கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களுக்குமுன்பு மணியுகம் ஒன்று நடந்துள்ளது. அந்த யுகத்தில் முழுமுதற்கடவுளான சிவபெருமானுக்கும் பிரம்மாவுக்கும் பிரச்சினை ஒன்றை உருவாக்கினாள் அன்னை பார்வதி. காரணம், சிவன், பிரம்மா இருவருக்குமே ஐந்து தலைகள். படைப்புத் தொழிலைச் செய்துவந்த பிரம்மனுக்கு ஆணவம் அதிகரித்தது.
ஒருமுறை பிரம்மன் சிவனைக் காண கயிலாயம் சென்றார். அப்போது அங்கு சிவபெருமான் இல்லை. பிரம்மன் புத்தி தடுமாறி சிவபெருமானின் ஆசனத்தில் அமர்ந்துவிட்டார். ஆசனத்தில் அமர்ந்துள்ளது பிரம்மா என்றறியாத பார்வதி அவருக்குப் பாதபூஜை செய்தாள். பிறகு நிமிர்ந்து பார்த்தபோது அமர்ந்திருப்பது பிரம்மன் என்பது தெரியவந்தது. (எல்லாம் அறிந்த அன்னை பார்வதிக்கு இது தெரியாதா?) கடும் கோபம்கொண்ட பார்வதி சிவபெருமானிடம் பிரம்மனின் செயலைக் கூறி, "அவருக்கும் ஐந்து தலை; உங்களுக்கும் ஐந்து தலை. எனவே ஆசனத்தில் அமர்ந்திருப்பது நீங்களென நினைத்து பிரம்மனுக்கு பூஜைசெய்து விட்டேன். தான் பிரம்மன் என்பதை அவர் கூறவில்லை. இப்படி அவமரியாதை செய்த பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளியெறியவேண்டும்" என்று கூறினாள்.
பிரம்மன்மீது கோபம்கொண்ட சிவபெருமான், பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளியெறிந்தார். வலியினால் துடித்த பிரம்மன் சிவ பெருமானைப் பார்த்து, "என் தலையிலிருந்து கிள்ளிய தலை உங்கள் கையிலேயே ஒட்டிக்கொள்ளட்டும். உமக்குத் தரும் உணவை அந்த கபாலம் சாப்பிட்டுவிடும். நீங்கள் கடும்பசியோடு பித்தனாக அலைந்து திரியக் கடவீர்" என்று சாபமிட்டார். தன் கணவரின் தலையை எடுப்பதற்குக் காரணமாக இருந்த பார்வதியைப் பார்த்து சரஸ்வதி கோபத்துடன், "நீ உன் அழகையிழந்து வயதான கிழவியாக மாறி, கந்தல் ஆடையுடன் அலைந்து திரிவாய்" என்று சாபமிட்டாள்.
சிவபெருமானும் பார்வதியும் அலங்கோல நிலையில் பல இடங்களில் அலைந்து திரிந்தனர்.
இறுதியில் திருவண்ணாமலை வந்த பார்வதி, அங்குள்ள குளத்தில் குளித்தபோது அவளது வயதான தோற்றம் மறைந்து பழைய உருவத்தை அடைந்தாள். அப்போது அண்ணன் திருமாலிடம் பார்வதி சாப விமோசனம் குறித்துக் கேட்க, திருமால், "திருவண்ணாமலைக்குக் கிழக்கே மலையரசன் என்ற அரசன் ஆட்சிசெய்யும் மேல்மலையனூர் உள்ளது. அங்குசென்று, அங்குள்ள சுடுகாட்டில் சிவபெருமானை தங்கவைத்து, நவதானியங்களால் செய்யப்பட்ட சுண்டல், கொழுக் கட்டை ஆகியவற்றைப் பிசைந்து, மூன்று சிவலிங்கங்கள் உருவாக்கி, அவற்றை வழிபட்டபிறகு, ஒரு கவளத்தை சிவபெருமான் கையிலுள்ள திருவோட்டில் போட்டுவிடு. கபாலம் அதை சாப்பிடும். இரண்டாவது கவளத்தையும் போடு.
அதையும் அந்தத் கபாலத் தலை சாப்பிடும். மூன்றாவது கவளத்தை திருவோட்டில் போடுவதுபோல் பாவனை காட்டி பூமியில் இறைத்துவிடு. அந்த உணவின் சுவையில் மயங்கும் கபாலம் தன்னிலை மறந்து, சிவபெருமான் கையைவிட்டுக் கீழே இறங்கி, இறைந்துகிடக்கும் உணவை சாப்பிடத் தொடங்கும். அப்போது நீ ஆக்ரோஷமான உருவமெடுத்து உனது வலக் காலால் அந்த கபாலத் தலையை மிதித்துக்கொள். அப்போது சிவபெருமான் பழையநிலையை அடைவார்'' என்று கூறினார்.
அதன்படியே மேல்மலையனூர் சுடுகாட்டில் மூன்று சிவலிங்கங்கள் உருவாக்கி வழிபட்ட பார்வதி, திருமால் கூறியபடி உணவைத் தயார்செய்து சிவபெருமானின் திருவோட்டில் போட, கபாலம் சாப்பிட்டது. மூன்றாவது உருண்டையை பூமியில் போட்டுவிட, சிவபெருமானின் கையிலிருந்த கபாலம் இறங்கிச்சென்று அதை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போது அன்னை பார்வதி ஆங்கார உருவமெடுத்து, கையில் சூலத்துடன் தனது வலக் காலால் கபாலத்தை மிதித்துக்கொள்ள, சிவபெருமானுக்குப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கி அவர் பழையநிலையை அடைந்தார்.
பார்வதி ஆங்காரத்துடன் தோன்றியதால் அங்காளம் மன் என்று பெயர்பெற்றாள்.
அப்போது அம்மன், "நான் இங்கேயே கோவில்கொண்டு என்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டிய வரமளித்து குறைவின்றி சகல நன்மைகளும் பெறும் வகையில் அவர்களை வாழ வைப்பேன்'' என்று கூறினாள்.
அப்படி அங்காளம்மன் கோவில் கொண்டுள்ள இடம்தான் மேல்மலையனூர்.
மேலும் இந்த சம்பவம் நடக்கும்போது, திருவண்ணாமலையிலிருந்து அன்னை மேல்மலையனூர் வரும்போது, தாயனூர் என்ற ஊரிலுள்ள குளத்தில் குளிக்கச் சென்றாள். அப்போது, தனது கழுத்திலிருந்த ஆரத்தை கரையில் கழற்றி வைத்துவிட்டுச் சென்றாள். குளித்துவிட்டுக் கரையேறியபோது அவளது ஆரம் ஒரு பெண்ணாக மாறிநின்றது. அவளுக்கு ஆசிவழங்கிய பார்வதி முத்தாரம்மன் என்ற பெயரில் பக்தர்களைக் காத்தருளும்படி கூறிவிட்டு மேல்மலையனூர் புறப்பட்டாள்.
இப்பகுதியை மலையரசன் என்ற அரசன் ஆட்சி செய்துகொண்டிருந்தான்.
அவனுடைய பூங்காவனத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பூங்காவனத்தை மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் காவல்காத்து வந்துள்ளனர். திடீரென பூங்காவனத்தில் புற்று ஒன்று வளர்ந்தது. அதுகண்டு அதிசயித்த மீனவர்கள் அந்தப் புற்றுக்கு மஞ்சள், குங்குமம், புடவை சாற்றி, தீபமேற்றி வழிபட்டு வந்தனர். இந்த தகவல் மலையரசனுக்குத் தெரியவந்தது. அந்த இடத்திற்கு வந்த மன்னன் அந்த புற்றை இடித்து அப்புறப்படுத்துமாறு கூறினான். மீனவர்கள் இடிக்கக்கூடாது என்று தடுத்தனர். அதையும் மீறி மன்னன் இடிப்பதற்கு உத்தரவிட, ஒருவர் கடப்பாறையுடன் இடிக்க ஓங்கியபோது, கபாலங்கள் புற்றிலிருந்து வெளியே வந்தன. அவை அங்கிருந்தவர்களை மறையச் செய்து விட்டன- காவலிருந்த மீனவர்களை தவிர! இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மன்னன் மலையரசன் தன் தவறை உணர்ந்து அன்னையிடம் மன்னிப்பு கேட்டு, புற்றுமுன்பு தண்டனிட்டு வணங்கினான். அப்போது அந்தப் புற்றிலிருந்து தோன்றிய அன்னை பார்வதி, "சிவபெருமானுக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கவே இங்கு வந்து தங்கினேன். இங்குவந்து என்னை வணங்குவோர்க்கு வேண்டிய வரங்களை அளித்து அவர்களது வாழ்வை சிறப்படையச் செய்வேன்'' என்று ஆசிகூறி மறைந்தாள்.
அப்போதிலிருந்து அந்தப் புற்றுக்கும் அங்காளம்மனுக்கும் மீனவ பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தான் பூஜைசெய்து வருகிறார்கள்.
அப்படிப்பட்ட அங்காளம்மனுக்கு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்பேட்டை- வேப்பூருக்கும் இடையிலுள்ள சேப்பாக்கம் கிராமத்தில் விமர்சையாக திருவிழா நடத்தினார்கள். இந்த ஊருக்கு சிவன்பாக்கம் என்றுதான் பெயர் இருந்துள்ளது. தற்போதும் இவ்வூரில் சிவன்கோவில் உள்ளது. இந்த ஊரைச் சுற்றிலும் சிவலிங்கங்கள் காட்சியளித்ததாம். அதனால் இந்த ஊருக்கு சிவன்பாக்கம் என்ற பெயர் உருவாகி அது நாளடைவில் மருவி தற்போது சேப்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஊரிலுள்ள அங்காளம்மன் திருவிழாவில் வித்தியாசமான வழிபாடுகளைச் செய்தனர். இதுகுறித்து மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த பரம்பரை பூசாரி ராஜீவ்காந்தி-
"அங்காளம்மனுக்கு மாசி மாதத்தில் மகாசிவராத்திரியை அடுத்து காப்புக் கட்டி ஒன்பது நாட்கள் திருவிழா நடத்தப்படும். ஒவ்வொரு நாள் திருவிழாவின்போதும் வித்தியாசமான வழிபாடுகளைச் செய்துவருகிறோம். முதல்நாள் எங்கள் ஊருக்கு வடக்கில் ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள மணிமுத்தாற்றிலிருந்து புனிதநீர் எடுத்து வரப்படும். அந்த புனிதநீர் கலசத்தை தலையில் சுமந்துவரும் பக்தர் அதைக் கைகளில் பிடிக்காமல், சும்மாடு இல்லாமல் வெறும் தலையில் சுமந்தபடி நடந்து வருவார். அந்த கலசம் மணிமுத்தாறிலிருந்து கோவிலுக்கு வரும்வரை தலையிலிருந்து கீழே விழாது. இது அம்மனின் சக்தியின் அம்சம்'' என்றார்.
மேலும், "அடுத்த நாள் பெரியநாயகி, அங்காளம்மன், குறத்தியம்மன் ஆகியோருக்கு சிறப்புப் பூஜைகள் மற்றும் வீதியுலா நடைபெறும். அன்று அரிசிமாவில் செய்யப்பட்ட உருவத்திற்கு கோழிமுட்டைகளை வைத்து கண்களை உருவாக்கி, அதை முறத்தில் வைத்து ஊர்வலமாக ஆட்டம் பாட்டத்துடன் ஊரைச்சுற்றி கோவிலுக்கு கொண்டு வரப்படும். அடுத்தநாள் வீரபத்திரன் வேஷமிட்டு, வண்ண வண்ணமான மூங்கிலால் செய்யப்பட்ட தட்டியை முதுகில் கட்டிக்கொண்டு, பம்பை, உடுக்கை, தாரை தப்பட்டை முழங்க, தீப்பந்த வெளிச்சத்தில் ஆடிப்பாடி வருவார்கள். ஆறாம் நாள் திருவிழாவில் ஆட்டுக்குடலை முறத்தில் ஏந்தியபடி ஆக்ரோஷ உருவத்துடன் ஊர்வலம் நடக்கும். இதில் குறவன்- குறத்தி வேஷமிட்டவர்கள் ஆடிப்பாடி வருவார்கள்.
அடுத்து மயானக்கொள்ளை திருவிழா. இதில் அகோர உருவத்துடன் கையில் முறத் துடன் ஊர்வலமாக ஆடிக்கொண்டு வருவார்கள். அப்போது காட்டேரி உருவம் தரித்தவர் பெண்களின் தலையில் முறத்தால் அடிப்பார். இதன்மூலம் அந்தப் பெண்களுக்கு கெட்ட தோஷம், நோய்நொடி, பேய் பிசாசு பிடித்திருந்தாலும் நீங்கிவிடும்.
ஐந்தாம் நாள் திருவிழாவின்போது அம்மன்முன்பு, பக்தர் தலையில் ஈரத்துணியை சும்மாடாக வைத்து, அதில் மண்ணெண்ணெய்த் துணியைச் சுற்றி தீ வைத்து, அதன்மீது பானை வைத்து, சர்க்கரைப் பொங்கல் பொங்கப்படும். சுமார் ஒரு மணிநேரம் தலையில் எரியும் தீயில் பொங்கல் வைத்து இறக்கப்படும்.
அதுவரை தலையில் தீவைக்கப்பட்டவருக்கு அன்னையின் அருளால் எந்தவிதமான தீக்காயங்களும் ஏற்படாது; தலையில் சூடும் ஏறாது. அப்படி தலையில் பொங்கல் வைத்த பிரசாதத்தை அங்காளம்மனுக்குப் படையலிட்டு மக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதை சாப்பிடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயமுண்டு. நீண்ட நாள் நோய்நொடியால் வேதனைப்படும் ஆண்- பெண் அனைவருக்கும் நோய் நீங்கிவிடும். இது நிச்சயமான உண்மை'' என்கிறார் பூசாரி ராஜீவ்காந்தி.
அங்காளம்மனுக்கு இப்படி வினோத வழிபாடுகள், திருவிழாக்கள் இங்குமட்டுமல்ல; தற்போது சித்தலூர், அசகளத்தூர், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள துலங்கும்பட்டு, காட்டுநெமி- போன்ற கிராமங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது.
இதில் காட்டுநெமி- கிராமத்தில் நடைபெற்ற அங்காளம்மன் திருவிழாவில் குழந்தையை ஏலம்விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நீண்டகாலம் குழந்தையில்லாமல் இருப்பவர்கள் இந்த அம்மனிடம் வந்து வேண்டி, பலிசோறு சாப்பிட்டு, அதன் பலனாக குழந்தை பாக்கியம் கிடைத்த பெண்கள், தங்கள் குழந்தைகளை இங்கு கொண்டுவந்து மயானத் தில் பூசாரியிடம் ஒப்படைப்பார்கள்.
அப்போது பூசாரி அந்த குழந்தைகளை கூட்டத்தின் மத்தியில் குழந்தை உயரத் தூக்கிப் பிடித்து ஏலம்விடுவார். ஏலத் தொகையாக பணத்தைக் கொடுத்து குழந்தையில்லாத தம்பதிகள் அந்த குழந்தையை ஏலத்தில் எடுப்பார்கள். இது ஒரு வினோதமான நிகழ்ச்சி. இதன்மூலம் குழந்தையில்லாத தம்பதிகளுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும். தங்களது குழந்தைகளை ஏலம்விடுவதற்கு ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வருவதே சாட்சி'' என்கிறார்கள் காட்டுநெமிலி கிராம மக்கள். அதன்பிறகு சம்பந்தப்பட்ட பெற்றோர் களிடம் குழந்தை கொடுக்கப்படும்.
அங்காள அம்மனின் சக்திக்கு ஈடு இணை ஏது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது இந்த நிகழ்வு!