என் பெற்றோர் திண்டுக்கல்லில் இருக்கும் போது லீலாவதி என்பவரும், அவரது குடும்பத்தினரும் எங்களுக்குப் பழக்கமானார் கள். திண்டுக்கல்லில் 1950-களில் இவர்களது குடும்பம் மிகவும் பிரபலமான ஒன்று.
லீலாவதி என்னைவிட நான்கரை வயது மூத்தவர். இருந்தாலும் அவருக்கு நான் நெருங்கிய தோழன். சிறுபிள்ளையில் மிகவும் சுட்டியாக இருப்பார். 1954-ஆம் ஆண்டுக்குப் பிறகு நான் அவரைப் பார்க்கமுடியவில்லை. அவரது கணவரை ஒருமுறை சந்தித்தேன்.
இவர்களுக்கு 1966-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.
1992-ஆம் ஆண்டு லீலாவதியும், அவரது கணவர் பசுபதி இருவரும் திருநாகேஸ்வரம் சென்றுவிட்டு கும்பகோணம் வந்து கொண்டிருந்தனர். பேருந்தில் உடன் பயணம் செய்த ஒருவர் பசுபதியைப் பார்த்தவுடன், "உங்களுடைய தங்கை ஒருவர் இரண்டு வயதில் அம்மைநோய் கண்டு மரணமடைந்தாரா?'' என்று கேட்டிருக்கிறார்.
அதைக் கேட்டதும் இவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. முன்பின் தெரியாத அந்த நபர் சொன்னது உண்மைதான். பசுபதிக்கு ஒரு தங்கை இருந்தாள். அவள் 1952-ஆம் ஆண்டு பிறந்து, 1955-ஆம் ஆண்டு அம்மை நோய் கண்டு மரணமடைந்தாள். எனவே, "ஆமா சார், என்னுடைய தங்கை ஒருத்தி அம்மைநோய் கண்டு இறந்தாள். அது எப்படி உங்களுக்குத் தெரியும்?'' என்று வியக்க, அவரோ இன்னும் மலைக்கவைத்தார்.
"இறந்த உங்களுடைய தங்கையின் நினைவாக ஆடை எடுத்து, பூஜையறையில் அம்மன் படத்திற்கு அருகில்வைத்துப் பூஜை செய்கிறீர்கள். அம்மனுக்கு ஒரு சேலையும், சகோதரிக்கு ஒரு பாவாடை யும் வைத்துப் பூஜை செய்கிறீர்கள் அல்லவா? அம்மனுடன் சேர்த்து பூஜை செய்வது உங்கள் தங்கைக்குப் பிடிக்க வில்லையாம். அதனால் அழுகிறாள்.
தனக்கு தனியாக பூஜை செய்யவேண்டு மென்று விரும்புகிறாள். உங்களுடைய மூன்று வயது தங்கை உங்கள் வீட்டில் தெய்வமாக இருக்கிறது. எனவே, அதன் விருப்பத்தை நிறைவேற்ற தனியாக துணிமணிகள் எடுத்துவைத்துப் பூஜை செய்யுங்கள்'' என்றாராம்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இவர்கள் அவரைப் பற்றி விவரம் கேட்டி ருக்கிறார்கள். அவர் திருநாகேஸ்வரம் கோவிலில் அரசாங்கத்தில் நியமிக்கப் பட்ட செயல் அதிகாரி என்றாராம்.
இதேபோல் இன்னொரு நிகழ்ச்சி யைச் சொன்னார்கள். நாகர்கோவிலுக்கு அருகில் சாமியார் ஒருவர் இருந்தார்.
அவரை "அறுகம்புல் சாமியார்' என்று தான் அழைப்பார்களாம். காரணம், காலை நேரங்களில் அவரைப் பார்க்க வருகிறவர்களுக்கு அறுகம்புல் சாறு கொடுத்து வரவேற்பாராம்.
பயபக்தியுடன் அவரிடம் வரும் பக்தர்கள் கேட்டாலும். கேட்கா விட்டாலும், அவர்களின் எதிர் காலத்தையும், பலன்களையும் நெற்றியடியாகச் சொல்வாராம். சொன்னதெல்லாம் பலருக்கு அப்படியே நடந்துள்ளதாம்.
1980-களில் இந்தத் தம்பதியினர் தங்கள் இரு மகள்களுடன் அவரைப் பார்க்க சென்றிருக்கிறார்கள். முதல் பெண்ணை டாக்டருக்குப் படிக்கவைக்க விரும்பியிருக்கின்றனர். ஆனால், அவரிடம் வாழ்த்து வாங்கும்போது, அந்தப் பெண்ணைப் பார்த்து, "வாம்மா வக்கீலு; நல்லா இரும்மா'' என்று ஆசிர்வதித்து விபூதி கொடுத்துள்ளார்.
இதைக்கேட்ட அவர்களுக்கு திகைப்பு, "நாம் விரும்புவது மூத்த பெண் டாக்டர் என்று! சாமியார் வக்கீல் என்று சொல்கிறாரே?' என யோசித்தனர்.
பிறகு, இரண்டாவது பெண்ணைப் பார்த்து, "என்னம்மா டாக்டர்! எனக்கு உடம்பு சுகமில்லாமல் போனால் நன்றாக கவனிப்பாயா?'' என்று சொல்லி விபூதி கொடுத்துள்ளார். மூத்த பெண். சாமியார் ஆசீர்வதித்ததுபோல் வக்கீலாக வேலை பார்க்கிறாராம். இவர்கள் நினைக்காத இரண்டாவது பெண்தான் டாக்டராக உள்ளாராம்.
பொள்ளாச்சிக்கு அருகிலுள்ளது புரவிப்பாளையம் என்னும் ஊர்.
அங்கு ஜமீன்தார் வீடு உண்டு. அந்தக் குடும்பத்திலுள்ளவர்கள் அன்பானவர்கள். அவர்களுடைய பங்களா மிகப்பெரியது. அரண்மனை போன்று இருக்கும். நான் படப்பிடிப்பிற்காக 1982-ஆம் ஆண்டு, முதன்முதலில் அந்த பங்களாவிற்குச் சென்றேன். பங்களா மேல்மாடியில் ஒரு சாமியார் இருந்தார். அவருக்கு "கோடி சாமியார்' என்று பெயர். வரும் சில பக்தர்களைப் பார்த்து, "நீ கோடீஸ்வரன் ஆவாய்' என்று ஆசிர்வாதிப்பாராம். எனவேதான் அவருக்கு இப்பெயர் வந்தது.
அவரைப் பற்றி பலவிதமான செய்திகள் கேள்விப் பட்டேன். நான் பார்க்கும்போது, "அவருக்கு நூறு வயதிற்குமேல் இருக்கும்' என்றார்கள். அந்தக் கால கட்டத்தில் ஜோதிடம் போன்ற விஷயங்களில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாமல் இருந்தேன். "கண் சிவந்தால் மண் சிவக்கும்' படப்பிடிப்பிற்காக அந்த பங்களாவிற்குச் சென்றேன். படத்தின் இயக்குநர் ஸ்ரீதர் ராஜன், நடிகர் ஜெமினிகணேசனின் மகள் ஜி.ஜி. என்பவரின் கணவர். அறிவாளி, படிப்பாளி, சினிமா உள்பட பல்வேறு துறைகளிலும் விரிவான அறிவாற்றல், உலக அளவில் பேசக்கூடிய அளவுக்கு அறிவுள்ளவர். அவர் புகழ்பெற்ற இயக்குநர் சத்தியஜித்ரே குழுவினருடன் நல்ல தொடர்புவைத்திருந்தார். பூர்ணிமா பாக்கியராஜ், ஜெய்சங்கர், ரவீந்தர் போன்றவர்கள் அந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்தார்கள்.
அந்த வீட்டில் எனக்கு ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்தது. ஒருநாள் மதிய உணவு இடைவேளையில் அந்த சாமியாரைப் பார்க்க மாடிக்குச் சென்றேன். அங்கு சிறிய அறையில்தான் அவர் வெகுகாலமாக இருப்பதாக ஜமீன் குடும்பத்தார் கூறினார் கள். நான் சென்றபோது கட்டிலில் படுத்திருந் தார். என்னைப் பார்த்தவுடன் எழுந்து வெளியேவந்தார். நான் வணங்கினேன். அவர் என்னைக் கட்டிப்பிடித்தார்.
பொதுவாக பிரியமானவர்களை மட்டும்தான் கட்டிப் பிடிப்பாராம்.
அப்படி அவர் யார் யாரைக் கட்டிப்பிடிக்கி றாரோ, அவர்கள் கண்டிப்பாக முன்னுக்கு வருவார்களாம். வருகிறவர்கள் பழங்கள் கொடுத்தால் அதை மென்றுவிட்டு பக்தர்களுக்குக் கொடுப்பாராம். அதுபோல என்னிடம் நடந்துகொள்ளவில்லை. நானும் பழங்கள் எதுவும் கொண்டுசெல்லவில்லை. என்னைக் கட்டிப் பிடித்தவுடன், "போய் கட்டிலில் படு'' என்றார்.
உடனே நான் போய் அவருடைய கட்டிலில் படுத்தேன். மூன்று நிமிஷம் கடந்தபிறகு "எழுந்து வா'' என்று சொன்னார்.
நான் எழுந்து அவரிடம் சென்றேன். "நீ கோடீஸ்வரனாவாய்'' என்றார்.
அவரை வணங்கிவிட்டு வந்துவிட்டேன். கோடீஸ்வரன் என்றால் பல கோடிகளுக்கு அதிபதியா? அல்லது குறைந்தது ஒரு கோடி ரூபாய்க்கு அதிபதியாக இருப்பேனா என்பதற்கான விளக்கம் எனக்குத் தெரியாது. கோடீஸ்வரன் என்று ஆசீர்வாதம் கிடைத்தது என்னும் மன நிறைவில் இருந்தேன்.
அடுத்த வருடமே எனக்குத் திருமணம் நடைபெற்றது. 1984-ஆம் ஆண்டு பல திரைப்படங்களில் நடித்தேன். அந்த வருடம் மட்டும் மூன்று திரைப்படங்கள் நூறு நாட்களுக்குமேல் ஓடியது. 1983-ஆம் ஆண்டு ஜாதகத்தில் எனக்கு நம்பிக்கை வந்ததால், அந்த அடிப்படையில் பெற்ற வெற்றியாக நான் இதை எடுத்துக்கொண்டேன்.
அப்படி புகழ்பெற்ற அந்தச் சாமியாரை பசுபதி தம்பதி பார்க்கச் சென்றுள்ளனர்.
பசுபதியின் தகப்பனார்வழி சொத்தில் ஒரு இடம் கரூரில் உள்ளது. அது தனக்குக் கிடைக்கவேண்டும் என்பதில் பசுபதி ஆர்வமாக இருந்தார். சாமியார், "அந்த இடம் உங்களுக்குக் கிடைக்காது; அதை மறந்து விடுங்கள்'' என்று அவராகவே சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகு சில வருடங்கள் கழித்து சொத்து பிரிக்கும்போது, அந்த குறிப்பிட்ட இடம் தனக்கு வேண்டுமென்று பசுபதியின் சகோதரர் கேட்டிருக்கிறார். பசுபதி எவ்வளவோ முயன்றும், முடிவில் சாமியார் குறிப்பிட்டதுபோல் பசுபதிக்கு அந்த இடம் கிடைக்காமல் போய்விட்டது.
முன்பின் தெரியாத ஒருவருக்கு- பசுபதியின் தங்கை அம்மை நோயால் மூன்று வயதில் இறந்தது எப்படித் தெரியும்?
"தன்னுடைய ஆடைகளைத் தனியாக வைத்து கும்பிடவேண்டும்' என்று இறந்த சிறுமி அழுதது எப்படி அவருக்குத் தெரிந்தது?
இதுபோன்று நமக்குள் எழும் வினாக் களுக்கான சரியான விடைகள் தெரிய வில்லை! ஆனால் ஆங்காங்கே நடப்பதாகக் கூறுகிறார்கள்.
நடிகர் அனுமோகன், நகைச்சுவை நடிகராக பல தமிழ்ப் படங்களில் நடித்தவர். ஒருமுறை அவரின் தங்கைக்கு அம்மை நோய் கண்டிருக்கிறது. அனுமோகன் வேறு மதத்தைச் சேர்ந்தவர். இருந்தும், இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கையைப்போல தங்கையின் படுக்கையில் வேப்பிலையைப் பரப்பிவைப்பது, வீட்டின் முகப்பில் வேப்பிலை யைச் செருகுவது, வீட்டுச் சமையலில் எண்ணெய் ஊற்றித் தாளிக்காமல் இருப்பது போன்ற எல்லாவற்றையும் ஒழுங்காகக் கடைப் பிடித்தனர்.
அம்மை நன்றாக முற்றிய நிலையில் அவரது தங்கை ஒருநாள். "எனக்கு வடை சாப்பிட ஆசையாக இருக்கிறது. வாங்கிக் கொடுங்கள்' என்று கேட்டிருக்கிறார்.
அப்போது நள்ளிரவு ஒரு மணி.
அதைக்கேட்ட தகப்பனாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. "எண்ணெய்ப் பொரியலே வீட்டில் இருக்கக்கூடாது என்பது ஐதீகம். ஆனால், மகளோ எண்ணெயில் தயார்செய்த வடை கேட்கிறாளே?' என்று குழம்பினார்.
இதைப்பற்றி மற்றவர்களிடம் யோசனை கேட்டார். எல்லோரும் "வேண்டாம்' என்று மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். ஆனால், 80 வயதைக் கடந்த ஒருவர் மட்டும், "அந்தப் பெண் விருப்பப்பட்டுக் கேட்கும் வடையை வாங்கிக்கொடுங்கள். இது உங்களுடைய மகள் கேட்கவில்லை. உள்ளே இருக்கிற மாரியம்மா தெய்வம்தான் கேட்கிறது. அப்படித்தான் எனக் குத் தோன்றுகிறது. எனவே, தைரியமாக வாங்கிக்கொடுங்கள். ஒன்றும் ஆகிவிடாது' என்று தைரியம் அளித்திருக்கிறார்.
அதன்பிறகு அனுமோகனின் தகப்பனார் வடை வாங்குவதற்குச் சென்றிருக்கிறார். இரவு மணி இரண்டு ஆகிவிட்டதால், எங்கும் வடை கிடைக்கவில்லை. கடைசியாக சூலூர் சாலையிலுள்ள டீக்கடையில் ஒரே ஒரு உளுந்துவடை மட்டும் இருந்ததாம். அதை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும்போது விடியற்காலை நான்கு மணி ஆகிவிட்டது.
வடையை அன்போடு மகளுக்குக் கொடுத்தார். அதைவாங்கி வாயில் வைத்து மென்றுவிட்டு உள்ளே விழுங்காமல் கீழே துப்பிவிட்டாராம். பிறகு, தூங்கிவிட்டார். என்ன ஆச்சரியம். விடியற்காலை ஆறு மணியிலிருந்து அம்மை குறையத் தொடங்கியதாம். மாலை ஆறு மணிக்குள் அம்மை முழுவதும் விலகி பூரண குணமாகிவிட்டார் அவரது தங்கை.
இதை என்னவென்று சொல்வது? "எங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை' என்று என்னிடம் கூறினார்கள்.
அம்மை நோய்க்கு மருந்துகள் கிடையாது.
அம்மை நோய் வந்தால் நமது நாட்டு வழக்கப்படி சில ஐதீக முறைகளைக் கையாள் வார்கள். சுமார் 16 நாட்கள் இருந்துவிட்டு, அம்மை சாதாரணமாக குணமாகிவிடும்.
நமது நாட்டில் அம்மை என்பது, மாரியம்மன் என்கிற ஒரு பெண் தெய்வம் தான் ஒருவரது உடலுக்குள் புகுந்து விளையாடுகிறது. சில நாட்கள் இருந்துவிட்டு செல்கிறது. அதற்குப் பிடித்தவற்றை நாம் செய்தும், பிடிக்காதவற்றைச் செய்யாமலும் இருந்தால், அது தன்னாலே சென்றுவிடும் என்கிறார்கள்.
அம்மையால் முகத்தில் அழகை இழந்தவர் கள் உண்டு. அதிலும் அதிகமாக பாதிக்கப்பட்ட பெண்களில் பலருக்குத் திருமணமாகாமல் போனதும் உண்டு.
எண்ணெயில் சுட்ட வடையை இரவு ஒரு மணிக்கு விரும்பிக் கேட்ட அவரது தங்கைக்கு நான்கு மணிக்கு கொண்டுவந்து அவருடைய தகப்பனார் கொடுக்கிறார்.
அதைவாங்கி மென்றுவிட்டு சாப்பிடாமல் துப்பிவிட்டார். அதன்பிறகு இரண்டுமணி நேரம் கழித்து மிக வேகமாக அம்மை நோய் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார். இந்த இடம் நமக்குப் புரியாத மர்மமாக உள்ளது.
விஞ்ஞான விளக்கம்
அம்மை என்று அழைக்கப்படும் பெரியம்மை ஒருவித வைரஸ் கிருமிகளால் மனிதருக்குள் மட்டும் பாதிப்பு ஏற்படுத்தும் தொற்றுநோய். "வரியோலா' என்ற வைரசின் சீற்றத்தைப் பொருத்துதான் அந்த நோயின் தீவிரம் நிர்ணயிக்கப்படுகிறது. 1940-களில் இந்நோய் தன் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 முதல் 35 சதவிகிதம்பேர் இறந்துபோனார்கள். நோயின் தீவிரம் குறைக்கப்பட்டு, ஒரு சதவிகிதம்தான் இறப்பு என்று பிற்காலத்தில் அனுகூலமான நிலை ஏற்பட்டது அந்தக் காலத்தில் ஒரு நாளைக்கு ஒரு ஊரில் நான்கு அல்லது ஐந்து பேர்களாவது இந்த அம்மை நோயால் மரணமடைந்திருக்கிறார்கள்.
1979-ல் இந்த நோய் முழுமையாக ஒழிக்கப் பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தால் சான்றிதழ். வழங்கப்பட்டது.
(அதிசயங்கள் தொடரும்)