வழிதவறிச் சென்ற சோழ மன்னனை நெறிப்படுத்தியது மட்டு மின்றி, தமிழுக்கும் சைவ நெறிக்கும் பெருமை சேர்க்கும் "பெரிய புராணம்' என்னும் பக்திக்காப்பியத்தைப் படைத்தவர் அநபாயன் (அபயன்) என்னும் சோழ மன்னனின் அமைச்ச ரான சேக்கிழார் பெருமான். "பக்திச் சுவை நனிசொட்டச் சொட்ட பாடிய கவி' "என சேக்கிழாரை தமிழறிஞர் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை புகழ்ந்து பாடியுள்ளார்.
சோழ வளநாட்டில் பிறந்த திருஞானசம்பந்த ரால் சைவமும், வைதீக மும் (வேதநெறி) தழைத் தோங்கியதுபோல, சேக்கிழாரால் தமிழும் சைவமும் தழைத்தோங்கி யது. சேக்கிழார்- திரு ஞான சம்பந்தர் பற்றிப் பாடும்போது, "வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க' எனப்பாடியது பொருத்தமே.
சிவத்தொண்டுக்கு பக்திதான் முக்கியமே தவிர சாதிகள் இல்லையென் பதை எல்லா சமுதாயத்தினரும் ஏற்கும் வண்ணம் உலகறியச் செய்த பெருமை அருண்மொழித்தேவர் என்னும் சேக்கிழாருக்கே உண்டு. இவர் பாடிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரியவிருத்தம், எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் போன்ற யாப்பு வகைகளைப் பின்பற்றி எழுதப்பட்டது.
பண்டைய தமிழர்களின் இயல், இசைத் திறமை அப்பர், சம்பந்தர், நந்தனார், பாணர் போன்ற நாயன்மார் கள்மூலம் தெரியவந்தது போல, அவர்களின் காலத்து வாழ்க்கை முறையை அறியும் வரலாற்றுப் பெட்டக மாகவும் பெரிய புராணம் விளங்குகிறது.
"சோழநாடு சோறுடைத்து
சேரநாடு வேழமுடைத்து
பாண்டியநாடு முத்துடைத்து
தொண்டைநாடு சான்றோர் உடைத்து'
என பழந்தமிழர்கள் தங்களது நாட்டைப் பற்றிப் பெருமையாகச் சொல்வர். தொண்டைநாட்டுக்கு உட்பட்ட கோட்டமான புலியூர்க் கோட்டத்தில், "குன்றை வளநாடு' என்னும் குன்றத்தூரில் (சென்னை பல்லாவரம் அருகே) சைவ வேளாளர் மரபில் 12-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்தான் அருண்மொழித்தேவர் என்னும் புலவர். இவரது குடியின் பெயர் "சேக்கிழார்' என்பதால் இவருக்கு இந்தப் பெயரே நிலைத்தது. சிவநெறிப்படி தன்னு டைய வாழ்க்கையை நடத்திக்கொண்டு, சிவத்தொண்டையும், பழங்காலத் தமிழ் நூல்களைத் தேடிப் படித்துப் பிறருக்கு விளக்கி உபதேசம் செய்யும் தொண்டையும் இப்புலவர் பெருமான் செய்துகொண்டிருந்தார்.
அன்றைக்கு சோழநாட்டை இரண்டாம் குலோத்துங்கனான அநபாயச் சோழன் (1133-1150) ஆண்டுவந்தான். மன்னனைச் சந்திக்க அரசவைக்குச் சென்ற புலவரிடம் மன்னன் சில வினாக்களைக் கேட்டான்.
அதாவது "மலையினும் பெரியது எது?' எனக் கேட்க-
"நிலையிற் றிரியாது அடங்கியான் தோற்றம்
மலையிலும் மாணப் பெரிது'
என்னும் திருக்குறளின் விளக்கத்தைத் தந்தார். உடனே மன்னன், "கடலிலும் பெரியது எது?' எனக் கேட்க-
"பயன் தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது'
என்னும் திருக்குறளுக்கு விளக்க மளித்தார். தொடர்ந்து மன்னன், "அப்படி யென்றால் இந்த உலகிலும் பெரியது எது?' என கடைசியாகக் கேட்க,
"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது'
என்னும் திருக்குறளின் விளக்கத்தைத் தெளிவாக மன்னனுக்கு எடுத்துரைத்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த மன்னன் அவருக்குத் தனது அரசவையில் தலைமை அமைச்சர் பதவியைக் கொடுத்து கௌரவித் தார்.
அநபாயச் சோழமன்னன் பிறப்பால் சைவராக இருப்பினும், சமண முனிவரான திருத்தக்கதேவர் எழுதிய, ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான "சீவசிந்தாமணி' யின் காப்பிய அமைப்பு, சீவகனின் கதாபாத்திரப் படைப்பு, மொழிநடை, கற்பனை வளம் போன்றவற்றால் ஈர்க்கப் பட்டு, படிப்படியாக சமண மதத்தை விரும்ப ஆரம்பித்தான். இதனால் மனம் வருந்திய தலைமை அமைச்சரான சேக்கிழார், மன்னனை நல்வழிப்படுத்துமாறு சிவபெருமானிடம் வேண்டினார்.
அதற்கேற்றார்போல் ஒருநாள் சேக்கிழார் மன்னனிடம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய "திருத்தொண்டர் தொகை'யை (7-ஆம் திருமுறை), அதன் வழியே வந்த திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி எழுதிய "திருத்தொண்டர் திரு வந்தாதி'யைப் பற்றி (11-ஆம் திருமுறை) விளக்கிக் கூறி, "இன்மைக்கும் மறுமைக்குப் பயன்தருவது சைவமே' என ஆணித்தரமாகக் கூறினார்.
உடனே மன்னன் மனதில் நாயன்மார் களின் தூய பக்தியையும், தியாகத்தையும் உலகறியச் செய்யவும், அதை ஒரு ஆவண மாக செய்துவிட வேண்டும் எனவும் எண்ணம் உதித்தது. அந்தப் பணியை சேக்கிழாரிடமே ஒப்ப டைக்க வேண்டுமென எண்ணினான்.
"இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்'
என்னும் திருவள்ளுவரின் சொல்லுக்கேற்ப சேக்கிழாரிடம் ஒப்படைத்தான். அதே போன்று சேக்கிழாரும் இந்தப்பணியைத் தனது பிறவிப்பயன் என்றே கருதி நூலை எழுதும் திருப்பணியைத் துவக்கினார். மன்னனின் ஆணையை ஏற்று சேக்கிழார், திருத்தொண்டத் தொகையையும், திருத் தொண்டர் திருவந்தாதியையும் ஆதாரமாகக் கொண்டு புதிய காப்பிய நூலை எழுத முடிவு செய்து, நூல் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக தில்லைக்குச் சென்று நடராஜப் பெருமானிடம் தனக்கு உதவுமாறு மனமுருக வேண்டினார். அப்போது அம்பலத்திலிருந்து அசரீரியாக தில்லை நடராஜப் பெருமான், "உலகெலாம்' என்னும் அடியை எடுத்துக் கொடுத்தார். அதையே வைத்து-
"உலகெலாம் உணர்ந் தோதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்ம- வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்'
எனத் தொடங்கி 4,286 பாடல்களைப் பாடினார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகளை மானசீக குருவாகக்கொண்டு எழுதியதால், அவரைப் பற்றி தம் நூலில் "பெரியோர்' (வெள்ளைச் சருக்கம்) என மரியாதையுடன் அழைத்ததால் இப்புராணத்திற்கு பெரியபுராணம் என பெயர் வந்தது என தமிழறிஞர்கள் சொல்வார்கள்.
63 நாயன்மார்கள், ஒன்பது தொகையடி யார்களின் வாழ்க்கை சம்பவத்தை முதற் காண்டத்தில் திருமலைச் சருக்கம், தில்லை வாழந்தணர் சருக்கம், இலைமலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் என ஐந்து சருக்கங்களையும்; இரண்டாம் காண்டத்தில் வம்பறா வரிவண்டு சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல்சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச்சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என எட்டு சருக்கங்கள் கொண்டு, சைவ சித்தாந்தக் கருத்துகள் பொலிந்து விளங்கும் வண்ணம் பெரிய புராணத்தை சைவ சமயக் கருவூலமாகத் திகழும்படி படைத்தார். இந்த நூல் பன்னிரண்டாம் திருமுறையாக இன்றும் போற்றப்படுகிறது.
பெரிய புராணத்தை நான்கு தொகுதியாகப் பிரிக்கும்போது முதல் தொகுதியில் 13 தனியடியார்கள், ஒரு தொகையடியார் கொண்டு 972 பாடல்களும்; இரண்டாம் தொகுதியில் 13 தனியடியார்கள் கொண்டு 931 பாடல்களும்; மூன்றாம் தொகுதியில் ஒரு தனியடியாரைக் கொண்டு 1,256 பாடல்களும்; நான்காம் தொகுதியில் 36 தனியடியார்கள், 8 தொகையாடியார்கள் கொண்டு 1,127 பாடல்களும் என (மொத்தம் 4,286) பாங்குடன் பாடினார். நாயன்மார்களின் சிறப்பை முதலில் வெளிப்படுத்திய சுந்தரமூர்த்தி சுவாமிகள் 60 நாயன்மார்கள் பற்றியே பாடினார். பிறகு வந்த நம்பியாண்டார் நம்பி மூன்று நாயன்மார்களைப் புதிதாகச் சேர்த்து 63 பேரைப் பற்றி பாடினார். கடைசியில் சேக்கிழார் 63 நாயன்மார்கள், ஒன்பது தொகையாடியார்கள் சேர்த்து 72 பேரைப் பற்றிப் பாடினார்.
அந்தணர், வேளாளர், வணிகர், இடையர், குயவர், புலையர் என பலதரப்பட்ட குலத்தினரின் சிவத்தொண்டைப் பற்றிப் பாடியதால், "சாதிப்பகை கடியவே எழுந்த நூல் பெரிய புராணம்' என திரு.வி.க. பாராட்டி னார். அதேபோன்று மங்கையர்க்கரசி, காரைக்கால் அம்மையார், இசைஞானியார் எனும் மூன்று பெண்பால் நாயன்மார்கள் பற்றியும் பாடியுள்ளார்.
மன்னனின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் பெரிய புராணத்தை முழுவதும் எழுதினார். இதனால் மகிழ்ச்சியடைந்த மன்னன் அவரது படைப்புகளை யானைமீது ஏற்றி, உரிய மரியாதையுடன் ஊர்வலமாக தில்லை நகரில் வலம் வந்த பின்னர் கோவிலை அடைந்தார். தில்லை ஆயிரங்கால் மண்டபத் தில் சித்திரை மாதம் திருவாதிரையில் தொடங்கி, அடுத்த ஆண்டு அதே தினம்வரை தொடர்ந்து ஒரு வருடகாலம் தன்னுடைய நூலை அரங்கேற்றம் செய்தார். இதனால் சிவனடியார்களும் அரசவை அங்கத்தினரும் மகிழ்ச்சியடைந்தனர். மன்னன் இவருக்கு, "தொண்டர்சீர் பரவுவார்', "உத்தம சோழப் பல்லவராயர்' என்னும் பட்டங்களையும், தக்க சன்மானங்களையும் வழங்கி கௌரவித்தார்.
சேக்கிழார், திருநாகேஸ்வரம் திருக்கோவில்மீது அதிக பக்திகொண்டதால், சென்னை குன்றத்தூரில், நாகேஸ்வரர் கோவிலையும், குளத்தையும் அமைத்தார்.இக்கோவிலுக்கு "வட நாகேஸ்வரம்' என்கிற பெயரும் உண்டு. குன்றத்தூரில் சேக்கிழார் பிறந்த இடத்தில் கோவில் ஒன்றுள்ளது. அதேபோல் அழகிய வேலைப்பாடுமிக்க மணிமண்டபமும் உள்ளது.
திருத்தொண்டர் புராணத்தை ஓதினால், நம் மனதில் குடிகொண்ட இருள் நீங்கும் என்பதில் ஐயமில்லை.