ff

"செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அங்கப் பெறின்.'

Advertisment

-திருவள்ளுவர்

அறியவேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு பாராட்டுகள் குவியும் என்பதாம்.

பகைமை நீக்கி பாசவுணர்வுடன் ஒற்றுமை உணர்வை ஊக்குவித்து வாழ்வை வளப்படுத்து கின்ற உன்னதமான திருத்தலம்தான் ஆண்டவர் மலையில் எழுந்தருளியுள்ள பாலதண்டபாணி திருக்கோவில்.

Advertisment

மூலவர்: பால தண்டபாணி.

உற்சவர்: வள்ளி, முருகன், தெய்வானை.

இறைவன்: மகுடேஸ்வரர்.

இறைவி: சௌந்த ராம்பிகை.

விநாயகர்: பாதவிநாயகர்.

புராணப் பெயர்: ஆண்டவர்மலை

ஊர்: கோட்டுப் புள்ளாம் பாளையம்.

தலவிருட்சம்: கடம்ப மரம்.

தீர்த்தம்: இடி தீர்த்தம்.

கொங்கு நாட்டில் பச்சைமலையில் பாலமுருகனாகவும், பவளமலையில் முத்துக் குமாரசாமியாகவும், ஆண்டவர்மலையில் பாலதண்டபாணி சுவாமியாகவும் முருகப்பெருமான் வெவ்வேறு திருநாமங்களில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நலமும் வளமும் வழங்கிவருகிறார்.

"பச்சைமலை, பவளமலை எங்கள் நாடு; பரமேஸ்வரன் வாழும் மலை எங்கள் நாடு' என் குற்றாலக் குறவஞ்சியில் ஒரு வரி உள்ளது. அதில் குறிப்பிடப்படுவதும், முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி ஆண்ட பகுதி' என்ற பெருமை யும்கொண்ட பவளமலைக்கு துர்வாசர் பயணித்தபோது இத்தலத்து (ஆண்டவர் மலை) முருகனை வணங்கியுள்ளார். அவர் இப்பகுதிக்கு வந்து வாசம் செய்தபோது கடம்ப மரத்தை தல விருட்சமாகக்கொண்டு, மூலிகை மரங்கள் அடர்ந்த பகுதியாகவும் தெய்வீக ஆற்றல்கள் நிறைந்த மலையாகவும் ஆண்டவர்மலையைப் போற்றிப் புகழ்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

gg

இத்தகைய சிறப்பம்சம்கொண்ட ஆண்டவர்மலை, பரம்பரை அறங்காவலர் கோட்டுப்புள்ளாம் பாளையம் குப்புசாமி தோட்டம். கோ.செ. கருப்பண்ண கவுண்டர் மற்றும் அவர்வழி முறையில் தர்மகர்த்தா கே.கே. ராமசாமி (குப்புசாமி தோட்டம்.) கண்காணிப்பில் அனுதினமும் இரண்டு கால பூஜைகள் சிறப்பாக நடந்து வருகின்றது.

தல வரலாறு

குன்றுகளுக்கெல்லாம் அதிபனாய் விளங்குபவன் அழகன் முருகன். கோபிக்கு அருகிலுள்ள கோட்டுப்புள்ளாம் பாளையம் எனும் ஊரிலுள்ள ஒரு சிறிய மலைமீது பாலதண்டபாணி எனும் திருநாமத்தில் வீற்றிருந்து அருள்பாலிக் கும் அற்புத தலம் ஆண்டவர்மலை. இதனை குஹகிரி எனவும் அழைக்கின்றனர்.

பெரும்பாலும் புகழ்பெற்ற முருகன் குடி கொண்டுள்ள தலங்களில் சித்தர்களோ அல்லது முனிவர்களோ முக்தி அடைந்த இடமாக இருக்கும் அத்தகைய தலங்க ளில் ஆற்றல் மேலோங்கி இருக்கும். இக்கோவில் அமைந்த இடம் ஒரு சிறிய கிராமம். விவசாயம் ஒன்றையே பிரதானமாக கொண்ட மக்கள் வசிக்கும் பகுதி.

சுமார் 200 ஆண்டு களுக்குமுன், அடர்ந்த தர்ப்பை வனப் பகுதியாக இருந்தது இம்மலை. மலையைச் சுற்றிலும் வறண்ட பூமி, குடிநீருக்கே சிரமப்பட்டிருந்த கிராமம். இம்மலையின் அடிவாரத்தில் தம்பிரான் சுவாமிகள் என்பவர் ஒரு கிணற்றைத் தோண்டினார். நல்ல நீர் கிடைத்தது. அதனை சுற்றுவட்டார மக்களும் எடுத்துச்செல்ல அனுமதித்த அவர், இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஏற்பட்ட மனப்பிரச்சினை உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்தி வந்துள்ளார். அச்சமயத்தில் கருப்பண்ண சித்தர் என்பவர் இம்மலையில் தவம் மேற்கொண்டிருந்தார். மலையில் வியாபிக்கும் தெய்வீக அதிர்வுகளை உணர்ந்து மலைமேல் மண் கோவிலையும் சிறிய முருகன் ஆண்டவ னாகிய ஆறுமுகன் கோவில் அமைந்த நாள்முதல் இம்மலை ஆண்டவர்மலை என பெயர்பெற்றது. சிலையும் பிரதிஷ்டை செய்து வழிபாடுகளை செய்துவந்தார். ஒரு சமயம். பூஜையின் போது ஆழ்ந்த நிஷ்டை யில் தியானம் மேற் கொண்டு, கோவிலின் தெற்குத் திசையில் கங்கை நதியாக வந்துசேரும். அதில் பல்லாயிரம் ஏக்கர் பூமி பாசனம் கண்டு விவசாயம் செழித்தோங்கும். அதன் பலனாக கிராம மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வர் என அருள்வாக்காக உரைத்தார்.

பின்னர் இப்பகுதியில் பவானி வாய்க்கால் பாசனம் வந்தபோது, எத்தனையோ வருடங்களுக்குமுன் தனது தவவலிமையால் கருப்பண்ண சித்தர் சொல்லிய வாக்கு பலித்ததை எண்ணி மக்கள் மெய்சிலிர்த்தனர்.

தற்போது விவசாயம் செழிப்பாகத் திகழ்வதுடன் கோவிலைச் சுற்றி எங்கு நோக்கிலும் பச்சைப்பசேலென பயிர்களும் தென்னை மரங்களும் ரம்மியமாக காட்சி தருவதைக் காணமுடிகிறது.

dd

அவருக்குப்பின் குப்பண்ண சுவாமிகள் என்பவர் இங்குவந்து நீண்ட நாட்கள் மலை யிலேயே தங்கி பூஜைசெய்து வந்துள்ளார். நீர்நிலை அருகே தியானத்தில் ஈடுபட்டு சித்தராய் ஞானம் பெற்றாராம். தான் சமாதி ஆகப்போகும் நேரம், நாள் மற்றும் நட்சத்திரம் குறித்து தியானத்தில் இருக்கும் போதே தெரிவித்த அவர், குறிப்பிட்ட தேதியில் சமாதியானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இம்மகான்களின் சமாதிகள் அடிவாரத்தில் இப்போதும் உள்ளன. மகான்கள் சித்தியடைந்த சிலகாலத்திற்குப்பின் கோவில் சிறிது சிறிதாக சிதிலமடைந்துள்ளது. அதேசமயம் அங்கே ஆன்மிக அதிர்வுகள் நிறைந்திருப்பதை பல காலத்திற்கு பின் உணர்ந்த பக்தர்கள், பல்வேறு முனிவர்களும் சித்தர்களும் வாசம்செய்து வழிபட்ட தலம் இது என்பதை அறிந்தனர். அதைத் தொடர்ந்து பக்தர்களும் ஊர்மக்களும் ஒன்றுகூடி இத்தலத்தில் கோவில் எழுப்பி முருகப்பெருமானுக்கு புதிய சிலை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர் என்று புராணம் சொல்கிறது.

தலப்பெருமை

அன்றைய காலகட்டம் மன்னர் ஆட்சிக்காலம், கோபி அருகே வள்ளியாம்பாளையம் என்ற சிறுகிராமத்தில் ராஜப்பா என்ற குயவர் வாழ்ந்துவந்தார். இவர் வித்தியாச மான முறையில் கைப்பாங்கு, எண்ணெய், சூட்டு வைத்தியம் போன்ற பல விஷயங்களில் நற்செயல்களைக் கண்டவர். இவர் அனுதினமும் சாயரட்சை வேளையில் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யும் முருக பக்தரும்கூட. கொங்கு நாட்டை ஆண்ட ஒரு மன்னரின் மகளுக்கு வயிற்றில் கட்டி இருப்பதுபோல் உணர்வு ஏற்பட்டு அவ்வப் போது வலி இருந்துகொண்டே இருந்தது. அரண்மனை வைத்தியர்கள் கைவிட்ட நிலையில், வைத்தியர் ராஜப் பாவையும் சூட்டு வைத்தியத்தைப் பற்றியும் மன்னரிடம் கூறினார்கள். ராஜப்பாவை அழைத்துவரும்படி உத்தரவிட்டார் மன்னர்.

ராஜப்பாவும் அரண்மனைக்கு வந்தார். "என் மகளுக்கு நீண்டநாட் களாக வயிற்றில் வலி உள்ளது. தாங்கள் சூடுவைத்து வைத்தியம் பார்ப்பதில் திறமையுள்ளவர் என்பதை அறிந்தேன். ஆனால் சூடு வைத்தால் என் மகளால் தாங்கிக்கொள்ள முடியாதே'' என்றார்.

"சூடுவைக்காமல் வேறுமுறையில் வைத்தியம் செய்கிறேன்'' என்று மனதில் ஷண்முக கவசத்தை பாராயணம் செய்துகொண்டே, இளவரசியைப் போன்று மண்ணினால் ஒரு சிலையை செய்து, இளவரசிக்கு எந்த இடத்தில் வலி ஏற்பட்டதோ அந்த இடத்தில் சிலைக்கு சூடுவைத்து முருக நாமத்தை உச்சரித்துக்கொண்டே குணப்படுத்தினார்.

மன்னர் உட்பட அனைவரும் பாராட்டினர். வெகு மதிதந்து சகல மரியாதையுடன் ராஜப்பாவை அனுப்பி வைத்தனர். இதுவெல்லாம் ஆண்டவர் மலை அழகனின் மகிமைகளில் ஒன்று என்று அப்பகுதி மக்களின் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

சிறப்பம்சங்கள்

ப் திருப்பரங்குன்றத்தில் குமரக்கடவுள் வடக்கு நோக்கி அருள்பாலிப்பதுபோல், கொங்குவள நாட்டில் வடக்கு நோக்கி வரப்ரசாதியாய் எழுந்தருளியுள்ள தலம் கோட்டுப்புள்ளாம்பாளையத்திலுள்ள ஆண்டவர் மலை.

gg

ப் அனுதினமும் காமிகாகம முறைப்படி இரண்டுகால பூஜைகள் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு நடைபெறுகிறது. அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ப் முருகப்பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாக ஒளிவீசுகிறார்கள். முருகப்பெருமான் தன் தாயினும் மேலாகப் போற்றும் கார்த்திகைப் பெண்களுக்குரிய கிருத்திகை தினத்தில் வழிபட்டால் மகிழ்ந்து வேண்டும் வரங்களைத் தருவான்.

ப் நோயுற்றவர்கள் திருக்கோவில் மண்டபத்தில் தங்கி வழிபாடு செய்கின்றனர். செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் என்பதால் ரத்தம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இடி தீர்த்தத்தில் நீராடி கந்தனை வணங்கினால் நலம் கிட்டும் என்பது கண்கூடு. இடி விழுந்து உண்டான சுனை என்பதால் இடி தீர்த்தம் எனப் பெயர் பெற்றது.

ப் கந்தர் அலங்காரத்தில், "நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்?' என்ற பாடல் வரிகள் உள்ளதுபோல் தீவினைகள் போன்ற முந்தைய கர்மவினைகள் நமக்கு இந்தப் பிறப்பில் துன்பம் தரக் கூடாது என்றால், அஷ்டமி, நவமி நாட்களும், நவகிரகங்களும் தீங்கு செய்யக்கூடாது என்றால் முருகப் பெருமானை தொழுங்கள் என அருண கிரிநாதர் நமக்கு உணர்த்தியதை உறுதி செய்வதுபோல் இத்தல பாலதண்ட பாணி சுவாமி தனது அருளாற்றலால் பக்தர்களைக் காத்துவருவதாக ஓதுவார் மாரிசாமி கூறுகிறார்.

ப் "செவ்வாய்க்கிழமைகளில் இத்தலத் தில் நடைபெறும் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை வாழ்வில் சிறந்த பலனைத் தரும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் மற்றும் குழந்தை பாக்கியம், திருமணத்தடை போன்ற பிரச்சினைகளுக்கு செவ்வாய்க்கிழமை களில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு வேண்டினால் நிச்சயம் பலன் கிடைப்பதாக இத்தலம் வந்து பலன்பெற்றவர்கள் கூறுகின்றனர் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஆலய அர்ச்சக ரான தண்டபாணி குருக்கள். மேலும் அவர் கூறுகையில்-

முருகப்பெருமான் பிறந்த தினமான வைகாசி விசாகத்தில் நடைபெறும் படி பூஜை இத்தலத்தின் முக்கிய விழாவாகும். அன்றைய தினம் ஆடல் பாடலுடன் சுற்று வட்டாரத்திலுள்ள ஊர்மக்கள் காவடி எடுத்துவந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். அனைத்துப் படிகளையும் நீரால் கழுவி சுத்தம்செய்து, பசுஞ்சாணத்தால் மெழுகி கோலமிட்டு ஒவ்வொரு படிக்கும் தனித்தனியே மாலை அணிவித்து தீபமேற்றி தேங்காய் பழம், நைவேத்தியம் படைத்து பூஜைகளைச் செய்வார்கள். நாதஸ்வர இசையுடன், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, தேவாரம், திருவாசகம் ஆகிய பாடல்களை ஓதுவாமூர்த்திகள் பண் இசைக்க சிறப்பான முறையில் வழிபாடுகள் நடைபெறுகிறது.

பாசிப்பருப்பு தானம்

ப் இத்தலத்திற்கு ஒருமுறை தரிசனம் செய்த பின் தாங்கள் இருக்கும் இடங்களில் புதன் கிழமையன்று பாசிப்பருப்பு வாங்கி தானம் கொடுக்கலாம்.

ஆதரவற்றவர்கள் வாழும் ஆசிரமங்களுக்கு தானம் கொடுக்கலாம். ஏழை குடும்பத்திற்கு ஒரு கிலோ பாசிப்பருப்பு வாங்கி தானம் கொடுக்க லாம். அதை அவர்கள் சமைத்துச் சாப்பிட் டால் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டம் தீரும். பாசிப்பருப்பை வாங்கி உங்களால் எந்த அளவுக்கு தானம் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு தானம் செய்துவாருங்கள். பணக்கஷ்டங்கள் எல்லாம் தீரும். வீட்டில் இருக்கும் மனக்கஷ்டங்கள் தீர்ந்து சந்தோஷம் குடிகொள்ளும்.

கடன் பிரச்சினை தீர, நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன்பெறலாம். தினமும் இரவில் உறங்கச் செல்வதற்குமுன்பாக, ஒரு சிறிய கிண்ணத்தில் 1 கைப்பிடி பாசிப்பருப்பு, 1 கைப்பிடி வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீரை ஊற்றி ஊறவைத்து மறுநாள் காலை நன்றாக ஊறி இருக்கும். அந்த பாசிப்பருப்பை கொண்டுபோய் பசுமாட்டிற்கு உங்கள் கையால் கொடுக்கவேண்டும். அப்போது கடனெல்லாம் தீர்ந்துபோகவேண்டும் என்று அந்த கோமாதாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள். பசுவின் ஆசீர்வாதம் மனப்பூர்வமாகக் கிடைக்கும்.

உங்கள் கையால் பாசிப்பருப்பை எவ்வளவு பசுமாட்டிற்கு கொடுக் கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு செல்வச் செழிப்பு கூடிக்கொண்டே செல்லும். கோவிலில் பிரதோஷ நேரத்தில் பாசிப்பருப்பு பாயாசம் செய்து ஏழைகளுக்கு சாப்பிட கொடுப்பது ரொம்ப ரொம்ப விசேஷம். பாசிப்பருப்பு பாயாசம் உங்கள் கையாலேயே தானம் செய்யுங்கள். அதேபோல் கடைகளில் விற்கும் வறுத்த பாசிப்பருப்பை வாங்கி காக்கை குருவிகளுக்கு சாப்பிட கொடுப் பது ரொம்ப நல்லது. ஆண்டவர்மலையில் அதுபோன்று செய்கிறார்கள்.

ப் குபேர திசை (வடக்கு) நோக்கி குகன் அருள்வது இத்தலத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பதோடு, குருவாய் வருவாய் அருள் வாய் குகனே என்ற வாக்கிற்கு ஏற்ப கல்விக்கு கந்தகுருவாய் வெற்றிபெறச் செய்கின்றார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க அருள்மழை பொழிகிறார்.

பிரமோதுத வருஷம் வைகாசி 21 (4-6-1990) அன்று கருப்பண்ண கவுண்டர் தலைமையிலும், அதன்பின் விக்ருதி ஆண்டு ஆனி மாதம் 10-ஆம் நாள் (24-6-2010) அன்று தர்மகர்த்தா கே.கே. ராமசாமி, குப்புசாமி தோட்டம் அவர்களது தலைமை யிலும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் கும்பாபிஷேக திருப்பணி தொடங்க உள்ளது.

ப் சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனைக்கு கொண்டு செல்லவேண்டிய பொருள்கள்: ஆறு செவ்வாழை, 6 முழம் முல்லை மலர், 6 தேங்காய், உதிரிப்பூ அரளி, வெற்றிலை பாக்கு, எலுமிச்சை பழம் மற்றும் பன்னீர், முக்கனிகள் வாங்கிச் செல்லவும். ஆலயத் தின் அருகில் கடைகள் இல்லை.

ப் முருகப்பெருமானுக்கு உகந்த தியாக சஷ்டி திதி கருதப்படுகின்றது. மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமிக்குப்பின் வரும் ஆறாவது திதியே சஷ்டிதிதி. சஷ்டியில் விரதமிருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால்தான் சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழி ஏற்பட்டது. ஆறாம் எண்ணுக்கு ஐஸ்வர்யத்தை தரக்கூடிய வல்லமை உண்டு என்று ஜோதிடம் கூறுகிறது. ஜாதகரீதியாக கடன், விரோதம், சத்ரு போன்றவைகள் 6-ஆமிடத்தை குறிக்கின்றன. செவ்வாய் தோஷம் உட்பட அனைத்து தோஷங்களை யும் நீக்கும் வல்லமை படைத்தவராக முருகப்பெருமான் விளங்குகிறார். நல்லெண்ணெய் தீபமேற்றி, கேசரி நைவேத்தியம் படைத்து வாசனைமிக்க பலர்களால் அர்ச்சனைசெய்தால் நல்ல பலன்கிட்டும் என்கிறார் ஆலய அர்ச்சகர்.

திருக்கோவில் அமைப்பு

கொங்கு மண்டலத்தில் கோபிக்கு அருகில் பவானி நதியின் வடகரையில் சுற்றிலும் மூலிகைச் செடிகள், தென்னை மரங்கள் அடர்ந்த பசுமையான சூழலில் 108 படிகள்கொண்ட குன்றின்மீது குபேர திசை நோக்கி (வடக்கு) வரப்ரசாதியாய் அருள்மழை பொழியும்வண்ணம் அழகுற அமைந்துள்ளது. மலையின் முகப்பு வாயிலில் இரண்டு யானைகள் வரவேற்கும்வண்ணம் படிகளின் இருபுறமும் இருக்க பாதவிநாயகர் சந்நிதியை தரிசனம் செய்துவிட்டு சிலபடிகள் ஏறியபின் கடம்பன், இடும்பன் சந்நிதி வரும். அந்த இடும்பன் சந்நிதியில்லி

"ஓம் மஹா வீராய வித்மஹே

குஹ பக்தாய தீமஹி

தந்தோ இடும்ப ப்ரசோதயாத்''

என மூன்றுமுறை இடும்பன் காயத்ரி மந்திரங்களுடன் வணங்கி படிகள் ஏறி மேலே சென்றால் கொங்கு நாட்டு வழக்கப்படி தீபஸ்தம்பம் அமைந்துள்ளது. மேலும் சில படிகள் ஏறி மகா மண்டபத்தை அடைந்ததும் க்ஷேத்திர விநாயகரை வணங்குகிறோம்.

உள் சுற்று பிராகாரத்தில் கிழக்கு நோக்கிய படி ஸ்ரீ மகுடேஸ்வரர், சௌந்தராம்பிகை அம்மன், வள்ளி தெய்வானை, மகாவிஷ்ணு, ஈசான்ய திக்கில் நவகிரகங்கள், சனிபகவான் மேற்கு நோக்கியபடி அருள்பாலிக்கின்றனர்.

கருவறையில் முருகப்பெருமான் நின்ற திருக்கோலத்தில் வலது கரத்தில் தண்டாயுதம் ஏந்தி, இடக்கரத்தை இடுப்பில் வைத்தவாறு ஸ்ரீ பாலதண்டபாணி என்ற திருநாமத்துடன் பேரழகனான அருள் பொங்கும் வதனத் தோடு தரிசனம் தருகிறார். மூலவரின்முன்பு வள்ளி, தெய்வானை சமேத வடிவேலன் உற்சவமூர்த்தியாக திருக்காட்சி தருகிறார்.

உட்பிராகாரத்தில் ஷண்முக வேள்வி நடக்கின்ற யாகசாலை உள்ளது.

வெளிச்சுற்றில் தீபஸ்தம்பத்தில் விநாயகர், முருகன், புடைப்புச் சிற்பங்களாக தரிசனம் தருவதோடு மயில்வடிவமும் உள்ளது. இவற்றை வணங்கியபின் வெளிப் பிராகாரத்தை வலம்வரும்போது மலையின் அழகை ரசித்துக்கொண்டு தலவிருட்சமான கடம்ப மரம், (சுனை) இடி தீர்த்தத்தையும் பார்த்துவிட்டு அழகன் முருகனிடம் நாம் நம் கோரிக்கைகளை வைத்துவிட்டு தெளிவுடன் திரும்பலாம்.

வழக்கில் வெற்றிபெற வேண்டுமா? பங்காளிச் சண்டையில் சொத்து பிரிக்காமல் உள்ளதா? ரத்த சம்பந்தப்பட்ட நெருங்கிய உறவுகளில் தங்கள் மகளுக்கு மணமுடித்து கொடுப்பதா? தம்பதி ஒற்றுமையின்மையா? பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினையா? தார தோஷமா பாலாரிஸ்ட தோஷமா? இவற்றுக் கெல்லாம் நல்ல சாதகமான தீர்வுகாண செவ்வாய்க்கிழமையன்று நடைபெறுகின்ற சத்ரு சம்ஹார திரிசதி பூஜையில் தங்களது கோரிக்கைகளை வைத்தால் கால தாமதமாகாமல் வெற்றிகிட்டும் என்று உத்தரவாதம் தருகிறார் ஆலய அர்ச்சக ரான தண்டபாணி குருக்கள். ஆண்டவர் மலைக்கு வாருங்கள் மனக்கோட்டையை மலைக்கோட்டையாக்கி ஆனந்த நிலை யருளும் ஆண்டவர்மலை அழகனை வழிபடு வோம்; வளம் பெறுவோம்.

நடை திறப்பு காலை 8.00 மணிமுதல் 11.00 மணிவரை மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆலயத் தொடர்புக்கு: பரம்பரை அறங் காவலர், அருள்மிகு பாலதண்டபாணி திருக்கோவில், ஆண்டவர்மலை, கோட்டுப் புள்ளாம் பாளையம், கோபி தாலுகா, ஈரோடு மாவட்டம்- 638 453.

பூஜை விவரங்களுக்கு: தண்டபாணி குருக்கள் (99768 77557). ஓதுவார் மாரிசாமி, 99522 73989.

அமைவிடம்: ஈரோடு மாவட்டம், கோபி- சத்தியமங்கலம் சாலையில் பத்துகிலோமீட்டர் தொலைவில் கோட்டுப் புள்ளாம்பாளையத்தில் ஆண்டவர்மலை உள்ளது. கோபி- பூதி மடைப்புதூர் செல்லும் பேருந்து எண் 24-ல் ஏறி ஆண்டவர்மலையை அடையலாம்.

படங்கள்: போட்டோ கருணா