கடந்த அத்தி யாயத்தில் யானைகளின் பயிற்சி முறைகளைப் பார்த்தோம். அவற்றின் மீதப்பகுதிகளை வேள வனப்பு என்ற தலைப் பில் பின்னாளில் பார்ப் போம். இப்போது, குருமடத்தில் நடை பெறும் "ஔவை அழைப்பு' என்னும் உயரிய விழாவைக் காண விருக்கிறோம்.
பெண்ணிற்குள் ஆண்தன்மை!
இத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லப் பட்டதுபோல், ஔவை என்ற சொல்லை அவ்வை எனவும் கூறலாம். ஔவை என்ற சொல், பெண்ணினத்தில் ஆண் தன்மை கொண்டோரைக் குறிப்பிடும் சொல்லாகும். சங்ககாலத்தில் ஒரு பெண்ணிற்குள் ஆண்தன்மை இருப்பதை, அவளது பதின்மூன்றாம் அகவையில் கண்டறிவார்கள். அதனைக் கண்டறிய சில வழிமுறைகள் இருந்துவந்தன. அவற்றைக் கொண்டு, ஒரு பெண் ஔவையாக இருக் கிறாள் என்பதை அறிந்துகொண்டபின், அவளது முழு விருப்பத்துடனே குருகுல மடத்திற்கு அழைத்துச்செல்வார்கள். குருகுல மடத்தில் சீராள குருமார்கள் என்ற பெயரில் பண்பாடுகளைக் கற்றுத் தரும் குருமார்களிடத்திலும், இல்லாள குருமார்கள் என்ற பெயரில் இல்லங்களைச் சீர்படச்செய்யும் வழிமுறைகளைக் கற்றுத்தரும் குருமார்களிடத்திலும் பயிற்சிபெற வைப்பார்கள். குருமடத்தில் ஔவைமார்களுக்குத் தமிழ், தொன்மம், அரசியல், மருத்துவம், புவியியல், தற்காப்பு, பண்பாடு போன்ற துறைகளில் பயிற்சியளித்து, அங்கு வாழும் ஆன்றோர் களிடத்தே சான்றாண்மையும் கற்கச் செய்வார்கள்.
முத்தாரம்மன் திருவிழா பின்னணி!
ஔவையார்களை மன்னவனும் மதித்துத் தொழக்கூடிய ஆன்றோர்களாக மாற்றுவது குருமடத்தாரின் கடமையாகும். சங்க காலத்தில் மன்னவர்களுக்கு ஆலோசனை தரும் ஆன்றோர் அவையத் திலும், புலவர்கள் அவையிலும் இவர் களுக்கென்று தனியிடமுண்டு. இவர்களின் வாழ்வியல் தரம் உயர்ந்த நிலையில் இருந்ததால், சங்ககாலப் பெண்ணினங்களைச் சீர்தூக்கும் பணிகளில் பெரும்பங்கு வகித்தனர். ஒரு ஆண் சான்றோனுக்கு இணையான பெண் சான்றோளாக விளங்கினர். இவர்கள் கூறும் அறிவுரைகள், மன்னவனின் செங்கோலைச் சாயாமல் நிலைநிறுத்தப் பெரும்பங்கு வகித்தன.
இரண்டு தமிழ் மன்னர்களுக்கிடையே போர் மூளாமல் இருப்பதற்காகவும், வீணாக உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுப் பதற்காகவும், இவர்கள் பெருமுயற்சியெடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஒருசில சமயங்களில் மன்னர்களுக் கிடைய நட்பை மேம்படுத்த, அவர்களுக் கிடையே திருமண உறவுகளையும் நிகழ்த்தி வைத்துள்ளனர். இவ்வாறு திருமணங்கள் நிகழ்த்தி வைக்கப்படுவது வழக்கமாகவே மாறியது. உதாரணமாக, பாண்டியநாடும் சேரநாடும் சந்திக்கும் "முப்பந்தல்' என்ற இடத்தில், சேர, சோழ, பாண்டிய அரசர் களும் வேளிர் மன்னர்களும் ஒன்றுகூடி, ஔவையார் தலைமையில் திருமண உறவுகளை உருவாக்கும் பெருவிழாக்கள் நடத்தப்பட்டன. இதன் நினைவாக, ஔவையார்க்கு மன்னர்கள் முத்துமாலைகளை அணிவித்து கௌரவப்படுத் தினர். அந்த நிகழ்வுகள் இன்று புராணமாக மாற்றப்பட்டு முத்தாரம்மன் திருவிழாவாக, அதே இடத்தில் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அத்தகைய மதிப்புமிகு ஔவை தான், ஆதிகுருவெனப் போற்றப் படும் முருகப்பெருமானோடு புராணங்களில் பேசப்படும் அளவுக்கு, தெய்வத்திற்கு இணையாகத் தமிழகத்தில் வணங்கப்பட்டாள்.
அந்தப்புரத்தில் ஒரு புனித இல்லம்!
இன்று மாசி, புரட்டாசி போன்ற மாதங்களில் செவ்வாய்க் கிழமை இரவுகளில், செவ்வாய்ச் சாமியாக தமிழ்ப் பெண்ணினம் ஔவையை தெய்வமாகப் பூசித்து, அவளால் மக்களிடம் சென்று சேர்க்கப்பட்ட மருத்துவத்திற்கு நன்றிக்கடன் செய்யும் சடங்கு கள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வளவு உன்னதமான நிலையை ஔவையார்கள் அடைவதற்குக் காரணமாக இருந்தவர்கள், குருமடத்திலிருந்த இல்லாள குருமார்களும், சீராள குருமார்களும்தான். ஒரு தமிழனின் வாழ்வோடு தொடர்புடையதாகவுள்ள அத்தனைத் துறைகளிலும் பண்டித்தியம் அடையுமாறு ஔவையார்களுக்குப் பயிற்சி தருவார்கள். விவசாய அறிவு, வானவியல், இல்லற தர்மம், பொருளாதாரம், நீதி, குடும்பவியல் சிக்கல்களை அகற்றுதல் போன்றவற்றை இல்லாள குருமார்கள் கற்றுத் தருவார்கள்.
அரசியல், சீதோஷ்ணம், புவியியல், நாட்டின் எல்லை, போர்ப் பயிற்சி, நிலம் சார்ந்த புவிக்கொள்கை, மருத்துவம், நோய் நிமித்திகம், வேளாண் நிமித்திகம் போன்றவற்றை சீராள குருமார்கள் கற்றுத்தருவார்கள். மட குருமார்கள், சங்கத்தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான உன்னத முறைகளை, தமிழர்களது பண்பாடு என்ற வடிவத்தில் கொடுத்தனர். இதையே ஔவை, தமிழகம் முழுவதுமிருந்த பெருநகரம்முதல் குக்கிராமங்கள்வரை சென்று, தான் கற்ற அனைத்துத் துறைகளையும் தமிழ்ப் பெண்களுக்குக் கற்றுத்தந்தனர். இவர்கள் செல்லுமிடமெல்லாம் நடைப்பயணமாகவே சென்றடைவதால், அதிக அனுபவங்களைத் தங்கள் வயது ஏற ஏற அதிகமாகப் பெற்றுக் கொண்டே இருப்பார்கள். இத்தனை சிறப்புமிக்க ஔவையார்களால் மட்டுமே, அரசாளும் பேரரசனுக்கு இணையாக இருக்கப்போகும் இளவரசிக்கு, அனைத்துத் துறைகள் பற்றிய பூரண அறிவைக் கற்றுத்தரமுடியும். இத்தகைய அறிவுசார்ந்த ஞானிகளைத் தங்கள் அரண்மனைக்கு அழைத்துச்செல்வதைப் பெரும் பாக்கியமாக அன்றைய மன்னர்கள் கருதினர். எனவே, ஔவையாரை குருமடத்திலிருந்து அரண் மனைக்கு அழைத்துச் செல்வதை "அவ்வை அழைப்பு' என்ற சடங்காக நிகழ்த்தினர்.
தங்களுக்குத் தேவை யான அனைத்துத் துறைகள் சம்பந்தமான அனைத்து சந்தேகங்களையும், ஒரு மணப் பெண்ணானவள் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரே நபர் ஔவையார்தான். ஒரு பேரரசியாகப் பட்டம் சூட்டப்படுபவளுக்கு எவ்வளவு அரசியல் ஞானம் வேண்டுமென்பதை அறிந்திருப்பவர் ஔவையார் மட்டுமே. எனவே, குருமடத்திலிருந்து வரும் ஔவையார் தங்குகின்ற ஒரு புனிதமான இல்லமாக, அந்தப்புரத்தின் ஒரு பகுதியை ஒதுக்கித் தருவார்கள். ஔவையார் அரண்மனைக்கு வரும் பாதையில், பொதுமக்கள் அனைவரும் அவரைக்காண ஆவலுடன் காத்திருப்பர். அவர் மக்களைச் சந்திக்கும் முக்கிய இடங்களில் சேவடிச் சாலைகளை அமைத்திருப்பர்.
அறவோர் வாழ்க்கை!
பெரும்பாலும் கன்னிப் பெண்களையும் வளரிளம் பெண்களையுமே ஔவை சந்தித்து உரையாடி, அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விடைதருவார். ஒவ்வொரு கிராமத்தையும் அவர் கடந்து செல்லும்போது, அவ்வூரிலிருக்கும் மைய மண்டபத்தில் தமிழ்ப் பண்டிதர்களும் கிராமசபை ஆன்றோர்களும் வரவேற்று மரியாதை செய்து, பரிசுப் பொருட்களும் பழக்கூடைகளும் தந்து உபசரிப்பர். ஔவையாரிடம் தங்களது சந்தேகங்களையும், தமிழ் சார்ந்த பலதுறைகளையும் கலந்துபேசி உளம்மகிழ்வதை, தங்கள் வாழ்நாளில் கிடைத்த பெரும்பேறெனக் கருதுவர். பலநாட்கள் அவரோடு பேசிய நிகழ்வுகளை அவ்வூராரிடம் பேசி மகிழ்வர்.
ஔவையார் கடந்துசெல்லும் சில முக்கிய இடங்களில், தன் கருத்துகளைப் பிரதிபலிக்கும் கவிகளைப் பாடி, அதைத் தன் கையேட்டில் எழுதித் தருவார். அதைப் பெற்றவர்கள், அதனை வாழ்நாள் முழுமைக்கும் கிடைத்த பொக்கிஷமாகக் கருதுவர். சிறு குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை, தான்பெற்ற பரிசுப் பொருட்களைக் கொடுப்பதால் மகிழ்ச்சியுறுவதைப் பார்த்து, மனம் மகிழ்பவரே ஔவை. அதனால், "அறவோர்' நிலையிலேயே அவர்களது வாழ்க்கைமுறை இருக்கும். ஆகவே, துறவறம்பூண்ட ஞானியரே ஔவை. இவர்களை அழைத்துச்செல்லும் சடங்கு, ஒரு விழாபோலவே நடைபெறும்.
ஒரு குருமடத்திலிருந்து ஔவை தன் பயணத்தைத் தொடங்கிவிட்டார் எனில், அவர் செல்லவிருக்கும் பெருவழிப்பாதையெங்கும் சுத்தம் செய்யப்பட்டு, காவல்பணியும், நீர்ப்பந்தலும், சேவடிச் சாலைகளும் உருவாக்கப்படும். நீர்நிலை சார்ந்த இடங்களில், அவரது இரவுத்தங்கல் சேவடிச் சாலைகளிலேயே இருக்கும்.
அவரோடு மருத்துவச்சியும் அலங் காரகை எனப்படும் போர்க்கலை கற்ற மடவைப் பெண்ணும் துணைக்கு இருப்பர். ஆதலால், ஓரு ஊரை ஔவையார் கடந்துசெல்லும்போது, அவ்வூரிலுள்ள பாமர மக்கள், மன்னருக்குக் கிடைக்காத பாக்கியம் தங்களுக்குக் கிடைத்ததாகக் கருதுவர். ஔவையார் தன் கைப்பட ஏதேனும் எழுதிக் கொடுப்பாரா என ஏங்கித் தவிப்போரும் இருப்பர்.
வடக்கு வாயில் செல்லி!
ஔவையாரால் கிடைத்த எப்பொருளாக இருந்தாலும் பாரம்பரியமாக வைத்துப் பாதுகாப்பர். ஔவையாரைச் சந்திப்பதைக் கணியர்களும் பாணர்களும் அதிகம் விரும்புவர். ஒவ்வொருவரின் அறிவுத்திறனுக்கு ஏற்றாற்போல் அளவளாவும் அறிவுத்திறன் கொண்டவர்தான் ஔவையார். எனவே, அரச குடும்பத்தார் ஓரு அரண்மனைக்கு ஔவையை அழைத்துச் செல்ல வரும்போது, குருமடத்தார் சம்மதத் தின்பேரில், நீண்ட தூய வெண்ணாடை, முத்துமாலை, வெண் துளசிமாலை, தானியங் கள், பழங்கள், எழுதா ஏட்டுக்கட்டுகள், எழுத்தாணிகள் போன்றவற்றை அரசப் பரிசுகளாக- காணிக்கையாகத் தருவார்கள். பெரும்பாலும் ஒரு குருமடத்தின் வடக்கு வாயில் வழியேதான் ஔவையாரை குருமடத்தார் வழியனுப்பி வைப்பார்கள். எனவேதான், "வடக்கு வாயில் செல்லி' எனப் பெயர்பெற்று, அதுவே பின்னாளில் ஒரு வழிபாட்டுமுறையாக உருவானது.
காவடிக் குறியீடு!
குருமடத்திலிருந்து ஔவையார் புறப் பட்டவுடன், எத்தனை நாட்களுக்குள் அவர் அரண்மனை சென்றடைவார்- எங்கெங்கெல்லாம் அவர் ஓய்வெடுப்பார்- எப்பொழுதெல்லாம் அவர் மக்களோடு பேசுவார் என்பதை திட்டமிடப்பட்ட பயணக் குறிப்புகளாக, குருமடத்தாரிடம் அரண்மனை அரச குடும்பத்தார் கொடுப்பார்கள். குருமடத் தலைமை குரு ஔவைக்கும், அவருடன் செல்லும் பெண்களுக்கும் கைகளில் முருகுக் காப்பு அணிவிப்பர். அவை செம்பு, தந்தம், சங்கு வளையக் காப்புகளாக இருக்கும். இதில் செம்பு முறுக்குக்கம்பி வளையல் காப்பாகவும், தந்தம், சங்கு வளையக் காப்பு களில் +++++++ என ஆறு முத்திரைகளும் செதுக்கப்பட்டிருக்கும். இந்த ஆறு முத்திரைகளும் முருகப்பெருமானைக் குறிப்பவை. கார்காலத்தில் விண்ணின் உச்சி யிலிருக்கும் "ஆறல் மீன்கள்' என சங்கத் தமிழர்களால் அழைக்கப்படும் கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தைக் குறிக்கும் + என்ற அடையாளம் முருகனைக் குறிப்பதாகும். + என்றால் காவல். இது காவடி என்ற பயணமுறையிலிருந்து வந்தது. ஒரு பயணத்தின்போது அது கால்நடைப் பயணமாக இருப்பின், சுமைகளை அவர்கள் எளிதாகக் கொண்டுசெல்வதற்கு, ஒருவரது தோள்மீது கல்மூங்கில் கம்பின் இருபக்கங்களிலும் சுமைகளைத் தொங்கவிட்டுத் தூக்கிச் செல்வார்கள். இவ்வாறு சுமை தூக்கினால், அதிகமான பொருட்களை எளிதாகச் சுமக்கமுடியும். இருபுறச் சுமையால் மூங்கில் கம்பு நடுவே ஒடிந்துவிடாமலிருக்க, சுமைகள் தொங்கும் இரு ஓரங்களிலும், இரண்டு மூங்கில் தப்பைகளை வளைத்துக் கட்டிவிடுவார்கள். இதைத்தான் காவடிச்சுமை என்றழைத்தனர்.
ஒருவர் தன்மீது சுமைதூக்கும் செயலை + இவ்வாறு குகை ஓவியங்களில் வரைந்துகாட்டினர். இதிலிருந்துதான் காலி என்ற தமிழ் எழுத்திற்கான முதல் எழுத்தின் என்ற + வடிவத்தை ஆதித்தமிழர்கள் எழுதினர். + என்ற குறியீடு, பாதுகாப்பான அல்லது காவல் என்ற பொருளைத் தந்தது. கா+அடி- பாதுகாப்பான பயணம் எனப் பொருள்பட, காவடியென, சுமை தூக்கியவாறு கால்நடையாகச் செல்லும் பயணத்திற்கு "காவடி' எனப் பெயரானது.
முருகப்பெருமானை இதே குறியீட்டால், தங்களைக் காக்கும் தெய்வமாக, தங்களது முதல் குருவாக நினைத்து, குருமடத்தார் அணிவிக்கும் வளைக்காப்புகளில் முருகப்பெருமானை +++++++ என்ற வடிவில் செதுக்கி, அவரை வணங்கி அணிவிப்பார்கள். முருகப்பெருமானுக்கு உகந்தது கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் என்பதால், முருகப்பெருமான் என்றும் தம்முடனே இருந்து பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வுடன், சங்கத்தமிழ்ச் சமுதாயமானது தங்களது வீட்டுச் சுவர்களிலும், மண்பானைகளிலும் +++++++ எனக் குறியீடு இடுவது வழக்கமானது.
பயணம் தொடரும்!
தொடர்புக்கு: 99445 64856
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்