"ஆறு காரியங்கள்மீது ஆசை கொண் டுள்ள எனது மயக்கத்தைப் போக்கவேண்டும்' என அருணகிரியார் முருகப்பிரானிடம் கேட்டார்.

பாடல்: 7

"சளத்திற் பிணிபட்டசட்டு க்ரியைக்குட் டவிக்கு மென்றன்

உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்

குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்

களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே.'

பொருள்: வேலெடுத்து வீசி, அசுரர்களின் மார்புகளை நீ பிளந்ததால் அதிலிருந்து ஒழுகி உண்டான ரத்தக் குளத்தில், பேய்கள் குடித்து, குளித்து கும்மாளமிடும்படி, போர்க் களத்தில் களமாடிய காவலன் முருகப் பெருமானே! துன்பமாகிய கயிற்றால் கட்டப்பட்டு, "சட்டுக் கிரியை' எனப் படும் காரியங்களுக்குள் அகப்பட்டுக் கிடக்கிற; எனது மன மயக்கத்தை நீக்கி, என்னை நீ அருளவேண்டும்.

ss

ஆசை ஆறு வகை!

அருணகிரிநாதர் குறிப்பிடுவதை "அசட்டுக் காரியங்கள்' என்றோ,

"ஐம்புலன்களின் காரியங்கள்' என்றோ, "சட்டுக்கிரியை- அதாவது ஆறு காரியங்கள்' என்றோ பொருள் கொள்ளலாம்.

1. காமம்: பெண்ணாசை, மண்ணாசை பொருளாசை.

2. குரோதம்: கோபம், பகை, வன்மம்.

3. மோகம்: எப்படியாவது நினைத்ததை அடையவேண்டும் என்கிற வெறி.

4. லோபம்: தன் நலத்திற்காக செல்வம் சேர்க்க எதையும் செய்யத் துணியும் சுயநலம்.

5. மதம்: ஆணவம், அகங்காரம், தலைக்கனம், கர்வம்.

6. மாத்சரியம் அல்லது மாற்சரியம்: பிறரின் மேன்மையான கருத்துகளைக்கூட மறுதலிப்பது- பொறாமை.

இந்த ஆறுவகைச் செயல்களும் ஆசை யின் ஆறுவகை உணர்ச்சிகளாகும். இந்த உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்டே இருந்தால் என்னாகும்? முக்தியடைய முடியாதபடி தடுத்தல் செய்துகொண்டே இருக்கும்.

திருவருட்பாவில் மனதின் உணர்ச்சிகளை ஏழுபேராக சித்தரித்திருக்கிறார் வள்ளலார்.

மேலும் அந்த ஏழுபேரைச் சார்ந்தவகளும் தன்னைச் சேராதபடி காத்தருளும்படி (அந்தப் பாடலின் முதல் பகுதியில்) கந்தக்கோட்டத் துக் கடவுளிடம் கேட்டிருக்கிறார்.

"காமவுட் பகைவனுற் கோபவெங் கொடியனும்

கனலோப முழு மூடனும்

கடுமோக வீணனும் கொடு மதமெனும் துட்ட

கண் கெட்ட ஆங்காரியும்

ஏமமறு மாச்சரிய விழலனும் கொலையென்

றியம்பு பாதகனுமாம் இவ்

வெழுவரும் இவர்க்குற்ற வுறவான பேர்களும்

எனைப்பற் றிடாம லருள்வாய்.'

(தெய்வ மணிமாலை- 1: பாடல்- 6, சென்னை கந்தக்கோட்டம்)

"இச்சையின் உச்சமான காமம் என்பது உள்ளே இருக்கும் பகைவன்; கடுஞ்சொல் பேசி கலகமூட்டக் காத்திருக்கும் கோபம் என்பது மிகக் கொடியவன்; அறிவை மறைக்கும் செல்வச் செருக்கான லோபம் என்பது முழுமையான மூடன்; சிந்தித்துத் தெளிவடையவிடாதபடிச் செய்யும் மோகம் என்பது பயனற்ற வீணன்;

"நான்', "தான்' என்கிற அகம்பாவ மாகிய மதம் என்பது கண்கெட்ட ஆங்காரி; கெட்ட எண்ணங்களைச் சுமந்து- கெட்ட நடத்தைகளைச் சுமந்து பலவீனப்பட்ட மாத்சரியம் என்பது எதற்கும் உதவாத விழலன்' என்றதுடன், மாபாவங்கள் எனப்படும் ஐந்தில் ஒன்றான கொலையை ஏழாவதாக சேர்த்து இயம்பியுள் ளார் வள்ளலார். "கொலை என்று சொல்கிற பாதகனுமாகிய இந்த ஏழுபேர்களும், இந்த ஏழுடன் தொடர்புடைய குற்றச் செயல் களாகிய எழுவரின் உறவானவர்களும் என்னைப் பற்றிடாமல், என்னைக் கெடுத்து விடாமல் அருள்புரிவாய்'

இவ்வாறு சென்னை கந்தக்கோட்டத்து முத்துக்குமார சாமியிடம் வேண்டிப் பாடியிருக்கிறார் வள்ளலார் வடலூர் ராமலிங்க அடிகள்.

ஆறு காரியங்களின் மன மயக்கத்திலிருந்து விடுவிக்கும்படி கந்தனிடம் உதவி கோரினார் அருணகிரியார்.

ஞான தேசிகன்!

பிரம்மனின் படைப்புத் தொழிலை முருகன் செய்தார்.

இப்படி ஆறுமுகன், நான் முகனாக சிறிது காலம் இருக்க நேர்ந்தது.

பாடல்: 8

"ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்

அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை ய நாதியிலே

வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்

தெளிய விளம்பிய வாமுக மாறுடைத் தேசிகனே.'

பொருள்: ஒளியில் உண்டாகிய உயர்ந்த ஞானமலையான கயிலாயத்து உச்சியில், கருணையினால் உண்டான ஒப்பற்ற இன்பத்தேனை, முற்காலத்திலேயே வான்வெளியில் உண்டான அப்பழுக்கற்ற சூனியத்தைத் தன்னிடத்தில் கொண்டுள்ள தனித்துவமான பொருளை, அதன் உண்மைத் தத்துவத்தை நான் அறியும்படி ஆறுமுகனான பெருமான் குருநாதன் இந்த பக்தனுக்கு உபதேசம் செய்தது வியப்புடையது.

நான்முகனை சிறையிலடைத்த ஆறுமுகன்!

இந்தப் பாடலில் முருகப் பெருமானை "தேசிகன்' என வர்ணித்துள்ளார் அருணகிரி யார். தேசிகன் என்றால் உபதேசிப்பவர்- குரு என்று பொருள். "அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா' என முருகனைப் பெருமை பேசுவார்கள். சிவனுக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசித்தார் முருகன்.

ஒருசமயம் படைப்புக் கடவுளான பிரம்மதேவரிடம் "ஓம்' எனும் பிரணவ மந்திரத்திற்குப் பொருள் கேட்டார் முருகப்பெருமான். பிரம்மனுக்குத் தெரியவில்லை. "ஓம் மந்திரத்திற்கு பொருள் அறியா நீங்கள் படைப்புத் தொழில் செய்யக்கூடாது' என பிரம்மாவை சிறையில் அடைத்துவிட்டு, படைப்புத் தொழிலை முருகன் செய்துகொண்டிருந்தார். வெகுநாட்கள் சிறையிலிருந்த பிரம்மனை, திருமால், இந்திரன் உள்ளிட்டவர்கள் சிவனிடம் முறையிட்டபிறகு, சிவனே சென்று முருகனிடம் பேசியதும் விடுவித்தார் முருகன்.

"ஓம்' எனும் பிரணவ மந்திரத்தைப் பார்வதிக்கு உரைத்தவர் சிவன். ஆயினும் அப்பாக்கள் தாங்கள் அறிந்த விஷயத்தையும்கூட தங்களுக்கு ஏதும் தெரியாததுபோல் "அப்படியா?' என வியந்து, குழந்தைகள் விவரிக்கும் லட்சணத்தை ரசிப்பதுபோல... சிவனும் முருகனிடம் "பிரணவ மந்திரத்தை எனக்குச் சொல்' என்று தலைசாய்த்து, காதுகொடுத்துக் கேட்க, பிரணவத்தின் அர்த்தத்தை உபதேசித்தார் முருகன். அதனால் தான் "அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையன்' ஆனார் முருகன்.

ஒன்றுமற்ற ஒன்று!

முருகப் பெருமான் தனக்கு குருவாய் இருந்து உபதேசித்த பொருளின் தத்துவத்தைச் சொல்கிறார் அருனகிரியார்.

பாடல்: 9

"தேனென்று பாகென் றுவமிக்கொ ணாமொழித் தெய்வவள்ளி

கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ

வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று

தானன்று நானன் றசிரீரி யன்று சரீரியன்றே.'

பொருள்: தேன்போல் இருக்கிறதென்றோ, சர்க்கரைப் பாகுபோல் இருக்கிறதென்றோ ஒப்பிடவோ- உவமை செய்யவோ முடியாத இனிய சொற்கள் மொழியும் தெய்வப் பெண்ணான வள்ளியின் கணவன், முன்னொரு நாள் எனக்கு உபதேசம் செய்தார். அவர் உபதேசித்த பொருளின் தத்துவத்தை "இத்தகையது' என அறுதியிட்டுக் கூறமுடியுமோ? அது ஆகாயமுமல்ல; காற்றுமல்ல; நெருப்புமல்ல; நீருமல்ல; மண்ணுமல்ல; "தான்' என்பதுமல்ல; "நான்' என்பதுமல்ல; உருவமற்றதுமல்ல; உருவமுற்றதுமல்ல.

வள்ளி வழி!

அருணகிரியாருக்கு முருகப் பெருமான் என்ன தத்துவப் பொருளை போதித்தார்? "ஒன்றுமற்ற ஒன்றை போதித்தார்' என்றே சூசகம் சொல்கிறார் அருணகிரியார்.

முகமாறுகொண்ட முருகன், மூன்று சக்திகளின் தத்துவங்களால் ஆனவர்.

1. இச்சா சக்தி: வள்ளி.

2. கிரியா சக்தி: தெய்வானை.

3. ஞான சக்தி: முருகன்.

வள்ளி மானிடப்பெண்ணாக இருக்கை

யில் தானே மானிட வேடனாக வந்து, வள்ளிமீது காமுற்று, வள்ளியை அடைய முருகப்பெருமான் கெஞ்சினார், உருகினார், மருகினார்.

பெண்மைக்குரிய நாணம் தடுத்தபோது, வேடனாக வந்திருப்பது முருகப்பெருமான் என்றறிந்ததும் வள்ளி, சிறிதும் தாமதிக்காமல் முருகனைச் சரணடைந்தாள். வள்ளி, முன்னர் திருமாலின் மகள் சுந்தரி என்பதால், அவளின் தெய்வீகத் தனமையை உணர்த்தவே வலிய வந்து, கெஞ்சிக் கூத்தாடி, தன்னவளாக்கினார் முருகன்.

அதுபோலவே முருகபிரான் தன் பக்தர் களை வலிய வந்து ஆட்கொள்வார். வள்ளி யிடம் ஊர்த்தலைவன் வீட்டுப்பெண் என்கிற ஆணவமோ, தன் அழகின்மீது கர்வமோ, தன் இளமையின்மீது அகந்தையோ இருக்கவில்லை.

அதுபோலவே "தனது', "தான்', "எனது', "நான்' என்கிற செருக்கற்ற தம் பக்தர்களை முருகனே வலிய வந்து ஆட்கொள்வார். பக்தர் களிடம் குறைகள் இருந்தாலும், அவர்களிடம் அன்பு ஊறிக்கொண்டிருந்தால், அந்தக் குறை களைக் கண்டுகொள்ளாத கடவுள் முருகன்.

வள்ளியின் இந்த நன்னடத்தைகளே "வள்ளி சன்மார்க்கம்' என்று சொல்லியுள்ளார் அருணகிரியார். வள்ளி கடைப்பிடித்த இந்த அகந்தையற்ற நன்னடைத்தையாகிய வள்ளி சன்மார்க்கத்தை; முருகனைச் சரணடைதலை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு முருகனின் திருவருள் எளிதில் கிடைக்கும்.

அளவற்ற ஆற்றல்!

"முருகப்பிரானின் ஆற்றல் அளவிட முடியாதது; அவரின் கருனை சொல்லி மாளாது' என்றார் அருணகிரி.

பாடல்: 10

"சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்துசும் மாவிருக்கும்

எல்லையுட் செல்ல வெனைவிட்ட வாவிகல் வேலனல்ல

கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச் செவ்வாய்

வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே.'

பொருள்: யுத்தம் செய்யும் வேலாயுதம் கொண்ட முருகன், சிறப்பு வாய்ந்த தமிழிசையான கொல்லிப் பண் இனிமைபோன்ற சொற்களைப் பேசும், கனத்த கற்பாறைகள் நிறைந்த மலையையுடைய குறிச்சியில் பிறந்த வளும், கோவைப் பழம்போன்ற சிவந்த இதழ்களையுடையவளும், வல்லிக் கிழங்கின் கொடியைப் போன்ற மெல்லியவளுமான வள்ளியைத் தழுவுகின்ற, மலைபோன்ற தோள்வலிமைகளைக் கொண்ட முருகப்பெருமானின் ஆற்றலை "இவ்வளவு' என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஏதுமற்ற நிர்மலமான அமைதி என்ற எல்லைக்குள் என்னை நுழைவிக்கவைக்க முருகப்பிரான் என்மீது செலுத்திய கருணையினை சொல்லிமாளாது.

ஞானத்தின் எல்லை!

ஔவையார் "கொன்றை வேந்த'னில் "மோனம் என்பது ஞான வரம்பு' எனக் குறிபிட்டுள்ளார். மனம் சிந்தனை வயமின்றி, நிதான அமைதியுடன், சத்த- சலனமற்ற மௌனத்துடன் இருப்பதே ஞான நிலையின் எல்லையாகும். அந்த எல்லையை எட்டிவிட்டால் இறைவனுடன் ஐக்கியமாகலாம். அந்த ஞான எல்லைக்குள் அருணகிரியாரை முருகப்பெருமானே கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறார். அதனால் தான் "அந்த எல்லைக்குள் என்னை நுழைவிக்க முருகப்பெருமான் என்மிது பெரும் கருணை காட்டியிருக்கிறார்' என நெகிழ்ந்திருக்கிறார்.

முருகன் அருணகிரியாருக்கு அளித்தது அநுபூதி நிலை.

(பாட்டு வரும்)