நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது ஏன்? -கே.எல். புனிதவதி, கோவை-17.
நாரதர் சிறந்த விஷ்ணு பக்தர் என எல்லாரும் அறிவீர்கள். அவருக்கு ஒரு முன்ஜென்ம கதை உண்டு. கல்ப காலத்தில் இவர் ஒரு வேலைக் காரியின் மகனாக பிறந்துள்ளார். இவருடைய தாய், பல அந்தணர்களின் வீடுகளில் வேலை செய்துள்ளார். அந்த அந்தணர்கள், பகவானின் கல்யாண குணங்களை கூறுவர். இதனைக்கேட்டு இவர் வளர்ந்துள்ளார். சிறு பாலகனாகிய இவரிடம் அன்புகொண்டு, இவருக்கு ஞான உபதேசம் செய்தனர். இதனால் இவருக்கு பகவத் பக்தி வளர்ந்தது. ஒருநாள், இவரது தாய், பாம்பு கடித்து இறந்துவிட, இவர் சோகம் தாளாமல், காடு, மலை என்று அலைந்திருக்கிறார். பகவான் தியானத்திலேயே, முழு முனைப்புடன் இருந்திருக்கிறார். ஒரே, ஒரு கணம் பகவான் இவர் கண்முன் தோன்றி மறைந்துவிட்டார். ஒரு அசரீரி, இந்த ஜென்மத்தில், ஒரு கணம் மட்டுமே என்னைக் காண முடிந்தது. எனினும் அடுத்த பிறவியில் என்னைக் காணலாம். என் ஞாபக சக்தி அடுத்த பிறவியிலும் தொடரும் என வரம் அளித்தது. ஒருநாள் இந்த பிறவியில் மரணம் அடையவே, இவர் இந்த மனித சரீரத்தை விட்டு, சூட்சும ரூபமாக பிரம்மாவிடம் சென்று ஒடுங்கிவிட்டார்.பிரம்மா, ஒரு இரவு முடிந்து, மறுநாள் உலகை படைக்க முற்பட்ட போது, அவருடைய இந்திரியத்தில் இருந்து மரீசி போன்ற மகரிஷிகள் உண்டானார்கள். கூடவே, நாரதர் என்ற நானும் உண்டானேன். மகதீ எனும் வீணையை மீட்டியபடி, பகவானையே துதி செய்துவருவதால், நான் நினைத்த மாத்திரத்தில், அவர் என் உள்ளத்தில் தோன்றி தரிசனம் கொடுக்கிறார். இவ்விதம் தனது பிறப்பைப் பற்றி, வியாச மகரிஷியிடம் கூறி, பகவானின் பெருமையைக் கூறும் நூல் ஒன்றை இயற்று மாறு கேட்டுக்கொண்டார். நாரதரின் மனதில் சதாசர்வ காலமும் பகவான் உறைந்து, நிறைந்துபோய் உள்ளார். எனவே நாரதர் எதைக் கூறினாலும், அது பகவானின் பெரு விருப்பமாகவே இருக்கும்.ஒரு நன்மை நடக்கவேண்டும் என ஆசைப்படும்போது, பகவான் நாரதரின் வாக்கில் இருந்து, செயல்பட செய்கிறார். அது கலகமாக மாறி, பின் நன்மை செய்வது என்பது பகவானின் கிருபையே ஆகும்.எனவே நாரதர் கலகம் கண்டிப்பாக நன்மையில்தான் முடியும் என்பது பகவானின் பெரு விருப்பம்.
நவகிரகங்கள் வெவ்வேறு திசையைப் பார்ப்பது எதனால்?-ஜெயகாந்தி, பெரும்பாக்கம்.
இதற்கு ஒரு செவி வழி கதை ஒன்று உள்ளது. நிறைய யுகங்களுக்குமுன்பு, பிரபஞ்சமே வெள்ளக்காடாகி மூழ்கிவிட்டது. இதில் இடைக்காட்டு சித்தர் என்பவர் இதனை முன்பே உணர்ந்து. நவதானியங்களும் மண்ணும் கலந்து ஒரு குடிசை கட்டி, நாலு ஆடுகளையும் அழைத்து, ஒரு மேடான இடத்தில் குடிசை போட்டுக்கொண்டாராம். பின் உலகமே தண்ணீர் சூழ்ந்த போது, இவர் ஆட்டுப்பாலை குடித்தும், ஆடுகள் முளைவிட்ட நவதானியங்களை தின்றும், ஒரு மாதிரி காலத்தைக் கழித்தாராம். இடைக்காடர் ரொம்ப யோசித்தாராம். இந்த வெள்ளத்தை எப்படி கண்ட்ரோல் பண்ணுவது என சிந்தித்து, பின் அடடா, இந்த நவகிரகங்கள் எல்லாம், ஒன்றையொன்று பார்த்துக் கொண்டிருக்கிறதே. அதனால் தான் இத்தனை விபரீதம் என முடிவுசெய்து நவகிரகங்களை, ஆளுக்கொரு திசையில் திருப்பி வைத்துவிட்டாராம். அப்புறம் உலகம் நார்மலாகிவிட்டதாம். இப்படி ஒரு கதை உண்டு.
எனினும், ஜோதிடப்படி, ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு திசை கொடுக்கப்பட்டிருக்கிறது.
சூரியன்- கிழக்கு
சந்திரன்- வடமேற்கு
செவ்வாய்- தெற்கு
புதன்- வடக்கு
குரு- வடகிழக்கு
சுக்கிரன்- தென்கிழக்கு
சனி- மேற்கு
ராகு- தென்மேற்கு
கேது- வடகிழக்கு
எனவே கிரகங்கள் வெவ்வேறு திசையைத்தான் பார்த்துக்கொண்டு நிற்பார் கள். இது இயல்புதான்.
அனுமன் வாலில், குங்குமம் வைத்து வழிபடுவதின் ஐதீகம் என்ன? -கணேஷ், புதுக்கோட்டை.
இராம அவதாரம் உண்டானபோது, சிவபெருமான் அவருக்கு கூடவே இருந்து உதவ விருப்பம் கொண்டார். அதனால், வாயு மூலமாக தன் சக்தியை அஞ்சனையின் கர்ப்பத்தில் தங்கச் செய்தார். எப்போதும் சிவனையும், சக்தியையும் பிரிக்க முடியாதல்லவா!
எனவே, ஆஞ்சனேயரின், வாலில் பராசக்தி தங்கிவிட்டாள்.
ஆஞ்சனேயரின் அவதாரம் பிரம்மச் சர்யம் கொண்டது. எனவே அவருக்கு குங்குமம் வைக்காமல், அவர் வாலில் உறைந்திருக்கும் அம்பாளுக்கு குங்குமம் வைக்கிறோம்எனவேதான் அனுமன் வாலில் குங்குமம் வைத்து வழிபடும் ஐதீகம் உள்ளது. நமது வேண்டுதல்கள் பலிதமாக, இவ்விதம் செய்யும் வழக்கம் உள்ளது.
துளசி- தாமரை ஒப்பிடுங்கள்?
துளசி என்றவுடன் பெருமாள் தான் நினைவுக்கு வருவார். இது விஷ்ணுவின் மனைவியான லட்சுமி யைக் குறிக்கிறது. தேவர்களும், அசுரர் களும் கடலை கடைந்த போது, கிடைத்த வஸ்துகளில் துளசியும் ஒன்று எனக் கூறுவர். துளசி இருக்கும் இடத்தில் தீவினைகள் அணுகாது என்பர். அதனால் வீடுகளில் துளசி செடி வைத்து, அதற்கு விளக்கேற்றி வழிபடும் வழக்கம் உள்ளது. துளசி செடியின் அடியில் ஆண்டாள் இருக்கிறாள். துளசி செடியின் அடி மண்ணிற்கும் பெரும் சக்தி உண்டு. வீட்டிற்கு ஏதேனும் துர்சம்பவம் நடக்க இருந்தால், துளசி மாதா தான் அதனை ஏற்றுக் கொண்டு வாடிவிடுவாள் என்றொருஐதீகம் உண்டு. துளசி செடியின் குச்சிகள் யாகத்திற்கு பயன்படுத்தப்படும்.
துளசியில் இறைசக்தி நிரம்பியிருப்பதால் தீட்டான பெண்கள் துளசி செடி அருகில் போகக்கூடாது என்பர். துளசி இலையும், பச்சைக் கற்பூரம், ஏலக்காயும் சேர்த்து, சுத்தமான தண்ணீரில் இட்டு அதனை பெருமாளின் துளசி தீர்த்தமாக படைத்து பக்தர்களுக்கும் விநியோகம் செய்வர்.
வீடுகளில், சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில், கிழக்கு பக்கத்து வாசலுக்கு நேராக துளசி மாடம் கட்டவேண்டும். வீட்டின் தரையைவிட, சற்று உயரத்தில் துளசி மாடம் அமையவேண்டும். துளசியில் லட்சுமி துளசி, கிருஷ்ண துளசி என இரு வகை உள்ளது. சாதாரணமாக லட்சுமி துளசி எனும் பச்சை நிற துளசியை வளர்ப்பர்.
சில வீடுகளில், எத்தனை முறை துளசி நட்டாலும், உடனே வளராமல் வாடிவிடும். இப்படிப்பட்டவர்களின் வீடுகளில் தீவினை உள்ளது என்று அறியலாம். இவர்கள், கரும் நிறமான கிருஷ்ண துளசி வளர்க்க வேண்டும்.
துளசியை சுற்றும்போது கூறும் மந்திரம்.
"ப்ரசீத துளசி தேவி
ப்ரசீத ஹரி வல்லபே
க்ஷீரோதமத நோத்புதே
துளசி த்வாம் நமாம் யகம்'
என்று கூறவேண்டும். ஏகாதசி, செவ்வாய்க்கிழமை, மாலை நேரம் துளசி பறிக்கக்கூடாது.
பத்மப்ரியே, பத்மினி பத்மஹஸ்தே
பத்மாலயே பத்ம தளாயதாக்ஷி என்று
மகாலட்சுமி தாயாரை ஸ்தோத்திரம் செய்வார்கள்.
தாமரை பூவில் ப்ரியம் உள்ளவர். பத்மினி, தாமரைபோல் அழகானவள். தாமரையை தன் கரங்களில் கொண்டவள். தாமரையில் அமர்ந்திருப்பவள். தாமரை போன்ற கண்களும் முகமும் உடையவள்.
மகாலட்சுமி, நித்திய வாசம் செய்யும் இடங்கள், தாமரை பூவின் நடுவில், பசுவின் பின்புறம், பெண்களின் வகிடு, யானையின் தலை, வில்வ இலை என இந்த ஐந்து இடங்களை கூறுவர்.
விஷ்ணுவின் மிக விருப்பமான மலர் தாமரை. பிரம்மாவின் தொப்புள் கொடியில் தாமரை கொடி உள்ளது.
தாமரை என்பது மிகவும் தெய்வீக சம்பந்தம் கொண்டது. எனவே அதனை பெண்கள் தலையில் சூடுவது கிடையாது.
ஆக, துளசியும், தாமரையும் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது.
துளசி- தளம்- இலை- பெருமாள்.
தாமரை- மலர்- பூ- தாயார்.
இரண்டுமே பூஜைக்கு மட்டுமே பயன்படுகிறது. தெய்வீகமானது; புனிதமானது. எனவே இரண்டையுமே ஒப்பிட இயலாது.
பரிகாரத்தலம் என குறிப்பிட்ட ஆலயங்களை மட்டும் தேர்ந்தெடுப்பது ஏன்?
நிறைய கோவில்கள் இருந்தாலும் சில கோவில்கள் பரிகாரம் செய்ய ஏற்றது என கூறப்படுகிறது. அந்தக் கோவில் தோன்றிய வரலாறு, புராணக் கதைகள், குறிப்பிட்ட பரிகாரம் செய்ய தகுந்ததாக அமைந்திருக்கும். சில கோவில்கள் தேவர்களின் சாபத்தை போக்கியதாக இருக்கும். சில கோவில்கள் கிரகங்களின் வலிமையை அதிகரிக்க உதவியிருக்கும். அனேக ஆலயங்கள், அகத்தியர் போன்ற முனி சிரேஷ்டர்களால் உண்டாக்கப் பெற்றிருக்கும்.
கிரகங்கள், எந்த கோவி−ல் சிவனை வழிபட்டார்களோ, அந்த கோவில், அந்த கிரகத்தின் பரிகாரத்தலமாக மாறி இருக்கும். ஆக, ஒவ்வொரு கோவிலின் பரிகார புராண செய்திகளை கூற ஆரம்பித்தால், இடம் போதாது. எனினும் எந்த பரிகார கோவிலுக்கு சென்றாலும் அங்குள்ள ஈசனை நன்கு வழிபடுங்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/28/qa-2026-02-28-18-05-53.jpg)