எல்லா ஆலயங்களிலும் கொடிமரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்திருப்பார்கள். கொடிமரத்தை வழிபட்டு முடித்ததும் பலிபீடத்தை மனதார வழிபடவேண்டும்.
பொதுவாக பலிபீடங்கள் மூன்றடுக்கு பீடம்மீது தாமரை மலர் இருப்பதுபோன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த பீடங்களில் சிற்பங்கள் இருக்கும். சில ஆலயங்களில் வெறும் பீடம் மட்டும் இருக்கும்.
திருப்பதி போன்ற ஆலயங்களில் பலிபீடத்துக்கும் தங்கக் கவசம் சாற்றியிருக்கிறார்கள். இதன்மூலம் கருவறைக் குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலிபீடத்துக்கும் கொடுக்கப்படுவதை அறியலாம்.
பலிபீடம் என்றால் என்ன?
பலிபீடம் என்றதும் 90 சதவிகிதம் பேர் மனதில் கோழி, ஆடு போன்றவற்றை பலிகொடுக்கும் இடமோ என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில், வேத காலத்தில் வேள்வித் தூணாகவும், விலங்குகளை பலியிடும் மேடையாகவும் இருந்தவைதான் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக உருமாறி இன்று கொடி மரமாகவும், பலிபீடமாகவும் வடிவெடுத் துள்ளன என்று சொல்கிறார்கள். எனவே தான் பலிகொடுக்கும் இடம் பலிபீடம் என்னும் எண்ணம் பலரது மனதில் பதிந்துள்ளது.
இதை உறுதிப்படுத்துவதுபோல கிராமங்களில் இன்றும் கோவில் ஆண்டு திருவிழாக்களின்போது பலிபீட மேடையில் ஆடு, கோழிகளை பலிகொடுப்பதைப் பார்க்கலாம்.
ஆனால் ஆகம விதிகளின்படி அமைக் கப்பட்டுள்ள சிவாலயங்களிலும், வைணவத் தலங்களிலும் உள்ள பலிபீடங்கள், நம் வாழ்வை மேம்படுத்தும் ஒன்றாக கருதப்பட்டுப் போற்றப்படுகின்றன. இந்த ஆலய பலிபீடங்களில் உயிர்கள் பலிகொடுக்கப்படுவதில்லை. அதற்கு பதில் நம்மிடமுள்ள தீய குணங்களை அங்கு பலியிடுகிறார்கள்.
குணத்தை எவ்வாறு பலியிடுவது? மனிதர்களாகிய நமக்கு ஆழ்மனதில் சில தீய குணங்கள் இருக்கலாம். எவ்வளவு தான் பக்குவப்பட்ட பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் மனதுக்குள்ளும் போட்டி, பொறாமை, காமம், குரோதம், கோபம், தாபம், சூது, வாது, வஞ்சனை, வயிற்றெரிச்சல் போன்றவற்றுள் ஏதாவது ஓரிரண்டு தீய குணங்கள் நீக்கமுடியாதவையாக இருக்கலாம்.
இத்தகைய குணத்துடன் கருவறைப் பகுதிக்கு நாம் சென்றால் கடவுள் நமக்கு எப்படி அருள்புரிவார்? நம் மனது எந்த ஆசாபாசமும் இல்லாமல், தெள்ளத் தெளிவாக, ஒன்றுமே இல்லாமல் வெற்றிடமாக இருந்தால்தான் நம் பக்கம் இறைவன் வருவார். எதுவுமில்லாத, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத மனநிலை உடையவர்களால்தான் கடவுள் பக்கம் செல்லமுடியும்.
எனவே நம் மனதிலுள்ள தீய குணங்களையெல்லாம் வெளியேற்ற வேண்டும். அதாவது கெட்ட நினைவு களை பலிகொடுக்க வேண்டும். இது ஆலய வழிபாட்டில் மிகவும் முக்கியமானது.
ஏனெனில் நம் மனதிலுள்ள தீய அழுக்குகளை அகற்றும்போது நாம் நல்ல மனிதர்களாக மாறிவிடுவாம்.
இத்தகைய அற்புத மாற்றத்தை ஒவ்வொரு பக்தனிடமும் ஏற்படுத்தும் அருமையான இடம்தான் பலிபீடம். உயிர்பலி இல்லாத இந்த ஆன்மிக பலிபீடமானது உயர்வானது.
இந்த பலிபீடத்தை அமைப்பதற்கென்று விதிகள் உள்ளன.
பலிபீடத்தின் உயரம், மூலஸ்தானத் தில் எழுந்தருளியுள்ள மூலவரின் பீடத்து உயரத்துக்கு சமமாக இருக்கவேண்டும்.
பலிபீடத்தில் பாதுகா, ஜகதி, குமுதம், குமுத பத்திகம், கலா கம்பம், நிதிரவம், சுபோதம், அசுரபத்தி, பத்மம் என்று பல வகைகள் உள்ளன. பலிபீடத்தைப் பொதுவாக பத்ரலிங்கம் என்றழைப்பார்கள். பலிபீடம் அருகிலிருக்கும் நந்தி எனும் ஆன்மா விலுள்ள ஆணவமலம், பலிபீடத்தில்தான் ஒதுங்கியிருக்கும். எனவே பலிபீடம் அருகே சென்றவுடன் ஆணவம், மாயை, கன்மம் ஆகிய நமது மும்மலங்களையும் பலியிடுதல் வேண்டும். "நான்' என்னும் அகங்காரத்தை பலியிடவேண்டும்.
சிலர் எல்லாமே நம் ஒருவரால்தான் நடக்கிறது என்னும் இறுமாப்புடன் இருப்பார்கள். அந்த இறுமாப்பை பலிபீடம் அருகில் நின்று பலியிடவேண்டும். பிறகு பலிபீடம் அருகில் தரையில் விழுந்து வணங்கவேண்டும்.
ஆலயக் கருவறை வடக்கு அல்லது மேற்கு திசையைப் பார்த்தப்படி இருந்தால் பலிபீடத்தின் இடப்பக்கத்திலும், கருவறை கிழக்கு அல்லது தெற்குநோக்கி இருந்தால் பலிபீடத்தின் வலப்பக்கத்திலும் நின்று வணங்கவேண்டும்.
மூலவருக்கு அபிஷேகம் நடக்கும்போதோ, சுவாமிக்கு நைவேத்தியம் படைக்கும்போதோ பலிபீடத்தை வழிபடுதல் கூடாது. அது போல பலிபீட வழிபாட்டை ஒருமுறை, இரண்டு முறை மட்டும் செய்துவிட்டு நிறுத்திவிடக் கூடாது. 3, 5, 7, 9, 12 என்ற எண்ணிக்கையில் வணங்கவேண்டும். அந்த சமயத்தில் நம்மிடமுள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாத்சர்யம் எனும் உருவில் அவ குணங்களை பலியிடுவதாக எண்ணவேண்டும்.
பலிபீடத்தை வழிபட்டு முடித்ததும், நம் மனதில் மேலான எண்ணங்கள்தான் உள்ளன என்ற எண்ணத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அந்த நல்ல மனநிலையுடன் கருவறையருகில் சென்று இறைவனை வழிபடும்போது, அவர் அருள் நம்மை ஆக்கிரமிக்கும்; ஆசிர்வதிக்கும். பலிபீடத்தை பலிநாதர் என்றும் சொல்வார்கள்.
பலிபீடத்துக்கு மாயச் சக்கரம் என்றும் ஒரு பெயருண்டு. அதாவது நமது பிறப்புலி இறப்பு எனும் மாயச் சக்கரமாக பலிபீடத்தைக் கருதுகிறார்கள். இதைச் சுற்றிவந்து வழிபடுவது, 'ஸ்தூல, சூட்சும, காரண சரீரங்களிலிருந்து என்னை விடுவித்துவிடு' என்று வேண்டுவதற்கு சமமாகும்.
பொதுவாக கோவில்களில் எட்டு மூலைகளில், எட்டு பலிபீடங்கள் அமைத்திருப்பார்கள். அவை இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் எனும் எட்டு திக்பாலகர்களை உணர்த்துகிறது.(திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது எட்டு திசைகளிலும் இந்தப் பெயர்களில் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன.) இந்த எட்டு திக்பாலகர்கள் ஆலயப் பரிவார தேவதைகளாவார்கள்.
எனவே இவர்களுக்கு அன்னம், தீர்த்தமிடுதல் போன்றவற்றுக்கு பலிபீடங்கள் பயன் படுத்தப்படுகின்றன.
இந்த எட்டு பலிபீடங்களும் ஒவ்வொரு கோவிலின் ஆகம விதிகளுக்கேற்ப கோவில் பிராகாரங்களில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றுக்குத் தலைமை பலிபீடமாக நந்தியின் பின்புறமுள்ள பலிபீடம் அமையும். பொதுவாக தலைமை பலிபீடம், மூலவ மூர்த்தியின் பாதங்களை தாமரை வடிவில் தாங்கியதாக இருக்கும்.
சில கோவில்களில் பலபீடத்தின் அடியில் பக்தர்கள் உப்பும் மிளகும் போட்டுச்செல்வார்கள். "உப்பாகிய உடம்பையும் மிளகாகிய ஆணவத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து விட்டேன்' என்பதையே இது காட்டுகிறது.
சக்தி தலங்களில் தலைமை பலிபீடம் தவிர பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்த மாதாக்களை உணர்த்தும் பலிபீடங்களும் அமைத்திருப்பார்கள்.
அந்த பலிபீடங்களையும் மறக்காமல் வழிபட வேண்டும்.
பலிபீடம் முன்பு நின்று ஆத்மார்த்தமாக வழிபட்டால், நம்மிடமுள்ள தேவையற்ற காமம் போய்விடும். ஆசை போய்விடும். கோபம் போய்விடும். தீராத பற்று போய் விடும். நெறிபிறழாத தன்மை உண்டாகும். பேராசை வரவே வராது. உயர்வு- தாழ்வு மனப்பான்மை விலகும். வஞ்சக குணம் வரவே வராது.
ஆக பலிபீடம், மனிதனை மனிதனாக மாற்றுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே பலிபீடம் அருகில் நின்று நிதானமாக வழிபடுவதை பழக்கத்துக்குக் கொண்டுவரவேண்டும். அது நம்மை மேன்மைப்படுத்தும்.
கோவிலின் கோபுரவாசலுக்கும் கொடிமரத்திற்கும் இடையிலுள்ள பலிபீடத்தில் நித்யபூஜையின் முடிவில், கோவிலிலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும் அன்னம் (சாதம்) வைப்பர். இதை பலி போடுதல் என்பர். இதனை தெய்வங்கள் அருந்திச் செல்வதாக ஐதீகம்.
வழிபாட்டின்போது பலிபீடத் தைத் தொட்டுக் கும்பிடுவதோ, உரசிச் செல்வதோ கூடாது. இன்னும் சொல்லப் போனால், பலிபீடம் நம்மீது பட்டு விட்டாலே ஒருமுறை குளிக்கவேண்டும் என்று ஆகமங்கள் சொல்கின்றன.
பலிபீடத்தின் தத்துவத்தை உணர்ந்து நன்னெறியில் நடப்போம்.