மா சரளா மந்திர் என்னும் ஆலயம் ஒடிஸா மாநிலத்தில், ஜகத்சிங்பூர் என்ற ஊரில், டிர்டால் என்னும் பகுதியில் உள்ளது.

ஒடிஸா மாநிலத்திலிருக்கும் எட்டு முக்கிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவிலுள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்று.

இந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் அன்னைக்கு வாக்வாஹினி, புத்திதேவி, ஞானதேவி என்று பல பெயர்கள் இருக்கின்றன. ஜன்காட் சரளாதேவி என்றொரு பெயரும் உண்டு.

Advertisment

ss

500 வருடங்களுக்குமுன்பு இந்த ஆலயத்தை மணிஜங்கா என்ற மன்னர் புதுப்பித்துக் கட்டினார். 8-ஆவது நூற்றாண்டில் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டதாக வரலாறு. இதைக் கட்டியவரின் பெயர் பூமாகாரா.

1568-ஆம் ஆண்டுவரை- இந்து மதத்தைச் சேர்ந்த மன்னர்கள் ஆட்சிசெய்த காலம் வரை இந்தக் கோவிலில் வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் தொடர்ந்து நடந்தி ருக்கின்றன. அதன்பின் வங்காள சுல்தான் சுலைமான் கரினி இந்தக் கோவிலுக்கு பெரிய அளவில் சேதத்தை உண்டாக்கினான். அதற் குப்பிறகு பல முகலாய மன்னர்களும் இந்த ஆலயத்திற்கு பாதிப்பு உண்டாக்கியதாக வரலாறு கூறுகிறது. ஔரங்கசீப் ஆட்சிசெய்த காலத்தில் மிகப்பெரிய சேதம் இந்த ஆலயத்திற்கு உண்டானதாக வரலாற்றில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

பல வருடங்களுக்குப்பிறகு, 1982-ஆம் வருடத்தில் இந்த ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப் பட்டது. அதுதான் இப்போதிருக்கும் ஆலயம்.

இந்த ஆலயத்தின் பின்னணியிலிருக்கும் கதை இது...

தட்சன் யாகம் நடத்தியபோது தன் மருமகனான சிவபெருமானை அழைக்க வில்லை. அதைக் கேட்பதற்காகச் சென்ற பார்வதிதேவி அவமதிப்பிற்கு ஆளானாள். அதனால் யாக குண்டத்தில் விழுந்தாள்.

இதனால் கடுங்கோபத்திற் குள்ளான சிவபெருமான், தன் மனைவி பார்வதியின் உடலை சுமந்துகொண்டு உலகமே நடுங்கும்வண்ணம் ருத்ர தாண்டவமாடினார்.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகாவிஷ்ணு, தன் கையிலிருந்த சுதர்சன சக்கரத்தை செலுத்த, அது சக்தியின் சரீரத்தை 51 துண்டுகளாக அறுத்தது. அன்னையின் உடல் பாகங்கள் பூமியில் பல இடங்களிலும் சிதறி விழுந்தன. அந்த இடங்கள் சக்தி பீடங்களாக விளங்குகின்றன. அன்னையின் நாக்குப் பகுதி விழுந்த இடமிது. இந்த ஆலயத்தைப் பற்றி இன்னொரு கதையும் உண்டு.

பரசுராமர் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம். அவர் சஞ்சாரம் மேற்கொண்ட போது, வழியில் அவர் சந்திரபாகா என்னும் ஆற்றில் குளித்தார். பின்னர் கரையிலிருந்த ஆலமரத்திற்குக் கீழே ஓய்வெடுத்தார்.

Advertisment

ss

அந்த இடத்தில் ஒரு சக்தி இருப்பதாகவும், அது கண்ணுக்குத் தெரியாமல் மறைந் திருப்பதாகவும் உணர்ந்தார் அவர். அங்கொரு சக்திவாய்ந்த கல்லைக் கண்டார். தன் கையிலிருந்த அம்பைக்கொண்டு அந்த கல்லின்மீது தேவியின் உருவத்தை வரைந்தார். அந்த தேவிதான் இப்போதிருக்கும் சரளாதேவி.

கர்ப்பக்கிரகத்தில் தேவியின் மூன்று சிலைகள் இருக்கின்றன. ஒரு சிலை கல்லால் செதுக்கப்பட்டது. அதற்கு எட்டு கைகள் இருக்கின்றன. வலது காலுக்கு அருகில் சிங்க உருவம் இருக்கிறது. மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் அன்னை காட்சிதருகிறாள். தேவியின் ஒரு கையில் வாள், இன்னொரு கையில் சூலம், மூன்றாவது கையில் புத்தகம், நான்காவது கையில் வீணை, ஐந்தாவது கையில் அம்பு, ஆறாவது கையில் மணி, ஏழாவது கையில் அரக்கனின் தலை, எட்டாவது கை அருள் வழங்கும் நிலையில் உள்ளது.

இரண்டாவது சிலைக்கு நான்கு கரங்கள். ஒரு கையில் சங்கு, இரண்டாவது கையில் சக்கரம், மூன்றாவது கை நீட்டிக்கொண்டிருக்கிறது. நான்காவது கை ஆசி வழங்குகிறது.

மூன்றாவது சிலைக்கு இரு கைகள். இரண்டிலும் ஆயுதங்கள். இது உற்சவ மூர்த்தி. எட்டு வகையான உலோகங்களைக்கொண்டு இது செய்யப்பட்டிருக்கிறது.

முக்கிய கொண்டாட்டங்களின்போது தேவியை பல்லக்கில் அமரவைத்து ஊர்வல மாக எடுத்துச்செல்வார்கள்.

நவராத்திரி திருவிழா இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் காலில் எதுவுமே அணியாமல் நெருப்பின்மீது நடப்பார்கள்.

இந்த ஆலயம் தினமும் காலை 7.00 மணிக்குத் திறக்கப்படுகிறது.

இந்த ஆலயத்திற்குச் சென்று அன்னை சரளாதேவியின் பேரருளைப் பெற விரும்புபவர்கள், கொல்கத்தாவுக்குச் செல்லும் ரயிலில் பயணிக்கவேண்டும். கட்டாக்கில் இறங்கி, அங்கிருந்து 42 கிலோ மீட்டர் சென்றால் மா சரளா மந்திர் என்னும் இந்த ஆலயத்தை அடையலாம். சென்னையிலிருந்து புவனேஸ்வர் சென்றும் இந்த ஆலயத்திற்குப் பயணிக்கலாம்.

ஒருமுறை சென்று அன்னை சரளாதேவியின் அருளைப் பெறலாமே!