என் நண்பரும் திரைப்பட இயக்குநருமான வி. சேகர் "திருக் குறள் முன்னேற்றக் கழகம்' என்ற அமைப்பை வைத்துக்கொண்டிருந் தார். அதில் அங்கம்வகிக்கும் ஒரு நபரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். வேலாயுதம் என்னும் பெயர்கொண்ட அவர் என்னிடம் அன்பாகப் பழகினார்.
ஒருமுறை என்னுடைய ஜோதிட ஆய்வுக்காக அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். "உங்கள் குடும்பத்தில் ஜோதிடம் சம்பந்தமான ஏதாவது நிகழ்ச்சி கள் நடந்துள்ளதா?'' என்றேன்.
அதற்கு அவர், "எங்களுடைய தாத்தா (அப்பாவின் அப்பா) ஒரு சில விஷயங்களைக் கூறினார். அவற்றில் பல அப்படியே எங்கள் வாழ்க்கையில் நடந்தன. மற்ற சில விஷயங்கள் நடக்கவில்லை. அதற்கான காலம் இன்னும் வரவில்லை'' என்று கூறினார்.
வேலாயுதம் நாட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். காரைக்குடி- தேவகோட்டையும், அதைச் சுற்றியுள்ள ஊர்களும் "செட்டி நாடு' என்று அழைக்கப்படுகிறது. இது 96 ஊர்களை உள்ளடக்கியது. தற்பொழுது 76 ஊர்களே உள்ளன. மற்ற ஊர்களெல்லாம் அழிந்துவிட்டன என்கிறார்கள்.
இவர்கள் வணங்குவதற்கு ஒன்பது கோவில்கள் இருக்கின்றன. அந்த ஒன்பது கோவில்களும் ஒன்பது ஊர்களில் உள்ளன. அவை: 1. பிள்ளையார்பட்டி, 2. வைரவன்பட்டி, 3. இரணியூர், 4. இளையாற்றங் குடி, 5. மாத்தூர், 6. இலுப்பக்குடி, 7. வேலங்குடி, 8. சூரைக்குடி, 9. நேமம்.
இந்த ஒன்பது கோவில்களில் வழிபடு கின்றவர்களும் ஒருவருக்கொருவர் பெண் கொடுத்து, பெண் எடுத்துக்கொள்வர். சுவீகாரம் எடுத்துக்கொள்வதிலும் இக்கோவில்களே முக்கியத்துவம் பெறுகின்றன.
ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், கருமுத்து தியாகராஜ செட்டியார், அழகு சுந்தரம் செட்டியார், டாக்டர் அழகப்ப செட்டியார், ஏவி.எம். மெய்யப்ப செட்டியார், கவிஞர் கண்ணதாசன், தொழிலதிபர்கள் எம்.ஏ.எம். ராமசாமி, முத்தையா, நீதியரசர்கள் ஏ.ஆர். லட்சுமணன், சொக்கலிங்கம், திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், தமிழ்வாணன், பழ. கருப்பையா, "வானதி' திருநாவுக்கரசு போன்றவர்கள் எல்லாம் இந்த செட்டிநாட்டைச் சேர்ந்தவர்களே!
வேலாயுதத்தின் தாத்தா பெயர் சுப்ரமணியம். இவரை அந்நாளில் "பாட்டுக்கார சுப்பையா செட்டியார்' என்று அழைப்பதுதான் வழக்கம். சிலர் "பாட்டுக்கார ஜோதிட சுப்பையா செட்டியார்' என்றும் அழைப்பார்கள்.
இவர் வேறு யாருக்கும் ஜோதிடம் பார்க்கமாட்டார். தன் குடும்பத்திற்கு மட்டுமே பார்த்தார். இவரது சொந்த ஊர் ஏரியூர். இது சிவகங்கை பக்கம் திருப்பத்தூர் அருகே உள்ளது. தொலைக்காட்சியில் எல்லா நடிகர்கள்போல பேசியும் நடித்தும் காண்பிக்கும் "ரோபோ' சங்கர் இவரின் கடைசி பேரன்.
சுப்பையா செட்டியாருக்கு இரண்டு மனைவிகள்முதல் மனைவிக்கு பிறந் தது ஒரு மகன். பெயர் காசிவிஸ்வநாத செட்டியார். அவருக்கு 16 வயது இருக்கும் பொழுது தகப்பனுக்கும், மகனுக்கும் நடந்த மனத்தாங்கலில்- சண்டையில் அப்பாவிடம் கோபித்துக்கொண்டு பர்மா சென்றுவிட்டார். அங்கு தொழில் செய்து மிகப்பெரிய பணக்காரர் ஆனார்.
முதல் மனைவி இறந்த பிறகு, இரண்டாவது திருமணம் முடித்தார். இரண்டு பிள்ளைகள் பிறந்தன. மூத்தது பெண், இரண்டாவது ஆண். ஆணுக்குத் திருமணமாகி நான்கு ஆண் பிள்ளைகள் பிறந்தன.
கணிப்புகள்
தாத்தா சுப்பையா செட்டியார் தம் பேரன்களிடம் கூறிய ஜோதிடக் கணிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
* நான் இறந்தால் ஈமச்சடங்கு செய்ய என் மகனுக்கு (கனகசபை) பிராப்தம் இல்லை.
* அதேபோல் உங்களது தகப்பனுக்கு ஈமக்கிரியை செய்ய நான்கு மகன்களுக் கும் பாக்கியமில்லை. நீங்கள் நான்கு பேரும் இருப்பீர்கள்; ஆனால், "காரியம் செய்ய முடியாது போகும். ஒரு பொம்மையை வைத்துதான் ஈமக்கிரியை செய்வீர்கள்.
* இந்த நான்கு பேரன்களில் மூன்று பேர் 21 வயதிற்குள் திருமணம் முடிப் பார்கள். 3-ஆவது பேரனுக்கு மட்டும் 35 வயதிற்குமேல் திருமணம் நடக் கும்.
* உங்களுடைய தாயாரின் ஈமக் கிரியையில் கலந்து கொள்பவர்கள் மூன்று பேர்தான். ஒருவன் கலந்துகொள்ள முடியாமல் போகும். ஆனால், அவன் உயிருடன் இருப்பான்.
* வேலாயுதம் என்ற மூன்றாவது பேரன் முப்பத்தைந்து வயதிற்குமேல் அரசாங்க பணத்தில்தான் சாப்பிடுவான்.
* என்னுடய மருமகளின் பெயரும், மூன்றாவது பேரனாகிய வேலாயுதத்தின் மனைவியின் பெயரும் ஒன்றுபோல் இருக்கும்.
* நான் இறந்த அன்று, செழிப்போடுதான் மயானம் போவேன்.
* மூன்றாவது பேரன் 35 வயதிற்குமேல் திருமணம் முடித்தாலும், நடைமுறை மாற்றத்தின் காரணமாக அவன் எல்லா குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிற உரிமையைப் பெறுவான்.
அவர் கணித்துக் கூறியபடி நடந்த நிகழ்ச்சிகள் வருமாறு:
"எனக்கு ஈமச்சடங்கு செய்ய என் மகனுக்குப் பிராப்தம் இல்லை' என்றபடி, சுப்பையா செட்டியார் 93 வயதுவரை வாழ்ந்தாராம். அவருக்கு முன்பாகவே மகன் கனகசபை இறந்துவிட்டாராம். தன்னுடைய மகன் இறப்பை தகப்பன் பார்த்து விட்டார்.
கனகசபை இறந்தது சிங்கப்பூரில். உடனடியாக பிள்ளைகளும், தாயாரும் அங்கு செல்ல இயலவில்லை. மூத்தமகன் அந்தமானில் டாக்டராக இருந்தார்.
அவராலும் உடனடியாக சிங்கப்பூர் செல்ல முடியவில்லை. அங்கிருந்த உறவினர் களும் நண்பர்களுமே அவருக்குரிய ஈமக் கிரியைகளைச் செய்துமுடித்தனர். இவர்கள் செட்டிநாட்டில் தங்களது சொந்த ஊரில் ஒரு பொம்மையை வைத்து ஈமக்கிரியை செய்துமுடித்தார்கள்.
மூன்றாவது பேரனைத் தவிர மற்ற மூன்று பேரும் 21 வயதிற்குள் திருமணம் முடித்துக்கொண்டனர். தாத்தா கூறியபடி மூன்றாவது பேரனுக்கு மட்டும் 2010 ஜனவரி வரை திருமணம் நடக்கவில்லை; பின்பு நடந்தது.
தாயாரின் ஈமக்கிரியையில் மூன்று பேர்தான் கலந்துகொள்வார்கள் என்பதற் கேற்ப நான்காவது பேரன் வேறு வகுப்பைச் சேர்ந்த பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்டார்.
செட்டிநாட்டு வழக்கப்படி வேறு சாதியில் திருமணம் முடித்தால், சாதிக்கட்டுப்பாடு விதித்து விலக்கி வைத்துவிடுவார்கள். அதனால் நல்லது- கெட்டது என எந்த நிகழ்ச்சியிலும் அவரால் கலந்துகொள்ள முடியாது.
மூன்றாவது பேரன் 35 வயதுவரை செட்டிநாட்டில் பெண் கிடைக்காததால், வேறு சாதியில் மணம் முடித்தார். விதிவிலக்காக அவர் மட்டும் எல்லா குடும்ப நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் உரிமையைப் பெற்றார். ஆனால், அவருடைய மனைவி கலந்துகொள்ள முடியாது.
சிவராமன் என்னும் இரண்டாவது பேரனின் மகள் வயதிற்கு வந்த நிகழ்ச்சியில், மூன்றாவது பேரன் வேலாயுதம் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.
சுப்பையா செட்டியார் கணித்தபடி வேலாயுதத்தின் அம்மா பெயர் இந்திராள் தேவி. மனைவி ஸ்ரீதேவி.
சுப்பையா செட்டியார் தான் இறந் தால், கட்டை செலவுக்கு 1,500 ரூபாயை தலையணைக்குக் கீழே வைத்திருந்தார்.
அவருடைய அறைக்குள்ளே யாரையும் வர அனுமதிக்கமாட்டார். பெட்டக் சாவியை இறக்கும்வரை யாரிடமும் கொடுக்கவில்லை. அறையை, படுக்கையைச் சுத்தம் செய்வது போன்ற எல்லாவற்றையும் அவரே செய்து கொள்வாராம்.
93 வயதுவரை யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் கொடுக்கவில்லை. உடம்பில் ஒரு நோயும் இல்லை. கடைசிவரை நலமுடன்தான் இருந்தார். அவர் இறந்த அன்று முப்பது ஆண்டுகளில் பெய்யாத மழை பெய்தது. அவர் கணித்தபடி செழிப்போடுதான் சென்றார்.
கடைசியாக சுப்பையா சொன்னது "நான் இறந்தபிறகு எனக்கு ஈமக்கிரியை செய்ய பர்மாவிலுள்ள என் மூத்த மனைவி யின் மகன் வருவான். அவனை செய்ய விடாதீர்கள். அவன் ஏற்கெனவே என்னிடம் சண்டை போட்டுவிட்டுச் சென்றவன். எனவே நீங்களே எனக்கு ஈமச்சடங்கை செய்துவிடுங்கள். அதையும் மீறி அவன் எனக்கு சடங்கு செய்தால் நீங்கள் இதுவரை என்னை கவனித்த புண்ணியம் முழுவதும் அவனுக்குச் சென்றுவிடும். நீங்கள் மிகவும் கஷ்டப் படுவீர்கள்'' என்றாராம்.
சொன்னதுபோலவே சுப்பையா செட்டியார் தன்னுடைய 93-ஆவது வயதில் இறந்தார். செய்தி கேள்விப்பட்டு மூத்த மகன் பர்மாவிலிருந்து வந்துவிட்டார். "ஈமக்கிரியை நான்தான் செய்வேன்'' என்றிருக்கிறார். இவர்கள் நான்கு பேரும், "தாத்தா கேட்டுக்கொண்டபடி நாங்கள்தான் செய்வோம்; உன்னை செய்யவிட மாட்டோம். காரணம், நாங்கள்தான் கடைசிவரை தாத்தாவை கவனித்தோம். கடைசி நேரத்தில் வந்து ஈமக்கிரியை செய்கிறேன் என்கிறாய்.
இது எந்தவிதத்தில் நியாயம்?'' என்று சண்டை போட்டனர்.
ஒருநாள் முழுவதும் இது நடந்ததாம். ஊர் பெரிய மனிதர்களெல்லாம் ஒன்றுகூடி விட்டனர். கடைசியின் கனகசபையின் மனைவி- அதாவது நான்கு பையன்களின் அம்மா, "மூத்த மனைவியின் மகன் காசிவிஸ்வநாதனே செய்யட்டும்; இதில் என்ன இருக்கிறது?'' என்று கூறிவிட்டாராம். சொன்னபடி சுப்பையா செட்டியாருக்கு ஈமக்கிரியை முறைப்படி செய்தார் காசிவிஸ்வநாதன்.
அதன்பிறகு கனகசபையின் குடும்பம் பொருளாதாரத்தில் இறக்கம் கண்டது. இன்றுவரை சரிவுகளைத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்களாம். ஈமக்கிரியை செய்த காசிவிஸ்வநாத செட்டியாரும் அதன்பிறகு உடல் நலக்குறைவுற்று, சொல்ல முடியாத அல்லல்பட்டு இறந்தாராம்.
இதைக்கேட்ட நான் வியப்பும், அதிசயமும்தான் அடைந்தேன்.
ஈமக்கிரியை அனுமதித்தது அந்த அம்மாவின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. அதற்கு தண்டனை பொருளாதார சரிவும், வறுமையும், துன்பமுமா? தன் தகப்பனுக்கு உரிமையோடு கொள்ளிவைத்தது தவறா?
அதற்கும் தண்டனையா?
அப்பாவின் விருப்பத்தை இரண்டு மனைவிகளின் பிள்ளைகளும் நிறைவேற்றாத தால், இரு குடும்பங்களும் சொல்லமுடியாத கஷ்டத்தை அடைந்தனர். இந்த தண்டனை யாரால் கொடுக்கப்பட்டது? கடவுளாலா அல்லது சுப்பையா செட்டியாராலா?
ஒன்றுமே விளங்கவில்லை! ஆனால் இந்த நிகழ்வுகளெல்லாம் உண்மையிலேயே நடந்தவை.
(அதிசயங்கள் தொடரும்)