புண்ணியம் செய்யப்போனால் பல இடையூறுகள் வரும். ஆனாலும், விடாமுயற்சி யுடன் அந்தப் புண்ணியத்தைச் செய்து பலன் தேடிக்கொள்ள வேண்டும்.
ஆனால், பாவம் செய்வதற்கு எந்த இடையூறும் வராது. சுலபமாகச் செய்து விடலாம்.
அப்படி தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவத்தைப் போக்கக்கூடியவை புண்ணிய நதிகள். பாரத தேசத்தில் பல புண்ணிய நதிகள் ஓடிக்கொண்டி ருக்கின்றன. அதனால் தான் பாரத தேசம் புண்ணிய பூமி என்று அழைக்கப்படுகிறது.
புனித நதிகளில் முனிவர்களும் ஞானி களும் ரிஷிகளும் மகான்களும் பக்தியுடன் நீராடி ஞானத்தைப் பெற்றார்கள். அந்த நதிக்கரைகளில் அமர்ந்து தவம், தியானம், யோகம் செய்து பல நன்மைகளை அடைந்திருக்கிறார்கள்.
அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் நதியில் நீராடினால் சித்தம் சுத்தி அடைகிறது.
உடல் பிணியைத் தீர்க்கிறது. மோட்சத்தை அளிக்கிறது.
எவ்வளவுதான் பணத்தை செலவு செய்தாலும் ஒரு நதியை உருவாக்க முடியாது. கடவுளின் கருணைதான் நதியை வரவழைக்கும். பாவத்தை சுமந்துகொண்டு, அதை இறக்கிவைக்க இடம் தெரியாமல் தடுமாறும் மனிதர்களுக்கு சரியான இடம் நதிகள்தான். பாவத்தை ஏற்றுக்கொள்ளும் சுமைதாங்கிகள் அவை. வடநாட்டில் கங்கை, தென்னாட்டில் காவேரி. இதில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் குறைகின்றன; பாரங்கள் தொலை கின்றன.
இவைபோன்றே தலைசிறந்த புண்ணிய நதியாகக் கருதப்படுவது கோதாவரி. ஏழு புண்ணிய நதிகளிலே கங்கையைப் போன்று கோதாவரியும் பெருமைக்குரிய நதி. கௌதம முனிவரின் தவத்தாலும், அவருடைய தவத்தைப் போற்றிய மகேஸ்வரனின் அனுக்கிரகத்தாலும் இந்த பூமிக்கு கோதாவரி வந்தது.
புராண காலத்தில் ஒருசமயம் பாரத பூமியில் பஞ்சம் நிலவியது. அப்போது மழை பொழிந்து பூமியில் தானியத்தை முளைக்கச் செய்ய கௌதம மகரிஷி மாபெரும் தவமியற்றினார். வருண பகவானின் அருளால் பூமியில் தானியங்கள் வளர்ந்தன. ஒரு குழியிலிருந்து முளைத்த தானியங்கள் முனிவரின் ஆசிரமத்தை நிறைத்தன. அவரது ஆசிரமத்தைச் சுற்றி தானியங்கள் கிடந்தன.
அவற்றையெல்லாம் மக்களுக்குக் கொடுத்தார்.
கௌதம முனிவர் பாராட்டப்படுவதைக் கேள்வியுற்ற சில முனிவர்கள் பொறாமை கொண்டு, கௌதம முனிவரின் ஆசிரமத்திலிருக்கும் தானியங்களை நாசப்படுத்த ஒரு பசுவை அனுப்பினார்கள். பசுவும் சென்று தானியங்களை நாசப்படுத்தியது. ஆனால், அந்த பசுவின்மேல் பரிதாபப்பட்டு, அதற்குப் புல்லைக் கொடுத்து உண்ணச் சொன்னார் கௌதம முனிவர். ஆனால், அந்தப் பசு தானியத்தையே குறிவைத்து நாசப்படுத்தியது.
வேறு வழி தோன்றாமல் முனிவர் அந்த பசுவைத் துரத்தினார். பசு அடி வாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் தானியத்தை நோக்கியே ஓடியது. இப்போது அதிக வேகமாக பசுவை அடித்துத் துரத்திச் சென்றார். வேகமாக ஓடிய பசு தடுமாறி ஒரு கிணற்றுக்குள் விழுந்து இறந்துபோனது. பசுவைக் கொன்ற பாவத்துக்காக விமோசனம் தேடி பரமேஸ்வரனை நோக்கித் தவமிருந்தார் கௌதமர். அவரது கடுமையான தவத்தைக் கண்ட ஈசன் தன் சடைமுடியிலிருந்து கங்கையைப்போல ஒரு நதியை உருவாக்கி அதில் கௌதமரை மூழ்கி எழச்செய்து பாவத்தைப் போக்கினார். அப்படி உருவான நதிதான் கோதாவரி.
இந்த நதி "த்ரயம்பக' என்னும் மலையிலிருந்து உற்பத்தியாகி கிழக்கு, தெற்காக ஓடுகிறது. இந்த நதிக்கரையில் பல முக்கிய தலங்கள், நகரங்கள், நீராடும் கட்டங்கள் உள்ளன. கோதாவரியின் தென்கரையிலிருக்கும் நாசிக்கும், வடகரையிலிருக்கும் பஞ்சவடியும் மகாபுண்ணிய க்ஷேத்ரங்கள். இங்குள்ள "ராமகுண்டம்' என்ற தீர்த்தம் "சுக்லதீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.
ராமாயண காவியத்தில் மிக அற்புதமான இடமாக வர்ணிக்கப்படும் இடம் பஞ்சவடி. கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் லட்சுமணன் பர்ணசாலை அமைக்க, அதில் ஸ்ரீராமனும் சீதாதேவியும் வாழ்ந்தார்கள். இந்த நதியிலே ராமனும் சீதையும் நீராடி காயத்ரி, பிரம்மா, சூரியன் போன்ற தேவர்களுக்கு தினமும் பூஜை செய்தனர்.
பித்ருக்களுக்கு, மூதாதையர்களுக்கு தர்ப்பணம், அர்க்கியம் அளித்து அவர்களைத் திருப்திபடுத்தினர். அதனால், இது ராம குண்டம் என்று பெயர் பெற்றது.
இந்த ராம குண்டத்தில், நமது முன்னோர் களின் அஸ்தியை ஆச்தி விலய தீர்த்தத்தில் கரைத்தால், முன்னோர்களின் ஆத்மா மோட்சத்தை அடைவதாக ஐதீகம். மேலும், இந்த நதிக்கரையில் "த்ரயம்பகேஸ்வரர்' என்ற ஆலயம் மிகச் சிறப்புவாய்ந்தது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூம்மூர்த்திகளும் இங்கு மூன்று லிங்க வடிவில் தனித்தனியே அருள் பாலிக்கின்றனர். கர்ப்ப கிரகத்தில் ஜோதியாய் பிரகாசிக்கின்றனர். இதை பரமேஸ்வரனின் "ப்ரதிக்' சின்னமாகக் கருதுகின்றனர்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருவும் சூரியனும் சிம்ம ராசியில் நுழையும் போது, இங்கு கும்பமேளா என்ற திருவிழா அமோகமாக நடைபெறும். அப்போது ஏராளமான பக்தர்கள் திரண்டு ராம குண்டத்தில் நீராடி பாவத்தைப் போக்கிக் கொள்வார்கள்.
தீபாவளித் திருநாளில் இந்த ராமகுண்டத் தில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம், அர்க் கியம் விட்டால் அதைப்போல புண்ணியம் வேறு எதுவுமில்லை. பித்ருக்களின் ஆசீர்வாதம் நம்மை நல்வழிப்படுத்தும்.
எல்லா செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழலாம்.
வாழ்கின்ற காலத்தில் ஒரு முறையேனும் இந்த கோதாவரி நதி தீரத்திலுள்ள ராம குண்டத் தில் நீராடுவது பிறவிப் பயன் கொடுக்கும்.