72-வது உலக அழகிப்போட்டி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி தொடங்கியது.
இதில், 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். முதற்கட்ட போட்டிகளில் வென்று, 40 பேர் காலி-றுதி போட்டிக்கு தேர்வாகினர்.
அவர்களில் எட்டு பேர் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர். அந்த எட்டு பேரில் இந்திய அழகி நந்தினி குப்தா இடம்பெறவில்லை.
இந்நிலையில், மே 31-ஆம் தேதி பிரமாண்ட இறுதி போட்டி ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் நடந்தது.
இதில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ உலக அழகி பட்டம் வென்றார். அவருக்கு ரூ.8.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, உலக அழகிக்கான கிரீடத்தை அணிவித்தார்.
தாய்லாந்தின் புக்கட் தீவைச் சேர்ந்த சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ கடந்த ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்து போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர்.
மேலும் உலக அழகி 2024 போட்டியில் மூன்றாவது ரன்னர் ஆக தேர்வானார்.
தற்போது அவர் தம்மசாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளில் இளங்கலைப் படித்து வருகிறார்.
ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்ந்த ஹாசெட் டெரஜி இரண்டாவது இடத்தையும், ஐரோப்பிய நாடான போலந்தை சேர்ந்த மஜா கிலாஜ்டா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
கடந்த ஆண்டும் உலக அழகி போட்டி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத் தலைநகரான மும்பையில் நடைபெற்றது.
உலக அழகி போட்டி 1951-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து இந்தியா 3-வது முறையாக உலக அழகி போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.