"ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ்' எனப்படும் ஆகாயப் பதிவுகள் பற்றி கடந்த இதழில் கண்டோம். இந்தப் பதிவுகளில் நம்மைக் குறித்த அனைத்து விவரங்களும் உள்ளனவாம். இப்பிறவி மட்டுமின்றி கடந்த பிறவிகளின் நிகழ்வுகளும் உள்ளனவாம். முந்தைய பிறவியின் செயல்களே இப்பிறவி யில் நமது அனுபவங்களாக உள்ளன. அந்த செயல்களை அறிந்துகொண்டால் இப்பிறவி வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றியமைக்கலாம் என்று ஆகாயப்பதிவு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முறையான பயிற்சி மேற்கொண்டு தூய மனதுடன் கேட்டோமென்றால் ஆகாயப்பதிவில் நம் அத்தனை கேள்விகளுக்கும் விடை இருக்கிறதாம். மேற்கொண்டு இதுபற்றி அறிய விரும்புபவர்கள் "ஆகாஷிக் ரெக்கார்ட்ஸ்' குறித்த நூல்களைப் படிக்கலாம். இணையதளத்திலும் காணலாம். நாம் இதில் தெரிந்துகொள்ளவேண்டிய அடிப்படை விஷயம்- தூய மனதுடன் இருக்கவேண்டும்; பிறருக்கு கனவிலும் தீங்கு நினைக்கக்கூடாது; பொறாமை கூடாது;

யாரேனும் நமக்குத் தீங்கு செய்தால் மன்னித்து மறந்து விடவேண்டும் போன்றவையே. கர்மாவை வளர்க்காமல் பிறவிச் சங்கிலியை அறுக்க முயலவேண்டும்.

ஜோதிடம், அமானுஷ்யம் பற்றி எழுதும்படி பலரும் கேட்டனர். உண்மையாக நிகழ்ந்த சம்பவங்கள் இரண்டு.

Advertisment

வடிவேல் பிள்ளை என்பவர் தீவிர முருக பக்தர். சுதந்திரப் போராட்டத் தியாகி. ஆண்டுக்கொருமுறை குடும்பத்துடன் பழனி சென்று வருவார். ஆண்டுக்கு ஒரு முறை அமராவதி ஆற்றங்கரை யிலுள்ள தில்லாபுரியம்மன் குலதெய்வக் கோவிலுக்கு மாட்டு வண்டியில் குடும்பத் தோடு சென்று படையலிட்டு விட்டு மாலையில் திரும்புவார். அதேபோன்று காடு அனுமந்த ராயர் கோவில், மாரியம்மன் கோவில் உற்சவங்களிலும் தவ றாது குடும்பத்துடன் கலந்து கொள்வார்.

அவர் மாணவப் பருவத்தில் பலகாலம் கேரள மாநிலம், பாலக்காட்டில் வாழ்ந்தார். அதனால் அவருக்கு சுதந்திர வேட்கைக்கு அடுத்து ஆன்மிகத்திலும் மிகுந்த ஈடுபாடு இருந்தது.

விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்து காலைக் கடன்களை முடித்து விட்டு, நீண்ட நேரம் தியானத்தில் அமர்ந்திருப்பார். பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்து முடித்து வேலைகளைத் தொடங்கவேண்டும் என்பார்.

Advertisment

தாயைத் தவிர வீட்டிலுள்ள அனைவரையும் விடியற்காலை ஐந்து மணிக்கே அமராவதி ஆற்றுக்கு அழைத்துச்செல் வார். அவரவர் சக்திக்கேற்ப ஒவ்வொருவர் கையிலும் குடம், செம்பு போன்ற பாத்திரங் களைக் கொடுத்து, பள்ளிக்கூட மாணவர்களை ஆசிரியர் வழிநடத்துவதுபோல வரப்புகளில் அழைத் துச்சென்று நீராடித் திரும்புவார்.

வீட்டில் பூஜைக்கென்று தனி அறையை ஒதுக்கியிருந்தார். அதில் அழகிய வேலைப் பாடுகளுடன் யானைத் தந்தத்தால் செய்யப் பட்ட திருமுருகன் வேலோடும். மயிலோடும் நடுநாயகமாக இருக்க, சுற்றிலும் சிறுசிறு விக்ரகங்கள், பல்வேறு தெய்வத் திருவுருவங் கள் இடம்பெற்றிருக்கும். அவற்றோடு இவரால் எழுதப்பட்ட வெள்ளியாலான ஸ்ரீசக்ரமும் இருக்கும்.

குழந்தைகள் அனைவரும் தினமும் காலை ஆறு மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை செய்யவேண்டும். ஊரிலிருக்கும் நாட்களில் இவரும் கலந்துகொள்வார். அமராவதி ஆற்று நீரை காசிச் செம்பு என்னும் செப்புப் பாத்திரத் தில் எடுத்துவந்து, வீட்டுக்கு அருகிலிருக்கும் சேரிப் பகுதியிலுள்ள விநாயகருக்கு அபிஷே கம் செய்வார். அவரது கடைசி இரு மகன் களில் ஒருவர்தான் விநாயகருக்கு அபிஷேகம் செய்யவேண்டும். அக்கோவிலில் உள்ள வில்வ மரத்திலிருந்து இலைகளைப் பறித்துவந்து வீட்டுப் பூஜைக்கும் உதவவேண்டும்.

அவரது சிறை வாழ்க்கையும், கேரள வாழ்க்கையும் அவரைப் பல கலைகளைக் கற்றுத் தேறவைத்திருந்தன. இந்தி, சமஸ் கிருதம், உருது, ஆங்கிலம், தெலுங்கு, மலையா ளம் உள்பட பல மொழிகளையும் கற்றிருந் தார்.

அதேபோன்று ஜோதிடம், மாந்திரீ கம் போன்றவையும் அவருக்கு வசமாகியிருந் தன. ஜோதிடம் சொல்வதைப் பொழுதுபோக் காகவே செய்தார். ஜோதிடம் சொல்வதற்கோ, செய்வினைகள் எடுப்பதற்கோ காசு வாங்குவது பாவம் என்பதைக் கொள்கை யாகக் கொண்டிருந்தார்.

அவரது இறுதிக்காலம் வரை குடும் பத்தினர், சுற்றத்தினர் அனைவருக்கும் அவரே கைப்பட ஜாதகங்களைக் கணித்துக் கொடுத் துள்ளார். இன்றும் அவரது குறிப்புகளைப் படிப்பவர்கள், "50 ஆண்டுகளுக்குமுன்பே சுத்தமாக கணித்துள்ளாரே' என அவரைப் புகழ்கிறார்கள்.

தேதி வாரியாக ஒவ்வொரு காலத்தையும் கணித்துக் குறிப்புகள் எழுதுவார்.

அதேபோல் தன்னுடைய மரண நாள், நேரத்தையும் குறித்துக்கொடுத்தார். அதை வேடிக்கையாக நினைத்தவர்களுள் ஒவரான புகழ்பெற்ற மருத்துவர் அண்ணா மலை என்பவர் அந்தக் கணிப்பைக் கண்டு அதிர்ந்தார்.

வடிவேல் பிள்ளையின் கணிப்புகளில் ஏற்பட்ட விநோத சம்பவங்களில் ஒன்று...

தன் தங்கைக்கு அதிக வயதாகியும் திருமணம் நடக்கவில்லை என்று தாராபுரம் தலைமை போஸ்ட் மாஸ்டராக இருந்த சுப்பிரமணியம் வருந்தினர். (அவர் அரியானா மாநிலத்திலுள்ள குர்கானில் என்ற ஊரில் தமது மகள் வீட்டில் 2009-ல் காலமானார்.) தியாகி வடிவேலுவின் மகன் மோகனகிருஷ்ணனின் மகள் சுமதி மறைமலை என்பவர் அதே குர்கானில் வசித்துவந்தார்.

ஒருநாள் சுமதி அருகிலுள்ள பூங்காவில் மாலை நேரத்தில் தமிழ் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார். அவர்கள் இருந்த இடத்தில் தமிழர்களைப் பார்ப்பது மிகவும் அபூர்வம். பூங்காவுக்கு வந்த சுப்பிரமணியம் சுமதியைப் பற்றியும் அவர் குடும்பம் பற்றியும் விசாரித்துள்ளார்.

rajesh

இருவர் வீடும் ஒரே பகுதியில் அருகருகே இருந்திருக்கின்றன. சுமதியின் வீட்டைக் கடந்துதான் சுப்பிரமணியத்தின் வீட்டிற்குச் செல்லவேண்டும். எனவே, அன்றைய அறிமுகத்திலேயே அவர் சுமதியின் இல்லத்திற்குச் சென்றுள்ளார். முன் அறையில் மோகனகிருஷ்ணனின் தந்தையாகிய வடிவேலுவின் படம் மாட்டப்பட்டிருந் தது.

அதனைப் பார்த்தவுடன், "இவர் படம் உன் வீட்டில் எப்படி யம்மா வந்தது?'' என்று பெரியவர் கேட்க, அதற்கு சுமதி "அவர்தான் என் தாத்தா'' என்றார். அந்தப் பெரியவர் தான்பட்ட வேதனைகளைச் சொல்லி, "வடிவேலுதான் எங்களுக்கு தெய்வம். அவரால் தான் எங்கள் குடும்பம் தழைத்தது'' என உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.

சுமதியிடம் அவர் கூறிய சம்பவம்...

"அப்போது தாராபுரத்தில் போஸ்ட் மாஸ்டராக இருந்தேன். நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவன். எனது தங்கைக்கு 35 வயது கடந்தும் திருமணமாகாததால் மிகுந்த வேதனையில் இருந்தோம். பல ஜோதிடர் களைப் பார்த்து, அவர்கள் கூறிய பரிகாரங்களை யெல்லாம் செய்தும் எந்தவித பயனும் ஏற்படவில்லை.

அப்போதுதான் வடிவேலு என்னை அழைத்து ஆறுதல் கூறி, தங்கையின் ஜாத கத்தை எடுத்து வரச்சொன்னார். மாலையில் அலுவலகம் முடிந்து, அவர் வீட்டிற்குச் சென்று ஜாதகத்தைக் காண்பித்தோம். ஒரு மணி நேரத்திற்குமேல் ஏதோ கணக்கெல்லாம் போட்டுப் பார்த்துவிட்டு, "இன்னும் சில நாட்களில் உனது தங்கையின் திருமண நிச்சயம் நடக்கும்' என்று நல்வாக்கு சொல்லி, ஒரு பூஜை செய்யவேண்டும் என்றும், அதற்கு வேண்டிய பொருட்களை மறுநாள் வாங்கி வரும்படியும் சொன்னார். அதிக செலவின்றி தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சைப் பழம், பூ வாங்கிச் சென்றோம். பூஜையை முடித்து, "11 நாட்களுக்குள் திருமண நிச்சயம் நடக்கும்' என்று கூறினார்.

என்ன அதிசயம்? ஒரு வாரம் கழித்து திடீரென்று மாப்பிள்ளை வீட்டார் வந்தார்கள். அன்றே பேசி, வடிவேலுவிடம் தேதியும் குறித்து திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. அவருடைய ஆசீர்வாதத்தால் இன்றும் குழந்தைகளுடன் என் தங்கை நல்லபடி வாழ்கிறாள்'' என்றார்.

இன்னொரு சம்பவம்...

சேனாபதி பாளையம் என்ற ஊரின் கணக்குப் பிள்ளை மகள் சித்தபிரம்மைப் பிடித்து, அதனால் அவர் குடும்பமே பெரும் சோகத்தில் மூழ்கியிருந்தது. பல்வேறு மருத் துவங்களைச் செய்தும் ஒன்றும் பயனில்லை. அப்பெண்ணின் குடும்பத்தார் மிகுந்த தயக்கத்தோடு வடிவேலுவைப் பார்க்க வந்தனர்.

அந்தப் பெண்ணைப் பார்க்கும் எவரும் எவ்வித சந்தேகமும் கொள்ளமுடியாது. மிகவும் களையான முகம்; நடவடிக்கைகளும் இயல்பாக இருந்தன.

பார்த்தவுடன் வடிவேலு ஏதோ முணு முணுத்துவிட்டு, கணக்குப் பிள்ளையை மட்டும் வீட்டிற்குள் வரும்படி கூறியுள்ளார். அவர் பூஜையறையில் சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்துவிட்டு, "இந்தப் பெண்ணுக்கு கெட்ட ஆவி பிடித்துள்ளது. பொறுமையாகத்தான் முயற்சிக்கவேண்டும். ஒரு மண்டலம் (48 நாட்கள்) பூஜைசெய்து பார்ப்போம். தினமும் பெண்ணை பூஜைக்கு அழைத்துவர வேண்டும். எனவே, இங்கேயே ஒரு வீடு பிடித்துத் தங்குங்கள்' என்றார்.

அவர்கள் மறுநாளே வடிவேலுவின் வீட்டருகே இருந்த காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கினர். தினமும் மாலையில் வடிவேலுவின் வீட்டுப் பூஜை யறைக்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

48-ஆவது நாள் அவர்கள் குடும்பத்தோடு வந்த னர். இரவு 10 மணிமுதல் பூஜை தொடங்கியது.

ஒரு மணிநேரமாக இயல்பாக இருந்த அப்பெண் சிறிதுசிறிதாக நிலைமாறினாள். ஓலமிட ஆரம்பித்தாள். அனைவருக்கும் ஒரு பதட்டம். அந்தப் பெண்ணை அடக்கமுற்பட்ட னர். அனைவரையும் அமைதியாக இருக்கும்படி வடிவேலு சைகை காட்டினார். நள்ளிரவில் பெண்ணின் ஆர்ப்பாட்டம் அதிகமானது.

வடிவேலு தான் பூஜித்த திருநீற்றை அப் பெண்ணின்மீது வீசினார். அப்போது இரவு மணி ஒன்று.

வடிவேலுவின் ஆலோசனைப்படி குடும் பத்தினர் அனைவரும் தங்கள் வீட்டிற்குச் சென்று பரபரப்போடு சமையல் செய்து முடித்து, குளித்து வந்தனர். அப்பெண் விரும்பிய படி, இருள் விலகாத அதிகாலையில் வீட்டிலிருந்த ஒரு மரத்தின்கீழ் நின்று, உருண்டை உருண்டையாக சோற்றைப் பிடித்து பெண் ணின் பெற்றோர் வானத்தைநோக்கி வீசினர்.

கடைசி கவளம் வீசி முடித்தவுடன் மரத்தின் நடுக்கிளை பெரும் சத்தத்துடன் ஓடிந்தது. பொழுதும் விடிந்தது. மரம் மட்டுமே தரையில் கிடந்தது. மேலே வீசப்பட்ட பொருட்களின் எச்சங்கள்கூட அங்கே இல்லை. மற்றொரு ஆச்சரியம்... அதன்பின் அப்பெண் நல்ல நிலைக்கு வந்துவிட்டாள்.

என்னுடைய நான்கு சித்தப்பாக்களில் ஒருவர் தம்பராஜ். நான் தொடர்ந்து புத்தகங் கள் படிப்பதையும், ஜோதிட ஆராய்ச்சி செய்வதையும் பாராட்டுவார். ஆனால், "மூன்று காரியங்களை மட்டும் செய்யாதே' என்பார்.

"ஒன்று... போய்- பிசாசு சம்பந்தமான விஷயங்கள். இரண்டு, பில்லி சூனியம், செய்வினை போன்றவை. மூன்று.... ஆவிகளுடன் பேசுவது. இவற்றில் உன் கவனத்தை செலுத்தாதே' என்று அறிவுரை கூறினார். எனவேதான் இதுபோன்ற விஷயங்களை ஆராய நான் முயற்சிக்கவில்லை.

உண்மையில் இந்த பூமியில் பேய்- பிசாசு போன்றவை இருக்கின்றனவா?

ஒவ்வொரு ஊருக்கும் மாநிலத்துக்கும், மொழிக்கும், நாட்டுக்கும், கண்டத்துக்கும் தனித்தனி பேய் பிசாசுகளா?

இவற்றுக்கெல்லாம் பொதுவான மொழி யென்று ஒன்றுண்டா? அல்லது உலகத்திலிருக்கும் எல்லா மொழிகளும் அவற்றுக்குத் தெரியுமா?

எல்லாமே விதிப்படி நடக்கின்றதென்றால், பேய் பிடித்ததும் அதை வடிவேலு பிள்ளை துரத்தியதும் விதிப்படிதானா?

வானத்தில் வீசப்பட்ட சோற்றுக் கவளங் கள் ஏன் பூமிக்கு வரவில்லை? நியூட்டனின் புவிஈர்ப்பு விதியே இங்கே தோற்றுப் போகிறதே!

வானத்தில் வீசிய உணவுகளை ஆவி சாப்பிட்டுவிட்டதா? அது இடம்பெயர சாப்பாடுதான் தேவைபட்டதா? அவர் போன்றவர்கள் செய்யும் பூஜைகள் எல்லாம் ஆவிகளைக் கட்டுப்படுத்துமா?

பெண்களை மட்டும் ஏன் அதிகமாகப் பேய் பிடிக்கிறது? குறிப்பாக திருமணமாகாத பெண்களை? இதுபோன்ற பகுத்தறிவுடன் கூடிய கேள்விகளுக்கு இதில் விடை கிடையாது. ஆனால், இதை கண்கூடாகப் பார்த்து அனுபவித்தவர்கள் கூறக் கேள்விப்பட்டுள் ளேன். அவை சிலிர்ப்பானவைதான்!

(அதிசயங்கள் தொடரும்)