லாலேஸ்வரர் கணபதி ஆலயம்... மகாராஷ்ட்ர மாநிலத்திலுள்ளது. இதை "பலாலேஸ்வர் விநாயக் மந்திர்' என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஆலயம். "ரைகாட்' மாவட்டத்தில் பாலி என்னுமிடத்தில் இருக்கிறது.

Advertisment

மகாராஷ்ட்ர மாநிலத்திலுள்ள "அஷ்ட விநாயக்' என்று குறிப்பிடப்படும் எட்டு விநாயகர் ஆலயங்களில் மிகவும் முக்கியமானது இந்த ஆலயம். "பலால்' என்னும் பக்தரின் பெயரை விநாயகரின் பெயருக்கு முன்னால் கொண்டிருக்கும் புதுமையான ஆலயமிது.

pp

அம்பா நதி, சரஸ்கட் கோட்டை ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த கோவில் இருக்கிறது. பண்டைக் காலத்தில் இந்த ஆலயம் மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1760-ல் ஸ்ரீஃபட்னிஸ் என்பவர் கற்கோவிலாகப் புதுப்பித்துக் கட்டினார். காலை பூஜையின்போது விநாயகர் திருவுருமீது சூரிய ஒளி படரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இங்கு ஒரு பிரம்மாண்டமான மணி இருக்கிறது. பெஷாவர் மன்னரான சீமாஜி அப்பா, போர்த்துக்கீசியரைப் போரில் தோற்கடித்து, போர் நடைபெற்ற இடத்திலிருந்து கொண்டுவந்த மணி அது.

கல்லாலான பீடத்தின்மீது விநாயகர் கம்பீரமாக கிழக்குநோக்கி அருள் பாலிக்கிறார். விநாயகரின் தும்பிக்கை கிழக்கு நோக்கித் திரும்பியிருக்கிறது.

அவரின் இரு பக்கங்களிலும் ரித்தி, ஸித்தி ஆகியோரின் சிலைகள் உள்ளன.

இவ்வாலயம் உருவானதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

பாலி என்ற அந்த ஊரில் கல்யாண்ஜி என்னும் வர்த்தகர் இருந்தார். அவரின் மனைவி இந்துமதி. அவர்களுக்கு பலால் என்றொரு மகன் இருந்தான்.

Advertisment

அவர்கள் வசிக்கும் பகுதியில் பல வீடுகளைச் சேர்ந்த குழந்தைகள் ஒன்றாக விளையாடுவார்கள். பலாலும் அவர்களுடன் விளையாடுவான். அவர்கள் அங்கிருந்த ஒரு சிறிய கல்லுக்கு தினமும் பூஜை செய்துவந்தனர்.

இதற்கிடையில் அவர்கள் வேறொரு பெரிய கல்லைப் பார்த்து விநாயகராக நினைத்து வழிபடத் தொடங்கினர். ஒருநாள் வழிபாட்டில் மூழ்கிய அவர்கள் பசியைக்கூட மறந்து விட்டார்கள். பொழுது இருட்டியதும் தெரியவில்லை.

பிள்ளைகள் வராமல்போகவே பெற்றோர்கள் ஒன்றுசேர்ந்து அவர்களைத் தேடிப் புறப்பட்டனர். அவர்கள் சென்றபோது, குழந்தைகள் கணேச புராணம் வாசித்துக்கொண்டிருந்தனர். கோபம் கொண்ட கல்யாண்ஜி, குழந்தைகள் வழிபட்ட கல்லைத் தூக்கியெறிந்தார். தன் மகன் பலாலையும் அடித்து, ஒரு மரத்தில் கட்டிவிட்டார். குழந்தைகள் பயன்படுத்திய பூஜைப் பொருட்களை வீசியெறிந்தார்.

pp

அந்நிலையில் பலால் தன் மனதிற்குள் விநாயகரை வேண்டிக்கொண்டான்.

அப்போது ஒரு துறவியின் உருவத்தில் விநாயகர் தோன்றினார். அவர் மரத்திலிருந்து பலாலை விடுவித்து, ""உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்க, வந்திருப்பது விநாயகரே என்பதை உணர்ந்துகொண்ட சிறுவன், ""நான் உங்கள் பக்தனாக எப்போதும் இருக்க ஆசைப்படுகிறேன். நீங்கள் இங்கேயே இருந்து, இங்குவரும் பக்தர்களுக்கு அருள்செய்யவேண்டும்'' என்று வேண்டிகொண்டான்.

அதற்கு விநாயகர், ""நான் இங்கிருக்க சம்மதிக்கிறேன். ஆனால், என் பெயருக்கு முன்னால் உன் பெயரை வைக்கவேண்டும். இங்குவரும் பக்தர்கள் உன் பெயரை முதலிலில் உச்சரிக்கவேண்டும்'' என்று கூறி, அவனை இறுகத் தழுவினார். அதைத் தொடர்ந்து அங்கிருந்த கல்லிலில் அவர் ஐக்கியமானார்.

கல்யாண்ஜி விட்டெறிந்த கல்லின் பெயர் "துண்டி விநாயக்' என்று குறிப்பிடப்படுகிறது. அங்குவரும் பக்தர்கள் முதலில் துண்டி விநாயகரை வழிபட்டு, பின்னர் பலாலேஸ்வர் விநாயகரை வழிபடுகிறார்கள்.

அங்கு விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. (இந்த வருடம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருகிறது.)

பலாலேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று, விநாயகரின் அருளைப்பெற விரும்புபவர்கள் சென்னையிலிருந்து மும்பைக்குச் செல்லும் ரயிலில் பயணிக்கவேண்டும். புனேவுக்கும் மும்பைக்கும் மத்தியில் "கர்ஜாத்' ரயில் நிலையம் உள்ளது. அங்கிருந்து 57 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஆலயத்தை அடையலாம். தங்குமிட வசதிகள் உள்ளன.