மாதேவியின் மகனான உமாஸ்கந்தன் தனது செவ்வேலால் உண்டாக்கிய சேய் நதிக்கரையில் உமா மகேஸ்வரரை உவப்புடன் பூஜித்த உன்னதமான தலமான கடம்பாரண்யம், நமக்குக் கிடைத்த அரியதொரு பொக்கிஷம். இந்த அதிசய கடம்பவனத்தை கந்தாஸ்ரமம் என்றே போற்றுகிறது கச்சியப்பர் இயற்றிய கந்தபுராணம்.

சேய்நதி என்னும் செய்யாறு இங்கே உத்தரவாகினியாக வடக்குநோக்கிப் பாய்வதால், காசிக்கு நிகராகப் புகழப்படுகின் றது இந்த கடம்பர் கோவில்.

மூர்த்தி, தலம், தீர்த்தம், விருக்ஷம் போன்றவற்றால் உயர்ந்து நிற்கும் இத்தலத்தின் புராணம், நைமிசாரண்யத்தில் சூதமா முனிவரால் அருளப்பட்டது. மூர்த்தி பீடம் என்றழைக்கப்பெற்ற இப்பதிக்கு தலைநகரம், முக்திபுரம், யோகபுரம், ஞானபுரம், அன்னபுரம், வெற்றிபுரம், கல்யாணபுரம், கந்தாஸ்ரமம், கடம்பர்கோவில், சக்திபீடம் எனும் பத்துவிதமான சிறப்புப் பெயர்களும் உண்டு.

Advertisment

ash

இத்தலத்தின் புராணத்தை விவரிக்கும் பாடல்கள் மட்டும் 639. அவை 17 படலங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

இந்த கடம்பவன ஈசனுக்கு ஏழு சிறப்புப் பெயர்கள் உண்டு.

அவை- செல்வநாதன், ஜோதி நாதன், சித்திநாதன், உலகநாதன், அம்மையப்பன், உயிர்த் துணைவன் மற்றும் ஞானதேசிகன் என்பனவாகும்.

திருநாவுக்கரசர் தனது க்ஷேத்திரக் கோவை திருத் தாண்டகத்தில் "கடம்பை இளங் கோயில்' என்று இத்தலத்தை வைப்புத்தலமாகப் பாடிப் பரவுகிறார். திருஞானசம்பந்தர் இங்கு வந்ததன் சாட்சியாக பழமைவாய்ந்த சம்பந்தப் பிள்ளையார் கோவில் ஒன்று இங்குள்ளது குறிப்பிடத்தக்கது.

இக்கடம்பவனப் புராணம் வேதவியாசர் அருளிய ஸ்காந்த புராணத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவாவடு துறை ஸ்ரீலஸ்ரீ ஈசான தேசிகர் இத்தல புராணத்தைப் பாடல் களாக வடித்துள்ளார்.

முருகன் வழிபட்டது

சிவாகமங்கள் இருபத் தெட்டையும் ஈசன் தேவிக்கு அருளியபோது, அதை தேவி சரியாக கவனிக்காததால் மீனவர் குலத்தில் பிறக்கும்படி சபித்தார் சர்வேஸ்வரர். இதனால் கோபம்கொண்ட கந்தன் ஆகமங்களைக் கடலில் வீசி எறிந்திட, முருகனை ஊமையாகப் பிறக்கும்படி சபித்தார். இதைத் தடுக்காத நந்திதேவரை மீனாகப் பிறக்கும்படி சபித்து, பின் மதுரையம்பதி யில் சொக்கநாதராக வந்து அவர்களை ஆட்கொண்டார்.

அப்போது சுந்தரேசப் பெருமான் இட்ட கட்டளைப்படி, கந்தன் இந்த கடம்பர் கோவிலுக்கு வந்து, லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். கந்தாஸ்ரமம் என்னும் இத்தலத்தில் சேவலும் மயிலும் முக்திபெற்றது குறிப்பிடத்தக்கது.

அஷ்டமா சித்தி பெற்றது

மகதநாட்டிலுள்ள விஜயநகரத்தில் வாழ்ந்த பிரம்மகேசன் என்பவனுக்கு எட்டு பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் அஷ்டமா சித்திகளை அடைய விரும்பி னர். அதற்காக அந்நகரிலுள்ள பண்டிதரை அணுகினர். அவரது வழிகாட்டுதலின்படி தத்புருஷர் என்பவரைக்கண்டு வழி கேட்க, அவரோ புகழ்மிக்க பத்து பெயர் களைக்கொண்ட கடம்பர் கோவிலின் மகிமைகளைக் கூறி, அங்குசென்று ஈசனை வழிபட்டுத் தவம் புரியுமாறு வழிகூறினார். அதன்படி செய்த எண் மரும் அஷ்டமா சித்திகளைப் பெற்றதோடு, சிவமுக்திப் பேறும் அடைந்தனர்.

Advertisment

ass

அஸ்தி பூத்த அதிசயம்

பாண்டிய தேசத்தில் வாழ்ந்த குணசீலன்- தர்மவதி தம்பதிகளுக்கு புத்திசேனன் என்னும் மகன் பிறந் தான். பின் சிலகாலம் வாழ்ந்த குணசீலன் இயற்கை எய்தினான். தந்தைக்குரிய கர்மக்கடன்களை முறைப்படி செய்தான் புத்திசேனன். குணசீலனது கட்டளைப்படி அவனது அஸ்தியை (எலும்பு) கங்கையில் கரைத்திட தீர்மானித்து அதை எடுத்துச் செல்லும்போது, இந்த கடம்பர்கோவில் வழியாக வருகையில், சேயாற்றின் கரையில் அஸ்திக் கூடையை வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றான். சற்று நேரத்தில் கூடையிலியிருந்து பூமணம் வீசியது. அருகில் சென்று பார்க்க, அஸ்திகள் யாவும் மல்லிகை மலர்கள் இருக்கக் கண்டு வியந்தான். அப்போது இறை அசரீரியாக, "அன்பனே, காசியினும் இக்கடம்பவனம் மகிமை மிகுந்தது. உனது தந்தை மோட்சகதியடைந்துவிட்டார். கவலையை விடுத்து, ஊர் திரும்புக' என வாக்கொலித் தார். மகிழ்ந்த புத்திசேனன் கடம்பவன ஈசனை வணங்கி, மோட்ச தீபமேற்றி வழிபட்டுத் தனது ஊர் திரும்பினான்.

கண்டகவயிரன் பெற்ற முக்தி

பாண்டிய தேசத்தில் சமரசன் என்னும் அந்தணருக்கு கண்டகவயிரன் என்னும் மகன் இருந்தான். அவன் வாழ்வியல் தர்மங்களை ஒதுக்கி, மிகக்கொடிய பாவங்களையெல்லாம் செய்தான். பலருக்கும் பலவித துன்பங்களை ஏற்படுத்தினான். ஒருசமயம் எதேச்சையாக இக்கடம்பவனத்தை அடைந்து, கடம்ப மரத்தின் நிழலில் ஓய்வெடுத்தான். மரத்தின் காற்று அவன்மேல் பட்ட தருணத்தில், அவன் உடலி-ருந்து அவனைப் பிடித்திருந்த பாவ கர்மாவானது காக்கை வடிவில் வெளியேறியது. பின் நல்லறிவுண்டாகி, அன்றுமுதல் கடம்பவனேஸ்வரருக்குத் தொண்டுகள் செய்து வந்த கண்டகவயிரன் இறுதியில் சிவகதி அடைந்தான்.

பிரியாத வரம்பெற்ற தேவி

உமையாகிய பார்வதிதேவி, ஐயன் உமாமகேஸ்வரரை என்றும் பிரியாத வரம்கேட்க, ஈசனோ, கந்தாஸ்ரமம் என்னும் இந்தத் தலத்தில் தவமிருக்கும்படியும், தாம் வந்து மணம்முடித்து பிரியா வரம் அருளுவதாக வும் திருவாய் மொழிந்தார். அதன்படி கயிலையை விட்டுப்புறப்பட்ட அம்மை திருக்கேதாரம், காசி க்ஷேத்திரம், திருக்காளத்தி, திருவேங்கடம், திருவாலங்காடு, கச்சி ஏகம்பம், குரங்கணில்முட்டம் மற்றும் திருமாகறல் ஆகிய திருத்தலங்களை வணங்கி, இறுதியில் இக்கடம்பவன க்ஷேத்திரத்தை அடைந்து, உரியபடி தவமியற்றினாள். காலம் கனிந்தது.

பிரம்மா, மகாவிஷ்ணு மற்றும் தேவாதி தேவர்கள் புடைசூழ திருக்கடம்பவனம் வந்த சிவனார் உமையம்மையைக் கரம்பிடித்து, சகலவிதமான வாத்தியங்களுடன் நகர் வலம் வந்து, ஆவுடை நாயகியுடன் இக்கடம்ப ஆரண்யத்தில் என்றும் பிரியாதிருக்க வரமருளினார்.

ass

மலையன்- மாகறன் வதம்

அசுரப் படையின் மாவீரர்களான மலை யன்- மாகறன் ஆகிய இருவரும் திருமாகற லில் சிவபெருமானைப் பூஜித்து வரம்பல பெற்று, பலருக்கும் தீங்கு விளைவித்தனர். இதை இந்திரன் காசிப மகரிஷிக்குத் தெரிவிக்க, காசிபர் உலக நன்மைக்காக திருமாகறல் தலத்திற்குக் கீழ்திசையில் ஒரு யாகத்தைத் தொடங்கினார்.

அதை அசுரர்களான மலையன்- மாகறன் அழித்திட, அதனால் மனம் கலங்கிய காசிபர் கடம்பவனத்திற்கு வந்து, கடம்பவன ஈசனை ஆகம விதிப்படி பூஜித்தார். அப்போது ஈசன் தோன்றி, "உமது யாகத்தைத் தடையின்றிப் பூர்த்தி செய்யவும், இரு அசுரர்களை அழிக்கவும் திருமாகறலில் உள்ள எமது குமாரன் கந்தனுக்குக் கட்டளையிடுகிறேன். பயம் கொள்ளல் வேண்டாம்' என அருள்செய்தார்.

கடம்பவனநாதர் காசிபருக்கு அருளியபடி, அசுரர்களை அழிக்க கந்தனிடம் வாள் கொடுத்து அனுப்பிவைத்தார். அவ்விரு அசுரர் களுடன் கந்தன் போர்புரிந்தபோது, அவர்கள் மாயப்போர் புரிந்தனர். அம்மாயையை நீக்கிட இக்கடம்பபுரிக்குக் கிழக்கு திசையில் தனது ஞானவேலை ஊன்றி பிரகாசிக்கச் செய்தார் ஞானஸ்கந்தர். அவ்விடமே "இளையனார் வேலூர்' என்று, முருகனுக்குகந்த திருத்தலமாக இன்றும் போற்றப்படுகிறது.

போரில் ஈடுபட்ட படையினருக்கு அடியார் வேடத்தில் வந்து உணவளித்தார் உமாசுதர்.

முதலில் மாகறன் சம்ஹாரம் செய்யப்பட் டான். அவ்விடமே "திருமாகறல்' ஆனது. பின்னர் அஞ்சி ஓடிய மலையனையும் வதைத்தார். அவ்விடம் "மலையான்குளம்' என்றானது. மலையனின் படைவீரர்கள் தங்கிய இடம் இரும்புலம் என்றாயிற்று. சண்டையிட்ட இடம் செம்புலம் எனவாயிற்று.

மாகறன்- மலையர்களை அழித்தபின்னர், லட்சம் வீரர்களுடன் திருக்கடம்ப வனத்தை அடைந்த குமரன், இங்கே தேவதச்சன் மயனைக் கொண்டு நகரம் ஒன்றை நிர்மாணித்ததோடு, ஆலயத்தையும் நிர்மாணித் தார். தனது ஞானவேலால் உண்டான சேயாற்றில் ஸ்நானம் செய்து, பங்குனி மாதம் சுக்லபட்ச திரயோதசி தினமான பிரதோஷத்தன்று, மக நட்சத்திரத்தில் சிவாகம முறைப்படி கடம்பேசப் பெருமானைப் பூஜித்து துதித்துப் போற்றி மகிழ்விக்க, ஈசன் அவர்முன்னே தோன்றி குமரனைப் புகழ்ந்துப் பாராட்டி, காசிபரது வேள்வியையும் முடித்து வைத்தார். மேலும், குமரக்கடவுள் வேலூன்றிய இடமான இளையனார் வேலூரில் எப்போதும் வீற்றி ருந்து அருளும்படியும், இக்கடம்பவனத்தில் தன்னை வந்து பூஜிக்கும் முருக பக்தர்களுக்கு நீங்காத செல்வமும், புகழ் மற்றும் தீர்க்காயுளும் அருளுவதாக வரமருளினார் மகேசர்.

சோழவேந்தன் குறை தீர்த்தது

சோழநாட்டில் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த இராஜேந்திர சோழன், திருமாகறலில் இருந்த அதிசய பலாமரத்தின் பழத்தை தினந்தோறும் சிதம்பரம் கனக சபாபதிக்குப் படைத்து, அதைத் தனக்குப் பிரசாதமாக அனுப்பவேண்டும் என்பதை அரச கட்டளையாக விதித்திருந்தான். ஒருநாள் இது தடைப்பட்டது. அதனால் சோழ நாட்டிலிருந்து தனது சேனைகளோடு சேயாற்றினை அடைந்து, ஸ்ரீ கடம்பவன ஈசனை வணங்கி னான் சோழவேந்தன். கடம்பவனேசரின் அருளால் சேயாற்றின் நீரை அப்பலாமரத்தின் மீது தெளிக்க, அது மீண்டும் துளிர்த்தது.

ஊரின் மேற்குப்புறத்தில் சேயாற்றின் தென்கரையில் ஆலயம் அழகுற அமைந் துள்ளது. அழகிய மூன்றுநிலை ராஜகோபுரம். நாற்புறமும் உயரிய மதில்கள், உள்ளே இடப்புறம் ஆக்னேய மூலையில் மடப்பள்ளியும், ஈசான்ய மூலையில் யாகசாலையும் அமைந்துள்ளன. தென்புற மதிலையொட்டி வசந்தமண்டபம் உள்ளது. இது வெளிப் பிராகாரமாகும்.

ராஜகோபுரத்திற்கு நேராக பிரதான நந்தியும், பலிபீடமும், கொடிமரமும் அமைந் துள்ளன. மூன்று படிகள் கீழே இறங்கி சந்நிதிக்குள் நுழைகிறோம். இது உட்பிராகார மாகும். மூடுதளமாக இது அமைந்துள்ளது. நேராக பிரதோஷ நந்தி கவின்மிகு காட்சி யளிக்கிறார்.

துவாரபாலகர்களின் அனுமதிபெற்று, அர்த்த மண்டபத்திற்குச் சென்று ஐயனை வணங்குகிறோம். கருவறையுள், அடிதொழுது நின்ற அடியார் பலருக்கு அரிய வரங்கள் பல அருளிய அற்புதனாய் அருள்பாலிக்கின்றார் கடம்பவனநாதர். சிறிய மூர்த்தம்தான். ஆனால் இவரது கீர்த்தியோ மிகப்பெரியது. பரவச தரிச னம். மனம் அடைகிறது பரிபூரணம். பின்னர் உள்சுற்றினை வலம்வருகிறோம். முதலில் தூணிலுள்ள சிற்பமாக வீரபத்திரர் திகழ்கிறார்.

தென்புறத்தில் அறுபத்துமூவர் தரிசனம். ஏனைய கோஷ்ட தெய்வங்கள் முறையே ஆலயத்தில் அணிவகுத்திட, கன்னிமூலையில் கணபதியும், வாயுமூலையில் துணையர்களுடன் கூடிய கந்தனும் அருள்பாலிக்கின்றனர்.

ஈசான பாகத்தில் அம்பிகையின் சந்நிதி. அம்பிகையாக ஆவுடைநாயகி "அரனும் நானும் வேறில்லை' என்னும் தத்துவத்தை உணர்த்தும்படியாக ஆவுடையார்மீது அள வற்ற வரங்களை அருளிட காத்து நிற்கிறாள்.

என்றும் சிவனை இங்கு பிரியாமலிருக் கும் இந்த பாகம்பிரியாள் தென்திசையைப் பார்த்தவண்ணம் எமபயம் போக்குபவளாய் எழில்நகை சிந்துகிறாள்.

அம்மைக்கு இடப்பக்கத்தில் காலபைரவர் அருள்கிறார். வலப்பக்கத்தில் உற்சவர் சந்நிதி யுள்ளது.

இவ்வாலய விசேடங்களாக, பங்குனி மாதத் தில் பிரம்மோற்சவம் பத்து நாட்கள் வெகு விசேஷ மாகக் கொண்டாடப்படுகிறது. அதில் வளர் பிறை திரயோதசியுடன்கூடிய மக நட்சத்திரத் தில், இளையனார் வேலூரிலிருந்து பால சுப்பிரமணியர் கடம்பர்கோவில் எழுந்தருளி கடம்பேசரைப் பூஜிப்பதும், அசுர சம்ஹாரம் நடத்துவதும் இன்றளவும் சிறப்புற நடைபெறு கின்றன. மேலும் பங்குனி உத்திர நட்சத்திரத் தன்று ஒழுகரை என்னும் ஊரில் மண்டகப்படி செய்யப்பட்டு, தீர்த்தவாரியும் நடைபெறும்.

தைப்பூசம் இங்கு நடத்தப்படும் முக்கிய விசேடமாகும். ஏனைய சிவாலய விசேடங் களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

தல விருட்சமாக கடம்ப மரமும், தல தீர்த்த மாக வடக்கு முகமாகப் பாயும் சேயாறும் திகழ்கின்றன. இந்திர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் மற்றும் விஷ்ணு தீர்த்தங்கள் இங்கு இருந்ததாக கந்தபுராணம் கூறுகிறது.

தொண்டை மண்டல கங்கைக்குல சைவ வேளாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள இவ்வாலயம் தினமும் காலை 7.30 மணிமுதல் 11.30 மணிவரையும்; மாலை 5.30 மணிமுதல் 7.30 மணிவரையும் திறந்திருக்கும். தினசரி நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன.

ஆலயமெங்கும் சோழர் காலக் கல்வெட்டு கள் நிரம்பிக் கிடைக்கின்றன.

பித்ருதோஷ நிவர்த்தித் தலமாகத் திகழும் இக்கடம்பர்கோயில் செய்யாற்றங்கரையில் திதி, தர்ப்பணங்கள் தருவது, காசியில் கங்கைக் கரையில் செய்த பலனைத் தரும். மேலும், கடம்ப வனநாதருக்கும் ஆவுடைநாயகிக்கும் அபிஷே கம் நடத்தி, அர்ச்சகர் கையால் பத்துவித தானங் களைச் செய்தால் பலஜென்ம பாவங்கள் நீங்கும்.

காஞ்சிபுரம்- உத்திரமேரூர் பேருந்து சாலை யில் 18 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வெங்கச் சேரியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் மேற்கில், சேயாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது கடம்பர்கோயில்.