தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றி யவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவிற்கு “தகைசால் தமிழர் விருது" வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் “தகைசால் தமிழர்” விருதை ஆர்.நல்லகண்ணுவிற்கு வழங்கினார். மேலும் இந்த விருதுக்கான பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நல்லகண்ணுவிற்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பத்து லட்சம் ரூபாயுடன் தனது சொந்த நிதி ரூ.5 ஆயிரம் சேர்த்து 10 லட்சத்தி 5 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு முதல்வரிடம் வழங்கினார் நல்லகண்ணு.
தூய்மையான அரசியல், மாற்றுச் சித்தாந்தம் கொண்டவர்களும் நேசிக்கும் ஆளுமை, விட்டுக்கொடுக்காத போராட்டக் குணம் என இன்னும் பல சிறப்புகளோடு நடமாடும் நல்ல உள்ளம் கொண்டவர் நல்லகண்ணு. 1925-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த நல்லகண்ணுவின் வாழ்க்கையே போராட்டத்தில் துவங்கியதுதான். இளம் வயதில் நெல் மூட்டை பதுக்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி நின்ற அந்த கால்களும், மனமும் தற்பொழுது வரை அமரவில்லை.
சுதந்திரப் போரில் சுருட்டால் மீசையைச் சுட்டபோதும் போராட்டத்தைக் கைவிடாமல் நின்ற அவரது போராட்டக்குணமும், தியாகமும், "போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் போராட்டம் தேவைப்படுகிறது'' என்று அவர் கூறிய வார்த்தையிலும் நீடிக்கிறது 96-வயதிலும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தால் நல்லகண்ணு தான் முதல்வர் என அனைத்துத் தரப்பினராலும் கூறப்படும் அளவிற்கு 80 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னைப் பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டவர். நெல் மூட்டை பதுக்கல், பஞ்சாலைப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தொழிலாளர்கள் போராட்டம், மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டம், சுதந்திரப் போராட்டம் என இடைவிடாத சமூகப்பணி மூலம் இளைஞர்களை அணிதிரட்டியவர். அதேபோல் விவசாய சங்கப் பதவி, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவி என 13 ஆண்டுகளுக்கும் மேல் பொறுப்பில் இருந்தவர்.
தூய்மையான அரசியல் கரங்களுக்குச் சொந்தக்காரர் என்ற வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர். அவரது 80-ஆவது பிறந்தநாளன்று அவர் செயல்பட்டு வரும் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தபொழுது மீண்டும் அதைக் கட்சி வளர்ச்சிக்கே கொடுத்தார். அதேபோல் அம்பேத்கர் விருதுடன் தமிழக அரசு கொடுத்த ஒரு லட்சத்தை சரிபாதியாகப் பிரித்து பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர்களுக்கும் கொடுத்தவர்.
- கலைமோகன்