போபால் நகரம் 1984 டிசம்பர் மாதத்தில் எப்பொழுதும் போல பரபரப்பாக இயங்கிக் கொண்டி ருந்தது. திடீரென யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கசிந்த நச்சுவாயு அந்த நகரையே புரட்டிப் போட்டுவிட்டது. எங்கும் மரண அபயக்குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. நச்சுவாயுவை சுவாசித்ததால் சுற்றுவட்டாரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் மரணமடைந்தனர். பலர் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டனர்.
இப்படியொரு பெரிய கோரதாண்டவம் அந்த நகரையே ஆட்டிப்படைத்த வேளையில், சோசன்லால் எஸ். குஷ்வகா மற்றும் எம்.எல். ரத்தோர் ஆகிய இரு நபர்களின் குடும்பம் மட்டும் இந்த நச்சுவாயு பேராபத்திலிருந்து எந்தவித பாதிப்புமின்றித் தப்பியது. இத்தனைக்கும் தொழிற்சாலைக்கு மிக அருகில், சுமார் ஒரு மைல் தூரத்தில் தான் அவர்கள் வீடு இருந்தது. இது எப்படி சாந்திய மென ஆராய்ந்துபோது, இவ்விரு குடும்பத் தினரும் நித்தம் "அக்னி ஹோத்ரம்' என்னும் அக்னி உபாசனையை (ஹோமம்) தவறாமல் செய்துவந்த விஷயம் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.
அக்னி வழிபாடாக ஹோமம், யாகம் செய்யும் போது ஏற்படும் நிர்மல மான புகையானது, மேலே வானத்தில் பரவி மழை தரும் மேகங்களின் ஆன்மாவுடன் சேர்கிறது. அதுமட்டு மின்றிவான் வெளியைத் தூய்மைப்படுத்தி, நச்சுப் புகையை அழிக்கச் செய்கிறது. இன்றைக்கு சுற்றுப் புறச் சூழல் மாசடைவதை, அக்னிஹோத்ர ஹோமப் புகையானது சுத்தம் செய்யும் ஆற்றல் கொண் டது என்பதை அயல்நாட்டி னரும் ஒப்புக்கொள்கிறார் கள். யாகத்தால் நமக்கு மழை பொழிகிறது என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, பகவத் கீதையிலும் ஸ்ரீ கிருஷ்ண பகவான்-
"அன்னாத் பவந்தி பூதானி பர்ஜன்யாத் அன்ன ஸம்பவ
யக்ஞாத் பவதி பர்ஜன்யோ யக்ஞ: கர்ம ஸமுத் பவர்'
யாகத்தால் மழையும், மழையால்
தானியங்களும் விளைகின்றன.
இதனால் ஜீவராசிகள் வாழ்கின்றன என்று கூறியுள்ளார்.
காசியப முனிவர்- அதிதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர்தான் அக்னிபகவான். இவருக்கு ஸ்வதாதேவி, ஸ்வாஹா தேவி என்னும் இரு மனைவிகள். இவருக்கு பாகவ, பவமான, சுகி என்னும் மூன்று பிள்ளைகள் இருந்தனர்.
சிலர் அக்னி பகவான் பிரம்மாவின் புதல்வர் என்றும் சொல்வார்கள்.
சாஸ்திர முறையில் அக்னியை உருவாக்குவதென்பது- அரணிக்கட்டை யைக் கடைந்து அதன்மூலம் அக்னியை உண்டாக்கி ஹோமம், யாகம் செய்ய வேண்டும். சிலர் அரணிக்கட்டையில் பிறந்த வர்தான் அக்னி என்றும் சொல்வதுண்டு. இந்தக் கருத்தை ஒட்டியே சுவாமி தேசிகன் கிருஷ்ணாவதாரத்தின் பெருமையைச் சொல்லும்போது, "தேவகி, வசுதேவன் என்னும் அரணிக் கட்டையிலிருந்து கிருஷ்ணன் என்னும் அக்னி உண்டானான்' என ஒப்புமையை அழகாக விவரிக்கிறார்.
ஆடு இவரது வாகனமென்றும் கூறுவதுண்டு. அக்னியே சூரியன்; சூரியனே அக்னி என்பதால், நம்முடைய சனாதன தர்மத்தில் அக்னி பகவானுக்கு பெரிதும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. "அக்னயே நம, ஜாத வேதஸே நம' என்று எட்டுவிதமான பெயர்களால், அக்னி காரியங்களின் ஆரம்பத்தில் அக்னிபகவானைப் பூஜிப்பது வழக்கம்.
குறிப்பாக, ரிக்வேதத்தின் முதல் துதியும் கடைசி துதியும் அக்னிபகவானைக் குறித்தே அமைந்துள்ளன. யஜுர், சாம வேதங்களிலும், புராணங்களிலும், உபநிடதங்களிலும் அக்னிபகவான் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 18 புராணங்களில் ஒன்றான அக்னி புராணம் 15,000 துதிப் பாடல்களைக் கொண்டது. அக்னி பகவானால் உபதேசிக்கப்பட்டதால் இதற்கு "அக்னி புராணம்' என்று பெயர் வந்தது.
பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி, சிவபெருமானின் அஷ்ட மூர்த்தி ரூபங்களான பூமி, நீர், காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், சோம யக்ஞ எஜமான் ஆகியவற்றில் ஒன்றாவார்.
"இரவில் சந்திரன், நட்சத்திரங்களாக வும், பகலில் சூரியனாகவும் அக்னி நமக்கு உபயோகப்படுகிறது' என ரிக்வேதம் அக்னிபகவானைப் போற்றுகிறது. அக்னி பகவானை தினமும் வழிபடுபவர்களுக்கு செல்வம் தானே வந்துசேரும்.
"வேதோ நித்யம் அதீயதாம் தத் உதிதம் கர்ம ஸு அநுஷ்டீ யதாம்' என ஆதிசங்கரர் கூறுவதால், அதன்படி தினமும் வேதங் களைத் துதிக்கவேண்டும். அந்த வேதங்களில் சொல்லப்பட்ட வண்ணம் யக்ஞாதி அனுஷ்டாங்களை சரிவர செய்யவேண்டும் என்னும் கடமை இருப்பதால், சிறுவயதில் உபநயனமான பிரம்மச்சாரி தினமும் காலை, மாலை இருவேளைகளில் "சமிதாதானம்' என்னும் அக்னி வழிபாட்டை அரசு, கருங்காலி, புரசு, வன்னி, அத்தி போன்ற மரங்களின் சமித்தை (குச்சி) முக்கியமாகக்கொண்டு செய்யவேண்டும்.
அதேபோல் திருமணமானவர்கள் (கிரகஸ்தர்கள்) தினமும் நித்யகர்மாவான "ஔபாஸனம்' என்னும் அக்னி அனுஷ்டா னத்தை (வழிபாட்டு முறை) தினமும் காலை, மாலை வேளைகளில் செய்யவேண்டும். திருமணத்தின்போது ஔபாஸனம் செய்யப் பட்ட அந்த அக்னியை அணையாமல் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும்- அதாவது கடைசி காலம்வரை செய்யவேண்டும். திருமணத்தின்போது அக்னியை சாட்சியாக வைத்துதான் திருமணச் சடங்குகள் நடப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஔபாஸன அக்னி வழிபாடு என்பது அந்தணர்களுக்கு மட்டு மின்றி அனைவருக்கும் பொதுவான வழிபாடாகும்.
ஒரு தனிமனிதனின் ஆத்ம சுத்திக்காகவும், அவனது குடும்ப நலனுக்காகவும் இந்த ஔபாஸன அக்னி வழிபாட்டை நடத்துவதுபோல, உலகமக்களின் நன்மைக்காகவும், உலகில் வாழும் எல்லா ஜீவராசிகளின் நலனுக்காகவும் நடத்தப்படும் அக்னி வழிபாட்டிற்கு "அக்னி ஹோத்ர ஹோமம்' எனப் பெயர். குறைந்தது ஏழு ஆண்டுகள்முதல் 12 ஆண்டுகள்வரை குருகுலத்தில் முறையாக மூன்று வேதங்களை யும் சுற்று, இதற்கான சில விசேஷ யாகங்களையும், மந்திரங்களையும் குருமுக மாக அறிந்து, குடும்பத்தில் வழிவழியாக வேதோக்தமான அக்னிஹோத்ரம் என்னும் அக்னி உபாசனையை காலையில் சூரியன் உதிக்கும் (ஆவி சூர்ய) காலத்திலும், மாலை யில் சூரிய அஸ்தமிக்கும் (அதிவ்ருஷ சூர்ய) காலத்திலும் நாள் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் சுமார் 40 நிமிடங்கள் செய்யும் வேத விற்பன்ன சீலர்களுக்கு "அக்னி ஹோத்ரிகள்' (ஆஹுதாக்னி) என்று பெயர்.
உலகமக்களின் நலனுக்காக- குறிப்பாக நம் பாரத நாடு அண்டை நாடுகளின் தொந்தரவு களின்றி நிம்மதியாகவும் செழிப்பாகவும் இருக்கவேண்டுமென்னும் பொதுநோக்கில், ஒரு இராணுவ வீரர் நாட்டு நலன்கருதி, தன் நலன்கருதாது தியாக உணர்வுடன் இருப்பதுபோல, அக்னி ஹோத்ரிகள் இந்த அக்னி வழிபாட்டைச் செய்கிறார் கள். இவர்கள் தினமும் இருவேளைகளில் இந்த ஹோமத்தை குறிப்பிட்ட நேரத்தில் இடைவிடாது செய்யவேண்டுமென்பதால், மற்றவர்களைப்போல் வேறு பணிக்குச் செல்லமுடியாது. இந்த ஹோமம் செய்பவர்களுக்கு உணவுக் கட்டுபாடு மற்றும் ஆசாரம் உண்டு. இப்படி முறையாகச் செய்பவர்கள் இன்று பாரததேசம் முழுவதும் சுமார் 135 பேர்தான் உள்ளனர்.
அதில் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அதிகளவு அக்னி ஹோத்ரிகள் வசித்துவருகின்றனர்.
பிரம்மாவின் வடிவமான "கார்ஹபத்யம்', விஷ்ணு வடிவமான "தட்சிணாக் கினி' சிவபெருமான் வடிவமான "ஆகவனீயம்' ஆகிய மூன்று அக்னிகளைக்கொண்டு அக்னி ஹோத்ர ஹோமத்தை, நாட்டுப் பசுவின் பாலை முக்கிய திரவியமாகக்கொண்டு செய்வார்கள்.
அக்னிஹோத்ர யாக குண்டமானது (வேதி) சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட வண்ணம் செங்கற்களால் கட்டப்பட்டு, அதன்மேல் களிமண்ணைப் பூசி, பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும். "கார்ஹபத்யம்' அக்னி குண்டமானது வட்ட வடிவில் இருக்கும். இதிலுள்ள அக்னியானது வருடத்தில் 365 நாட்களும் அணையாமல் இருக்கவேண்டுமென்பது சாஸ்திர விதியாகும். "தட்சிணாக்கினி' என்பது அரை வட்ட வடிவமாகவும், "ஆகவனீயம்' என்பது சதுர வடிவமாகவும் இருக்கும். இதைத் தான் முத்தீ (த்ரேதாக்னி) என கூறுவார்கள்.
இந்த மூன்று வகையான அக்னியைப் பற்றி புறநானூற்றில், "அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ' என்றும், "முத்தீப் புரையக் காண்தக' எனவும் கூறப் பட்டுள்ளது. நக்கீரரும் "முத்தீ செல்வத்து' எனவும், சிலப்பதிகாரத்தில் கட்டுரை காதை அத்தியாயத்தில்,
"முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பும்
அறுதொழி லந்தணர் பெருமுறை...'
எனவும் பாடப்பட்டுள்ளது.
"உயிர்களைப் படைக்கும்போதே பிரம்மதேவன் உலகில் வாழும் ஜீவராசிகள், மக்கள் நலனுக்காக யக்ஞங்களை (ஹோமம், யாகம்) புரியும்படி செய்தார்' என்னும் பொருளில், சிலப்பதிகாரத்தில் "வேத முதல்வன் வேள்விக் கருவியோ'... என்று பாடப்பட்டுள்ளது.
"அக்னிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய
தேவம்ரித்விஜம் ஹோதாரம் ரத்னதாதமம்'
என்னும் ரிக் வேதத்தின் முதல் துதிப்படி, நாம் செய்யும், ஹோமத்தில் போடப்படும் ஹோம திரவியங்களை அந்தந்த தேவதைகளுக்குக் கொண்டு சேர்ப்பவர் அக்னிபகவான்தான். இதற்கு விளக்கம் தந்த சில முன்னோர்கள், "அக்னி சப்தேன விஷ்ணு உச்சதே' என கூறியுள்ளனர்.
அதாவது "விஷ்ணுபகவான் அக்னி என்னும் சொல்லால் உணர்த்தப்படுகிறவர்' என்பதாகும்.
அக்னி குண்டத்தில் ஆஹுதி செய்யப்படும் எல்லாவற்றுக்கும் "ஹவிஸ்' என்னும் பெயரும் உண்டு. தேவதைகளுக்கு ஹவிர் பாகத்தைக் கொடுத்துதான் திருப்திப்படுத்த முடியும். தேவதைகளுக்கு நம்மைப்போல பசி, தாகம் போன்றவை உண்டென்பதால், நாம் அக்னி குண்டம்மூலம் தரும் ஹவிர் பாகங்களுக்காக அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள் என ஐதரேய உபநிடதம் தெரிவிக்கிறது.
நாம் கொடுப்பதைக்கொண்டு திருப்தியடைந்து, நாம் வேண்டிய பலனை தேவதைகள் நமக்குத் தருவார்கள். உதாரணத்திற்கு, மழைவேண்டி வருண பகவானைத் துதித்து அதற்கான ஹோமம், ஜபத்தைச் செய்தால் நல்ல மழை பொழியும். இந்த மழையானது ஹோமம் செய்த எஜமானுக்கு மட்டும் சொந்தமாக அல்லாமல், மக்களுக்கும், எல்லா ஜீவராசிகளுக்கும் சொந்தமாக உள்ளது. இதனால் எல்லாரும் பயனடைகிறார்கள். இப்படி தேவதைகளுக்கு வேண்டிய யக்ஞங்களை நடத்தி அதன்மூலம் நாம் பலன் பெறுவதுபோல, நாம் அவர்களுக்கு வேண்டிய யக்ஞங்களை நடத்தி பரஸ்பர நட்புறவுடன் இருக்க வேண்டும் என்னும் பொதுநோக்கில், பிரம்மதேவன் யக்ஞங்களையும் மற்ற சில நித்ய கர்மானுஷ்டானங்களையும் நமக்கு விதித்தார். பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணரும் இதையேதான் வலியுறுத்துகி றார்.
ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் அம்பிகையைப் போற்றும்போது "யக்ஞப் பிரியா' என்றும், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமத்தில் மகாவிஷ்ணுவைப் போற்றும்போது "யஜ்ஞக்ருதே நம' எனவும் கூறப்பட்டுள்ளது. எனவேதான் யக்ஞங்களை ஆங்காங்கே தொடர்ந்து நடத்தவேண்டும். அதிலும் குறிப்பாக "அக்னிஹோத்ர ஹோமம்' நடத்தப்படவேண்டும். இதைத் தொடர்ந்து நடத்திவந்தால் நாட்டில் அமைதி நிலவி, செல்வச் செழிப்பு பெருகி, நோய் நொடியின்றி மக்கள் நிம்மதியாக வாழ வழிசெய்யும் என்பதை காளிதாசர் எழுதிய ரகுவம்ச காவியத்தின்மூலம் அறியலாம்.
அதில் தீலிபன் மகாராஜா தனது குலகுருவான வசிஷ்ட மகரிஷியை சந்திக்க அவரது ஆசிரமத்திற்குச் சென்றபோது, நாட்டு நிலைமையைப் பற்றி வசிஷ்ட மகரிஷி மகாராஜாவிடம் வினவ, அதற்கு அவர், "நீங்கள் தினமும் அக்னிஹோத்ர ஹோமம் உள்ளிட்ட கர்மானுஷ்டானங் களைத் தவறாமல் செய்வதால் நான் நிம்மதியாக ராஜபரிபாலனம் செய்கிறேன்'' எனக் கூறினாராம். கம்பர், "விண்ணவர்க் காக்கிய முனிவன் வேள்வியை' எனப் பாடியுள்ளார்.
இதிலிருந்து பழங்கால முனிவர்கள், ரிஷிகள் இதுபோன்ற ஹோமங்களைத் தவறாமல் செய்துவந்தனர் என்பதை அறியலாம். இன்றைய காலக்கட்டத்தில் இப்படி செய்பவர்கள் குறைந்துவருவதுதான் வேதனை.
(அடுத்த இதழிலும்...)