காசிக்குச் சென்று கங்கையில் நீராடுவது மிகவும் போற்றப்படுகிறது. அங்கு செல்ல முடியாதவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள- கங்கைக்கு நிகரான தீர்த்தத்தில் நீராடினாலும், கங்கை நதியில் நீராடிய முழுப்பலன் கிட்டும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

"கங்கை' என்று சொன்னாலும், அதன் பெருமையைக் கேட்டாலும், கங்கையில் நீராடியவர்களை தரிசித்தா லும், கங்கையில் நீராடிய பலன் கிட்டும் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.

ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்திலுள்ள குப்த கங்கை என்னும் தீர்த்தக் குளத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்.

மயிலாடுதுறையில் காவிரி நதிக்கரையோரம் உள்ள நந்திக் கட்டத்தில், ஐப்பசி அமாவாசையன்று நீராடினாலும் கங்கையில் நீராடிய பலனுண்டு.

Advertisment

திருக்கடையூர் திருத்தலத்துக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் திருக்கடவூர் மயானம் என்னும் திருத்தலம் உள்ளது. இத்தலத்தின் தீர்த்தமான காசி தீர்த்தத்தில் பங்குனி மாத சுக்ல பட்சம் அஸ்வினி நட்சத்திரத்தில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் பெறலாம். அந்தநாளில்தான் மார்க்கண்டேயருக்கு கங்கையானது தீர்த்தமாகி வந்தது.

மகாவிஷ்ணு வாமன அவதாரத்திலிருந்து திரிவிக்கிரம அவதாரம் எடுத்தபோது, ஓங்கி உலகளந்த அவருடைய திருவடி பிரம்மலோகம் வரை நீண்டது. தந்தையின் திருப்பாதத்தைக் கண்ட பிரம்மதேவன் பாத பூஜையின் போது அபிஷேகம் செய்தார். அந்த தீர்த்தம் பூமியில் மதுரைக்கு அருகில் திருமாலிருஞ்சோலை மலையில் விழுந்து நூபுரகங்கையாகப் பெருகியது என்று புராணம் கூறுகிறது. இந்த நூபுரகங்கைத் தீர்த்தத்தில் நீராடினா லும் கங்கையில் நீராடிய முழுப்பலனைப் பெறலாம். திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் ஆலயத்தில் சிவகங்கை தீர்த்தம் உள்ளது. அதை மனதில் நினைத்தாலே கங்கையில் நீராடிய பலன்கிட்டும். அனேக ருத்திரர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கி பெரும்பயன் அடைந்த தாக புராணம் கூறுகிறது.

சந்தன மகாலிங்கம் எழுந் தருளியிருக்கும் சதுரகிரி மலையிலுள்ள தீர்த்தங்கள் அனைத் தும் மகிமைவாய்ந்தவை. இருந்தாலும், இங்குள்ள சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் கவுண்டின்னிய தீர்த்தம் அமைந்துள்ளது. இது தெய்வீகத்தன்மை வாய்ந்த நதியாகும். ஒருசமயம் இந்த நதி வறட்சியுற்றபோது, தேவர்களும் ரிஷிகளும் ஈசனிடம் வேண்டினர்.

Advertisment

ஈசன் தமது சடைமுடியிலுள்ள கங்கையிலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு நதிகளுக்கும் மத்தியில் விட்டு லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம். எனவே, இந்த நதியில் நீராடினால் கங்கை, கோதாவரி, கோமதி, சிந்து, தாமிரபரணி, துங்கபத்ரை முதலிய புண்ணிய நதிகளில் நீராடிய பலன்கிட்டும். இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் நீங்கும் என்பதால் இதற்கு "பாவகரிநதி' என்ற பெயரும் உண்டு. மேலும், இம்மலையில் உள்ள ஆகாய கங்கை தீர்த்தத்தில் நீராடினா லும் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி கிட்டும் என்பது நம்பிக்கை.

gg

கும்பகோணம் மகாமகக் குளத்திற்குள் 22 தீர்த்தக் கிணறுகள் உள்ளன. இதில் பத்தாவதாகப் போற்றப்படுவது கங்கை தீர்த்த மாகும். எனவே, மகாமகக் குளத்தில் நீராடினால் கங்கை தீர்த்தத்தில் நீராடிய புண்ணியம் கிட்டும்.

சிதம்பரம் தலத்தினுள் இருக்கும் சிவகங்கை தீர்த்தத்துடன் சேர்த்து பத்துத் தீர்த்தங்கள் உள்ளன. ஸ்ரீநடராஜமூர்த்தியின் தங்கத்திருமேனியில் தவழ்ந்த அபிஷேகத் தீர்த்தம் சிவகங்கையில்தான் கலக்கிறது. ஆகையால் இத்தீர்த்தம் கங்கை தீர்த்தத்திற்கு சமமாகக் கருதப்படுகிறது. சிவகங்கைத் தீர்த்தக்குளக்கரையில் பித்ருக்களுக்குச் செய்யும் பிதுர்பூஜைகள் மிகவும் புனிதமானது.

ஏழு பிறப்பில் உண்டான தோஷங்களை நீக்குவது, முக்தியைத் தருவது என்று இக்குளத்தின் பெருமையை தலபுராணம் விவரிக்கிறது. இதேபோல் காஞ்சிபுரத்திலும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சிவகங்கைத் தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் திங்கட்கிழமை காலைவேளையில் நீராடினால் மனைவி மற்றும் மக்கள் நலமுடன் திகழ்வர்.

திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு மேற்கில் அமைந்துள்ள கமலாலய தீர்த்தக் குளத்தில், காசி கங்கைக்கரையில் உள்ளதுபோல் 64 தீர்த்தக் கட்டங்கள் குளத்திற்குள் உள்ளன. அதில் நீராடினால் காசியில் ஓடும் கங்கை நதியில் நீராடிய புனிதம் பெறலாம்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடிக்கு அருகிலுள்ள திருத்தலம் திருநாரையூர். "கோவில் ஒரு வேலி, குளம் ஒரு வேலி' என்று சொல்லும் வகையில் பிரம்மாண்டமாக விரிந்துகிடக்கும் இத்தல திருக்குளத்தில் ஈசன் தோன்றியதால், இக்குளத்தில் நீராட அருள்பெற்றவர்கள் கங்கை நீராடிய புண்ணியம் பெறுவர் என்று தல புராணம் புகழ்கிறது.

கார்த்திகை மாத அமாவாசையன்று திருவிசநல்லூரில் வாழ்ந்த ஸ்ரீதர ஐயாவாள் வீட்டுக்கிணற்றில் காலை வேளையில் கங்கை பொங்கி வழிந்தாள் என்று வரலாறு கூறுகிறது. இந்த நிகழ்வு தற்பொழுதும் நடைபெறுவதாகக் கூறப் படுகிறது.

அன்று, இத்தீர்த்தக் கிணற்று நீரில் நீராடி அங்குள்ளவர்கள் புனிதம் பெறுகிறார்கள்.

நெல்லை மாவட்டத்தில் பாயும் தாமிரபரணி ஆற்றில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் கங்கை கலப்பதாக ஐதீகம். அம்மாதத்தில் இந்த நதியில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். அதேபோல் கடலூர் என்ற திருப்பாதிரிப்புலியூர் திருத்தலத்தில் பெண்ணை நதி பாய்ந்தோடுகிறது. இத்தலத்தில் உள்ள சிவகரதீர்த்தக் குளத்தில் மாசி மாதம் கங்கை கலக்கிறாள் என்று புராணம் கூறுகிறது.

திருக்கோஷ்டியூர் ஆலயத்திலுள்ள கிணற்றில், மாசிமாத கங்கையைப் பொங்கச் செய்து அதில் நின்று, புருர சக்கரவர்த்திக்குக் காட்சி கொடுத்தார் பெருமாள். எனவே, இந்த கிணற்றுக்கு கங்கா கிணறு என்றே பெயர். இந்த தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி புனிதம் பெறுகிறார்கள்.

திருப்பதி திருமலையில் ஆகாச கங்கை தீர்த்தத்தில் நீராடினாலும், திருமலை வேங்கடவன் கோவிலுக்கு அருகிலுள்ள குமார தீர்த்தத்தில் மாசிப் பௌர்ணமியன்று நீராடினாலும் கங்கையில் நீராடிய பலன்கிட்டும்.

தென்காசி திருத்தலத்திற்கு அருகில் குற்றால நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி சிவனருள் பெற்றுத் திகழ்கிறது. இதுவும் கங்கைக்கு சமமாகக் கருதப்படுகிறது. இதேபோல், கொல்லிமலையிலுள்ள ஐந்து நீர்வீழ்ச்சிகளில், ஆகாச கங்கை என்னும் நீர்வீழ்ச்சியில் நீராடினால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும்.

தீபாவளியன்று காசி கங்கையில் நீராடுவதற் கும் புனிதப் பயணம் செல்பவர்கள் உண்டு. காசிக்கு சமமாகக் கருதப்படும் திருத்தலங்கள் தமிழகத்தில் காவேரிக் கரையோரம் உள்ளன.

அவை: திருவெண்காடு, திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம், திருவையாறு, மயிலாடுதுறை. இந்த ஐந்து திருத்தலங்களையும் "பஞ்சகாசி' என்று போற்றுவர். காசிக்குச் செல்ல இயலாத வர்கள் இத்தலத்திற்கு அருகில் ஓடும் தட்சிண கங்கை என்று புகழப்படும் காவேரி நதியில் நீராடினா லும் முழுப்பலன்கள் கிட்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

"காசிக்கு வீசம் உயர்ந்தது' விருத்தாசலம் என்பார்கள். விருத்தாசலத்தில் வசிப்பவர் களும், விருத்தாசலத்திற்கு சென்று வந்தவர் களும் காசிக்குச் செல்லவேண்டியதில்லை என்பது ஐதீகம். இத்தலத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில் தீர்த்தக்குளம், கங்கை நதி தீர்த்தத்திற்கு சமமாகக் கருதப்படுகிறது.

எங்கே வசித்தாலும், கங்கையின் பெயர் சொன்னாலே போதும். எல்லா பாவங்களும் அகலும்; புனிதம் சேரும். எந்த நீர்நிலையாக இருந்தாலும், அல்லது வீட்டில் நீராடினா லும்-

"கங்கா கங்கேதியோ ப்ரூயாத்

யோஜனானாம் சனதரபி

முச்யதே சர்வ பாபேப்ய

விஷ்ணுலோகம் ச சச்சதி!

என்னும் மந்திரத்தை ஜெபித்து நீராடினால் கங்கையில் நீராடிய பலன்கள் கிட்டும்.