கர்நாடகா மாநிலத்தில், பகல்காட் மாவட் டத்தி-ருக்கும் சோலாசாகுட்டா என்ற ஊரில் அமைந்திருக்கிறது பனசங்கரி தேவியின் புண்ணிய ஆலயம். இந்தக் கோவிலிருக்கும் ஊருக்கு அருகிலிருக்கும் நகரம் பதாமி. இங்கிருக்கும் அன்னையை வனசங்கரி என்றும் அழைக்கிறார்கள். சாகம்பரி என்ற பெயரும் இந்த அன்னைக்கு உண்டு.
இந்த ஆலயம் திலகாரண்யா என்ற வனப் பகுதியில் உள்ளது. இந்த அன்னை பார்வதியின் அவதாரம். கர்நாடக மாநிலத்திலிருந்தும் மகாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த அன்னை யின் அருளைப் பெறுவதற்காக வருகிறார்கள்.
இந்த புகழ்பெற்ற ஆலயம் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பதாமி சாளுக்கிய அரசர்களால் ஆரம்பத்தில் கட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் பனசங்கரி தேவியை தங்களின் குலதெய்வமாக வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. "பனசங்கரி ஜாத்ரே' என்னும் பெயரில் இங்கு பெரிய அளவில் திருவிழா நடைபெறும். ஜனவரி, பிப்ரவரி மாதங் களில் நடைபெறும் இந்தத் திருவிழாவின்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். படகுத் திருவிழா, ரத யாத்திரை ஆகியவையும் நடக்கும்.
ஊர்வலத்தில் பனசங்கரி என்னும் வனசங்கரி அன்னையை ரதத்தில் வைத்துக்கொண்டு வருவார்கள். இந்த பனசங்கரி தேவியின் மூல ஆலயம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் சஹரான்பூர் மாவட்டத்தில் உள்ளது. அது வொரு சக்திபீடம்.
வனமென்றால் காடு. சங்கரியென்பது சிவனின் மனைவியான பார்வதியைக் குறிக்கும். காட்டிற் குள்ளிருக்கும் ஆலயத்திலிருப்பதால், இந்த அன்னைக்கு இந்தப் பெயர்.
பனசங்கரியை "காய்கறி கடவுள்' என்றும் குறிப்பிடுகிறார்கள். அதன் காரணமாகத்தான் இந்த அன்னைக்கு "சாகம்பரி' என்னும் பெயர் வழங் கப்படுகிறது. சாகு என்றால் காய்கறி. அம்பரி என்றால் அணிவது. காய்கறிகளை அணிகலன் களாக அணிந்திருக்கும் தேவி என்று பொருள். இந்த அன்னை துர்க்கையின் 6-ஆவது அவதாரம்.
இந்த தேவியை சவுடம்மா என்னும் பெயரிலும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அழைக்கிறார் கள்.
கல்யாண சாளுக்கிய மன்னர்களின் காலத்தில், கி.பி. 603-ஆம் வருடத்தில் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. 1750-ஆம் வருடத்தில் ஆலயம் பரசராம் அகலே என்ற மராட்டிய அரசரால் புதுப்பித்துக் கட்டப் பட்டிருக்கிறது. ஜெகதேகமல்லா என்ற அரசன் ஆலயத்தைப் பலமுறை புதுப்பித்திருக்கிறான் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
இந்த ஆலயத்தின் வடக்குப் பகுதியிலிருக்கும் தூணில் 1019-ஆம் வருடத்தில் இது புதுப்பித்துக் கட்டப்பட்டதாக கல்வெட்டின்மூலம் கூறப் பட்டிருக்கிறது.
ராஷ்ட்ரகூட அரசனான பீமதேவா மிகவும் தைரியகுணம் கொண்டவனென்று அங்கிருக்கும் கல்வெட்டு கூறுகிறது. திராவிட கட்டடக் கலையைப் பின்பற்றி இந்த ஆலயம் கட்டப் பட்டிருக்கிறது. புதுப்பிக்கப்பட்ட ஆலயம் விஜய நகர கட்டடக் கலையைப் பின்பற்றி அமைந் திருக்கிறது.
பிரதான மண்டபம், ஆர்தா மண்டபம் என்னும் பெயரில் ஒரு மண்டபம், விமானம் ஆகியவை இருக்கின்றன. ஆலயத்தின் மத்தியில் பனசங்கரியின் உருவச் சிலை உள்ளது. தேவி சிங்கத்தின்மீது கம்பீரமாக அமர்ந்திருக்கிறாள். அவள் தன் காலின்கீழ் அரக்கனை மிதித்துக்கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். அன்னைக்கு எட்டு கரங்கள் இருக்கின்றன. ஒரு கையில் திரிசூலம், இரண்டாவது கையில் உடுக்கை, மூன்றாவது கையில் மண்டை ஓடு, நான்காவது கையில் காண்டாமணி, ஐந்தாவது கையில் வேத நூல், ஆறாவது கையில் வாள், ஏழாவது கையில் கேடயம், எட்டாவது கையில் அரக்கனின் தலை...
தேவாங்கர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த அன்னையை குலதெய்வமாக வழிபடு கிறார்கள். தேஷாஸ்தா பிராமணர்களுக்கும் இந்த தேவிதான் குலதெய்வம்.
இந்த ஆலயத்திலுள்ள குளத்தின் பெயர் ஹரித்ரா தீர்த்தம். அதற்கு ஹரிச்சந்திரா தீர்த்தம் என்னும் பெயரும் இருக்கிறது.
ஸ்கந்த புராணம், பத்ம புராணம் ஆகிய புராணங்களில் இந்த ஆலயத்தைப் பற்றிய ஒரு கதை இருக்கிறது. பண்டைக் காலத்தில் துர்க்காமசுரன் என்ற பெயரில் ஒரு அரக்கன் இருந்திருக்கிறான். அவன் மக்களுக்கு தொல்லைகள் கொடுத்திருக்கிறான். அவனிட மிருந்து தங்களைக் காப்பாற்றும்படி மக்கள் சாகம்பரிதேவி என்றழைக்கப்படும் பனசங்கரியிடம் வேண்டி யாகம் நடத்த, நெருப்பிற்குள்ளேயிருந்து அன்னை வெளியே வந்து அரக்கனை வதம்செய்திருக்கிறாள்.
அதனால் மன நிம்மதியும் சந்தோஷமும் அடைந்த மக்கள் பனசங்கரியை பார்வதி யின் அவதாரமாக நினைத்து வழிபாடு செய்திருக்கின்றனர்.
இந்த ஆலயம் இருக்கும் பகுதியில் தென்னை மரங்களும் பாக்கு மரங்களும் இருக்கின்றன. இங்கு நடைபெறும் திருவிழா மூன்று நாட்கள் நடக்கும்.
இந்த ஆலயத்திற்குச் சென்று அன்னை பனசங்கரியின்- வனசங்கரியின்- சாகம்பரி தேவியின் அருளைப்பெற வேண்டுமென்று ஆசைப்படுபவர்கள், பெங்களூருக்குப் பயணிக்கவேண்டும். அங்கிருந்து 495 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது. ஆலயத்திற்கு அருகிலிருக்கும் ரயில் நிலையம் பதானி. அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.