ய்யனார் வழிபாடு தென்னிந்தியாவில் மட்டுமல்ல; இலங்கை மற்றும் தெற்காசிய நாடுகளிலும் பரவலாக வழிபட்டுவருகிறார்கள். தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக உள்ள கிராமங்களில் தங்களைக் காக்கும் தெய்வமாக அய்யனா ரைப் போற்றி வழிபட்டுவருகின்றனர்.

aa

அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் கிராம மக்களின் வேளாண்மையையும் கால்நடைகளையும் காப்பாற்றுவதோடு இயற்கை சீற்றங்களில் இருந்தும் தங்களை காத்துவருகின்றனர் என்பது நம்பிக்கை. அய்யனார் என்பது மூத்தோரையும் உயர்ந்தவர்களையும் குறிப்பிடும் வார்த்தை. தமிழ் மொழியில் அய்யன் என்பது உயர்ந்தவரைக் குறிக்கும்.

அய்யனார் பல ஊர்களில் அவரது மனைவிகளான பூரணத்தாள், பொற்கொடி யாளோடு உள்ளார். பூரணி, பொற்கலை, அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்கள். பொதுவாக அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமான எல்லைப் பகுதியில், ஓடை கரையில், ஆற்றங் கரையில் அருளாட்சி செய்கிறார்கள்.

Advertisment

அய்யனாரின் பிரதான ஏவல் தெய்வமாக கருப்புசாமி கட்டாயம் இருப்பார். சிலப்பதிகாரத்திலும் அய்யனார் வழிபாடு குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அய்யனாரையும் துணை தெய்வங்களையும் அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் கற்களைக்கொண்டும், சுதைச் சிற்பமாக வடித்தும் வழிபட்டு வந்தார்கள். பல இடங்களில் வெறும் செங்கல்லைக்கூட வைத்து வழிபட்டு வந்தனர்.

aa

காலமாற்றத்தில் தற்போது அய்யனார் உட்பட காவல் தெய்வங்கள் பிரம்மாண்டமான சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர். அவர்களின் வாகனங்களான குதிரைகள், யானைகள், காளைகள், புலி, சிங்கம் போன்றவை பார்ப்பவர்களை பிரமிக்கச் செய்யும். இந்த தெய்வங்களுக்கு சடங்குகள், வழிபாடுகள், பலியிடுதல் போன்றவற்றில் பல்வேறு வித்தியாசமான முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். இவர்களுக்கான திருவிழாக்களும் வித்தியாசமான முறையில் நடைபெறுகிறது. அய்யனார் சமஸ்கிருத வார்த்தையில் சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். அதன் அடிப்படையில் சபரிமலை ஐயப்பன் அய்யனா ராக கிராமங்களில் கோவில்கொண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

Advertisment

பெரும்பாலான அய்யனார் தெய்வங்கள் ஆகம மரபுகளைக் கடந்து அந்தந்த பகுதி மக்களின் முன்னோர்கள் காட்டிய வழியில் வழிபாடு செய்துவருகிறார் கள். இப்படி, அடைக்கலம் காத்த அய்யனார், நீதி உடைய அய்யனார், கலியுக ஐயனார், பெரியசாமி அய்யனார், சுயம்பு லிங்க அய்யனார், சாத்தலிங்க அய்யனார், கரைமேல் அய்யனார், பஞ்சமுத்து அய்யனார், பிழை பொறுத்த அய்யனார், பாதாள அய்யனார், வழி காத்த அய்யனார், தர்மசாஸ்தா அய்யனார், நீர் காத்த அய்யனார், சிரமீட்ட அய்யனார், வேம்புலி அய்யனார், வீரமுத்தையனார், அல்லல் தீர்த்த அய்யனார், வன்னிய அய்யனார், வீரப்ப அய்யனார்- இப்படி தமிழக முழுவதும் சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட பெயர் களில் அய்யனார் அருளாட்சி செய்துவருகிறார். அப்படி புகழோடு விளங்கிவரும் ஒரு அய்யனார், அவரது பரிவார தெய்வங்கள் குறித்து இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

கடலூர் மாவட்டத்தில் மேற்கு கடைக் கோடிப் பகுதியில் உள்ளது கண்டமத்தான் கிராமம். இந்த கிராமத்தை ஒட்டி அடர்ந்து பரந்துவிரிந்த வனப் பகுதியில், மனைவிகள் இல்லாத தனி அய்யனார், பூரணி, பொற் கலையுடன்கூடிய அய்யனார் கள் என இரண்டு அய்யனார் கோவில் கொண்டுள்ளனர். இந்த ஊரும் இந்த தெய்வங்களும் எப்படி உருவாகின என்பது குறித்து கிராம தர்மகர்த்தாக்கள் ராமசாமி, பெரியசாமி, தங்கராசு, ராஜேந்திரன், செந்தில்குமார், சி.பெரியசாமி ஆகியோரிடம் கேட்டோம்.

"எங்கள் முன்னோர் களில் நான்கு சகோதரர் கள் இருந்தனர். அவர் களுடன் பிறந்த ஒரு தங்கை. இவர்கள் தங்கள் குடும்பத் துடன் பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் வசித்துவந்துள் ளனர். அப்பகுதியில் மன்னர்களின் கட்டுப் பாட்டில் ஆட்சிசெய்து வந்த பாளையக்காரரின் பணியாளர் அப்பகுதியில் வரி வசூலுக்குச் சென்றபோது எங்கள் குடும்பத்துப் பெண்ணின் அழகைப் பார்த்துவிட்டு பாளையக்காரரிடம் சென்று கூறியுள்ளார். உடனே பாளையக்காரர் அந்தப் பெண்ணை தனக்கு மணம் முடித்துத் தருமாறு கேட்டுள்ளார். "பாளையகாரருக்குப் பல மனைவிகள் இருப்பார்கள்; பத்தோடு பதினொன்றாக நமது பெண்ணைக் கொடுப்பதா? கூடாது' என்று முடிவெடுத்த எங்கள் முன்னோர்கள், அதிகாரம் படைத்த பாளையக்காரருக்கு அஞ்சி, இரவோடு இரவாக வீடுகளை காலிசெய்து கொண்டு வடமேற்கு நோக்கிப் புறப் பட்டு வந்துள்ளனர்.

aa

அப்படி வரும்போது, தற்போது எங்கள் ஊருக்கு அருகிலுள்ள புலிகரம்பலூர் பகுதி யில் வாழ்ந்த குடும்பத் தினரிடம், தங்களுக்கு அப்பகுதியில் அடைக் கலம் தருமாறு கேட்டுள் ளனர். அந்த ஊர் முக்கியஸ்தர்கள் கூடிப் பேசி அவர்களுக்கு ஒதுக் குப்புறமான ஒரு பகுதியைக் காட்டி, அங்கு குடிசைபோட்டு வாழ்ந்துகொள்ளுமாறு கூறியுள்ளனர். அப்படி அங்கு வாழும்போது ஒரு நாள் சமையல் செய்யும் போது இவர்கள் குடிசை வீடு தீப்பிடித்து விட்டது.

அந்த தீ பரவி மற்ற வீடுகளும் எரிந்துவிட்டன. இதனால் கோபமடைந்த ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி, "அறிமுகமில்லாத இந்த மனிதர்களை நம் ஊரில் தங்கவைத்தது தவறு. எனவே, இவர்கள் இனிமேல் இங்கு இருக்கக்கூடாது' என்று முடிவெடுத்த னர். வேறுவழியின்றி அங்கிருந்து விரட்டப்பட்ட எங்கள் முன்னோர்கள் தற்போது அய்யனார் ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு வந்தனர். சுற்றிலும் பெரும்காடாக இருந்துள்ளது. இப்பகுதியிலேயே தங்குவதென முடிவெடுத் தனர்.

இந்த பகுதியைத் திருத்தி, அப்போது மக்கள் சாப்பிட்ட உணவான சாமை, தினை, கேழ்வரகு ஆகியவற்றை விதைத்தனர், இந்தப் பகுதி அப்போது அருகிலுள்ள ஒரங்கூர் நாட்டாமையின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இவர்கள் விவசாயம் செய்வ தைக் கேள்விப்பட்ட அந்த ஊர் நாட்டாமையும் ஊர்மக்களும் "எங்கிருந்தோ வந்த சிலர் நம் பகுதி நிலத்தை உழுது சொந்தம் கொண்டாடப் பார்க்கிறார்கள். அவர்களை, அங்கிருந்து விரட்டவேண்டும்' என்று புறப்பட்டுவந்த அவர்கள், தாங்கள் கொண்டுவந்த மாடுகளைக் கட்டி இவர்கள் விதைத்த பகுதியை ஏர் விட்டு உழுது அழித்தனர். நால்வரும் செய்வதறியாது திகைத்தனர்.

தங்கள் குடும்பத்தினர் பசியாறக் காட்டில் கிடைத்த கிழங்கு, காய்கனிகளைத் தின்று வாழ்ந்தனர். சில மாதங்கள் கடந்தன. நாட்டாமை கோபம் மறைந்திருக்கும் என்ற எண்ணத்தில் மீண்டும் அப்பகுதி யில் உழவுசெய்து விதைத்தனர். நாம் விரட்டிவிட்டு வந்தபிறகும் மீண்டும் அங்கே நிலத்தை உழுகி றார்களே' என்ற கோபம் கொண்ட நாட்டார் மற்றும் ஒரங்கூர் மக்கள் மீண்டும் வந்து இவர்கள் விதைத்த நிலத்தை மீண்டும் உழுதனர்.

அப்போது ஓரிடத்தில் பூமியிலிருந்து ஊற்றுப்போல ரத்தம் பீரிட்டு வெளிவந்துள்ளது. இதைக்கண்டு மிரண்டுபோன அவர்கள் புறப்பட்டுப் போய் விட்டனர்.

அன்றிரவு எங்கள் முன்னோர் கள் கனவில் தோன்றிய அய்யனார், "நான் வந்துவிட்டேன் உங்களைக் காப்பாற்ற. இனிமேல் பயப்படவேண்டாம். நீங்கள் இங்கேயே உங்கள் வாழ்விடத்தை அமைத்துக்கொள்ளுங்கள். நீங்களும் உங்கள் சந்ததிகளும் சிறப்பாக வாழ்வதற்கு நான் ஆசி வழங்குகிறேன். எனக்கு இங்கேயே ஒரு ஆலயம் அமைத்து வழிபட்டுவாருங்கள்' என்று கூறியுள்ளார் அய்யனார்.

அதேபோன்று அன்றிரவு ஒரங்கூர் நாட்டாமை கனவிலும் அய்யனார் தோன்றி, "என்னை குலதெய்வமாக வணங்கிவரும் அந்த நான்கு குடும்பத்தினரும் அங்கேயே வாழ நீங்கள் தடையாக இருக்கக்கூடாது.

அவர்களுக்கு பாது காவலாக நான் இருக்கிறேன். இனிமேல் அவர் களிடம் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது. மீறி ஏதாவது செய்தால் என்னால் நீங்கள் தண்டிக்கப் படுவீர்கள்' என்று எச்சரித்துள்ளார். மறுநாள் இந்த தகவல் ஊர் முழுவதும் பரவி யது. அய்யனாரின் சொற்படி நாட்டாமையும் ஊர்மக்களும் அமைதியாகி விட்டனர்.

அதன்பிறகு இப்பகுதி காட்டைத் திருத்தி வாழ ஆரம்பித்தனர் அப்படி நான்கு குடும்பங்களைப் பூர்வீகமாகக்கொண்ட இந்த கிராமம், தற்போது 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக வளர்ந்துள்ளது. எங்கள் குடும்பங்களில் பெண் எடுக்க- கொடுக்க முன்வந்த பலர் இங்கேயே வந்து குடும்பமாக வாழ்வதற்கும், தொழில் நிமித்தமாக இவ்வூருக்கு வந்த பலரும் வாழ்வதற்கும் அடைக்கலம் கொடுத்தனர். தற்போது இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்ற எங்கள் உறவுவழி சொந்தங்கள் இந்த குலதெய்வத்தை மறக்காமல் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். சென்னை, திருச்சி, பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், இப்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகிறார்கள் இது மட்டுமல்ல; இலங்கையில் இருந்தும் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

எங்கள் வம்சத்தை வாழவைத்த அய்யனாருக்கு ஆலயம் எழுப்பியதோடு அவர்களின் ஏவல் தெய்வங்களாக செல்வவிநாயகர், முன்னாடியான், முருகன், ஓவ்வடியான், ஆகாசத்துறை எனும் கருப்பு சாமி, சின்னம்மா, செல்வம்மாள், வெள்ளையம்மாள், கருப்பையா, வீரவேல், வீரபத்திரர், ஆகாசக் கருப்பு, சப்த கன்னிமார் ஆகிய தெய்வங்கள் இந்த அடர்ந்த வனப்பகுதி முழுவதும் நிறைந்து இருக்கிறார்கள்.

அவர்களின் வாகனங்களாக குதிரைகளும் சிலைகளாக உள்ளன. எங்கள் கிராம இளைஞர்கள் அரபு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளுக்குச் சென்று சம்பாதித்து, தங்கள் மூதாதையர்கள் உருவாக்கி வணங்கிவரும் அய்யனார், பெருமாள், முத்துமாரியம்மன், செல்லியம்மன் பெரியநாயகி ஆகிய தெய்வங்களுக்கு கோவில்கள் எழுப்பி, தங்கள் குடும்பத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்து வருகிறார்கள். பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அய்யனாரையும் பரிவார தெய்வங்களையும் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். எங்கள் முன்னோர்களைக் காப்பாற்றியது போல் தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்கிறார் அய்யனார்' என்று பெருமை யுடன் கூறுகிறார்கள் தர்மகர்த்தாகள்.

பக்தி வழியில் தீவிரமாக இருந்து வரும் ஐயப்பன் என்ற இளைஞர், "எங்கள் கிராமம் ராமாயண காலத் தொடர்புடையது' என்கிறார். அதற்கு அவர் கூறும் காரணங்கள் வியப்பாக உள்ளது, "ராமர் சீதையை மீட்பதற் காக இலங்கைக்குச் செல்லும் போது இவ்வழியாக வந்துள்ளார். அதனைக் குறிக்கும்வகையில் (வில்லை முறித்து சீதையை மணம் முடித்ததால் ராமருக்கு கணை முறித்தான் என்ற பட்டப்பெயர் உண்டு). எங்கள் ஊருக்கு கணை முறித்தான் என்ற பெயர் உருவாகியுள்ளது. அது காலப்போக்கில் கண்டமத்தான் என்று பெயர் பெற்றுவிட்டது. மேலும் வாலி எங்கள் ஊரில் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபாடு செய்துள்ளார். அதனால் இங்கு பூமியிலிருந்து கிடைத்த சிவலிங்கத்திற்கு வாலீஸ்வரர் என்று பெயர். அதேபோல் ஒரங்கூர் பகுதியிலுள்ள சிவனுக்கும் வாலீஸ்வரர் என்று பெயர். எங்கள் ஊரிலிருந்து தெற்கே இருபது கிலோமீட்டர் தொலைவிலுள்ளது வாலிகண்டபுரம்.

அங்குள்ள சிவனுக்கும் வாலீஸ்வரர் என்றே பெயர். தற்போது அய்யனார் கோவில் பகுதியிலேயே நிலத்திலிருந்து உழவு செய்யும்போது சிவலிங்கம், அம்மன், நந்தி, சண்டிகேஸ்வரர் ஆகிய சிலைகள் கிடைத்துள்ளன. அவற்றை இப்பகுதியில் வெட்டவெளியில் வைத்து எங்கள் கிராம மக்கள் வழிபட்டு வந்தனர். வாலீஸ்வரர், அம்பாள் பாலாம்பிகைக்கு சமீபத்தில் பெரிய கொட்டகை அமைத்து அதில் வைத்து வழிபாடு நடத்திவருகிறோம். இந்த சிவனுக்கு புதிய ஆலயம் எழுப்பும் முயற்சியில் உள்ளோம்'' என்கிறார். ஊர் முக்கியஸ்தர் பெரியவர் கோவிந்தராசு, "எங்கள் ஊர் பெயர் உருவாக வேறொரு காரணமும் கூறப்படுகிறது. அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பெரும் புலி ஒன்று இங்கு வாழ்ந்துள்ளது, யார் கண்ணிலும் படாமலிருந்த அந்த புலியை கிராம மக்கள் கண்டதால், எங்கள் ஊருக்கு கண்டமத்தான் என்றும், ஊருக்கு அருகே கரந்தையாக இருந்த பகுதியில் புலி சுற்றித்திரிந்ததால் அப்பகுதிக்கு புலிகரம்பலூர் என்ற பெயரும். அது படுத்துறங்கிய ஊருக்கு ஒரங்கூர் எனவும் பெயர் உருவானதாக எங்கள் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

முன்னோர்கள் குடிசைவீடு கட்டி வாழ்ந்தனர். அதில் கருங்காலி மரத்தை தூணாகச் செய்து நிறுத்தி இருந்தனர். காலப்போக்கில் குடிசை வீடுகள் ஓட்டு வீடுகளாகி, பிறகு மாடி வீடுகளாக வளர்ச்சிபெற்ற நிலையிலும்கூட, அதில் ஒரு கருங்காலித் துணை மட்டும் எங்கள் முன்னோர்கள் தங்கள் வம்சத்தினர் நினைவாக பாதுகாத்துவந்தனர். அந்தத் துணை தற்போது இந்த தலைமுறையில் நான் பாதுகாத்துவருகிறேன்' என்றார்.

"ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் அய்யனாருக்கு தேர்த்திருவிழா, ஊரணி பொங்கல் வெகுவிமர்சையாக நடத்தப்படுகிறது இதில் ஒரு வித்தியாசம் என்னவென் றால் ஒரு ஆண்டு திருவிழா நடத்தினால் அடுத்த ஆண்டு திருவிழா நடத்துவதில்லை. அதற்கு அடுத்த ஆண்டுதான் திருவிழா நடத்தப்பட்டுவருகிறது. இது முன்னோர்கள் வகுத்தவழி. திருமணத்தடை, உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், அயல்நாடுகளுக்கு வேலைத்தேடிச் செல்பவர்கள், நோய் நொடியால் பாதிக்கப்பட்டவர்கள், படித்துவிட்டு வேலை தேடுபவர்கள் இப்படி பலரது வேண்டுதல்களை இங்குள்ள அய்யனாரும் பரிவார தெய்வங்களும் நிறைவேற்றிவருகிறார்கள். அதற்கு இங்குவந்து செல்லும் பக்தர்களின் கூட்டமே சாட்சி' என்கிறார் கோவில் பூசாரி கிருஷ்ணமூர்த்தி.

கோவில் அமைவிடம்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தொழுதூர், இங்கிருந்து மேற்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கண்டமத்தான் அய்யனார் ஆலயம். தொழுதூரிலிருந்து அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. தொடர்புக்கு, 9751394618.