ஐம்புலன் அடக்கல்!
முருகப் பெருமானை நெருங்கவிடாமல் தன்னை ஐந்து பேர் தடுப்பதாகவும், தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை எனவும் அருண கிரிநாதர் இறைவனிடம் இறைஞ்சுகிறார்.
பாடல்: 4
"ஓரவொட்டா ரொன்றை யுன்னவொட்டார் மலரிட் டுனதாள்
சேரவொட்டா ரைவர் செய்வதென் யான்சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூரகட் டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே.'
பொருள்: "உன்னை உணரவிடுவதில்லை; நினைக்கவிடுவதில்லை; மலர்களைத் தூவி, பாத தரிசனம் செய்து, உனது இரு மலர்ப் பாதங்களை அடையவும் விடுவதில்லை. தேவர் களை உய்விக்க, கொடுமையும் கள்ளத்தனமும் நிறைந்த சூரபத்மனை- கரிய அவனது உடலிலிருந்து உதிரம் வழியும்படி, கூர்மை யாகிய வேலால் நொடியில் அழித்தவனே! புலன்களாகிய இந்த ஐவர் இப்படி உன்னைச் சேரவிடாமல் தடுக்கையில் நான் என்ன செய்ய முடியும்?'
ஆமைபோல் அடக்கிக்கொள்!
பகவத் கீதையில் அர்ஜுனனுக்கான உபதேசத்தில், அத்தியாயம் இரண்டில் சில பாடல்களில் புலனடக்கம் பற்றி கிருஷ்ணர் உரைக்கிறார்.
"சலனமடைந்துள்ள உனது புத்தி, பரமாத்மாவிடம் எப்போது நிலையாக நிற்கிறதோ அப்போது நீ பரமாத்வுடன் நிரந்தமாக ஒன்றிவிடுவாய்' எனச் சொல்லும் கிருஷ்ணர், ஒருவனுடைய புத்தி எப்போது ஒருநிலைப்படும் என்பதையும் சொல்கிறார்.
"வெளித் தெரியும் எல்லா உடலுறுப்பு களையும் ஆமை தன் ஓட்டுக்குள் உள்ளிழுத்
துக் கொள்வதுபோல, எப்போது ஒருவன்
புலன்களால் நுகரப்படும் பொருட்களிலிருந்து
புலன்களை விடுவித்துக் கொள்கிறானோ,
அப்போது அவனுடைய புத்தி நிலையானது
என்றாகும்' என்கிறார்.
"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.' (குறள்- 126)
தனக்கு ஆபத்து உண்டாகும்போது ஆமை தன்னுடைய நான்கு கால்கள் மற்றும் தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் தனது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வதுபோல, ஒருவன் தன்னை தீமை ஈர்க்கும்போதோ- தீமை வரலாம் எனும்போதோ தனது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறி களையும் அடக்கவேண்டும். அப்படி அறத் திற்கு மாறான தீமை வரும்போது புலன்களை அடக்கும் ஆற்றல் கொண்டிருந்தால், அவனுக்கு அடுத்தடுத்த பிறவிகள் இருக்கும் பட்சத்தில் இப்பிறவியின் புலனடக்கம் ஏழு பிறவிகளிலும் அரணாக இருந்து காக்கும்.
"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்' (குறள்- 6)
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின்மூலம் உண்டாகும் தீய ஆசைகளை அழித்த இறைவனின் பொய்மை இல்லாத ஒழுக்க நெறியை கடைப்பிடிப்பவன் நீண்டகாலம் நன்கு வாழ்வான்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்ற ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு (குறள்: 27)
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களின் உணர்ச்சிகளையும், அதன் நன்மை- தீமைகளையும் அறிந்து, புலன்களைத் தன் வசத்தில் வைத்திருக்கும் பெரியோர்களையே இந்த உலகம் போற்றும்.
இவ்வாறு குறள்கள் மூலம் புலனடக்கம் குறித்துச் சொல்லியுள்ளார் திருவள்ளுவர்.
பட்டினத்தார் தனது கோயில் திரு
அகவல்-2, பாடல் ஒன்றில்-
"காதள வோடிய கலகப் பாதகக்
கண்ணியர் மருங்கில் புண்ணுடன் ஆடும்
காதலும் கருத்தும் அல்லால்நின் இருதாள்
பங்கயம் சூடப் பாக்கியம் செய்யாச்
சங்கடம் கூர்ந்த தமியேன் பாங்கிருந்து
அங்கொடு இங்கொடு அலமரும் கள்வர்
ஐவர் கலகமிட்டு அழைக்கும் கானகம்...'
எனக் குறிப்பிட்டுள்ளார்.
"காதுவரை நீண்ட, சபலமெனும் கலக மூட்டும்- பெண்களின் புண்களாகிய கண்களுடன் காமமுற்று, காதலுற்று, உன் மலர்ப்பாதங்களை என் தலையால் தாங்குகிற பாக்கியம் எனக்கில்லை. அதுதான் எனக் குச் சங்கடம். அங்கும் இங்கும் அலையும் திருடர்போல ஐம்புலன்கள் இந்த கெட்ட உடம்பை அலைக்கழிக்கிறது. காட்டுக்கு வா என்கிறது. நான் என்ன செய்வது?' எனக் கேட்ட பட்டினத்தார்; பாடலின் இறுதி வரிகளில் "நீ உமையாகிய அவளுடன் சேர்ந்து காட்டும் ஆனந்தத் தாண்டவமே உன் அருளுக்கு அழகு சேர்க்கிறது' என்கிறார்.
ஐம்புலன்களை அடக்குவது அத்தனை எளிதல்லதான். அதனால்தான் திருவள்ளுவர், "ஒரு ஆணுக்கு அவன் துணையால் உண்டாகும் இன்பம்' பற்றியும் சொல்லியிருக்கிறார்.
"கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.' (குறள்: 1101)
கண்களால் பார்த்து, காதால் காதல் கேட்டு, வாயால் பேசி- அருந்தி, நாசியால் நுகர்ந்து, உடம்பால் தீண்டி அறிகிற ஐந்து புலன்களும், ஒரே நேரத்தில் அந்தந்த புலன் பொறி, அததற்குரிய இன்பத்தை அனுபவிப்பது; ஒளிவீசும் வளையல் அணிந்த பெண்ணுடன் (மனைவியுடன்) உடலுறவு கொள்ளும்போது மட்டுமே உண்டாகும்.
-இப்படிச் சொல்லியிருக்கிறார் திருவள்ளுவர்.
திருமந்திரத்தில் திருமூலர் பாடல் ஒன்று:
"அஞ்சும் அடக்குஅடக் கென்பர் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே. (திருமந்திரம் பாடல்: 2033)
"ஐம்புலன்களை அடக்கு என்பவர்கள் அறிவில்லாதவர்கள்; ஐம்புலன்களையும் அடக்கியவர்கள் தேவலோகத்திலும் இல்லை. ஐம்புலன்களை அடக்குவது அறிவற்ற செயல் என்பதால் ஐம்புலன்களை ஆளும் உணமையை உணர்ந்துகொண்டேனே!'
மகாகவி பாரதியாரின் "புதிய ஆத்திச்சூடி' என்பது வீறுகொள்ளச் செய்யும் வாசகங்கள் கொண்டது. இதில் "ஐம்பொறி ஆட்சிகொள்' எனச் சொல்லியுள்ளார்.
"ஐம்புலன்களின் பொறிகளானத் கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகியவற்றிற்கு நீ அடிமையாகாமல், ஐம்பொறிகளின் செயல்களான "பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகியவற்றை உன் சொற்படி கேட்கச் செய்' என்கிறார் பாரதி.
வள்ளுவரும் "ஐம்புலன்களைத் தன் வயப் படுத்தியவருக்கே உலகில் மதிப்பு' என்கிறார்.
திருமூலரும் ஐம்புலன்களை ஆளும் அறிவை அறிந்தேன்' என்கிறார். பாரதியும் "ஐம்புலன் களை ஆட்சிசெய்' என்கிறார்.
"பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண்
என்ரறிவை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன்
கண்டாய் வருகஎன்றருள் புரியாயே.'
(திருவாசகம்: 452 / வாழாப்பத்து: 5)
பொருள்: "இனிய இசைப் பாடலின் மொழிக்கு நிகரான வாய்மொழி பேசுபவளாகிய உமையவளுக்கு உரியவனே! உன்மீதான பற்றைத் தவிர, பற்றுவதற்கு உன்னைத் தவிர வேறு ஏதுமற்றவன் நான். என்னை நேரிலேயே ஆட் கொண்டு அருள்புரிகிற சிவபுரத்து அரசனே! திருப்பெருந்துறையில் அருளாளும் சிவனே. உன் மலரடி காண எனது ஐம்புலன்களாகிய உடல், வாய், மூக்கு, செவி, கண் ஆகியவை எனக்குத் தீதே செய்வதால், இந்த மண்ணில் உன்னையே நினைத்து வாழும் பேறு எனக்கு வாய்க்கவில்லை; நான் இங்கு வாழவுமில்லை என்பதை நீயும் அறிவாய். அதனால் "வருக' என என்னை உன்னிடம் அழைத்துக் கொள்ள அருள்புரி.'
-இவ்வாறு தன் சிவசிந்தனையை உருக் கத்துடன் பாடியிருக்கிறார் மாணிக்கவாசகர்.
"எனது ஐம்புலன்களும் எனக்கு உதவ வில்லை; தீயதையே செய்கிறது' என மாணிக்கவாசகர் சொல்ல... "உன் மலரடியைச் சேரவிடாமல், நினைக்கவிடாமல் செய்கிறது ஐம்புலன்களும்' என்று அருணகிரிநாதர் சொல்கிறார்.
பால் கேட்டு அழுத பாலகன்!
பாலகன் முருகன் பால் கேட்டு அழுதார்.
ஆனால் பால் கேட்டு அழவில்லை. தனது வளர்ப்புத் தாயார்களான கார்த்திகைப் பெண் களின் முலைப்பாலை அருந்தி, அதன்மூலம் அந்தப் பெண்களின் தாய்மையை முழுமை செய்வதற்காகவே பசி வந்தவர்போல் அழுதார்.
பாடல்: 5
"திருந்தப் புவனங்களீன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே.'
பொருள்: திருத்தமுற உலகங்கள் அனைத் தையும் ஈன்ற; சொர்ண விக்ரஹம் போன்ற அம்பிகையின் திருமுலைகளில் ஊறிப் பெருகிய அமுதப் பால் அருந்தி; சரவணப் பொய்கை யின் நடுவே அமைந்த அழகிய தாமரைத் தொட்டிலின்மீது ஏறி; கார்த்திகைப் பெண் களான ஆறு தாய்மார்களின் முலைப்பாலையும் உண்ணவிரும்பி பாலன் முருகன் விம்மி அழுதான். அந்தச் சமயம் கடல் அழுதது; குன்று அழுதது; சூரன் அழுதான். விம்மியழுத பாலமுருகனாகிய இளம் குழந்தையை, மலையும், மலை சர்ந்த நிலமுமான "குறிஞ்சி நிலத் தலைவன்' என குவலயமாகிய இந்த உலகம் போற்றுகிறது.
ஆறு அம்மா... அது யாரம்மா!
"கார்த்திகைப் பெண்களிடம் முலைப்பால் உண்ண விரும்பி குழந்தை முருகன் விம்மி அழுத போது, கடல் அழுதது, குன்று அழுதது, சூரன் அழுதான்' என அருணகிரியார் குறிப்பிட்டிருப் பதன் காரணம்....
"தன்னைக் கொல்பவன் பெண் வயிற்றில் பிறக்காத ஒருவனாக இருக்கவேண்டுமென சூரபத்மன், வரம் வாங்கியவன். முருகனோ சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து நெருப்பாய்ப் பிறந்தவர். முருகனிடமிருந்து தப்பிக்க சூர பத்மன் கடலில் ஒளிந்துகொள்ளப் போகிறான்.
முருகன் யுத்தம் புரியப்போகும் அந்தச் சமயத்தில் முருகன் தன் கைவேலால் கடல்நீரை வற்றச்செய்யப் போகிறார்' என சோதிடர் ஒருவர் கடலிடம் சொல்ல, எப்படியெல்லாம் தான் கலக்கப்படுவோமோ என கடல் நினைக் கிறது. அந்தக் கடல் முருகனுக்கு எதிர்யல்ல. ஆனாலும் சூரபத்மன் அந்தக் கடலிலே ஒளிவதால், அதுவும் அந்தலைசிந்தலை ஆக விருக்கிறது. அகத்தியர் கொடுத்த சாபத்தால் கிரௌஞ்ச மலையை முருகன் அழிக்கப் போகிறார்.
ஆகவேதான் பாலகன் முருகன் பாலுக்கு அழுதபோது, அந்த அழுகைச் சத்தம் கேட்டு, "கடல் அழுதது; குன்று அழுதது; சூரன் அழுதான்'
என அருணகிரியார் பாடியுள்ளார்.
சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு குழந்தை முருகன்களையும் கார்த்திகைப் பெண்டிர் ஆறுபேர்தான் தாய்போல இருந்து வளர்த்தார்கள். இந்த ஆறுபேரும் முனிவர் களின் மனைவியர் ஆவர்.
நிதர்த்தனி, அபரகேந்தி, மேகேந்தி, வர்த யேந்தி, அம்பா மற்றும் தளா ஆகிய இந்த ஆறு பேரும்தான் கந்தனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள். அதனால்தான் முருகனுக்கு கார்த்தி கேயன் என்கிற பெயரும் உண்டானது. தன்னை வளர்த்த இந்தத் தாய்களைப் பெருமைப் படுத்தும் விதமாகவே, அவர்களின் முலைப்பால் அருந்த பசியால் துடித்தழுதார். அந்த அழுகை மூலம் அரக்கர்களுக்கு எச்சரிக்கை சேதியும் விடுத்தார்.
கார்த்திகைப் பெண்கள் ஆறுபேரும் வானத்தில் அடிக்கோடு இல்லாத செவ்வக வடிவத்தில் நட்சத்திரக் கூட்டமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் கார்த்திகை நட்சத்திரம், கிருத்திகை நட்சத்திரம் என்று சோதிடம் சொல்கிறது. கார்த்திகை நட்சத்திரத்தின் ஜொலிப்பை நாம் வெறுங் கண்ணாலேயே பார்க்கமுடியும். முருகன் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் என்றாலும், வளர்ப்புத் தாய்களால் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாள் முருகனுக்கு மிக உகந்த நாளானது.
"கார்த்திகேயன் என்னும் நாமம் முருகனுக்கு அமையும்; கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை வழிபடுவோர் பெரும் பேற்றைப் பெறுவர்' என்று சிவபெருமான் வரம் தந்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது.
"கந்தன்றனை நீர்போற்றிய கடனால்இவன் உங்கள்
மைந்தன் எனும் பெயர்ஆகுக மகிழ்வால்எவ ரேனும்
நுந்தம்பக லிடை இன்னவன் நோன்றாள்வழி படுவோர்
தந்தம்குறை முடித்தேபரந் தனைநல்குவம் என்றான்.'
"கந்தனை நீங்கள் போற்றி வளர்த்ததால், அந்த நன்றிக்கடனாய் முருகன் உங்களுடைய மகன் என்றே, "கார்த்திகேயன்' என்றே பெயர் பெறுவான். கார்த்திகை நட்சத்திர நாளில் நோன்பிருந்து, வழிபடுபவர்களின் குறைகளைப் போக்கி நலமளிப்போம்'' என சிவன் சொன்னதாக கந்தபுராணப் பாடலில் கச்சியப்பர் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாலுக்காக அழுதான் பாலகன்! அந்த அழுகைக்குரல் சமுத்திரத்தைக் குழப்பி, கிரௌஞ்ச மலையை நடுங்கவைத்து, சூரபத் மனைக் கதறவிட்டது என்கிறார் அருணகிரி யார்.
(பாட்டு வரும்)