புத்தர் தன் சீடர்களுக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தார். சீடர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களைக் கேட்டு, விளக்கம் பெற்றுக்கொண்டிருந்தார்கள்.
"புத்த பிரானே.... என்னோட மனசு மத்தவங்களைக் குறை சொல்லுது; மனசும்
அலைபாயுது; கெட்டதை நினைக்குது;
அதை என்னோட கட்டுப்பாட்டில் வச்சிக்க
முடியல. ஆனா நீங்க இவ்வளவு பக்குவப்
பட்ட மனசோட எப்படி இருக்கீங்க?'' எனக்
கேட்டான் ஒருவன்.
எதனுடைய உண்மைத் தன்மையை யும் அவர்களே உணரவேண்டும் என்பதே புத்தரின் நிலைப்பாடு. சந்தேகம் கேட்ட சீடனை அழைத்து, "இன்னும் 24 மணிநேரத்தில் நீ மரணமடைந்துவிடுவாய்'' என்றார்.
அதிர்ச்சியான சீடன், உடனடியாகத் தனது வீட்டுக்குக் கிளம்பிப் போய், "யாரும் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்'' எனச் சொல்லிவிட்டு ஒரு அறையில் போய் படுத்துக்கொண்டான். அவனது மனம் தனது மரணத்தைப்பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தது.
புத்தர் கொடுத்த கெடு முடிய இன்னும் ஒரு மணிநேரம் இருக்கும் நிலையில், புத்தர் சில சீடர்களுடன் அவனது வீட்டுக்குச் சென்றார். அவனிடம் பேச விரும்பி னார். ஆனால் அவனோ...
"அதான் நான் சாகப் போறேனே! என் கிட்ட பேசுறதுக்கு என்ன இருக்கு?'' எனக் கேட்டு, புத்தரை சந்திக்க மறுத்தான். "நான் சில கேள்விகளைக் கேட்கவாவது என்னை அனுமதி'' என்றார் புத்தார். "கேளுங்க'' என்றான் அந்த சீடன்.
"கடந்த 24 மணி நேரத்துல நீ என்னென்ன செஞ்ச?''
"என்ன செய்யமுடியும்? என் மனசு முழுக்க என்னோட மரணத்தப்பத்திதான் சிந்திச்சுக் கிட்டிருந்துச்சு.''
"உனக்குப் பிடிக்காதவங்கள ஏதாவது செய்யணும்னு மனசில நினைச்சியா?''
"அதையெல்லாம் எங்க யோசிக்க முடிஞ்சது?''
"மத்தவங்கமேல பொறாமைப் பட்டியா? எதையாவது அடையணும்னு ஆசைப் பட்டியா?''
"அந்த நிலைமைலயா நான் இருக்கேன்...''
"அப்படின்னா... வேற எந்த சிந்தனையுமே உனக்கு இல்லையா?''
"இல்ல... பிரானே! நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்கவே இல்ல; எந்த ஆசையும் படல''
"நம்மளோட மரணம்... நம்ம கையில இல்ல! அது எப்ப வரும்கிறது நமக்குத் தெரியாது. நான் உனக்கு சில உண்மைகளப் புரியவைக்கத்தான் ஒரு நாள்ல நீ இறந்து விடப்போவதாகச் சொன்னேன். இந்த 24 மணி நேரத்துல உன்னோட மனசு எவ்வளவு பக்குவமாயிருக்கு. இன்னைக்கு மரணம் வரும்னு தெரிஞ்சதும் நீ யாருக்கும் கெடுதல் நினைக்கல; எதுக்கும் ஆசைப்படல. எப்படி யும் நமக்கு மரணம் வந்தேதீரும்கிற எதார்த் தத்தப் புரிஞ்சுக்கிட்டா எந்த மனுஷனும் மத்தவங்களுக்குக் கெடுதல் செய்யவோ, பேராசைப்படவோ மாட்டான். இந்த உலகத் துல பிறப்பும் இறப்பும் நிலையானது; புறவாழ்க்கை இன்பம் நிலையில்லாதது. 24 மணி நேரத்துலயே இந்த அளவு உன்னோட மனசு பக்குவமடைஞ் சிருக்கும்போது, 24 வருஷமா கத்துக்கிட்டு வர்ற என் மனம் எவ்வளவு பக்குவப்பட்டிருக்கும்?'' என்றார் புத்த பிரான்.
பிறருக்குக் கேடு எண்ணாத சிந்தனைய, ஒரே நாளில் தனக்கு உணர்த்திய, புத்த பிரானை வணங்கினான் அந்தச் சீடன்.
இப்போது அவன் மனம் கள்ளங்கபடமற்ற குழந்தை உள்ளமாக ஆகிக்கொண்டிருந்தது.
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், கவியரசர் கண்ணதாசன் எழுதிய மனித வாழ்வின் உண்மைய உணரவைக்கும் பாடல்... "சட்டி சுட்டதடா கைவிட்டதடா.'
இந்தப் பாடலின் மூன்றாவது சரணம்...
"எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா- நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா!
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்துவிட்டதடா!'
-இப்படி அருமையாக எழுதியிருப்பார் கண்ணதாசன்.
எல்லாரும் புத்தனாக
முடியாது; ஆனால்... யானை
யாகிய புறவாழ்வியலை ஞானக்
கண்கொண்டு அணுகி வாழ்வோம்!
(பெருகும்)