எட்டு வகையான சக்திகளைப் பெற்றவர்கள் அஷ்டவதானி. பத்து வகையான திறமைகளைக் கொண்டவர்கள் தசாவதானி. நூறு வகையான திறமை பெற்றவர்கள் சதாவதானி.
இதுபோன்று அஷ்டமா சித்திபெற்ற சித்தர்கள்பற்றி படித்திருக்கிறோம். ஆனால் அவற்றை யெல்லாம் நம்புவதற்கு சில நேரங்களில் நம்முடைய பகுத்தறிவு இடம்தராது. ஆனால் இ.எஸ்.பி (ஊஷ்ற்ழ்ஹ நங்ய்ள்ர்ழ்ஹ் டங்ழ்ஸ்ரீங்ல்ற்ண்ர்ய்) என்னும் சக்தி சில மனிதர்களிடம் இருப்பதாக விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ரஷ்யாபோன்ற நாடுகளிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அங்கு ரஸ்புடின் என்பவரைப் பற்றி பலவிதமான செய்திகளும் கதைகளும் சொல்லப்பட்டுள்ளன.
நம் நாட்டில் எத்தனையோ பேர் அபூர்வ சக்திகளைப் பெற்றுள்ளனர்.
அவர்களைப் பற்றிய செய்திகள், சான்றுகள் சரித்திரத்தில் இடம்பெற்றுள்ளன. எனினும் நம்மில் பலர் அவற்றையெல்லாம் நம்புவதில்லை. அவை வெறும் கட்டுக் கதைகள், ஏமாற்றுவேலை, மந்திர தந்திர செயல் என்று ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் வெளிநாட்டில் உள்ளவர்கள் அவற்றைத் தக்க சான்றுகளுடன் நிரூபித்துப் பதிவு செய்கின்றனர். அங்கு அவற்றை பொய் யென்று கூறுபவர்கள் அரிதாகவே உள்ளனர்.
இப்படிப்பட்ட அரிய சக்திகளையுடைய ஒருவர் சுமார் என்பது ஆண்டுகளுக்குமுன் கோவை அருகில் வாழ்ந்திருக்கிறார்.
அவருடைய பெயர் ராக்கியா கவுண்டர். அவரை பஞ்சமா சித்திபெற்றவர் என்று கூறலாம். அவரது வாரிசையும் குடும்பத்தையும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகத் தமிழர்களுக்கும் நன்கு தெரியும்.
அவரது முகச்சாயல்தான் மகனுக்கும்.
ஆனால் மகனைவிட உயரமாக இருப்பாராம்.
இவரது பஞ்சமா சக்திகள்தான் என்ன? பிறந்த குழந்தைக்கு- பிறக்கப்போகும் குழந்தைக்கு ஜோதிடம் கணிப்பார். நிலத்தில் எந்த இடத்தில் தோண்டினால் நல்ல தண்ணீர் கிடைக்கும்- அதுவும் எந்தக் காலத்திலும் வற்றாத அளவுக்கு நீர் கிடைக்குமென்று துல்லியமாகச் சொல்லிவிடுவார். பொதுவாக நிலத்தில் எங்கு தண்ணீர் கிடைக்குமென்பதை பலர் கையில் ஒரு குச்சியை வைத்துப் பார்ப்பார் கள். அவர் அவ்வாறு பார்க்காமல் மனக் கண்ணால் துல்லியமாகக் கணித்துச் சொல்லிவிடுவார். மேலும் யார் வீட்டிலாவது பொருட் கள் தொலைந்துவிட்டால் அல்லது திருட்டுப் போய்விட்டால் அது எங்கு, எந்த இடத் திலுள்ளது- அதை யார் வைத்திருக்கிறார்கள்- அது மீண்டும் கிடைக்குமா கிடைக்காதா என்பதுபோன்ற விவரங்களையும் சரியாகச் சொல்லிவிடுவார்.
கோவை மாவட்டம் பல்லடம் அருகிலுள் ளது கல்லம்பாளையம். இது அவரது மாமியார் ஊராகும். அங்கு ஊரைச்சுற்றி வெறும் பாறைகளாக, பெரும்பாலும் வறண்ட பூமியாக இருக்கும். அந்த இடத்தில் கிணறு தோண்டவேண்டும் என்பதற்காக, எங்கு தோண்டினால் நீர் கிடைக்குமென்று அங்குள்ளவர்கள் இவரிடம் கேட்டுள்ளனர்.
தனது சொந்த ஊரான கோவை, சூலூர் அருகிலுள்ள காசிகவுண்டர் புதூரிலிருந்து மனைவியின் ஊருக்கு அவர் சென்ற நேரத்தில்தான் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளனர். அவர் ஓரிடத்தை சுட்டிக் காட்டி, அங்கு கிணறு தோண்டினால் தண்ணீர் நன்றாகக் கிடைக்குமென்று கூறியுள்ளார். அதன்படியே அங்கே தோண்டினார்கள். அதிசயம்! அங்கு நல்ல தண்ணீர் மிக அதிக அளவில் வந்தது. மழை கொட்டினால் மட்டுமல்ல; வானம் பொய்த்து தமிழ்நாட் டையே உலுக்கிய கோடையிலும் வற்றாமல் நீர் சுரந்துகொண்டே இருக்கிறது. (இதை பத்திரிகையாளர்கள் சென்று பார்த்து அதிசயித்து செய்தியாகவே வெளியிட்டனர்.)
இதுமட்டுமா; தெருவில் போகும் வண்டிகளில் என்ன பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள் என்பதை வீட்டுக்குள் இருந்தபடியே சரியாகச் சொல்லிவிடுவார். "நேற்று நானும் என்னுடைய நண்பரும் என்ன உடை அணிந்திருந்தோம்? அதன் நிறம் என்ன?' என்று கேட்டாலும் அதையும் சொல்லிவிடுவார். இத்தகைய வியப்பான சக்திகளைப்பெற்ற ஒருவர் வாழ்ந்திருக்கி றார்.
அவ்வாறு அவர் கணித்துச் சொல்வதற்கு முன்பு சில நிமிடங்கள் கண்களை மூடியிருப்பாராம் பிறகு நெற்றிப்பொட்டில் சுட்டுவிரலால் இரண்டுமுறை தட்டிவிட்டு மிகச்சரியாக சொல்லிவிடுவாராம். சேட்டிலைட் வழியாக நேரடியாகப் பார்த்துச் சொல்வதைப்போல் இருக்குமாம். ஏழு மணிக்கு ஒருவர் மரணமடைவார் என்று அவர் சொன்னால், சரியாக ஏழு மணியளவில் அந்த நபர் மரணமடைந்துள்ளார்.
இத்தகைய சக்திகளைப்பெற்ற அவர் கடைசியாக சொன்ன துணிச்சலான ஆரூடம், யாருமே சொல்லத் துணியாத ஒரு கணிப்பு. அவரது கணிப்பில் சிறிது தவறினா லும் மிகவும் பாதிக்கப்படுவார்; அவமானப் படுவார். அத்தகைய ஒரு கணிப்பு அது. இந்த கணிப்புதான் அவர் எத்தகைய ஆற்றலைப் பெற்றிருந்தார் என்பதற்கு சான்று. அதாவது தன் மனைவியின் வயிற்றிலிருந்த குழந்தைக்கு ஜோதிடம் சொல்லியுள்ளார். "எனக்குப் பிறக்கப்போவது ஒரு ஆண் குழந்தை. அவன் பிறந்த ஒரு வருடத்திற்குள் நான் இறந்துவிடுவேன். அப்படி நான் இறக்க வில்லையென்றால் அவன் எனக்குப் பிறந்த வனல்ல' என்று கூறியிருக்கிறார். கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி.
அவர் கணித்தபடியே ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தன் மகனை எடுத்துக் கொஞ்சும்போதெல்லாம், "கண்ணுமணி... என்னை சீக்கிரம் சாப்பிட்டிடுவியா...' என்றுதான் கேட்பாராம்.
குழந்தைக்கு உத்திராட நட்சத்திரம் நான்காம் பாதம். குழந்தை பிறந்த பத்தாவது மாதம் அவர் மரணமடைந்தார். மயானத் தில் இறுதிச்சடங்கு முடித்து விட்டு உறவினர்களும் நண்பர் களும் வீட்டுக்குத் திரும்பி வந்தனர். அதுவரை தவழ்ந்துகொண்டிருந்த பத்து மாதக் குழந்தை அந்தநேரம் திண்ணையில் எழுந்துநின்று சுவரைப் பிடித்தபடி சிரித்துக் கொண்டிருந்து. 'அப்பனை எடுத்து சாச்சிட்டு நிக்கிறான் பாரு' என்றார்களாம் அவர்கள்.
இந்த வியப்புக்குரிய மனித ரான ராக்கியா கவுண்டரின் புகைப் படம் இல்லை. அவர் தனது வாழ்நாளில் புகைப்படம் எடுத்த தில்லை. காரணம், "நான் குறைந்த ஆயுளில் மறைந்த பிறகு என்னு டைய புகைப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் என் நினைவு வரும். எல்லாரும் கலங்குவீர்கள். எனவே புகைப் படம் எடுக்கமாட்டேன்' என்று சொல்லியிருந்தாராம்.
அவர் ஆழ்ந்த பக்திமான். அதிலும் தீவிரமான முருக பக்தர். மாதம் ஒருமுறை வரும் கார்த்திகை நாளில் கோவையிலிருந்து பழனி செல்வார். அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களை மனப்பாடமாகச் சொல்லிவிட்டுதான் வழிபடுவார். அதனால், "என் நினைவாக இந்தப் படத்தை வைத்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லி ஒரு முருகன் படத்தைக் கொடுத்திருக்கிறார்.
அவர் இறக்கும்போது 33 வயதுதான்.
உலகத்தில் பிறந்த மாவீரர்கள், அறிவாளி கள், ஞானிகள், தத்துவ மேதைகள், கவிஞர்கள் முதலியோர் பெரும்பாலும் இப்படி குறைந்த வயதிலேயே மரணத்தைத் தழுவியுள்ளனர்.
பஞ்சமா சித்திபெற்ற ராக்கியா கவுண்டர் யாரென்று யோசிக்கவேண்டாம். இவருடைய குடும்பத்தை உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்திருக்கும். ஆம்; இவரது மகன்தான் தமிழ்த் திரையுலகின் மார்க்கண்டேயன் என்று புகழப்படும் நடிகர் சிவகுமார். சூர்யா, கார்த்தி ஆகிய புகழ்பெற்ற இளம் நடிகர்களின் தாத்தாதான் அவர். நான் பலமுறை நடிகர் சிவகுமாரிடம் அவருடைய தந்தையைப்பற்றிக் கேட்டபிறகு, வேறுவழியின்றி இந்தத் தகவல்களை என்னிடம் சொன்னார். அவரது ஊரைச் சேர்ந்தவர்களிடமும் பல தகவல்களை சேகரித்தேன்.
இந்த அபூர்வ சக்திக்கான விடை இது வரை கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் விஞ்ஞானிகள்தான் இதற்கு விளக்கமளிக்க வேண்டும். ராக்கியா கவுண்டர் செய்த புண்ணியம், அவர் அடையாத புகழை அவரது மகனும் பேரப் பிள்ளைகளும் அடைந்திருக் கின்றனர். சிவகுமார் குடும்பத்தை இதுவரை வியப்பாகப் பார்த்தவர்கள் இனி மலைப் பாகப் பார்ப்பார்கள்.