ஔவைக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் இனிய சுவை மிகுந்த இரவு உணவு தயாராகிக் கொண்டிருந்தது. வான் நிலவு உதயமாகும் நேரம் ஊர்சபையினர் ஏற்பாடு செய்திருந்த விரலியர் இசை நிகழ்வு தொடங்கும் நேரம் நெருங்கி யது. விரலியர்கள் தங்களது யாழ் நரம்புகளை சரிசெய்துகொண்டிருந் தனர். விரலியர்களின் நிலவொளி யோடு சேர்ந்த மதுர இசை மழையில் நனைய, பயணியர்கள் ஊர்சபைக்கு முன் வெட்டவெளியில் அமரத் தொடங்கினர். குழல் வாசிப்பவர்களும் மதங்கம் வாசிப்பவர்களும் ஒலி இசைவுக்கு, தங்களின் கருவிகளைத் தயார்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், ஒரு சிறு கும்பல் ஔவை வீற்றிருக்கும் மன்றத்திற்குள் விரைவாக நுழைந்துகொண்டிருந்தது. அக்கும்பல் ஒரு இளைஞனைப் பிடித்து இழுத்துவந்தது. சபையோர் முன்பு அவ்விளைஞனை நிறுத்தி, அவனை அழைத்துவந்த கார ணத்தை ஔவையிடம் கூறியது. "நாங்கள் இலுப்பைப் பட்டியிலிருந்து வருகின்றோம். ஔவையார் இங்கு வருகைதருவதை அறிந்து வந்துள்ளோம். எங்கள் ஊரிலுள்ள மந்தைச் சத்திரத்தில் வயதானவர்கள் இரவில்வந்து தூங்குவார்கள். இந்த ஒருவார காலமாக, இரவில் நடுநிசி வேளையில், ஊருக்குள் "தீப்பிடிக்கிறது.. தீப்பிடிக்கிறது...' என்ற கதறல் ஓசை கேட்கும். அதைக்கேட்டு அனைவரும் அலறியடித்து எழுந்துவந்து பார்த்தால், ஊருக்குள் எங்கும் நெருப்பு எரிவதையோ, கதறிய நபரையோ பார்க்கவியலாது.
மற் றொரு இரவில் "காட்டுயானை ஊருக்குள் நுழைந்து விட்டது, எந்திரியுங்கள்.. காட்டு யானை நுழைந்துவிட்டது, தப்பித்து ஓடுங்கள்' என்ற கூக்குரல் சத்தமாகக் கேட்கும். இரவில் இருட்டுக்குள் யானை வருவதை அறியமுடியாமல் மந்தைச் சத்திரத்தில் உள்ளோர் ஓடி ஒளிவார் கள். ஆனால் காலைவரை யிலும் காட்டுயானை யைப் பார்க்கவியலாது.
சில இரவுகளில் புதிதாகத் திருமணமானவர்கள் வீட்டு வாசல் கதவுகளை பலவந்தமாகத் தட்டும். ஓசைகேட்டு உள்ளிருப்போர் அஞ்சி நடுங்கும் அளவிற்கு ஓசை கேட்கும். சினை ஆடுகள் மட்டும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கருப்பட்டி களின் அடைப்பு இரவில் திறக் கப்பட்டு, ஆடுகள் தெருக்கள் வழியாக ஓடும். இவையனைத்தும் புரியாத புதிராக சில நாட்களாகவே எங்கள் ஊரில் நடந்துகொண்டிருப்பதால், எங்களது இரவுத்தூக்கம் கெட்டு வருகிறது. இதனைக் கண்டறிய இரவுநேரங்களில் அச்சத்தோடு மறைந் திருந்து ஒற்றுவேலை பார்த்தோம்.
சென்ற மறைநிலவு நாளன்று நடுநிசி வேளையில், மந்தைக்கு அருகிலிருக்கும் பெரிய இலுப்பை மரத்திலிருந்து ஒரு உருவம் தன் கால்களில் சதங்கையைக் கட்டிக் கொண்டு குதித்து ஊருக்குள் ஓடியது.
அதனைப் பின்தொடர்ந்து அச்சத்து டன் சென்று பார்த்தோம். அது ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டித்தட்டி, தன் கால்சதங்கை சத்தம் நன்றாகக் கேட்குமாறு குதித்துக் குதித்து ஓடியது. அதனைப் பின்தொடர்ந்து செல்கையில், அது ஊரெல்லாம் சுற்றிவிட்டு, மீண்டும் இலுப்பை மரத்தின்மீது ஏறிக்கொண்டது.
நாங்கள் விடியும்வரை அந்தமரத்தை விட்டு அகலாமல் சுற்றி நின்றுகொண்டோம். விடிந்தபின் இருவர் அம்மரத்தில் ஏறி பார்த்த போது, அம்மரத்தின் அகன்ற நடுப்பகுதியில், இவன் சதங்கை கட்டிய கால்களுடன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அவனை எழுப்பி, தப்பிச் செல்லாதவாறு பத்திரமாக மரத்தைவிட்டு இறக்கி, ஏன் இவ்வாறு செய்தாய் என அவனிடம் கேட்டால், எங்கள் கேள்விகளுக்கு மறுதலையாக பதில் கூறிக்கொண்டு திருதிருவென விழித்தான்.
நாங்கள் அவனுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியமுடியாமல், வேலன் வெறியாட்டத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு, வேலனிடம் குறி கேட்டோம். வேலன் வெறியாடி, இவனுக்கு அணங்குப் பேய் பிடித்துள்ளதாகவும், அது எளிதில் இவனை விட்டுப்போகாது என்றும், இரவு நேரங்களில் இவனால் ஊராருக்கு என்ன வேண்டுமானா லும் ஊறு நேரலாம் எனக் கூறினான். எனவே, எங்களது இரவுத் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் இந்த அணங்குப் பேயை, இவனிடமிருந்து அகற்றுவதற்கான வழி சொல்லுங்கள் என்று ஔவையாரிடம் வேண்டினர்.
ஔவை அவ்விளைஞனை தன் முன்னால் அமரச் செய்தார். அவனுடைய கண்களைக் கூர்ந்து கவனித்தார். அவன் கண்களில் விரக்தி தென்பட்டது. அவனைப்பற்றிய முழு விவரத்தை அழைத்து வந்தவர்களிடம் கேட்டார். அவர்கள் ஔவையிடம் "அவனு டைய தாய்- தந்தையர் இருவரும் மூன்று மாதங் களுக்குமுன் ஒரு தொற்றுநோயினால் இறந்து விட்டனர். ஆறு மாதங்களுக்கு முன்பு, பக்கத்து ஊரில் வசிக்கும் அம்மான் மகளை இவனுக்கு திருமணம் செய்துவைத்தனர்.
இவனது தாய்- தந்தையர் இறந்தபின் இவனு டைய மனைவி, தனது பிறந்தவீட்டிற்கு சென்றுவிட்டாள். மீண்டும் வரவில்லை. இவன் மலையில் ஏறி குறிஞ்சி விறகு வெட்டிவந்து ஊரார்களிடம் விற்று, அந்த வருவாயை யாராவது ஒருவர் வீட்டில் கொடுத்து சாப்பிட்டு வருகிறான்.
கடந்த பத்து நாட்களாகத்தான் இந்த நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது. மலையில் விறகு எடுக்கச்செல்லும்போது, ஏதேனும் அணங்கு தொற்றியிருக்குமென்று அஞ்சுகி றோம். எப்படியாவது இவனைக் காப்பாற் றுங்கள்'' என ஔவையிடம் கூறினர்.
ஔவை சிறிதுநேரம் அமைதியாக இருந்துவிட்டு பேசலானார். "இவனுக்குப் பிடித்திருக்கும் அணங்கு யாரெனத் தெரிய வில்லையா உங்களுக்கு? வேறுயாருமில்லை, இவனுடைய அம்மான் மகள்தான்' என்று ஔவை கூறியதும், அவனது முகம் மலர்ந்தது.
ஔவை சொன்னதைக்கேட்ட ஊரார் ஆச்சரியமுடன் பார்த்தனர். "அவள் இன்னும் உயிரோடுதானே இருக்கின்றாள். அவள் எப்படி அணங்குப் பேயாவாள்?' என ஔவையிடம் வினவினர்.
அவர்களிடம் ஔவை "அனுபவமிக்க வயதானவர்களாக இருக்கும் நீங்கள் இத்தனை அறிவீலியாக இருக்கலாமா? அம்மான் மகள் என்று நான் கூறியவுடன், அவன் முகம் மலர்ந்ததைப் பார்த்தீர்களா?' எனக் கூறிவிட்டு, அவனைப் பார்த்து "ஏன் தம்பி.. உனது அம்மான் மகள்தானே?' என்று ஔவை கேட்டவுடன், அவ்விளைஞன் தன் மனதில் இருந்தவற்றையெல்லாம் கொட்டினான்.
அவ்விளைஞன் பேசலானான். "நானோ தாய்- தந்தையரை இழந்தவனாயிருக்கிறேன். என் மனைவியும் என்னைவிட்டுப் பிரிந்து பல மாதங்களாகிவிட்டது. அவள் நினைவும், எனது ஆதரவற்ற நிலையும், இரவெல்லாம் கண்ணுறங்க முடியாமல் வாட்டுகிறது. என்னை கவனிப்பார் யாருமில்லை. நான் வீட்டில் தனியாக மனக்குமுறலுடன் இருக்கமுடியாமல், மந்தைக்கு வந்து உறங்கு கிறேன். அப்போதும்கூட, என் நிலை இந்த தாத்தாமார்களுக்குப் புரியவில்லை. என் அம்மான் வீட்டில் எனக்காகப் பேச யாரும் வருவதில்லை. எனவே, நான் மட்டும் இரவெல்லாம் தூக்கமின்றி துன்பப் படும்போது, இவர்கள் நிம்மதியாகத் தூங்குவது எனக்கு ஆத்திரத்தையும் அவமானத் தையும் ஏற்படுத்தியது. ஆகவே, எனக்கொரு தீர்வு கிடைக்காத நிலையில், இவர்கள் யாரும் நிம்மதி யாக தூங்கக் கூடாது என்று முடிவுசெய்தேன். இதற்கு எனக்கு புகலிடம் தந்தது இலுப்பை மரம்.
கருவுற்ற சினை ஆடு களைப் பட்டியில் அடைத்து பாதுகாக்கத் தெரிந்த என் சிற்றப்பன், பெரியப்பன் மார்களுக்கு, என்னைக் கவனிக்காமல் இருக்க முடிகிறதல்லவா? எனவேதான், அடைக்கப்பட்ட சினை ஆடு களை அவிழ்த்துவிட்டேன். காலை சமையலுக் காக வைத்திருந்த விறகுக்கட்டுகளில் நீர் ஊற்றி ஈரமாக்கினேன்.
என்னோடு திருமணமான சினேகிதர் கள்கூட என்னைக் கவனிக்கத் தவறியதால், அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி, தூக்கத் தைக் கலைத்தேன். இரவு முழுவதும் வீட்டை விட்டு வெளியேவர இயலாமல் முடங்கிக் கிடப்பதற்காகவே, காளை மாடுகளுக்குக் கட்டியிருந்த சலங்கைகளைக் கால்களில் கட்டிக்கொண்டு குதித்து, அணங்கென அஞ்ச வைத்தேன்.
அம்மையே! நான் செய்தது தவறா? இவர்களெல்லாம் ஊர் பெரியோர்களா? நீங்களே சொல்லுங்கள். இனி யாராவது திருமணமான இளைஞனானவன் மந்தை யில் வந்து தூங்குகிறான் என்றால், இப்பெரியோர்கள் ஏன் மந்தைக்கு வருகிறாய்? எனக் கேட்டு அவனது மனக்குமுறலுக்கு தீர்வு காணவேண்டும். அதை நீங்களே இவர் களிடம் கூறுங்கள்.'' என்று கூறிக்கொண்டே அழலானான். சுற்றியிருந்த அனைவரும் அவன் நிலைகண்டு வருந்தினர்.
ஔவை அவனை அருகில் அழைத்து "நாளை நம் பயணத்தின்போது, உன் அம்மான் வீட்டிற்கு நான் வருகின்றேன். உன் அம்மான் மகள்மீது நீ கொண்ட பாசத்தை விளக்கிக்கூறி உன்னோடு அனுப்பிவைக்கின்றேன். இன்றுமுதல் உன் கவலை அனைத்தையும் விட்டுவிட்டு, என்னோடு உணவருந்திவிட்டு, மனதிற்கு இதமான யாழிசை கேட்டு, இங்கே நிம்மதியாக கண் துயில்வாய்'' என்று ஔவை கூறியதைக் கேட்ட அவன், இறந்த தன் அன்னையே உயிர் பெற்றதுபோல ஆறுதல டைந்து மகிழ்ந்தான்.
"ஊர் பெரியோர்களே! ஒரு ஊருக்குள் பிரச்சினைகள் உருவாகும் காரணத்தையும், அதனை தீர்ப்பதற்கான வழிமுறையையும், அவனே கூறி விட்டான். அவன் கூறியதுபோல் நடந்து கொள்வதே பெரியோர்களின் கடமை.
அதைவிடுத்து அணங்குப் பேய் பிடித்து விட்டது என, மேலும் அவனை மன நோயாளியாக்கி, அவனுடைய மண வாழ்க்கையை சிதைக்கச் செய்யும் அளவுக்கு வந்துவிட்டீர்கள்.
ஊரில் ஒரு தொற்றுநோய் வருவதை முன்கூட்டியே அறிந்துகொள்ள ஒரு உபாயம் சொல்கிறேன். கொல்லங்கோவை கிழங்கினை ஊர் சத்திரத்தின் நடுவே தொங்கவிடுங்கள். அது வாடாமல் இருந்தால் அவ்வூரில் தொற்று நோயில்லை. அது சுருங்கி வாடினால் ஊருக்குள் தொற்றுநோய் பரவப்போகிறது என்று பொருள். அவ்வாறு கொல்லகோவை கிழங்கு சுருங்கியவுடன், குருமட மருத்துவர்களை அணுகி, உடனுக் குடனே அதற்கான தீர்வுகண்டு, உயிர்பலியாவதை தடுப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். இனிவரும் காலத்தில் அறிவிற்சிறந்த ஆன்றோர்களாக இருப்போம்'' எனக்கூறி விடைபகர்ந்தாள் ஔவை.
யாழ்களின் இனிய இசையுடன் தொடர்வோம்..