"ஜோதிடத்தில் ஓரைகள் என்று ஒரு கணக்குண்டு. நவகிரகங்களில் ராகு- கேது தவிர மற்ற ஏழு கிரகங்களுக்கும் ஒருமணி நேரம்வீதம் ஏழு ஓரைகள் இருக்கின்றன. இதில் ஆண் ஓரை- பெண் ஓரை என்றும் ஒரு கணக்கு இருக்கிறது. இதைப்பற்றி திருமந்திரத் தில் திருமூலர் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் நம்முடைய நாசியில் ஓடும் சுவாசம் மாறுகிறது.

வலது நாசியின் மூச்சுக்கு "சூரிய ஓரை' என்றும், இடது நாசியின் மூச்சுக்கு "சந்திர ஓரை' என்றும் பெயர். இதில் சூரிய ஓரையை "ஆண் ஓரை' எனவும், சந்திர ஓரையை "பெண் ஓரை' எனவும் சொல்கிறார்கள்.

ஆணின் உயிரணுவானது பெண்ணின் கருப்பையுள் நுழையும்போது எந்த நாசியில் மூச்சு ஓடுகிறதோ, அந்தக் குழந்தைதான் பிறக் கும். உதாரணமாக வலது நாசியில் மூச்சு ஓடும்போது ஆண் குழந்தை என்றும், இடது நாசியில் ஓடும்போது பெண் குழந்தை எனவும் கூறுகிறார்கள். ஆனால், விஞ்ஞானத்தில் இதற்கு வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

Advertisment

ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஆண்- பெண் ஓரை மாறுகிறது. உதாரணமாக ஞாயிறன்று காலை ஆறு மணி முதல் ஆறரை மணிவரை ஆண் ஓரை. அந்த நேரத்தில் ஆண் குழந்தைதான் பிறக்கும். ஆறரைமுதல் ஏழு மணிவரை பெண் குழந்தை பிறக்கும்.

ragg

Advertisment

மிகச் சரியாக- துல்லியமாக பிறந்த நேரத்தை மட்டுமே வைத்துக்கொண்டு இதைப் பார்க்கவேண்டும். நான் கடந்த 25 ஆண்டு களில் 200 பிள்ளைகளுக்கு மேல் இந்த ஓரைக் கணக்கைப் பரீட்சை செய்து பார்த்தேன். மிகவும் சரியாக இருந்தது. உதாரணமாக அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கும், அந்த நாட்டின் பிறந்த நேரத்தையும் அதே சமயத்தில் நம்முடைய நாட்டின் நேரத்தின் வித்தியாசத்தையும் கணக் கிட்டால்கூட ஆண் ஓரை, பெண் ஓரைகள் மிகச் சரியாக இருக்கும். இதுபோல வெளிநாட்டில் பிறந்த பல குழந்தைகளின் பிறந்த நேரத்தைக் கணக்கிட்டிருக்கிறேன். ஆண் ஓரை, பெண் ஓரைகள் சரியாக இருந்தது. நம்முடைய நாட்டில் நமது முன்னோர்கள் கணித்த இந்த ஆண் ஓரை, பெண் ஓரை கணிப்புகளை நம்மால் வியக்காமல் இருக்கமுடியாது.

முதலில் என் வீட்டில் மனைவி- பிள்ளைகள், மற்றவர்களிடமும் சோதித்தேன். அடுத்து என்னுடைய உறவுகளிலும், சிநேகிதர்களின் வீடுகளிலும் சோதித்தேன். எல்லாமே சரியாக இருந்தது.

இதில் சில ஆச்சரியங்களும் உண்டு. எனது நெருங்கிய நண்பர் வீட்டில் 13-12-1989 இரவு 8.45-க்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த நேரத்தைக் கூறினார்கள். உடனே, ஓரைப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். அதில் ஆண் ஓரை என்றிருந்தது. ஆண் ஓரையில் பெண் பிள்ளை பிறந்துள்ளதே என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். பிறகு, சில மணி நேரங்களிலேயே எனக்கு செய்தி கிடைத்தது- அக் குழந்தை இறந்துவிட்டது என்று! பின்னர் 12-8-1992 இரவு 8.25-க்கு பெண் ஓரையில் ஆண் குழந்தை பிறந்தது. அந்தத் தகவலைக் கேட்ட தும் எனக்கு கஷ்டமாக இருந்தது. காரணம், குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருந்ததாகக் கூறினார்கள். அக்குழந்தை பிறந்து 8-ஆம் நாள் இறந்து போயிற்று.

அதன்பின் அவர்களுக்கு 27-7-1993-ல் ஒரு பெண் குழந்தை பிறந் தது. அது சரியாகப் பெண் ஓரையில் பிறந்ததால், அதற்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இப்பொழுதும் நன்றாக உள்ளது. பெற்றோர் மிக நெருங்கிய உறவினர் என்பதால்தான், முதலிரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமில்லாமல் பிறந்து இறந்தன என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஜோதிடரைக் கேட்டால், ஜாதகப்பலன்படி நடந்தது என்பார்கள்.

எனக்குத் தெரிந்த இன்னொரு வீட்டில் 10-2-1995 மாலை 5.40 மணிக்கு பெண் குழந்தை, ஆண் ஓரையில் பிறந்தது. அந்தக் குழந்தை ஒன்றரை வயது ஆகும்போது இறந்துவிட்டது. இதைப்பற்றி ஜோதிடத்தில் நல்ல அனுபவம் உள்ளவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "இப்படி ஓரைகள் மாறிப் பிறக்கும் குழந்தைகளுக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் 12 வயது வரைதான் ஆயுள். அதற்குமேல் உயிர் வாழ்வது கடினம். அதற்கு குரு போன்ற கிரகங்களின் பார்வை இருக்கவேண்டும். எனவேதான் அந்தக் காலத்தில் ஜாதகத்தை மட்டும் கணித்து வைப்பார்கள். ஆனால் பலனைப் பார்க்கமாட்டார்கள். 15 வயதுக்குமேல்தான் பலன் பார்ப்பார்கள்'' என்றார்கள்.

ஒருநாள் படப்பிடிப்பு நேரம். மதிய உணவு இடைவேளையில் இந்த ஓரை விவகாரத்தைப் பற்றிய பேச்சுவந்தது. படப்பிடிப்பில் இருந்த நடிகர்- நடிகைகள் உட்பட நிறைய பேர் என்னைப் பரிசோதித்துப் பார்த்தார்கள். நான் அவர்களிடம், "உங்களுடைய பிள்ளைகளின் பிறந்த நேரத்தையும், கிழமையையும் மட்டும் கூறுங்கள். ஆனால், கண்டிப்பாக பிள்ளைகள் 12 வயதைக் கடந்திருக்க வேண்டும். உங்களுக்குப் பிறந்த குழந்தை ஆணா, பெண்ணா என்று கூறி விடுகிறேன்'' என்று பந்தயம் கட்டுவதைப் போல சவால் விட்டேன். அன்று 10 அல்லது 12 பேர் இருந்திருப்பார்கள். ஒவ்வொருவரும் கேட்கக் கேட்க, பிறந்தது ஆணா- பெண்ணா என்று 30 வினாடிக் குள் சொல்லிவிட்டேன்.

கேட்டவர்கள் அனைவரும் என்னிடம் ஏதோ மந்திரசக்தி இருப்பதைப்போல எண்ணி வியந்தார்கள். நான் ஓரை விவரங்கள் அடங்கிய புத்தகத்தை வைத்துக்கொண்டுதான் சொன்னேன். அது அவர்களுக்கும் தெரியும். இருந்தும், மிகச்சரியாக சொல்வதைப் பார்த்துதான் வியந்தார்கள்.

இதேபோல என்னுடைய இரு பிள்ளைகளின் நேரத்தை சோதனை செய்து பார்த்தேன். அவர்கள் சரியான ஓரையில் பிறந் திருந்தார்கள். பிரசவம் இரண்டுமே அறுவை சிகிச்சைதான். டாக்டர்கள் என்னிடம், "நல்ல நேரத்தில் நம்பிக்கை இருந்தால், உங்களுக்குப் பிடித்த நேரத்தைச் சொல்லுங்கள். அந்த நேரத்தில் ஆபரேஷனை வைத்துக்கொள்கி றோம்'' என்றார்கள்.

ஓரையை சோதிக்க வேண்டுமென்பது எனது நோக்கம். எனவே, "எப்பொழுது வேண்டுமானா லும் ஆபரேஷனை வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் டாக்டர் குரியன் ஜோசப்தான் ஆபரேஷன் செய்யவேண்டும்'' என்றேன்.

அதற்கு அவர்கள், "சாயங்காலம்தான் அவரால் வரமுடியும்'' என்றார்கள். "அதனால் எனக்கு ஒன்றுமில்லை'' என்றேன். "அப்படியென்றால் மாலை 4.00 மணிக்கு ஆபரேஷனை வைத்துக் கொள்ளலாம்'' என்றார்கள். நானும் ஒப்புக் கொண்டேன்.

அன்று நான் ஜோதிடத்தைப் பற்றி எந்தவிதமான கணிப்பையும் செய்யவில்லை. "எந்த நேரத்தில் எது எப்படி நடக்குமோ, அது அப்படியே நடந்து தீரும். மனித முயற்சியால் எதையும் மாற்றமுடியாது' என்று நம்புகிறவன் நான். எனவே, மருத்துவர் வரும் நேரத்தில் அறுவைச் சிகிச்சை செய்ய ஒப்புக்கொண்டேன். குழந்தை பிறப்பியல் மருத்துவம் பார்க்கும் பெயர்பெற்ற டாக்டர் குரியன் ஜோசப் அறுவை சிகிச்சை செய்தார்.

10-4-1985 மாலை 4.00 மணிக்கு அறுவை சிகிச்சை அறைக்குள் என் மனைவியைக் கொண்டுபோனார்கள். சரியாக 4.15 மணிக்கு, "உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது'' என்று ஒரு நர்ஸ் வந்து சொன்னார். உடனே ஓடிப்போய் என்னுடைய காரில் வைத்திருந்த ஓரை நோட்டை எடுத்து அதிக பதற்றத்துடன், அன்று மாலை 4.00 மணியிலிருந்து 4.30 மணிவரை என்ன ஓரை என்று பார்த்தேன். பெண் ஓரை என்று இருந்தது. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பத்திரிகைகளில் என் மனைவியின் படத்தையும், மகளின் படத்தையும் போட்டு பெரிய செய்தியாக வெளியிட்டிருந்தார்கள்.

அதன்பிறகு 18-8-1987-ல் என்னுடைய மகன் பிறந்தான். நான் அப்பொழுது, "தாலி தானம்' என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். இதேபோல் அறுவைச் சிகிச்சைக்கு நல்ல நேரம் கேட்டார்கள். முதல் பிரசவத்திற்கு சொன்ன அதே பதிலைத்தான் சொன்னேன்.

அதாவது, "எனக்கு படப்பிடிப்பு மாலை 6.00 மணிவரை இருக்கிறது. அதற்குப்பின்பு அறுவை சிகிச்சையை வைத்துக்கொள்ளலாம்'' என்றேன்.

அதன்படி இரவு 7.00 மணிக்கு அறுவை சிகிச்சை என்று சொன்னார்கள். நான் 6.00 மணிக்குப் படப்பிடிப்பு முடிந்தவுடன் வேகமாக மருத்துவமனைக்கு வந்தேன். போக்குவரத்து நெரிசல் காரணமாக 7.00 மணிக்குத்தான் வர முடிந்தது. அப்பொழுதுதான் அறுவை சிகிச்சை அறைக்குள் கொண்டுசென்றார்கள். என்னால் ஐந்து நொடிகள்தான் மனைவியைப் பார்க்கமுடிந்தது. பின்பு 7.15 மணிக்கு, "உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது'' என்று கூறினார்கள்.

அதைக் கேட்டவுடன் ஓரையைப் பார்த்தேன்.

அன்றிரவு 7-ல் இருந்து 7.30 மணிவரை "ஆண் ஓரை' என்றிருந்தது. அதைப் பார்த்தவுடன் மறுபடியும் பரவசமடைந்தேன்.

இந்த இரண்டு ஓரைகளையும் எந்தவிதத்திலும் முன்கூட்டி பார்த்ததே இல்லை. இராமாயணத்தில், இராவணன் தன் மகன் இந்திரஜித் பிறப்பதற்குமுன் ஜாதகத்தை ஏற்றபடி அமைத்தான் என்பர். அதுபோல நான் ஜாதகத்தைக் கணித்து, நல்ல நேரத்தை மருத்துவரிடம் சொல்லி, அந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. மருத்துவரின் வசதிக்குரிய நேரத்தில்தான் அறுவை சிகிச்சை நடந்தது. இருந்தாலும் இரண்டு பிள்ளைகளும் சரியான ஓரையில் பிறந்தார்கள் என்பதுதான் அதிசயம். இதுதான் ஜோதிடத்திலுள்ள புரியாத புதிர்.

(அதிசயங்கள் தொடரும்)