சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டைக்குள் அருளாட்சி நடத்துகிறார்கள் அய்யன் காய நிர்மலேஸ்வரர், அன்னை அகிலாண்டேஸ்வரி, கல்வராயன் மலையில் உற்பத்தியாகி, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. நீ வா நதி, வசிஷ்ட நதி என்றழைக்கப்படும் வெள்ளாறு. இந்த ஆற்றின் இருகரை நெடுகிலும் வசிஷ்ட முனிவரால் உருவாக்கப்பட்ட 12 சிவாலயங்கள் உள்ளன. இவை 12 ராசிக்குரிய ஆலயங்களாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள்.

கல்வராயன் மலையடிவாரத்தில் உள்ளது பேளூர். இங்கு துவங்கி அடுத்து ஏத்தாப்பூர், ஆத்தூர், ஆறகளூர், கூகையூர், காரியானூர், திருவாலந்துறை, திருமாந் துறை, சு. ஆடுதுறை, திருவதிஷ்ட்டத்துறை எனும் திட்டக்குடி, திருவட்டத்துறை, முடவன்துறை என்னும் கோட்டைக்காடு ஆகிய 12 இடங்களில் சிவாலயங்கள் அமைந்துள்ளன.

பேளூரில் தொடங்கி மூன்றாவது சிவாலயம் ஆத்தூர் கோட்டைக்குள் அமைந்துள்ளது. இந்த ஆலய இறைவன் எப்படித் தோன்றினார்- இதன் இதிகாச புராண சம்பவங்கள் எவை என்பதைப் பார்க்கப் போகிறோம்.

ss

ஆத்தூர் சிவாலயம் அக்னித்தலமாகவும் விளங்கி வருகிறது. வசிஷ்ட மகரிஷி இப்பகுதியில் இறைவனை வேண்டி பல யாகங்களை நடத்தி யுள்ளார். அப்போது அசுரர்கள் வசிஷ்டர் செய்த யாகத்திற்கு பல்வேறு இடையூறுகளைச் செய்து வந்துள்ளனர் இதன் காரணமாக வசிஷ்டரால் தொடர்ந்து யாகத்தை நடத்த முடியவில்லை இதையறிந்த நாரத மகாமுனிவர் வசிஷ்டரை வந்து சந்தித்தார். அவர் இறைவன் சிவபெருமானை லிங்க வடிவில் உருவாக்கிப் பூஜைசெய்யுமாறு ஆலோசனை வழங்கினார். அதன் படி வசிஷ்டர் இறைவனை வேண்டித் தவம்செய்ய தகுந்த இடம் தேடினார்.

அப்போது மேடாக இருந்த இப்பகுதியில் நடந்துசென்ற வசிஷ்ட முனிவரின் கால் ஓரிடத் தில் இடறியது. கீழே பார்த்தபோது சுயம்புலிங்கமாக ஒரு லிங்கம் இருப்பதைப் பார்த்தார். தமது கால்பட்டு லிங்கத்தின் ஒரு பகுதி சேதமடைந்திருப்பதைக் கண்டு கலங்கினார். இறைவனின் உடல் மீது தனது கால் பட்டுவிட்டதே என்ற வருத்தம் மேலிட்டது.

அப்படிப்பட்ட இந்த லிங்கத்தை வைத்துப் பூஜை செய்யலாமா? அபச்சாரம் அல்லவா என்ற குழப்பத்துடன் நின்றுகொண்டி ருந்தார் வசிஷ்டர்.

அப்போது இறைவனின் குரல் அசரீரியாக, "வசிஷ்ட முனிவரே, லிங்கத்தின்மீது கால் பட்டதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். தயங்காமல் அதைப் பிரதிஷ்டை செய்து பூஜைசெய். அதற்கு தூப தீபம் காட்டும்போது ஒரு அதிசயம் நிகழும்' என்று கூறியது. இதைக்கேட்டு மகிழ்ச்சி யடைந்த முனிவர், அந்த லிங்கத்தை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்து அர்ச்சனை, ஆராதனைகள் செய்தார். நிறைவாக சிவலிங்கத்துக்கு அவர் தீபாரதனை காட்டினார். அப்போது அந்த சிவலிங்கம் ஜோதி சொரூபமாய், நெருப்புப் பிழம்பாகக் காட்சியளித்தது.

அந்தத் திருமேனியில் ஏற்பட்ட பிரகாசமான ஒளியைக் காண வசிஷ்டரின் கண்கள் கூசின. ஒரு கணம் அவர் தமது கண்களை மூடித் திறந்தார். அப்போது சற்று பழுதடைந் திருந்த அந்த லிங்கம் முழுமையாக மாறியிருந்தது.

அந்த ஒளிபிழம்பானது வசிஷ்டரின் யாகத்திற்கு இடையூறு செய்த அசுரர்களை சென்று அழித்தது இறைவனின் கருணையை எண்ணி மனம் களித்தார் வசிஷ்டர்.

அதன்காரணமாக அந்த சிவலிங்கத்திற்கு காயநிர்மலேஸ்வரர் என்ற பெயர் உருவானது. "காயம்' என்றால் உடல்; "நிர்மலம்' என்றால் பழுதில்லாதது என்று பொருள்படும். இறைவன் லிங்கத்தின் மேனியிலிருந்த குறையை நீக்கி வசிஷ்டருக்குக் காட்சி கொடுத்ததால் இறைவனுக்கு "காயநிர்மலேஸ்வரர்' என்ற பெயர் நிலைத்துவிட்டது.

அக்னிப் பிழம்பாய்க் காட்சிகொடுத்ததால் இந்த ஆலய அக்னித் தலமாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். வசிஷ்டரால் உருவாக்கப்பட்டு அருளாட்சி செய்யும் இறைவனுக்கு வசிஷ்டேஸ்வரர் என்ற பெயரும் உண்டு, இவ்வூருக்கு ஆத்தூர் என்று எப்படி பெயர் ஏற்பட்டது? இப்பகுதியில் வசிஷ்டரால் உருவான நீ வா நதி எனும் வெள்ளாறு, சுவேதா நதி, மலையாறு, சிற்றாறு என சிறுசிறு நதிகள் ஓடிக்கொண்டிருந்தன. அந்த நதிகளின் கரையில் இந்த ஊர் அமைந்ததன் காரணமாக ஆற்றூர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் ஆத்தூர் என்று மாறிப் போனது. இந்த ஊரை அனந்தன் என்ற சிற்றரசன் ஆட்சிசெய்து வந்துள்ளார். அவர் இவ்வாலயம் உருவாகக் காரணமாக இருந்துள்ளார். அதனால் இவ்வாலய இறைவனுக்கு அனந்தேஸ்வரர் என்ற பெயரும் உண்டு, இந்த ஊருக்கு அந்த மன்னனின் பெயரால் அனந்தகிரி என்றும், வசிஷ்டர் இங்கு தவம் செய்ததால் வசிஷ்டபுரம் என்ற பெயரும் உண்டு.

இவ்வூர் கோட்டைக்குள் இறைவன் ஆலயம் எப்படி உருவானது.

ஆலயம் உருவானபிறகுதான் கோட்டை உருவானது.

சுமார் 1,000 ஆண்டுகளுக்குமுன்பு இந்தக் கோட்டை கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கி.பி. 1559-1585-ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் வாழ்ந்த கெட்டி முதலியார் என்பவர் இந்த கோட்டையைக் கட்டியதாக ஒரு தகவல் உள்ளது. அந்த கெட்டி முதலியார் ஒருமுறை காட்டிற்கு வேட்டையாடச் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு புதரிலிருந்து முயல் ஒன்று கிளம்பி ஓடியுள்ளது. அந்த இடம் வித்தியாசமாகத் தெரிந்துள்ளது. அந்த இடத்தை கெட்டி முதலியார் ஆய்வுசெய்தபோது, ஏழு இரும்புப் பானைகளுக்குள் தங்கப் புதையல் இருந்ததாகவும், அதைக் கொண்டு இந்தக் கோட்டையை அவர் கட்டியதாகவும் கூறுகின்றனர்.

அதன்பிறகு, போரில் மைசூர் சிக்க தேவ ராஜா, இந்தக் கோட்டையைக் கைப்பற்றியதாகவும் கூறுகின்றனர். 62 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோட்டையை, 17-ஆம் நூற்றாண் டில் லட்சுமண நாயக்கர் என்ற பாளையக் காரர்தான் கட்டினார் என்றும், அதன்பிறகு ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோர் படையெடுத்து வந்து இந்தக் கோட்டைக் கைப்பற்றினார்கள் என்றும், அவர்கள் வசம் இருந்த இந்த கோட்டையைப் பிறகு ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார் கள் என்றும் கூறப்படுகிறது. அதன்பிறகு 1854 வரை ஆங்கிலேயர்களின் படைகள் இங்கே இருந்துள்ளன. தற்போது இந்தக் கோட்டை தொல்லியல் துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது கோட்டையின் சில பகுதி கள் பாழடைந்துள்ளன. பலர் இங்கே குடிசை போட்டும் வாழ்ந்துவருகிறார் கள். அப்படிப்பட்ட இந்த கோட் டைப் பகுதியில்தான், காய நிர்மலேஸ்வரர், மகாவிஷ்ணு வான பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆகிய இருவருக் கும் ஆலயங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும் இவ்வால யம், 907 முதல் 953 வரையிலான, சோழ மன்னர்களில் ஒருவ ரான பராந்தக சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்றும், இவ்வாலயத்தின் கட்டடக்கலை ஆதித்ய சோழன் காலத்தியது என்றும் சில கல்வெட்டு ஆய்வுகள் கூறுகின்றன.

அதன்பிறகு விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் புனரமைப்புகள் செய்யப்பெற்றுள்ளதாக ஆதாரங்கள் அடிப்படை யில் கூறப்படுகிறது. இவ்வாலயத்தில் ஒளிப்பிழம் பாகப் பிரகாசிக்கும் மூலவர் காயநிர்மலேஸ்வரரை வணங்குவோர் வாழ்க்கை ஒளிவீசிப் பிரகாசிக்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. மேலும் இந்த இறைவனின் ஒளியினால் அன்னை அகிலாண்டேஸ்வரியும் பிரகாசிக்கிறாள். இந்த அன்னையின் சிலையில் ஒருவித ஈர்ப்புசக்தி உள்ளதை பக்தர்கள் உணர்கின்றனர்.

இந்த ஆலயத்திற்குமுன்பு விநாயகர் சந்நிதி உள்ளது. இவருக்கு "தலையாட்டிப் பிள்ளையார்' என்ற பெயரும் உண்டு. இதற்குக் காரணம், சோழ அரசர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுக் குக் கட்டுப்பட்ட வானவராயன் என்ற சிற்றரசன் இந்த பகுதியை ஆட்சிசெய்து வந்துள்ளார். அவர் இப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று இவ்வாலயத்தைப் புனரமைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டுவந்துள்ளார் அப்போது விநாயகரிடம் தினசரி வந்து உத்தரவைக் கேட்டு, கோவில் திருப்பணிகளை செய்துவந்துள் ளார். ஒவ்வொரு நாளும் பணி களைப் பார்வையிட்டு முடிந்த பிறகு பிள்ளையாரிடம் சென்று, "கோவிலை நன்றாகக் கட்டிக் கொண்டிருக்கிறேனா?' என்று கேட்பாராம். அப்போது அதை ஆமோதிக்கும் விதமாக தனது தலையை ஆட்டி இசைவு தெரிவிப்பாராம். அதன் காரணமாகவே பிள்ளையாருக்கு தலையாட்டிப் பிள்ளையார் என்ற பெயர் தற்போதும் நிலைத்து நிற்கிறது. இவ்வாலய விநாயகர் தனது தலையை இடப்புறமாக சற்று சாய்த்தபடி இருப்பதைக் காணமுடியும்.

இப்பகுதியை ஆட்சிசெய்த சத்ரிய வம்சத்தைச் சேர்ந்த கௌசிக மன்னன் ஒரு முறை தன் பரிவாரங்களுடன் வேட்டையாடச் சென்றார். வேட்டை முடிந்ததும் வீரர்களும் கௌசிக மன்னனும் பசியினால் களைப் படைந்தனர். அந்தக் களைப்போடு காட்டை விட்டு அரண்மனை நோக்கிப் புறப்பட்டனர்.

வழியில் வசிஷ்ட மகரிஷியின் குடில் இருப்ப தைக் கண்டனர் அங்கே சென்ற மன்னனும் அவன் படைவீரர்களும் வசிஷ்ட மகரிஷியிடம் பசியோடு இருப்பதைக் கூறினர்.

உடனே வசிஷ்டர் தன்னிடமிருந்த காமதேனுப் பசுவிடம் மன்னனும் அவனது படைவீரர்களும் பசியாற்றவேண்டும் என்று கூறி தியானம் செய்தார். தெய்வீக சக்திகொண்ட காமதேனு அனைவருக்கும் உணவளித்துப் பசியாற்றியது. இதைக்கண்ட கௌசிக மன்னன், "இப்படிப்பட்ட தெய்வசக்திகொண்ட பசு முனிவரான உங்களிடம் இருப்பதில் பயனில்லை. மன்னனான என்னிடம் இருக்க வேண்டும். அதனால் காமதேனுவை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்' என்று கேட்டார். அதைக்கேட்ட வசிஷ்ட முனிவர், "இந்த காமதேனு தேவேந்திரனுக்கு சொந்தமானது. அதை உங்களிடம் அளிக்கும் உரிமை எனக் கில்லை' என்று மறுத்துக் கூறினார்.

இதனால் கோபமடைந்த கௌசிக மன்னன் தனது வீரர்களைக் கொண்டு காமதேனுவை பலவந்தமாகப் பிடித்துவருமாறு உத்தர விட்டார். மன்னனின் வீரர்கள் காமதேனு வைப் பிடிக்க முயன்றனர். அப்போது காமதேனுவின் பெருமூச்சுக்காற்றில் ஏராளமான வீரர்கள் தூக்கி வீசப் பட்டனர். பலர் புறமுதுகிட்டு ஓடி னார்கள். இதைக்கண்ட மன்னன் தன் தவறை உணர்ந்து வசிஷ்ட மகரிஷியின் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டார். அதேநேரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் அவர்களுக்குக் காட்சி யளித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த இடம் இங்கேதான் என்பதற்கு ஆதாரமாக பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம் உருவானதாகக் கூறுகிறார்கள்.

புகழ்மிக்க காயநிர்மலேஸ்வரர் ஆலயத்தின தல விருட்சமாக மகிழமரம் உள்ளது, ஆலயத் தின் உள்ளே வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான், லட்சுமிதேவி, சரஸ்வதி தேவி, லிங்கோத்பவர், துர்க்கை, பிரம்மா, சூரிய பகவான், சனி பகவான், பார்வதி, ஆஞ்சனேயர், நாகர்கள் சந்நிதிகள் உள்ளன. மேலும் சதுர்ப்புஜ பைரவர், அஷ்டபுஜ பைரவர், சொர்ண ஆகர்ஷண பைரவர், என வெவ்வேறு வடிவங்களில் பைரவர் எழுந்தருளியுள்ளார்.

மூலவர் காயநிர்மலேஸ்வரருக்கு வலப்புறத் தில் தனிச்சந்நிதியில் தாயார் அகிலாண்டேஸ் வரி எழுந்தருளியுள்ளாள். இந்த அம்மன் கோவிலில் வழங்கப்படும் குங்குமத்தை கர்ப்பிணிப் பெண்கள் நெற்றியில் இட்டுக் கொண்டால் அவர்களுக்கு சுகப்பிரசவம் நடக்கும் என்பது பலரது அனுபவத்தின் சாட்சி யாக உள்ளது. திருமணத் தடை உள்ளவர்கள் வழிபாடு செய்வதால் தடைகள் நீங்கி உடனடி யாகத் திருமணம் நடக்கிறது. திருமணம் முடிந்த தம்பதிகளுக்கு விரைவில் மகப்பேறு பாக்கியமும் கிடைக்கிறது, இவ்வாலயக் கருவறை வெளியில் எவ்வளவு பனி, மழைபெய்து குளிர்ச்சியாக இருந்தாலும், கருவறைக்குள் மட்டும் எப்போதும் வெப்ப மாக இருப்பதை உணரமுடியும் என்கிறார்கள் இவ்வாலய அர்ச்சகர்கள்.

காலை 7.00 மணிமுதல் மதியம் 12.00 மணிவரையிலும்; மாலை 4.30 மணிமுதல் இரவு 8:30 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

சென்னை- சேலம் (உளுந்தூர்பேட்டை வழி) சாலையில், தலைவாசல்- சேலத் திற்கு இடையில் அமைந்துள்ளது ஆத்தூர்.

ஆத்தூர் பஸ் நிலையத்திலி ருந்து ஒரு கிலோமீட்டர் தொலை வில் காயநிர்மலேஸ்வரர், பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயங்கள் அமைந்துள்ளன. "விரைந்து வாருங்கள்; இறைவ னின் அருளைப் பெற்றுச் செல்லுங் கள்' என்கிறார்கள் ஆத்தூர் நகர வாசிகள்.