சையே துன்பத்துக்கு காரணம் என்ற உயரிய தத்துவத் தையும், வன்முறைகளுக்கு எதிராக பேரன்பையும் உலகுக்கு போதித்த கவுதம புத்தர் பிறந்த சிறப்புக்குரிய நேபாள தேசம், கடந்த சில நாட்களாக மிகப்பெரிய வன்முறையை எதிர்கொண்டு தற்போது மெல்ல மெல்ல அமைதிக்கு திரும்பிவருகிறது.

Advertisment

சுமார் 3 கோடி மக்கள் தொகையுள்ள குட்டி தேசமான நேபாளத்தில், பிறந்தது முதலே செல்பேசியைப் பயன்படுத்தி வளர்ந்த 'ஜென் Z' எனும் தலைமுறையினர் மத்தியில் தன்னெழுச்சியாக எழுந்த போராட்டத்தில், 3 காவல்துறை அதிகாரிகள் உட்பட 72 பேர் வரை கொல்லப்பட்டனர். 4 அமைச்சர்கள் மட்டுமல்லாது, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவி விலகிபின்னரே போராட்டம் தணிந்தது.

Advertisment

நேபாளத்தில் வன்முறை வெடிக்குமளவு அப்படியென்ன பிரச்சனை?

விரல் நுனியில் உலகம் எனச் சொல்வதுபோல், ஆன்ட்ராய்டு செல்பேசியினுள் உலகமே மூழ்கியுள்ள இன்றைய சூழலில், நேபாளத்தில் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசின் ஊழல்களுக்கெதிராக 'Nepo Kid'  என்ற இளம்தலைமுறையினரின் அமைப்பு பிரச்சாரத்தில் இறங்கியது. குறிப்பாக, அமைச்சர்கள், உயரதிகாரிகள், அவர்களின் வாரிசுகளின் ஊழல், சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்தும் செய்திகள், ஒளிப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் ஒளிபரப்பப்பட்டன. இதனால், தங்கள் ஆட்சிக்கெதிராக மக்கள் திரும்புவதைத் தடுப்பதற்காக, சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நேபாள அரசு ஈடுபட்டது.

சமூக வலைத்தளங்களை நேபாளத்தில் இயங்கச்செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தது. நேபாளத்தின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின்கீழ் அனைத்து சமூக வலைத் தளங்களும் பதிவுசெய்ய வேண்டுமென்றும், நேபாளத்தில் தங்கள் அலுவலகத்தை சமூக வலைத்தள நிறுவனங்கள் வைத்திருக்கவேண்டுமென்றும், சமூக வலைத்தளத்தின் செயல்பாடுகளைக் கண்காணிக்க நேபாள அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவேண்டுமென்றும் விதிமுறை வகுத்தது. இதற்கென ஒரு வார கால அவகாசம் வழங்கிய அரசு, அரசின் உத்தரவை ஏற்கமறுத்த பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களை கடந்த 4-ஆம் தேதி நள்ளிரவு முதல் தடைசெய்தது.

Advertisment

நேபாளத்தில் தற்போது சுமார் 1.43 கோடி மக்கள் பேஸ்புக் தளத்தை பயன்படுத்துவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கையானது, நேபாளத்தின் மொத்த மக்கள் தொகையில் 48.1 சதவீதமாகும். இவர்களின் பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி, பணப்பரிமாற்றங்களுக்காகவும், வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களைத் தொடர்புகொள்வதற்காகவும், கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாகவும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால், இந்தத் தடைக்கெதிராக நேபாள மக்கள் கொந்தளித்தனர். குறிப்பாக, ஜென் ழ தலைமுறையினர் பிறந்தது முதலே சமூக வலைத்தளங்களோடு இயங்கியே பழகியவர்கள். எனவே இத்தடை, நேபாள மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, நேபாள அரசின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக ஜென் ழ தலைமுறையினர் போராட்டத்தில் இறங்கினர். 

நேபாள தலைநகர் காத்மாண்டு வீதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு, அரசுக்கு எதிராகக் கோஷமெழுப்பி வன்முறையில் ஈடுபட்டனர். அதையடுத்து காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேபாள அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவையும் மீறி, போராட்டக்காரர்கள், அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நாடாளுமன்றம், அமைச்சர்களின் வீடுகளைக் குறிவைத்து தாக்குதலில் இறங்கினர். போராட்டம் அடுத்தடுத்து, பொக்காரா, புட்வால், தாரன், கோரகி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பரவியது. பிரச்சனை எல்லைமீறியதால், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக்குண்டுகள் வீசப்பட்டன. தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். போராட்டக்காரர்களும் போலீசார் மீது கல்லெறிவது, வாகனங்கள், கட்டடங்களுக்கு தீவைப்பது, சூறையாடுவதென வன்முறையில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்தினுள் நுழைந்ததால், அவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

நேபாள அரசுக்கெதிரான போராட்டம், அரசின் ஊழல்களுக்கு எதிரானதாகத் திரும்பியது. 'அனைத்துக்கட்சிகளும் அடங்கிய தேசிய அரசு அமைக்கவேண்டும்! ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! கருத்து சுதந்திரத்திற்கு உத்தரவாதம் வேண்டும்! அரசியலில் பதவி வகிப்பவர்களுக்கு ஓய்வு வயது நிர்ணயிக்க வேண்டும்!' ஆகிய கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் எழுப்பினர். 'கே.பி. திருடனே! நாட்டை விட்டு வெளியேறு!' என்ற கோஷத்தை எழுப்பினர். போராட்டக்காரர்கள், பால்கோட்டிலுள்ள பிரதமர் சர்மா ஒலியின் சொந்த வீட்டுக்குள் புகுந்து தீவைத்தனர். பிரதமர் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அவர் பதவி விலகக்கோரி கோஷமிட்டனர். நாடாளுமன்ற வளாகம் பற்றியெரிந்தது. 

ஜனாதிபதி ராமச்சந்திர பவுடலின் வீட்டின்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கின் வீட்டுக்குத் தீவைக்கப்பட்டது. லலித்பூர் மாவட்டத்திலுள்ள தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பிரித்வி சுப்பா குருங்கின் வீட்டின்மீது கற்கள் வீசப்பட்டன. லலித்பூரிலுள்ள முன்னாள் பிரதமர் பிரசாந்தாவின் வீட்டை  சூறையாடினர். மற்றொரு முன்னாள் பிரதமர் ஷெர் பகதுர் துபாவின் இல்லம் தாக்குதலுக்குள்ளானதில், அவர்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத்தை வீடு புகுந்து விரட்டிய போராட்டக்காரர்கள், தெருவில் அவரை துரத்தித் துரத்தி அடித்து உதைத்த வீடியோ வைரலாகியது. நிலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல், நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது பதவியை ராஜினாமா செய்தார். மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து, நேபாள காங்கிரஸை சேர்ந்த வேளாண்துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரி, சுகாதாரம், மக்கள்தொகை அமைச்சர் பிரதீப் பவுடல் ஆகியோர் ராஜினாமா செய்தனர். காத்மாண்டுவில் நிலவிய அசாதாரண சூழலால், விமான நிலையம் மூடப்பட்டது. பொக்காராவிலுள்ள முதல்வரின் அலுவலகம் சூறையாடப்பட்டது. போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நேபாள அரசு நீக்கியது. 

நிலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர இயலாமல் தடுமாறிய நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, தனது பதவியை ராஜினாமா செய்தார். போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி மாளிகை, துணை ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம், போராட்டங்களுக்கு தடை செய்யப்பட்டது. காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தை நேபாள ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இந்நிலையில், மாணவர்கள், இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி, நேபாளத்தின் இடைக்கால பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த போராட்டத்தின் மூலம், மாணவர்களின், இளைஞர்களின் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது ஜ்என்ற உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார்கள் நேபாள இளந்தலைமுறையினர். இச்சூழலில், இந்திய நாட்டின் இளைஞர்கள், மாணவர்கள், ஜென் Z தலைமுறையினர், அரசமைப்பை, ஜனநாயகத்தை பாதுகாப்பார்கள். வாக்குத் திருட்டை தடுப்பார்கள். அவர்களுடன் நான் துணை இருப்பேன்" என்று வாக்குத்திருட்டு விவகாரத்தில் இந்திய எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.