17-8-2024 முதல் 16-9-2024 வரை

1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சூரியன்; அவருக்குரிய மூலிகை வில்வம். இந்த ஆவணி மாதம் 1-ஆம் எண்காரர்களுக்கு வெகு நேரத்தியான பலம்தரும் மாதமாகும். மனதைரியம் மிகும். மனதைரியம் எப்போது அதிகமாகும்? பர்ஸ் நிரம்பி வழிந்தால் மனவுறுதி மிகும். எனில் இம்மாதம் நல்ல பணவரவுள்ள மாதமாக அமையும். வழக்கமான வரவுகளைவிட எதிர்பாராத பணச்சேர்க்கை அதிகரிக்கும். இந்த மாதம் மனை லாபம் உண்டு. அல்லது மனைமூலம் லாபமுண்டு. பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் இளைய சகோதரி, பதவி உயர்வால், உங்களுடன் வந்து தங்குவாள் அல்லது பதவி உயர்வு தரும் பணிச்சுமையால், வீட்டோடு பணியாள் அமர்த்திக்கொள்வீர்கள். முதலாளியின் அனுகூலம் பெறுவீர்கள். அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவீர்கள். பெற்றோரின் வெகுநாள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்களது வாரிசுகள் சிலர் மேற்கல்வி, வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு செல்வர். அப்போது சிலரிடம் வாக்குவாதமும், பகையும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே வாரிசுகளின் பயணத்தின்போது நீங்கள் சற்று கூடுதல் கவனம் செலுத்துங்கள். அதுபோலவே, உங்கள் மருத்துவப் பரிசோதனையில் ரிப்போர்ட் மாறிவிடவும் கூடும். விழிப்புடன் இருங்கள். சினிமா, டி.வி, கலை சம்பந்தப்பட்டோர் வெகு லாபம் பெறுவர். கூடவே புகழும் கிடைக்கும். வழக்கம் போல் தம்பதியருள் சண்டை வரும்தான். இந்த மாதம் சிறப்பு சண்டை நடக்கும். சண்டையில் சட்டை கிழிய வாய்ப்புள்ளது. சண்டை போட்டாலும், வாழ்க்கைத் துணைக்கு ஏதாவது சிறிதாக உடம்பு சரியில்லை என்றால், உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். இந்த எண்காரர்கள் கடலருகில் நெருங்கிச் செல்லவேண்டாம். எதிரிகளிடமிருந்து விலகியிருங்கள். இந்த மாதம் நிறைய நல்லது நடக்கும் வேளையில், மறைமுகக் கெடுதல்களும் நடந்தேறும்.

பரிகாரம்: வாராஹிக்கு நல்லெண்ணெய் வாங்கிக் கொடுங்கள். வறியவருக்கு அசைவ உணவு வாங்கிக் கொடுங்கள். வீட்டில் தந்தை- மகன் பிணக்கு ஏற்படாத வாறு தவிர்த்துவிடுங்கள். ஸ்ரீராமர் சந்நிதிக்கு எதிரே, ஆஞ்சனேயர் அருகில் தீபம், நெய் தீபமேற்றி வழிபடுங்கள்.

Advertisment

2, 11, 20, 29-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

இந்த எண்ணின் நாயகன் சந்திரன்; இவருக் குண்டான மூலிகை வெள்ளெருக்கு. இந்த மாதம் பணவரவு வந்துகொண்டே இருக்க, அடுத்த நிமிடம் அத்தனையும் செலவழியவும் செய்யும். கனவுத் தொல்லையில் தூக்கம் கலையும். இளைய சகோதரனின் பயணம் செலவைத் தரும். உங்களின் வீரம் சற்று தளர்ந்துவிடும். அடுக்குமாடிக் குடியிருப்பு சம்பந்தமான முதலீடு உண்டு. உங்களது தாயாரும் மூத்த சகோதரியும் பணவிஷயத்தில் சற்று மாறுபாடான நிலை கொள்வர். வாரிசுகள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வர். கலைஞர் களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். உங்களில் சிலர் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். திருமணப் பேச்சின்போது, மூத்த சகோதரர் கொஞ்சம் சண்டை இழுப்பார். தம்பதிகளுக்குள் வேலை மாறுதல் சம்பந்தமான சண்டை வரும். தந்தையைப் பற்றிய கவலை உண்டாகும். சொந்தத் தொழில் தொடங்குவதற்கு, முதலீடு சேகரிக்க அலைய வேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் வசூலித்த பணம் கைக்கு வருவதற்குள் நிறைய தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மூத்த உடன்பிறப்பு இடம் மாறுவார். உங்களில் சிலர் சீருடைப்பணி கிடைக்கப் பெறுவீர்கள். சீருடைப் பணியாளர்கள் இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவீர்கள். உங்கள் மாமியார் வேறிடம் செல்வார். வேலை செய்யுமிடத்தில், மேலதிகாரி சற்று நச்சு கொடுப்பார். வேலையில் குற்றங் குறை கண்டுபிடித்து, எல்லார் முன்னிலையிலும் உங்களை அவமானத்துக்கு உள்ளாகுவார். வீட்டில், வெளியில் எங்கிருந்தாலும் இதனைத் தவிர்க்க முடியாது. உங்களின் பெண் பணியாளரிடம் மிக கவனமாக நடந்துகொள்ளவும்.

பரிகாரம்: சனீஸ்வர பகவானுக்கு தீபமேற்றவும். வயதான குருக்களுக்கு வஸ்திரம் வாங்கிக் கொடுங்கள். ஸ்ரீராமர் சந்நிதிக்கு நெய் வாங்கிக் கொடுங்கள்.

Advertisment

aaa

3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் குரு; இவரின் மூலிகை குப்பைமேனி. இந்த மாதம் உங்களில் சிலருக்கு வேலை கிடைக்கும். அவ்வேலை, பாதுகாப்பு சம்பந்தமான பணியாக இருக்கும். பணவரவு வந்தாலும், செலவும் சீண்டிப் பார்க்கும். உங்கள் இளைய சகோதரனும், தாயாரும் மனவேற்றுமை கொள்வர். வீடு மாற்றம் உண்டு. வீடு மாறும்போது, ஏதாவது பொருள் காணாமல் போகக்கூடும். வாகனம், வீடு சார்ந்து பழுதுபார்க்கும் செலவு வரும். காதல் துளிர்க்கும். இந்த எண்ணில் பிறந்த குழந்தைகளின் தந்தை சிலருக்கு அரசுப்பணி கிடைக்க வாய்ப்புண்டு. உங்களின் சிலரது தந்தை மருத்துவ சேவைக்கு உள்ளாவார்கள். திருமணம் கூடிவரும். அதற்கு கடன் வாங்கவேண்டி இருக்கும். மூத்த சகோதரி, உங்கள் தந்தையிடம் கடனாகப் பணம் பெறுவார். சொந்தத் தொழில் செய்பவர்கள் சற்று சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். சில இடங்களில் பணியாளர்கள் முதலாளிகளை எதிர்த்து குரல் எழுப்புவர். வேலையில் உத்தியோக உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் தங்கள் சேவையில் அங்கீகாரம் பெற்று மகிழும் நேரம். சில தொண்டர்கள் எதிர்ப்பு கோஷமிடுவர். கலைஞர்கள் சிலர் தங்கள் காதல் திருமணம் பற்றி நிறைய பேட்டிகள் கொடுப்பர். மேலும் கலைத்தொழில் சார்ந்து, நிறைய பயணம் செய்யவேண்டி இருக்கும். சில வணிக பங்குதாரர்கள் பிரிய நேரிடலாம். சிலநேரம் மிக சண்டையும் வரக்கூடும். பங்கு வர்த்தகத்தில் சற்று நிதானித்து முதலீடு செய்யவும். சிலரது மாமியார்கள் பெரும் இம்சை தருவர். மேலும் சில வீடுகளில் உங்கள் தந்தையும், உங்களின் மாமனாரும் முட்டிக்கொள்ள நேரிடும்.

பரிகாரம்: வயதான பெண்களுக்கு, மருத்துவ உதவி கேட்டறிந்து செய்யவும். திருச்செந்தூர் முருகனை வழிபடவும். ஸ்ரீராமர் சந்நிதிக்கு மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் தூள் வாங்கிக்கொடுக்கவும்.

4, 13, 22, 31-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகர் ராகுபகவான்; இவரின் மூலிகை மரிக்கொழுந்து. இந்த மாதம் சொற்கள் கடுமை பெறும். சொற்களின் கடுமை சண்டையிழுக்கும். இது இளைய சகோதரத்திடம் மனப்பிறழ்வை உண்டாக்கும். வீடு வாடகைக்குக் கிடைக்கும். குழந்தைகளின் கல்வியின் பொருட்டு வீடு மாற்றுவீர்கள். நீங்கள் பணம் செலவு செய்யத் தயாராக இருந்தால், ஒரு அரசியல்வாதிமூலம் அரசு வேலை கிடைக்கும். சிலர் தகவல் தொடர்பு சம்பந்த வேலை கிடைக்கப் பெறுவீர்கள். இந்த மாதம் ஒரு எதிர்பாராத நற்செய்தி கிடைக்கும். உங்களில் சிலருக்கு இவ்வளவு நாளும் ஒரு பெண்ணின்மூலம் பட்ட இம்சை இந்த மாதம் நீங்கிவிடும். இது அனேகமாக வேலை செய்யுமிடத்தில் நடக்கும். சொந்தத் தொழில் செய்வோருக்கு, கணினியைத் திறம்பட இயக்கத் தெரிந்த ஊழியர்கள் கிடைப்பர். அரசியல்வாதிகள், உள்ளூர்- வெளியூர் என எப்போதும் அலைச்சல் கொள்வர். இது சமையல் கலைஞர்களுக்கும் பொருந்தும். சினிமா, டி.வி. கலைஞர்கள் எதிர்பாராத வாய்ப்பும், புகழும் பெறுவர். இந்த மாதம் எக்காரணம் கொண்டும் உங்கள் எதிரிகளைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். சிலசமயம் உங்களை அவர்கள் தாக்க முற்படலாம்.

பரிகாரம்: பைரவரை வணங்கவும். கஷ்டப்படும் பெண்களுக்கு உதவவும். ஸ்ரீராமர் சந்நிதிக்கு துளசியும், மரிக்கொழுந்தும் வாங்கிக்கொடுங்கள்.

5, 14, 23-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் புதன்; இவரின் மூலிகை துளசி. இந்த மாதம் பணம் வந்துகொண்டே இருக்க, செலவு ஒருபக்கம் போய்க்கொண்டே இருக்கும். வரவு ஓரணா, செலவு பத்தணா என்றரீதியில் அமையும். செலவு மட்டுமல்ல; அலைச்சலும் விதவிதமாக வரும். குடும்ப விசேஷம் பொருட்டு அலைவீர்கள். கோவில் தரிசனப் பயணம் உண்டு. அரசு சார்ந்த வரி, வட்டி கட்டவும், விசாரிக்கவும் பயணம் ஏற்படும். சிலரது சொந்த குடோன் அல்லது தொழிற் சாலையில், நெருப்பு விபத்து ஏற்பட்டு, அதன்காரண மாக அலறியடித்து ஓட நேரும். அடுக்குமாடி வீடு தேடியலைவீர்கள். உங்களில் சிலரின் தந்தை எங்காவது, அவர்பாட்டுக்கு நடையைக் கட்டிவிடுவார். "அப்பாவைக் காணோம்' என அல்லல்கொண்டு அலைவீர்கள். இன்னொருவிதமாக, சில அரசியல் வாதிகள் அவர்களாகவே காணாமல் போய்விட்டதாக பீதியைக் கிளப்புவர். சில நடிகைகள் வேறிடம் சென்று, முகவரி இல்லாமல் ஆகிவிட்டதாக, அவர்களே செய்தியைக் கிளப்பிவிடுவர். ஆக, உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ அலைவீர்கள். இந்த நிலையில் உங்கள் இளைய சகோதரர், வேலை செய்யும் தொழிற்சாலையில் ஏழரையைக் கூட்டி விடுவார். வாகனத்தின் பழுது நீக்கப்படும். மனைவி உங்களை பாடாய்ப்படுத்துவார். ஏனோ உங்கள் மனைவி இந்த மாதம் வெகு கோபமான எண்ணம், நடவடிக்கை கொள்வார். அது கௌரவம் சார்ந்ததாக அமையும். இந்த மாதம் அந்த அலைச்சலும், செலவும், பதட்டமும் சேர்ந்து தலைசுற்றச் செய்து மனக்குழப்பம் தரும். சிலசமயம் உங்களுக்கே, "லைட்டா நட்டு கழண்டுட்டதா' என சந்தேகம் வரும். இந்த மாதம் மருத்துவம், மக்கள் தொடர்பு சம்பந்த வேலை பார்ப்பவர்கள், தாங்கள் சந்திக்கும் மனிதர்களிடம் பவ்யமாகப் போவது நல்லது. இல்லையெனில் முதலுக்கே மோசமாகிவிடும்.

பரிகாரம்: திருப்பதி பெருமாளை வணங்கவும். இளம் வயது ஆண்களுக்கு, தகவல் தொடர்பு சார்ந்த கருவி வாங்கிக்கொடுக்கலாம். ஸ்ரீராமருக்கு துளசி வாங்கி சமர்ப்பித்து வணங்கவும்.

6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகர் சுக்கிரன்; மூலிகை செந்நாயுருவி. இந்த மாதம் நீங்கள் அரசுப்பணி அல்லது தனியார் பணி என எவ்வித வேலை செய்தாலும், பதவி உயர்வு கிடைக்கப்பெறுவீர்கள். அது எதிர்பாராத செய்தியாக அமையும். பணவரவு நன்றாக இருக்கும். ஆனால் வார்த்தைகளில் கடுமை ஏறும். உங்கள் திருமணப் பேச்சின்போது, உங்கள் இளைய சகோதரனின் சொற்கள் சூழலைக் கெடுக்கும். பணியாட்களால் சற்று இடர் நேரும். கைபேசி தரவு, தவறான செய்தியைக் கூறி குழப்பமடையச் செய்யும். சிலர் பங்குகளை வாங்கியபின், அதிலுள்ள பெரிய குறைபாடு தெரியவரும். அதனால் சற்று பதட்டமடைவீர்கள். சினிமா கலைஞர்கள் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்து கையெழுத்திட்டபிறகு, அதனுள் பொதிந்துள்ள அவதி தெரியவந்து சங்கடப்படுவர். உங்கள் வாரிசுகள் வேலை கிடைக்கப்பெற்று பின் அதனின் குறைகளை உணர்வர். வீடு மாற்றிய பின், அந்த வீட்டின் மைனஸ் பாயின்டுகள் தெரியவரும். உங்களின் சில எதிரிகளும், கடன்களும், நோயும் மறையும் மாதமிது. எல்லாவற்றையும்விட, இந்த மாதம் புதையல் போல் ஒரு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. சிலர் சம்பந்தப் பட்ட மறைக்கப்பட்ட உண்மைகள் உங்களுக்குத் தெரியவரும். வயது அதிகமானவருடன் மறுமணம் செய்யக்கூடும். சிலரின் வாரிசுகளுக்கு திருமணம் நடக்கும். மருமகனுக்கும் உங்களுக்கும் வாக்குவாதம் உண்டாகும். அரசியல்வாதிகள் புதிய பதவி கிடைக்கப்பெறுவர். சிலரின் வீடுகளில் பெண்ணும், மருமகனும் மனவேறுபாடு கொள்வர்.

பரிகாரம்: மகாலட்சுமித் தாயாருக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும். சர்க்கரைப் பொங்கலை சிறிய குழந்தைகளுக்குக் கொடுக்கவும். ஸ்ரீராமர் சந்நிதியில் துளசியும், பிச்சிப்பூவும் சேர்த்து சமர்ப்பித்து வணங்கவும்.

7, 16, 25-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் கேது; இவரின் மூலிகை அறுகம்புல். நிறைய ஆன்மிகப் பயணம் செய்வீர்கள். சிலருக்கு பணவரவு தடை, தாமதமாகக் கிடைக்கும். சிலர் மறைமுக லஞ்சம் பெறுவர். இம்மாதம் அரசாங்க சலுகைகளைப் பெறவும், உங்கள் தவறுகளை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கவும் "சம்திங்' கொடுத்து மாளாது. இதன்பொருட்டு வியாபாரம் செய்பவர்கள் மிக எரிச்சலடைய நேரிடும். உங்கள் மனைவி, தாய்வீட்டு விசேஷம் சம்பந்தமாக நிறைய செலவழிப்பார். இதனால் தம்பதிகள் சண்டையிடும் வாய்ப்பு ஏற்படும். திருமண விஷயங்களின்போது, உங்கள் தாய் அல்லது தாய்மாமன் தங்கள் திருவாயைத் திறந்து, திருமண நல்முடிவுக்குப் பின்னடவைக் கொடுப்பர். வாரிசுகள் உயர்கல்வியின் பொருட்டு இடம் பெயர்வர். உங்கள் தாயாரின் திட்டங்களை நிறைவேற்றுவதற்குள் தரவு தீர்ந்துவிடும். உங்கள் மாமியார் சண்டை இழுத்துவிட்டு, வீட்டுக்குள் கலகம் மூட்டுவார். அரசியல்வாதிகள் ஏனோ அல்லாட்டம் பெறுவர். சினிமா கலைஞர்கள் மிக செலவு செய்ய வேண்டி வரும். சில கலைஞர்கள், வரி போன்ற விஷயங்களால் சற்று அவதிப்படக்கூடும். பூமி, மனை சார்ந்த விஷயங்களில் சற்று தேக்கநிலை ஏற்படும். இந்த மாதம், அரசு கட்டணம், வரி, தண்டனைத் தொகை போன்ற இனங்களில் சற்று கவனமாக இருக்கவேண்டும். முன்னெச்செரிக்கை தேவை.

பரிகாரம்: நரசிம்மரை வணங்கவும். தண்ணீர் கேன் கொண்டுவரும் பிற மத மனிதர்களின் தேவை யைக் கேட்டு உதவவும். ஸ்ரீராமரை விளக்கேற்றி வணங்கவும்.

8, 17, 26-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் சனிபகவான்; இவரின் மூலிகை யானை வணங்கி. இந்த மாதம் ஏனோ, உங்களுக்கு அடித்துப்பிடித்து யாரும் எதிர்பாராதவகையில் பணத்தை சேர்த்துவிட வேண்டுமென பேராசை வரும். எனவே, பங்கு வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்து, உடனே பெரும் தொகையை ரிட்டர்ன் எடுத்துவிடலாமா என கை நமநமக்கும். அட ஒரு டி.வி சீரியலில் தலையைக் காட்ட முடியுமா, கதை சொல்ல முடியுமா என மூளை பிராண்டி எடுக்கும். கிரிக்கெட்டில் விளையாடி, கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கி றார்களே, நாமும் உடனடியாக ஒரு மட்டையை வாங்குவோமா என உள்ளங்கை அரிப்பெடுக்கும். எல்லாவற்றையும் விடு; ஒரு பெரிய இடமாகப் பார்த்து லவ் பண்ணினால், இந்த ஜென்ம ப்ராப்ளம் தீர்ந்தது என இதயம் இனிக்கும். இப்படியெல்லாம் தேவையற்ற யோசனை பெருக்கெடுக்கும் நேரம். ஏமாந்து அதில் விழுந்துவிட்டால் இருக்கிற காசெல்லாம் போய்விடும். உங்கள் கைபேசிமூலம், உங்களின் பணத்தை யாரோ ஆட்டையை போட்டுவிடுவார்கள். உங்கள் மூளை வேலை செய்யும் விதத்தைப் பார்த்து, "வேலையை விட்டுப்போ' என முதலாளிகள் விரட்ட நேரும். சிலருக்கு செய்துகொண்டிருக்கும் தொழிலும் அந்தரத்தில் நின்றுவிடும். உங்கள் பெற்றோரும், வாழ்க்கைத் துணையும் வெறிகொண்டு திட்டுவர். எனவே இந்த எண்காரர்கள் கையது கொண்டு, மெய்யது பொத்தி, வேண்டாத யோசனை இல்லாமல், தினப்படி வேலையை ஒழுங்காகச் செய்யவும். இந்த மாதம் எதுவும் சுத்தமாக சரியில்லை.

பரிகாரம்: மூளை சரியாக வேலைசெய்ய ஆஞ்சனேயரை வணங்கவும். தான தர்மத்தை அப்புறம் பாத்துக்கொள்ளலாம். ஸ்ரீராமரை தீபமேற்றி வழிபடவும். ஸ்ரீராமஜெயம் எழுதவும்.

9, 18, 27-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

உங்கள் எண்ணின் நாயகன் செவ்வாய்; மூலிகை தலைச்சுருளி. இந்த மாதம் ஏதோவொரு குருட்டு அதிர்ஷ்டத்தில் பணம் கைக்குக் கிடைக்கும். அல்லது ஒரு அரசியல்வாதியின் பணம் உங்கள் கையில் புரளக்கூடும். இந்த மாதம் உங்களின் தைரியத்தின் டிகிரி அளவு அதிகரிக்கும். பிறகென்ன? ஒரு காதல் செய்துவிடுவீர்கள். இந்த காதலை, அந்தப்பெண்ணின் மூத்த சகோதரன் துண்டித்து விட, நீங்கள் அதுபற்றியெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். "திரிஷா இல்லைன்னா நயன்தாரா' என வேறு பெண்ணை விரும்ப ஆரம்பித்து விடுவீர்கள். சிலர் காதல் திருமணமும் செய்துகொள்வீர்கள். உங்களில் சிலர் பழைய வேலைக்கு மாறுவீர்கள். இளைய சகோதரன் எங்காவது விழுந்து அடிபட வாய்ப்புண்டு. தொழில் தொடங்க விரும்புகிறவர்கள், அரசு மான்யம் கிடைக்கப்பெறுவீர்கள். அரசியல்வாதிகள் பணம் செலவழிக்கும்போதே, அதே அளவு வருமானத்துக்கும் தடம்போட்டுவிடுவர். சினிமா கலைஞர்கள் நிறைய வாய்ப்பு கிடைக்கப் பெறுவர். சிலர் விளம்பரத்தில் நடித்து, நல்ல தொகை சம்பாதிப்பர். சில கலைஞர்கள் சில அரசியல் வாதிகளின் கண்டிப்புக்கு ஆளாவார்கள். சிலரின் வாரிசுக்கு திருமணம் நடக்கும். வரும் மருமகன் வெளிநாடு சம்பந்தம் கொண்டிருப்பார். சிலர் குழந்தைப் பிறப்பு சம்பந்தமாக மருத்துவரை அணுகி சிகிச்சை ஆரம்பிப்பர். சிலரின் கடன்கள் அடையக்கூடும். பூர்வீக வீட்டை விற்க இயலும். சில கனவுகள் சில நல்ல குறிப்பை உணர்த்தும். சிலர் மாமியார்மூலம் லாபம் பெறுவர். தொழில் நல்ல லாபம் தரும். அந்த லாபம் மறுமுதலீடு செய்ய பயன்படும். இந்த மாதம் மருமகனிடம் சற்று கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: வள்ளி- தெய்வானையுடன்கூடிய முருகரை வணங்கவும். பிரசவித்த பெண்களின் தேவையறிந்து உதவவும். ஸ்ரீராமர் சந்நிதிக்கு தீபமேற்ற நெய், விளக்குத்திரி, தீப்பெட்டியுடன், துளசி அல்லது பன்னீர் பூக்கள் சரம் வாங்கிக்கொடுத்து வணங்கவும்.

செல்: 94449 61845

__________

ஆவணி மாத கிரக நிலைகள்!

சூரியன்

ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம், சூரிய பகவான் தனது சொந்த வீட்டில், சிம்ம ராசியில் அமர்ந்து, மிக பலம் பெறுவார். சூரியன் எப்போதும் முதன்மையான பலமான கிரகம். அதுவும் சொந்த வீட்டில், அமர்ந்தால் கேட்கவே வேண்டாம். அவரின் காரக மனிதர்களான அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் போன்றோர் ரொம்ப கம்பீரமாக நிற்கும் மாதமாகும். இது ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் இருக்கும். ஆனால் இந்த வருடம் அப்படியல்ல. ஏனெனில், இந்த ஆட்சிபெற்ற சூரியனை நேர் பார்வையாக சனி நோக்குகிறார். எனில் சூரியனின் நிலையென்ன? வேறென்ன. "பில்டிங் ஸ்ட்ராங்கு. பேஸ்மென்ட் வீக்கு' என்ற கதைதான். எனவே இந்த மாதம் அரசியல் தலைவர்கள். அரசு அதிகாரிகள் நிறைய இன்னலுக்கு ஆளாவார்கள். நிறைய மக்களின்- அதுவும் அடித்தட்டு ஜனங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். கேள்விகள் ஆரோக்கியம் பற்றியதாக அமையும். ஒரு அரசியல் பெருந்தலைவர் உடல்நலக்குறைவை சந்திப்பார். நிறைய தொழிலாளர்கள் எதிர்ப்புப் போராட்டம், அரசாங்கத்தை எதிர்த்து நடத்துவர்.

சந்திரன்

ஆவணி 3, 4, 5-ஆம் தேதிகளில் கும்ப ராசியில் பயணிக்கும்போது சனியுடன் சேர்ந்து புனர்பூ யோகம் பெறுவார். அப்போது அரசு தன் சட்ட திட்டங்களை அடிக்கடி மாற்றும்.

ஆவணி 5, 6, 7 தேதிகளில் மீன ராசி சஞ்சாரம். அப்போது ராகுவுடன் சேர்ந்துகொள்வார். எனவே கடல் சார்ந்த களேபரம் ஏற்படும்.

ஆவணி 10, 11, 12-ல் ரிஷப மாற்றம். அங்கு குருவுடன் சேர்வார். அப்போது சீருடைத் துறை நிறைய மாற்றம் பெறும்.

ஆவணி 12, 13, 14-ல் மிதுனப் பயணம். அப்போது செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து சந்திர மங்கள யோகம் பெறுவர். நிலம் சம்பந்த பத்திரங்கள் விஷயம் மாற்றம் பெறும்.

ஆவணி 17, 18, 19-ல் சிம்ம சஞ்சாரம். அரசியல் அசைத்துப் பார்க்கப்படும்.

ஆவணி 19, 20, 21 இந்நாட்களில் கன்னியில் பயணம். நிலம், பூமி, சொத்து சம்பந்த பெரிய சிக்கலும், சட்டக் குழப்பமும் ஏற்படும்.

செவ்வாய்

இந்த ஆவணி மாதம் முழுவதும் மிதுன ராசியில் இருப்பார். மிதுனம் இவரின் பகை வீடு. எனவே இந்த மாதம் சீருடைப் பணியாளர்களான காவல் துறைக்கும், மாணவர்கள், தகவல் தொடர்புத் துறையினருக்கும் செம ஃபைட் வரும். வீண் வதந்தி நிறைய பரவக்கூடும். காவல்துறை அதிகாரிகள், கைபேசி, பணத்திருட்டால் தலை சுற்றிப் போய்விடுவர். நிறைய இடமாறுதல் உண்டு. மனை, பட்டா சார்ந்த பதிவாளர்களின் நிலையை பத்திரிகைகள் வெளிப்படுத்தும்.

புதன்

இவர் சிம்மத்தில் சூரியன், சுக்கிரனோடு, சனியின் பார்வையில் இடிபட்டுக் கிடக்கிறார். வர்த்தகர்கள் மிக மன உளைச்சல் பெறுவர்.இது அரசாங்கத்தின் வரி சம்பந்தமாக அமையும். மாணவர்கள் அரசுக்கு எதிராகக் கொடிபிடிப்பர். இந்த மாணவர்களை சில எதிர்கட்சியினர் தூண்டிவிடுவர்.

குரு

இவர் ரிஷபத்தில் உள்ளார். செவ்வாயின் சாரத்தில் நகர்வு. ஆன்மிகப் பயணம் அதிகரிக்கும். உயர்கல்வி, வெளிநாட்டுக் கல்வி சம்பந்தமான புது சட்டமும் தகவல்களும் வெளியிடப்படும். தங்கத்தின் விலையை உணர்ந்த மக்கள், அவர்களே நிறைய செம்பு சேர்த்த, கொஞ்சம் தங்கமும் உள்ள நகைகளில் ஆர்வம் காட்டத் தொடங்குவர். நிறைய கோவில் பற்றிய செப்பேடுகள் கிடைக்கப்பெறும்.

சுக்கிரன்

இந்த மாத ஆரம்பத்தில் சிம்மத்தில் இருப்பு. கலைஞர்கள் மேன்மை பெறுவர். நிறைய வாய்ப்பு கிடைத்தும் பணவரவு மெதுவாகத்தான் கிடைக்கும். பங்கு வர்த்தகம் நிறைய ஏற்ற- இறக்கமாக நடக்கும். நிறைய காதல் திருமணம் கைகூடும். அனேக காதல் துளிர்க்கும். நிறைய காதல் சண்டையிலும் முடியும். வைர நகைகள் விலையில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படும். அல்லது வைர நகைகளை வேறுவிதமாக மாற்றியமைத்து விற்க முற்படுவர்.

சனி

சனி வக்ரகதியில் சென்றுள்ளார். தனது சொந்த வீடான கும்பத்தில் உள்ளார். சனி வேலை, தொழில் காரகர். எனவே இவை சம்பந்த பின்னடைவுகள் உண்டாகும். வெளிநாட்டு பணிகளில் சேர, சற்று வழிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். மேலும் இந்த சனிபகவான், அரசாங்கத்தைப் பாடாய்ப்படுத்துவதால், அரசு தலைசுற்றி நிற்கும். எனவே அரசு இயந்திரங்கள் ஓட மக்கர் செய்யும். இதனால் மக்களின் தேவையான அரசு சேவைகள் தடங்கலாகும். இந்த ஆவணி மாதம் சனி பார்வையில், சூரியன் அகப்பட்டுக்கொள்வதால், அரசாங்கம் ரொம்ப அல்லாடும்.

ராகு

இவர் மீனத்தில், சனி சாரம் பெற்று நகர்ந்து கொண்டுள்ளார். கடல்மூலம் கள்ளக்கடத்தல் அதிகரிக்கும். திரவங்கள்மூலம் நோய் ஏற்படும். அது குடிக்கும் தண்ணீர், பானம், நல்ல சாராயம், கள்ள சாராயம், பால், மோர் என ஏதோ ஒரு குடிக்கும் வஸ்து மக்களைப் பாடாய்படுத்தும். ராகு மேலும் கடலில் அதகளம் செய்வார்.

கேது

இவர் கன்னியில் சந்திர சாரம் வாங்கிச் செல்லும் வேளையில் செவ்வாயின் பார்வையைப் பெறுகிறார். இதனால் நிறைய சகோதரர்கள் சண்டையிட்டுப் பிரிவர். காவல்துறையிலும் நிறைய பிரிவு ஏற்படும். சில ஆங்கில மருத்துவமனைகளில் சித்த வைத்தியமும் சேர்த்துப் பார்க்கப்படும். செவ்வாய்- கேது சம்பந்தம் இருப்பதால், நிறைய மக்கள் முருக பக்தராகிவிடுவர். நிறைய முருகர் கோவில்களில் புனரமைப்புப் பணி நடைபெறும். இந்த மாதம் செவ்வாய், கேது சம்பந்தம் பெறுவதால், ஸ்ரீராமர் சந்நிதியில் அர்ச்சனை செய்து வணங்கவும். காவல் துறையினர் அருகிலுள்ள முருகன் கோவில், பள்ளிகள் என இவற்றிற்கு ஆன்மிகம், கல்வி சம்பந்த உதவி செய்யுங்கள். சாம்பார் சாதம் தானம் செய்யவும். செவ்வாய் பகை வீட்டில் இருக்கும் இடர் களையப்படும்.

வானிலை

நெருப்பு ராசியில், நெருப்பு கிரகம் சூரியன் உள்ளார். இன்னொரு நெருப்பு கிரகம் செவ்வாய், காற்று ராசியில் உள்ளார். சனி எனும் காற்று கிரகம். காற்று ராசியில் வக்ரமாகி உள்ளார். நீர் ராசியான மீனத்தில் மட்டும், பெரும்போக்கு கிரகம் ராகு உள்ளார். எனவே இந்த அமைப்பின்படி, நிலத்தில் ரொம்ப உஷ்ணக் காற்று வீசும். கடல் மட்டும் சீறிப் பெருக்கெடுக்கும். சந்திரன் விருச்சிகம்; மீனத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மழை பொழிய வாய்ப்புண்டு.