பாடல்: 15
"தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூடி முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமாள் சிற்றடியே.'
பொருள்: முன்னொரு காலத்தில் வாமனனான குள்ள உருவத்தில் வந்து, மாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு, மூன்றடி அளந்தபோது, இந்த அண்டத்தின் முகட்டிலே, தன் சிவந்த பாதங்களை நீட்டினார் திருமால். அவரின் மருமகனாகிய முருகப் பிரானின் சின்னஞ்சிறு திருப்பாதமானது; போர்க் களத்தில் முருகன் அமர்ந்து செல்லும் மயிலின்மீதும், தேவர்களின் தலையிலும், நான் எழுதிய பாடல்களின் ஏட்டின் மேலும் பட்டது.
எலி, பலி, மாவலி!
பலி எனும் அரக்கனாகப் பிறந்த, தேவர் களையே வீழ்த்தக்கூடிய வலிமை பெற்ற மாவலிச் சக்கரவர்த்தியின் கதையைப் பார்ப்போம்.
ஒரு சிவன் கோவிலில் தீபம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அந்தக் கோவிலைச் சுற்றியே வாழ்ந்துகொண்டிருந்தது ஒரு எலி. ஒருநாள்... காற்றில் அந்த அகல்விளக்கில் எண்ணெய் இருந்தபோதும், வெளியே நீட்டியிருந்த திரி எரிந்து முடித்து, அகலுக் குள் இருந்த திரி கருகி, அணையவிருந்த நிலையில்; அதைக் கவனித்த எலி விரைந்து வந்து, தன் வாலால் திரியைத் தூண்டி எரியவைத்தது. இது பலமுறை நடந்தது. இதைக் கவனித்துக்கொண்டிருந்த சிவலிங்கம் "உனது அடுத்த பிறவியில் "பலி' எனும் அரக்கனாய்ப் பிறந்து, மூன்று உலகங்களையும் ஆட்சிபுரிவாய்' என வரமளித்தார்.
அதன்படியே நடந்தது.
நரசிம்ம அவதரத்திற்கு காரணமான நாராயண பக்தர் பிரகலாதனனின் பேரன் பலிச் சக்கரவர்த்தி. எதிரிகளால் தோற்கடிக்கப்படாத வீரமும், நாட்டு மக்களை கஷ்டப்படவிடாத கருணையும் கொண்ட வரான மகாபலம் பொருந்திய பலி, அரக்க மன்னர் களிலேயே அதிகப் புகழ்பெற்றவராக; மாவலி சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டார். அன்றைய கேரளத்தை (சேரநாடு) ஆண்டு வந்தார்.
மகாபலி சக்கரவர்த்தி தன் ராஜாங்கத்தை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தவும், தனது செல்வாக்கை நிலைப்படுத்தவும் ஒரு ராஜசூய யாகத்தை நடத்தினார். இந்த யாகத்தில் இந்தியாவின் அனைத்து பழங்குடி மற்றும் அரக்கர் மன்னர் களும், தலைவர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மகாபலிக்கு சிறப்பு மரியாதை செய்தனர். இந்த யாகத்தின்போது, தன்னிடம் யார் எதைக் கேட்டாலும் அவருக்கு அதைக் கொடுப்பதாக மகாபலி அறிவித்தார். சொன்னபடியே உதவிக்கேட்டு வந்தவர்களுக்கெல்லாம், அவர்கள் கேட்டதைக் கொடுத்து மகிழ்வித்தார் மாவலி.
மற்றவர்களுக்கு நல்லவரான மாவலி,
தேவர்களுக்கு மட்டும் எதிரியாக இருந் தார். தேவர்களால் மாவலியை வீழ்த்த முடியவில்லை. "இந்த யாகம் கூட இந்திர லோகத்தை கைப்பற்றத் தான்' என விஷ்ணுவிடம் சொன்னார்கள்.
ஏற்கெனவே மாவலியை மட்டுப்படுத்த வாமனனான காசிபர்லி அதிதி தம்பதிக்கு மகனாகப் பிறந்திருந்த விஷ்ணு, சமயம் வந்ததும் யாக சாலைக்கு மிகக் குள்ளமான அவதாரத் தில் ஒரு பிராமணரைப் போல் வந்து மாவலி யிடம் "மூன்றடி நிலம்' யாசகம் கேட்டார்.
உடனிருந்த அரக்கர் குலக்குருவான சுக்கிராச் சாரியார், மாவலி யைத் தனியே அழைத் துச்சென்று, "குள்ள வடிவத்தில் வந்திருப்பது மகாவிஷ்ணுவே. அவர் தேவர்களுக்காக உன்னை ஏதோ செய்ய நாடகமாடுகிறார். மூன்றடி நிலம் தர ஒப்புக் கொள்ளாதே' என எடுத்துச்சொன்னார். ஆனால் மாவலியோ "தருவதாக வாக்குக் கொடுத்துவிட்டேன். வாக்குத் தவறமாட்டேன். எனவே மூன்றடி நிலத்தைக் கொடுத்தே தீருவேன்' என்றார். அதை உறுதிப்படுதும் விதமாக கமண்டலத்து புனித நீரைத் தெளிக்க முயன்றார் மாவலி.
சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி, கமண்டலத்தின் நீர் பாதையை அடைக்க, யாகசாலையில் கிடந்த ஒரு காய்ந்த புல்லால் வாமனன் துவாரத்தைக் குத்த, சுக்கிராச்சாரியாருக்கு ஒரு கண் காயமா னது. உடனே பறந்து சென்றுவிட்டார்.
மாவலி நீரைத் தெளித்த பின், வாமனன் விஸ்வரூபமெடுத்து, முதலடி வைத்தார். அது பூமியையே அளந்தது. இரண்டாமடி வைத்தார். அது அண்டசாசரத்தில் உச்சியைத் தொட்டது. "மூன்றாம் அடியை எங்கே வைக்க?' என வாமனன் கேட்க, "நான் வாக்குத் தவறமாட்டேன்; மூன்றாமடியை என் தலைமீது வையுங்கள்' என மாவலி சொன்னதுடன், "ஆண்டுக்கு ஒருமுறை நான் என் நாட்டு மக்களை வந்து சந்திக்கும் வரம் தரவேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். தேவர்களுக்காக நல்ல மனம்கொண்ட மாவலியை சோதிப்பது விஷ்ணுவுக்கு சங்கடத்தைத் தந்ததால் "நீ பாதாள லோகத்தை ஆள்வாய். நீதான் அடுத்த இந்திரனும் ஆவாய்' என உறுதியளித்து மாவலி தலையின் மூன்றாம் அடியை வைக்க, பாதாளத்தில் அழுத்தப்பட்டார் மாவலி.
மாவலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை காணவரும் நாளே ஓணம் பண்டிகையாகக் கேரளா முழுவதும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகி றது. கேரள மக்கள் நன்றி மறவாமல் தங்கள் வீட்டு வாசலில் அத்தப் பூக் கோலமிட்டு மாவலியை வரவேற்ப தாக சடங்குகள் செய்து மகிழ்ச்சியுடன் கொண் டாடுகிறார்கள்.
மாவலியை வாம னன் பாதாளத்திற்குள் அழுத்திய நிகழ்வு நடந்ததாகச் சொல்லப்படும் இடமான கேரள மாநிலம் எர்ணாகுளம் திருக்காட்கரை காட்கரையப்பன் கோவிலில் மிகவும் கோலாகலமாக ஓணம் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.
இதுபோல வேறு சில மாதிரியான கதைகள் மாவலி பற்றிக் சொல்லப்பட்டாலும்; "தேவர் களுக்குத்தான் மாவலி எதிரியே தவிர மக்களின் அபிமானம் பெற்ற சக்கரவர்த்தியாகவே இருந்தார்' என எல்லாக் கதைகளும் சொல்கிறது.
முருகனின் காலடி அவர் ஏறிய மயில்மீதும், தேவர்களின் தலைமீதும், தான் எழுதிய பாடல் ஏட்டின்மீது பட்டதாக அருணகிரியார் பாடியுள்ளார்.
தேடிவரும் திருவருள்!
முருகப் பெருமானின் திருவருள் உங்களைத் தேடிவந்து கிடைப்பதற்கான வழியை அருணகிரியார் சொல்லியிருக்கிறார்.
பாடல்: 16
"தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெரு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றத் திறக்கத் துளைக்கவைவேல்
விடுங்கொ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே.'
பொருள்: அடங் காத சபல மனதை, புலன்களின் இச்சைப்படி செல்லவிடாமல் தடுத்து, கோபத்தை விட்டொழித்து, தானங்கள் செய்து, களங்கமற்ற மனதுடன் ஆழ்ந்த அமைதியுடன் இருந்தீர்களென்றால்; ஏழு உலகத்தையும் காப்பதன் பொருட்டு, சூரனை மட்டுமன்றி, கிரௌஞ்சமலையே துளைவுறும்படி, கோபத் துடன் வேல் விட்ட முருகப்பெருமானது திருவருள் அதுவாகவே வந்து உங்களை ஆற்றுப்படுத்தும்.
அவமதித்த புலவனுக்கு அருள் கொடுத்த முருகன் கதையைப் பார்ப்போம்.
தொண்டை நாட்டுப் புலவர் பொய்யா மொழி. அவரது இயற்பெயர் அம்பலத்தரசன். தீவிரமான அம்பாள் பக்தர்- சிவபக்தர். சிவசக்தியை பலவாறு புகழ்ந்து பாடல்கள் பாடிவந்தார். ஒருமுறை முருகனடியார் சிலர் வந்து "முருகன்மீது பாடல் பாடுங்கள். அதற்கு எங்களால் உரிய பொருள் தருகிறோம்' எனக் கேட்டபோது "நான் அம்மையையும், அப்பனை யும் பாடுபவன். கோழியைப் பாடும் வாயால் குஞ்சைப் பாடமாட்டேன்' என மறுத்து விட்டார்.
ஒருமுறை அம்பாள் பற்றி பக்திச்சொற் பொழிவு ஆற்றிவிட்டு, அதற்குக் கிடைத்த தங்கக் காசுகளை சிறு மூடையிட்டு, காட்டு வழியே நடந்து வந்துகொண்டிருந்தார் பொய்யா மொழி. அப்போது வேடன் வேடத்தில் வழிமறித்த முருகன், வேலைக் காட்டி, தங்கக் காசுகளைக் கேட்டார். புலவர் தரமறுத்தார். "நீ புலவர்தானே! என் பெயர் முட்டை. அந்தப் பெயரை வைத்து ஒரு பாடல் பாடு' என்றார் முருகன்.
"பொன் போலுங் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே
என்பேதை செல்லற் கியைந்தனளே! மின்போலு
மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்பொங்
கானவேல் முட்டைக்குங் காடு.'
மின்னலைப்போல ஒளிரும் வேலை ஆயுதமாகக்கொண்ட முட்டை என்கிற மாவீரனுக்கு எதிரியாக இருப்பவர்கள், ஓடி ஒளிகிற இந்தக் காட்டில்; முட்கள் கொண்ட கருவேல மரங்கள் இருக்கின்றன. அதிக வெப்பத்தினால் கள்ளிச் செடிகளும் சூடேறி, தீப்பொறி கிளம்பிப் பரவுகிறது. வேல முட்களும் காலில் குத்தக் கூடிய; அப்படிப்பட்ட காட்டுவழியில் தன் தலைவனுடன் என் மகள் செல்வதற்குத் துணிந்துவிட்டாளே!
-இது இந்தப் பாட்டின் பொருள்.
நெருப்புப் பொறிகள் உஷ்ணத்துடன் பறக் கும் காட்டுப் பாதை வழியே, வேல மர முட்கள் காலில் தைக்கும் இவ்வழியே தன் மகள் காதலனுடன் செல்லத் துணிந்ததாக பொருள் வைத்து, பொய்யாமொழிப் புலவர் பாடினார். அதிலும் சூட்சுமமாக முள் தைக்கும் காடு என்பதை "முள்+தைக்கும்+காடு' எனும் பொருள்பட "முட்டைக்குங் காடு' எனப் பாடினார்.
இதையெல்லாம் புரிந்துகொண்ட முருகன் "உமது பாட்டில் பொருட் பிழை உள்ளது' எனச் சொல்லி "தீப்பொறி காட்டில் பறக் கையில் வேல மரமும் எரிந்துவிடுமே. பிறகெப்படி வேல முட்கள் காலில் தைக்கும்?' எனக் கேட்டார்.
திகைத்துப் போன பொய்யாமொழி, "நீ யாரப்பா?' என்றார்.
"கோழியைப் பாடிய வாயால் குஞ்சைப் பாடமாட்டேன்' என்றீர். இப்போது முட்டை யையே பாடிவிட்டீர். "கோழியின் குஞ்சு நான்' எனச் சொல்லி, பொய்யாமொழிப் புலவரின் ஆணவத்தைப் போக்கி, "நானே முருகன்; நானே சிவன்; நானே விஷ்ணு' என தன் ரூபங்களைக் காட்டி புலவருக்கு அருள்பாலித் தார் முருகன்.
"பொய்யாமொழிப் புலவரின் வாழ்க்கைக் கதை "சிவகவி' என்ற பெயரில் எம்.கே. தியாகராஜ பாகவதர், எஸ். ஜெயலட்சுமி, டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோரின் நடிப்பில், எஸ். எம். ஸ்ரீராமுலு இயக்கி (பின்னாளில் எம்.ஜி.ஆரின் "மலைக்கள்ளன்' படத்தை இயக்கித் தயாரித்தவர்) தயாரிக்க, 1943-ஆம் ஆண்டு வெளியாகி பிரபலமாக பேசப்பட்டது. ஜி. ராமனாதன் இசையில், பாபநாசம் சிவன் பாடல்கள் எழுதியிருந்தார். சுமார் 25-க்கும் மேற்பட்ட பாடல்கள்கொண்ட இப்படத்தில் பொய்யாமொழிப்புலவர் எழுதிய தனிப்பாடல் வெண்பாக்கள் இடம்பெற்றிருந்தன.
"முற்பட்ட முரட்டுப் புலவனை
முட்டைப் பெயர் செப்பிக்கவிபெறு பெருமாளே.'
(அருணகிரியார் பாடிய திருப்புகழ் "பத்தித்தர' பொதுப்பாடலில்.....)
"தன்னைப் பாடமறுத்து வந்த பிடிவாதமான புலவனை "முட்டை' என பெயர் சொல்லி, தன்மீது பாடவைத்த பெருமாளே' எனப் பாடியுள்ளார்.
ஒருவனுக்கு மிகப்பெரும் எதிரியே அவனுடைய சினமாகிய கோபம்தான்.
"மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய
பிறத்தல் அதனால் வரும்.' (குறள்: 303)
"எவர்மீதும், எதன் பொருட்டும் கோபம் கொள்ளக்கூடாது. ஏனென்றால் பிறருக்குக் கெடுதல் செய்வதற்கு தூண்டக்கூடிய குணம் கோபத்தால்தான் ஏற்படுகிறது' என்கிறார் திருவள்ளுவர்.
"முருகனைப் பாட மறுத்த புலவரையும்' பெருந்தன்மையோடு தேடிச்சென்று, அருள் பாலித்தார் முருகன். அப்படிப்பட்ட அந்தக் கடவுள் தன் பக்தர்களை விட்டுவிடுவாரா என்ன? அதனால்தான் "கோபத்தை விட்டொழித்து, முடிந்தவரை தானம் செய்து அமைதியுற்ற மனதுடன் வாழுங்கள்; முருகப்பெருமானின் திருவருள் தேடி வரும்' என அருணகிரியார் சொல்லியுள்ளார்.
(பாட்டு வரும்)