பக்தி உலகில் புற்றுக்கு ஒரு தனி இடம் இருக்கிறது. கறையான் அதிசயமாக- அற்புதமாகக் கட்டுவது புற்று; அதில் குடியிருப்பது பாம்பு. வயல் வரப்புகளில், மணல் பாங்கான இடங்களில் தானாகவே தோன்றிப் பெருகுவதுபோல் காட்சி தருகிறது. மாதங்கள் பல கடந்து மண் இறுகிய புற்று மழையில் விரைவில் கரைவதில்லை; சிதைவதில்லை. மெதுவாக வளர்வதுண்டு.
புற்றுகள் கவசமாக விளங்க, அவற்றில் மறைந்திருந்த சுயம்பு லிங்கங்கள் வெளிப்பட்டன என்று சில தல புராணங்கள் கூறுகின்றன. உதாரணமாக, திருவலம் என்ற திருத்தலத்தில், வில்வ வனத்தின் ஒரு பகுதியில், பசு ஒரு புற்றின்மீது பாலைச் சொரிந்தது. புற்று மண் கரைந்தது. அங்கே சுயம்பு லிங்கம் ஒன்று தோன்றியது. திருவாரூர் இறைவனும் புற்றிலிருந்து வெளிப்பட்டவரே. இவருக்கு வன்மீக நாதர், புற்றிடங்கொண்ட நாதர் என்பது பெயர். வன்மீகம் என்றால் புற்று. இத்தகைய புராண வரலாறு கொண்ட தலங்கள் பல உள்ளன.
தவசிகள் பல ஆண்டுகள் தவம் செய்தார்கள் என்றும்; அப்போது அவர்கள்மீது புற்றுகள் சூழ்ந்தன என்றும் புராணங்கள் கூறுகின்றன. தவம் செய்யப் பல ஆண்டுகள் கடத்தல், தவசிகளின் அசையாத நிலை, சகிப்புத் தன்மை, கடுமையான முயற்சி, மன உறுதி, தவ வலிமை முதலிய அருமையான குணங்களை எடுத்துக்காட்ட அவர் களின்மீது புற்றுகள் படர்ந்தன என்று புனைந்தார்கள்.
பாம்பு வழிபாடும் புற்று வழிபாடும்...
பாம்பு வழிபாடும் புற்று வழிபாடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. இரண்டுமே மிகவும் பழமை வாய்ந்தவை. பாம்பு வழிபாடு ஆறு சமயங்களுடன் தொடர்புடையது. பாம்பு கணபதியின் கச்சாகவும், ஆயுதமாகவும் விளங்குகிறது. சிவனை அணிகலனாக அலங்கரிப்பது பாம்பு. பாம்பானது விஷ்ணு நடந்தால் குடையாகி றது; இருந்தால் ஆசனமாகிறது; படுத்தால் பாயாகிறது; நடனம் ஆடினால் (காளிங்க) அரங்கமாகிறது. பாம்பை சக்தியின் வடிவமாகக் கருதுவர். பெண் தெய்வங் களுக்கு குடை பிடிப்பது பாம்புதான். முருக வழிபாட்டிற்கும், அரச மரத்தடி பாம்புக்கல் வழிபாட்டிற் குமிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சஷ்டி நாள், மற்றும் "சுப்பராயலு' என்ற பெயர் முருகனுக்கும் பாம்புக்கும் பொதுவாகும்.
கிரகண காலத்தில் சூரியனை விழுங்கக் கூடிய ஆற்றலும் பாம்புக்கு உண்டு. இவ்வாறு ஆறு சமயக் கடவுள்களுடன் பாம்பு எந்த வகையிலாவது தொடர்புடையதாகத் திகழ்கிறது.
மக்கள் பாம்பைக் கண்டும், அது உறையும் புற்றைக் கண்டும் அஞ்சினர். பாம்பு தீண்டினால், அதன் நஞ்சை முறிக்கும் மருத்துவ சக்தியும் மந்திரச் சக்தியும் மிகப் பழங்கால மக்களுக்கு இல்லை. இறுதியில், பாம்பைக் கட்டுப்படுத்த தெய்வசக்தியை முழுவதும் நம்பினர். சாதாரணமாக அன்பு பக்தி யாகக் கனியும். பாம்பு, புற்று வழிபாடு களில் அச்சம் பக்தியாக மலர்ந்தது.பாம்பின் தலைவனான நாகராஜனை தெய்வமாக்கி வழிபட்டனர். அவன் வீற்றிருக்கும் பல வாசல் கோவிலான புற்றையும் வழிபடத் தொடங்கினர். இவ்வாறு தொடங்கிய புற்று வழிபாடு, புற்று இருக்கும் இடங்களிலெல்லாம் பெருகிப் பரவியது. எல்லா நகரங்களிலும் ஊர்களிலும் கிராமங்களிலும் புற்று வழி பாடு சிறந்திருப்பதை இன்றும் காணலாம்.
புற்று வழிபாட்டுக்குரிய நாள்கள்
மகளிர் புற்றுக்கு அருகில் தினமும் இருவேளையும் விளக்கேற்றி, பால் வைத்து, சூடம் ஏற்றி வழிபடுகின்றனர்.
வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் புற்று வழிபாட்டுக்குச் சிறந்த நாள்களாகும்.
ஆண்டில் ஆடி மாத வளர்பிறைப் பஞ்சமியான நாக பஞ்சமி அன்றும், ஐப்பசி மாத வளர்பிறை சதுர்த்தியான நாக சதுர்த்தி அன்றும் மகளிர் மிகுந்த பயபக்தியுடன் புற்று வழிபாட்டை ஒரு சிறு விழாவைப் போல செய்து அருள்பெறுகின்றனர்.
புற்று வழிபாட்டுக்குரிய காரணங்கள்
வீட்டின் அருகில் புற்று இருந்தால் மகளிர் அதைச் சிதைக்க மாட்டார்கள். அவ்வாறு சிதைத்தால் தமக்கும், தம் குடும்பத்தினருக்கும் பெரிய கேடுகள் வரும் என்று கருதி, அதை நாள்தோறும் வழிபடு கின்றனர்.
பொதுவாக குடும்ப நலனுக்காகவும் உடல்நலனுக்காகவும் புற்று வழிபாடு நடைபெறுகிறது. சிறப்பாக, மகப்பேறு உறுதியாகக் கிடைக்கவும். எளிமையாக நிகழவும், குறைப்பிரசவம் உண்டாகாமல் தவிர்க்கவும் மகளிர் புற்று வழிபாடு செய்கின்றனர்.
கேது தசையில் சிலருக்கு உடல்நலம் குன்றிவிடும். அப்போது அவர்கள் புற்றுக்குப் பால் வார்த்து நோயின் தாக்குதல் தணியப் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கம்.
எந்த வகையான சர்ப்பதோஷம் இருக்கின்றவர்களும், அதைத் தணிக்க அல்லது நீக்க புற்று வழிபாடு செய்யலாம்.
பொங்கல் வைப்பது, கிராமப்புற மக்களின் சிறந்த வழிபாட்டு முறை.
நினைத்தவை நிறைவேற வேண்டும் என்று புற்றிடம் வேண்டியும் நேர்ந்தும் மஞ்சள் நிற நூலால் புற்றைச் சுற்றுகிறார் கள். எலுமிச்சம் பழத்தைப் புற்றின்மீது ஓரிடத்தில் வைக்கி றார்கள். மூன்று முறை வலம் வருகிறார்கள். நினைத்தவை நிறைவேறி னால் அம்மனை வழிபடுவதைப் போலவே புற்று அம்மனையும் வழிபடுகிறார்கள்.
நைவேத்தியம்
புற்றுக்கு பாலும் வாழைப்பழத் துண்டுகளும் மேலான நைவேத்தியப் பொருட்கள் ஆகும். சிறப்பான வழிபாட்டில் பொங்கலைப் படைக்கின் றனர். புற்றில் செலுத்த வேண்டிய காணிக்கைப் பொருட்களுக்கு பூச்சூட்டி, கருப்புத் துணியுடனும், சந்தனத்துடனும் அந்தி நேரத்தில் புற்றில் செலுத்த வேண்டும்.
நாகராஜன் மிக முயன்றா லும் கிடைக்காத உணவுப் பொருட்கள், அவன் முயற்சி இல்லாமலே காணிக்கை யாகக் கிடைக்கின்றன. அவன் நிறைவடைகிறான். மேலும் அவனுக்குத் தேவையான பொருட்கள் புற்றுக் குள்ளேயே கிடைத்து விடுவதால், அவன் வெளியில் வந்து மக்களைத் துன்புறுத்த மாட்டான் என்று நம்பி, அவர்களும் மன நிறைவு கொள்கின்றனர். புற்று வழிபாட்டின் உள்நோக்கமே இவைதான் என்பது இங்குக் கருதத்தக்கது.
புற்றுமண் பிரசாதம்
நாக வழிபாடு சிறப்பாக விளங்கும் திருக்கோவில்கள் சிலவற்றில் புற்று மண்ணே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப் படுகிறது. குறிப்பாக, நாகர் கோவில், கும்பகோணம் நாகேசுவரன், புற்றிடங் கொண்ட ஈசன் கோவில்களில் புற்றுமண் பிரசாதம் கிடைக்கிறது. புற்று மண்ணை எவ்வளவு அள்ளியும் அகழ்ந்தும் பிரசாத மாக வழங்கினாலும் அந்த மண் குறையாத அதிசயம் எப்போதும் நிகழ்கிறது. புற்று மண் பிரசாதம் தெய்வத் தன்மை யும் மருத்துவ குணமும் கொண்டது என்பர்.
புற்று மாரியம்மன்
பாம்பு வழிபாடு முருகனுடன் மிகவும் தொடர்புடையது; புற்று வழிபாடு மாரியம்மனுடன் தொடர்புடையது எனலாம். பெரும்பாலும் எல்லா மாரியம்மன் கோவில்களிலும் புற்றுகள் இருப்பதைக் காணலாம். மாரியம்மன் பாம்பு வடிவத் தில் வந்து அருள் தருவதாகவும்; அவள் எப்போதும் புற்றில் உறைவதாகவும் கூறுகின்றனர். மாரியம்மனைப் "புற்றில் பிறந்த பொருள்' என்று போற்றுகின்றனர். மாரியம்மனுக்குக் குடையாக இருப்பதும் பாம்புதான். மாரியம்மன் கோவிலுக்கு உள்ளே அல்லது அருகில் அமைந்த புற்றினை புற்று மாரியம்மன் என்று வழிபடுகின்றனர்.
புற்றுக்குத் தனிப்பூசையும் ஆராதனை முதலியனவும் உண்டு. மாரியம்மன் கோவில் மூலத்தானத்தையும் புற்றையும் இணைக்கும் ரகசிய வளை ஒன்று இருக்கிறது என்று நினைக்கின்றனர். புற்றின் துவாரத்தின் வழியே படமெடுத்து நிற்கும் பாம்பைத் தரிசிப்பது மிகவும் நல்லது. இது ஒரு வகை தெய்வ தரிசனம்!