப்பதுமான கிருஹம், தனம் அமைந்துவிடும் என்பது நம்பிக்கை. இந்த யோகப் பலனைப் பெற்றிட ஸ்ரீசிதம்பர விநாயகர்முன் பூஜை செய்யப்படும் வலம்புரிச்சங்கை பக்தர்கள் பெற்றுச்செல்கிறார்கள்.

"முத்தே என் சித்தத்து ஒளியாய் விளங்கும் சுதாசுகமே

பத்தே பிறத்துபிறந்தே இந்நாள் வரை பட்ட துன்பக்

கொத்தே அகற்றும் குருவே பிறக்கும் குண குணிக்கும்

வித்தே கழனிச் சிதம்பரம் என்னும் விநாயகனே!'

இங்கு துதிக்கப்படும் சக்திவாய்ந்த விநாயகர் பாடலைப் பாடி பக்தர்கள் வணங்கிட நலம் கூடும்.

நாகபஞ்சமி ஆராதனை

இந்தத் தலத்தில் அமைந்துள்ள நந்தவனத் தில் நாகதேவதை சர்ப்பவடிவில் அருள் பாலிக்கிறார். நாகபஞ்சமி தினத்திலும் நாகசதுர்த்தியிலும் விசேட அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுவருகின்றன. நாகர் குலத்தின் குருதேவரான ஆஸ்திக சித்திரை மனதில் நினைத்து தியானித்தபின், புற்று சிலைகளை 12 முறை அடிப்பிரதட்சினம் செய்து அர்ச்சனை செய்தல் வேண்டும். முற்பிறப்பில் ஏற்பட்ட பிதுர் தோஷங்கள், நாகர் பார்வை தோஷங்கள் அகல இங்குள்ள அரசு, வேம்பு இணைந்த மேடையின்கீழ் சிறப்பு ஆராதனைகளை நடத்துவர்.

காரைக்குடியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் ஐந்து கிலோமீட்டர் உள்ளது கோவிலூர் சிதம்பர விநாயகர் அருளும் திருத்தலம். அனைவருக்கும் வாஸ்து விநாயக ரின் பேரருளால் வாழ்வு வளம் பெறட்டும்.

இவ்வாலயத்திற்கு 9-6-2022 வியாழக்கிழமை காலை 10.00 மணிமுதல் 11.00 மணிக்குள் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.