"அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.'

-திருவள்ளுவர்

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப்போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எது வுமில்லை; அந்த அறத்தை மறப் பதைவிடத் தீமையானதும் வேறில்லை.

Advertisment

துரியோதனன் பாலகனாக இருந்தபோது, ஒருவிஷயம் மிகுந்த மன உளைச்சலைத் தந்தது. "மக்கள் ஏன் தருமனை மட்டும் நல்லவனாகக் கொண்டாடு கின்றனர்? நான் நல்லவனாகத் தெரிவதில்லையே' என்பதுதான் அது. பீஷ்மரிடம் விடை கிடைக்குமென நம்பி அவரை சந்தித்து அது பற்றிக் கேட்டான்.

உடனே தருமனை அழைத்த பீஷ்மர், "உங்கள் இருவரிட மும் ஒரு வேலை தருகிறேன்; மாலைக்குள் முடித்துவிட வேண்டும்'' என்றார். அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

துரியோதனனிடம், "இவ் வூரிலிருக்கும் நல்லவர்களைக் கணக்கிட்டு வரவேண்டும்'' என்றார். தர்மனிடம், "இவ்வூரிலிருக்கும் தீயவர்களைக் கணக் கிட்டு வா...'' என்றார். இருவரும் புறப்பட்டனர்; மாலையில் திரும்பினர். முதலில் தருமனை அழைத்தார்.

Advertisment

அவன், "இவ்வூரில் தீயோர் என "ஒருவர்கூட இல்லை. அனைவரிட மும் ஏதாவதொரு நல்லகுணம் உள்ளது'' என்றான். அடுத்து துரியோதனனைப் பணித்தார் பீஷ்மர்.

துரியோதனன், "ஒருவர்கூட நல்லவர்களாக இல்லை. அனைவரிடம் ஏதாவது தீயகுணம் உள்ளது' என்றான்.

புன்னகைத்த பீஷ்மர், "இப்போது புரிகிறதா? தருமன் அனைவரிடத்திலும் உள்ள நன்மையைக் காண்கிறான். நல்லவனாக உள்ளான். நீ தீயதை மட்டும் காண்பதால் யாரும் உன் கண்ணுக்கு நல்லவராகத் தெரியவில்லை'' என்றார். தீமை செய்பவரிடமும்கூட நன்மை இருக்கும் என்பதை உணர்ந்து பழகவேண்டும்.

sakottai

அந்தக் காலகட்டம் மன்னராட்சிக் காலம். குடந்தைக் கோட்டத்தில் சிவபுரம் என்னும் கிராமத்தில் ஒரு குடிலில் சின்னச்சாமி என்ற சிறுவனும், அவனது தாயும் தன்னம்பிக்கை, இறை நம்பிக்கை ஆகியவற்றை சொத்தெனக் கருதி வாழ்ந்துவந்தனர். மன்னர் அவ்வப் போது மாறுவேடமணிந்து நாட்டைச் சுற்றிப் பார்ப்பது வழக்கம். ஒருமுறை சாதாரண உடையணிந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, "ஐயா... ஏதாவது காசிருந் தால் கொடுங்கள், என் தாய்க்கு மருந்து வாங்கிக் கொடுக்க வேண்டும்'' என்றான் ஏழைச்சிறுவன் சின்னசாமி.

கள்ளங்கபடமற்ற அந்த முகத்தைக் கண்டதும், "ஏனப்பா... உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரன் போலத் தெரியவில்லையே'' என பரிவுடன் விசாரித்தார் அரசர்.

"ஆமாம் ஐயா இதுவரை யாரிடமும் பிச்சை கேட்டதில்லை; வியாதியால் அவதிப்படுகிறார் தாய். அதனால் பிச்சையெடுத்தாவது என் தாய்க்கு மருத்துவம் பார்க்கத் தீர்மானித்தேன்'' என்றான். "உன் தாயை எந்த வைத்தியர் கவனிக்கிறார்?'' என்று கேட்டார் மன்னர்.

"பணம் இல்லாவிட்டால் எந்த வைத்தியர் கவனிப்பார்? ஒருவருமில்லை. பிச்சை வாங்கிப் பணம் சேர்த்தபின், வைத்தியரைத் தேடவேண்டும்...''

"சரி; இனி யாரிடமும் பிச்சை வாங்கவேண்டாம். உடனே ஒரு வைத்தியரைப் பார்'' என்று சொல்லி, நிறைய பணத்தைக் கொடுத்து, அவன் வீட்டு முகவரியையும் தெரிந்து புறப்பட்டார் அரசர். நன்றி செலுத்தியபடி வைத்தியரைத் தேடி ஓடினான் சிறுவன்.

ss

சிறுவன் தந்த விலாசத்துக்குப் போனார் அரசர்.

அங்கு படுக்கையில் கிடந்தாள் ஒரு பெண். அவளிடம், "நான் ஒரு வைத்தியர். உன் உடம்புக்கு என்ன'' என்றார்.

"உடம்புக்கு ஒன்றுமில்லை. வறுமைதான் வியாதி. கணவர் இறந்து சில ஆண்டுகள் ஆகின்றன. கையில் இருந்த பணம் செலவழிந்துவிட்டது. சிறுவனான என் மகன் என்ன செய்வான்? அதனால்தான் படுத்து விட்டேன்...'' என்றாள்.

"கவலைப்படாதீர்கள். இந்த மருந்தைச் சாப்பிடுங்கள்'' என்று, காகிதத்தில் ஏதோ எழுதி பக்கத்தில் வைத்துச் சென்றார் அரசர். சிறிது நேரத்தில் வைத்தியருடன் வந்த சிறுவன், "அம்மா, கவலைப்பட வேண்டாம். யாரோ ஒரு நல்லவர் நிறைய பணம் கொடுத்தார். இதோ வைத்தியரை அழைத்து வந்திருக்கி றேன்'' என்றான்.

"இப்போதுதான் ஒரு வைத்தியர் வந்துபோனார், ஏதோ மருந்து எழுதி வைத்திருக்கிறார். அது என்னவென்று பார்...'' என்றாள் தாய்.

அந்த கடிதத்தைப் பரித்தான் சிறுவன். அதில் அரசரின் கையெழுத்து கண்டு ஆச்சரியப்பட்டான். "வந்தது வைத்தியர் அல்ல; அரசர்தான். நமக்கு வேண்டிய அளவு பணத்தைக் கொடுக்கும்படி கஜானா அதிகாரிக்கு உத்தரவு போட்டிருக்கிறார்'' என் றான். துன்பப்படும் மக்களுக்கு இயன்ற உதவிசெய்து அன்புகாட்டும் அரசரை வாழ்த்தினாள் தாய்.

தருமனைப்போல் நல்லதையே நினைத்து, நல்லதையே செயலாக்கி, நற்சிந்தனையுடன் வாழ்பவர்க்கு தெய்வம் மனித வடிவில் வந்து அருள் புரியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் திருத்தலம்தான் குடந் தைக் கோட்டத்தில் உறையும் சாக்கோட்டை சிவன்கோவில்.

இறைவன்: அமிர்தகலசநாதர்.

இறைவி: அமிர்தவல்லி அம்பாள்.

விசேஷமூர்த்தி: தபசு அம்மன், தட்சிணாமூர்த்தி.

புராணப்பெயர்: திருக்கலய நல்லூர்.

ஊர்: சாக்கோட்டை.

தீர்த்தம்: நால்வேத தீர்த்தம்.

தலவிருட்சம்: வன்னிமரம்.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இவ்வால யம் தேவாரப் பாடல்பெற்ற 274 தலங்களில் 131-ஆவது தலமாகவும், காவிரி தென்கரைத் தலங்களில் 68-ஆவது தலமாகவும், சுந்தரரால் பாடப்பட்ட பெருமையுடனும் திகழ்கிறது. சாக்கியர் வழிபட்டு, அவரை நாயன்மார்களில் ஒருவராக்கிய திருத்தலம். சாக்கியர் (பௌத்தர்) வாழும் கோட்டையாக இருந்து, நாளடைவில் சாக்கோட்டை என்று மக்களால் அழைக்கப் பட்டு வருகிறது.

"குரும்பை முலை மலர்க்குழலி கொண்ட தவங்கண்டு

குறிப் பினொடுஞ் சென்றவள் தன் குணத்தினை நன்கறிந்து

விரும்பும் வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த

விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில்

அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட

அணிமயில்கள் நடமாடும் அணிபொழில் சூழ் அயலின்

கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழினிக்

கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே...'

-சுந்தரர்

ss

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில், திருக்கலய நல்லூர் அமிர்தகலசநாதர் கோவில், தாராசுரம் ஆத்மநாத சுவாமி கோவில், திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோவில், கொட்டையூர் கோட்டீஸ்வரர் கோவில், மேலக்காவேரி கைலாசநாதர் கோவில், சுவாமிமலை சுந்தரேஸ்வர சுவாமி கோவில் ஆகிய ஏழும் கும்பகோணம் சப்தஸ்தான திருத்தலங்கள் என்று போற்றப்படும். சப்தஸ்தான தலங்களில் ஒன்றானதும், மகாமகத் திருவிழாவுக்கு நெருங்கிய தொடர்புடையதும், மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் முப்பெரும் சிறப்புக்களுடன் பல்வேறு சிறப்பு களைப் பெற்றதொரு புராணத் தொடர்புடைய திருத்தலம்தான் சாக்கோட்டை அமிர்தகலசநாதர் திருக்கோவில்.

தல வரலாறு

ஒருசமயம் உலகம் முழுவதும் பிரளயத்தால் அழியப் போகிறது என்பதனை உணர்ந்தார் பிரம்மதேவன்.

அச்சமயம் உலகநன்மை கருதியும், தனது படைப்புத் தொழிலை மீண்டும் பெறவேண்டியும் சிவபெருமானிடம் பிரம்மதேவர் முறையிட்டார். வரவிருக்கும் பிரளயத்தின் நிலையுணர்ந்த சிவபெருமான், உலகிலுள்ள அனைத்து புண்ணியத் தலங்களிலிருந்து மண் எடுத்துவந்து அதில் தேவா மிர்தத்தைக் கலந்து ஒரு கலசம்செய்து, அதில் அமிர்தத்தை நிரப்பி, வேத, ஆகம, புராண, இதிகாசங்கள் மற்றும் அனைத்து ஜீவராசிகளது ஜீவவித்துகளையும் ஒன்றுசேர்த்து கலசத்தில் புகச்செய்து, அதன்மீது மாவிலை, தர்ப்பை வைத்து குடத்தின் வாயினில் தேங்காயை வைத்து மூடி, பூமாலை, பூணூல் சாற்றி மேருமலையில் வைக்குமாறு பிரம்மதேவரிடம் கூறினார்.

அதன்படியே பிரம்மதேவரும் பூஜைசெய்து வைத்தார். பிரளயகாலமும் வந்தது. அமிர்தகலசம் மேருமலையிலிருந்து தென்திசை நோக்கி அடித்துச் செல்லப்பட்டு வந்தது. பின்பு ஓரிடத்தில் நின்றது. அதுசமயம் சிவபெருமான் கிராதமூர்த்தி எனும் வேடன் அவதாரமெடுத்துவந்து, தன்னுடைய அம்பினால் அமிர்தகலசத்தை உடைத்தார். கலசம் மூன்று பாகமாக உடைந்தது.

கலசத்தின் வாயில் பகுதி குடவாசல் அருள்மிகு கோனேஸ்வரர் திருத்தலமாகவும், அடிப்பகுதி இறைவனால் லிங்கமாக பிடிக்கப்பெற்று ஆதி கும்பேஸ்வரர் திருத்தல மாகவும், நடுப்பாகம் விழுந்து லிங்கமாகிய இடம் திருக் கலயநல்லூர் அமிர்தகலசநாதர் திருத்தலமாகவும் விளங்கி வருகின்றன. கலசத்தின் மாவிலை, தர்ப்பையானது திருக்கோவில் தலவிருட்சமாகிய வன்னிமரமாக மாறியது.

சாக்கோட்டை இறைவனை பிரம்மதேவன் பூஜித்துப் பேறுபெற்றுள்ளார்.

இறைவி அமிர்தவல்லி அம்பாள் இறைவனை வேண்டிக் கடுத்தவம் (ஊசி முனைத்தவம்) மேற்கொண்டு, தவத்தின் பலனாக இறைவனை திருமணம் புரிந்துகொண்டதாக தலபுராணம் சொல்கிறது.

சாக்கிய நாயனார்

காஞ்சிபுரம் அருகே சங்கமங்கையில், மார்கழி மாத பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் சாக்கியநாயனார். இவர் சிவனிடமும் அவரது அடியார்களிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தார். பிறவிப்பெருங்கடலைக் கடக்க சிவநெறியே உயர்ந்ததென்பதை உணர்ந்தார். சாக்கியர் கோலத்தில் இருந்தாலும், எப்போதும் மனதில் சிவசிந்தனையுடன் யாருமறியாமல் சிவபூஜையும் செய்துவந்தார்.

எப்போதும் சிவபூஜை முடித்தபின்புதான் சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த இவர். ஒருநாள் வெளியே சென்றார்.

வழியில் ஒரு லிங்கம் வழிபாடு ஏதுமின்றி இருப்பதைக் கண்டு மனம் வருந்தினர். லிங்கத்தை நீராட்டி மலர்போட்டு பூஜைசெய்ய ஆசைப்பட்டார். ஆனால் அந்த இடத்தில் எதுவுமில்லை. இவரது நல்ல மனம் மட்டுமே இருந்தது. சிவன்மீதுகொண்ட அன்பால் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து "நமசிவாய'' மந்திரத்தை உச்சரித்து லிங்கத்தின்மீது போட்டார். இவரது அன்பால் கட்டுப்பட்ட இறைவன், இவர் போட்ட கல்லை மலராக ஏற்றுக்கொண்டார்.

இதேபோல் தினமும் லிங்கத்தின்மீது கல்லெறிந்து வழிபாடு செய்து அதன்பின் உணவருந்திவந்தார். இவர் சாக்கியர் கோலத்தில் இருந்ததால், பார்ப்பவர்களுக்கு இவர் சிவன்மீது கோபத்தில் கல் எரிகிறார் என நினைப்பார்கள். ஆனால் சிவன் ஒருவருக்கு மட்டும்தான் அன்பால் செய்கிறார் என்பது புரியும். இந்நிலையில் ஒருநாள் சாக்கிய நாயனார் சிவசிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால் சிவபூஜை செய்யாமல் சாப்பிட அமர்ந் தார். திடீரென நினைவு வந்த தும். தான் எவ்வளவு பெரிய சிவத்துரோகம் செய்துவிட் டோம் என வருத்தி ஓடிச் சென்று கல்லெறிந்து சிவபூஜை செய்தார்.

சிவபக்தியுடன் இவர் எறிந்தகல் கயிலையில் பார்வதி யுடன் அமர்ந்திருந்த சிவனின் பாதத்தில் பொன்மலராக விழுந்தது. மகிழ்ந்த இறைவன் பார்வதிதேவியுடன் இவருக்குக் காட்சிகொடுத்து நாயன்மார்களில் ஒருவராக்கி னார். சாக்கிய நாயனார் வழி பட்ட தலமாதலால் சாக் கோட்டை எனப்பட்டது.

ss

சிறப்பம்சங்கள்

ப் இறைவன் சுயம்புமூர்த்தி யாக அமிர்தகலசநாதர் என்னும் திருநாமத்துடன் அருள்பாலிக்கி றார்.

ப் இறைவி அமிர்தவல்லி அம்பாள் என்னும் திருநாமத் துடன் திருமணத்தடையை விலக்கி வாழ்வமைத்துத் தருவதுடன், ஜாதகமே பார்க் காமல் திருமணம் செய்தவர் களின் வாழ்வை அழகுற வைப்பதில் தனித்துவம் மிக்கவள்.

ப் கோவில் 12-ஆம் நூற்றாண் டைச் சார்ந்ததாகவும், மூன்றாம் குலோத்துங்கசோழன் காலத்திலும், தொடர்ந்து தஞ்சை நாயக்கமன்னர் காலத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன

ப் சுந்தரர் அருளிச்செய்த இத்தலப்பதிகம் 7-ஆம் திருமுறையில் 16-ஆவது திருப்பதிகமாக அமைந்துள்ளது. அம்பிகை பூஜித்து இறைவனைத் திருமணம் செய்துகொண்டது, பிரம்மன் பூஜித்து அருள்பெற்றது மற்றும் இத்திருத்தலத்து இயற்கை வளம் முதலிய அரிய வரலாறுகளை சுந்தரர் தனது பதிகத்தில் பாடியுள்ளார். எனவேதான் சேக்கிழார் இப்பதிகத்தை "மெய்ம்மைப் புராணம்' என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறார். இப்பதிகத்தை பக்தியோடு ஓதுபவர்கள் துன்பம், பாவம் நீங்கி நலமுடன் வாழ்வார்கள் என்கிறார்.

ப் தட்சிணாமூர்த்தியின் திருமேனியானது மிகவும் தொன்மை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. தென்முகக் கடவுளாகிய தட்சிணாமூர்த்தி வலது மேல்கையில் அக்கமாலையும், இடது மேல்கையில் அக்கினியும், வலக்கையில் சின்முத்திரையும், இடக்கையில் ஓலைச்சுவடிகளையும் கொண்டுள்ளார். தலையில் கூந்தல் அமைப்பானது சூரியபிரபை போன்று, எங்கும் காணமுடியாத வினோதமாக உள்ளது.

ப் இத்தல லிங்கோத்பவர் பச்சைக்கல்லாலான திருமேணி மிகவும் நேர்த்தியான சிற்ப வேலைப்பாடுகளோடு, பாதத்தில் திருமால் மகுடம் அணிந்து வராகமாகவும், சிரசில் அன்னத்தில் பிரம்மாவாகவும் காட்சிதருகின்றார்.

இருபுறமும் மாலும், அயனும் சுமார் இரண்டடி உயரத்தில் வணங்கி நிற்கின்றனர்.

ப் தபசுஅம்மன் என்னும் அம்பாள் தவக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறாள். இந்த அன்னை வலக்காலை மட்டும் தரையில் ஊன்றி, இடக்காலை மடக்கி வலது தொடையில் ஏற்றிப் பொருந்தியபடி மடக்கிப் பதித்தும், பாதம்மேல் நோக்கிய நிலையிலும் அருள்கிறாள். மேலும் வலக்கரத்தினை தலையின் உச்சமீது (சின்முத்திரையோடு) உள்ளங்கையைக் கவிழவைத்து, இடக்கரத்தினை திருவயிற்றின்கீழ் அங்கை மேல்நோக்க வைத்து, உயர்ந்த ஜடாமகுட கோலம் தரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். இத்தபசு அம்மனே ஊசிமுனைத் தவமேற்றி இறைவனது அன்பிற்குப் பாத்திரமாகி திருமணம் புரிந்துகொண்டதாகவும், தவத்தின் மூலமாகமே மந்திர பீடேஸ்வரி என்னும் பட்டத்தைப்பெற்று அம்பாள் திகழ்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.

ssப் அர்த்தநாரீஸ்வர ரின் சிற்பம் நான்கடி உயரம்கொண்டு அழகிய திருமேனியாகக் காட்சி யளிக்கிறது. உமையொரு பங்கன் இடக்காலை ஊன்றி, வலக் காலை ஓய்வுகொடுத்துத் திரிபங்க நிலை யில் விடையின்மீது சாய்ந்துள்ளார். பெண் பாகத்திற் கேற்ப இடப்புறம் தலையலங்காரத்தில் மாற்றமும், பெரிய தோடும், வளமுலையும், பாதம்வரை துதிலும் உடுத்திப் பெண்மை மிகுந்தும்; வலப்புறம் மிடுக்கும், மகர குண்டலமும், அணிகளும், தொடையின் அளவின தான புலித்தோலும்கொண்டு விளங்குகிறார். இவ்வகை புடைப்புச் சிற்பமானது ராஜராஜ சோழன் காலத்திற்கு முன்பு மேல்புறக் கோட்டத்தில் அர்த்தநாரீஸ்வரரை வைப்பது வழக்கம். இதன்படி திருச்செம்பொன்பள்ளி, திருமணஞ்சேரி, சீனிவாச நல்லூர், குடத்தை கீழ்க் கோட்டம் முதலிய தலங்களில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ப் மாத சிவராத்திரியும் மகா சிவராத்திரியும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி அன்னாபிஷேகம், பிரதோஷம் உட்பட, சிவனிற்குரிய அனைத்து விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. கும்பகோணம் சப்தஸ்தான விழா, மகாமகத் திருவிழா காலங்களில் விழாக் கோலம் பூண்டிருக்கும்.

குடந்தையில் இயற்கை வளம் பொருந்தி வயல்க ளிடையே, கோட்டை சிவன்கோவில் என்று சிறப்புப் பெயர்பெற்று, கிழக்கு நோக்கிய ஒரேவாயில் அமைப்புடன் வெளிப்புறம் ஓர் அகழியும், உட்புறம் ஓர் அகழியும் உள்ளது.

சிவாலயத்துக்குரிய சந்நிதிகள் சிறப்பாக உள்ளன.

பிரம்மதேவர் இத்தல இறைவனைப் பூஜித்துப் படைப்புத் தொழிலைத் தொடங்கினார். அதனால் இத்தல இறைவனை வழிபட்டு புதிய தொழில் தொடங்கினால் அதில் அமோக லாபம் கிடைக்கும் என்றும், திருமணத்டை, புத்திரப் பேறுபெற அம்மன் அமிர்தவல்லியிடம் முறையிட காலதாமதமாகாமல் காரியம் கைகூடும் என்றும்; வச்சிரமும் சக்தியும்கொண்டு மயிலுடன் நின்ற நிலையில் காட்சி தரும் சுப்பிரமணியரை வழிபட எதிரிகள் உதிரியாவர் என்றும்; 54 அகல் விளக்கேற்றி தபசு அம்மனை வழிபாடு செய்ய அரசியல், தொழில், காரிய சித்தி முதலியவற்றில் ஜெயம் பெறலாம் என்றும்; ஐந்து பௌர்ணமி நாட்களில் வலம்வந்து 48 தீபமேற்றி வழி பட ஆரோக்கிய விருத்தி பெறலாம் என்றும்; அமிர்த கலசத்தின் நடுப்பாகம் தங்கி இறைவன் காட்சியளித்ததால் இத்தலத்தில் ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்வு கள் செய்துகொள்து சிறப் பென்றும் பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய பிரதான அர்ச் சகரான தினேஷ் சிவாச்சார்யார்.

காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: செயல் அலுவலர், அமிர்தகலச நாதர் திருக்கோவில், திருக் கலயநல்லூர், சாக்கோட்டை (அஞ்சல்), கும்பகோணம் வட்டம்,

தஞ்சை மாவட்டம்- 612401.

தினேஷ் சிவாச்சாரியார்,

அலைபேசி: 94458 89861. மெய்க் காவலர் முருகன், அலைபேசி: 97893 47420.

அமைவிடம்: கும்ப கோணத்திலிருந்து மன்னார் குடி செல்லும் வழியில் நான்கு கிலோமீட்டர் தொலைவில், கோட்டை சிவன்கோவில் நிறுத்தத்தில் இறங்கி செல்ல லாம். பேருந்து, ஆட்டோ வசதியுண்டு.

படங்கள்: போட்டோ கருணா