தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் நமது மாநிலம் முன்னேற்றத்தை கண்டுள்ளது என்பதை தமிழ்நாடு புள்ளிவிவரங்கள் அட்டவணை தெளிவாக காட்டுகிறது. எனினும், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைத் தொழிலாளர் முறையிலி-ருந்து மீட்கப்பட்டவுடன் அந்தக் குழந்தை களின் நிலை, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகின்ற குழந்தைகளின் எண்ணிக்கை போன்ற பல விஷயங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை இன்னும் தீவிரப் படுத்த வேண்டியிருக்கிறது.
தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது குழந்தைகளின் நலனை மதிப்பிடு வதற்கான குறியீடுகளில் தமிழ்நாடு சிறப்பாக செயல்பட்டாலும், தடுக்கக் கூடிய மற்றும் தமிழக அரசின் கவனம் தேவைப்படும் சில பிரச்சினைகள் இங்கு உள்ளன. அவை:
ஊட்டச்சத்து குறைபாடு
குழந்தைகள் இறப்பு விகிதம்
குழந்தைகள் பாலின விகிதம்
உடல் எடை குறியீட்டெண்
இரத்தசோகை
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம்
முழுநோய்த் தடுப்பு
உயர் மற்றும் மேல்நிலைக் கல்வி நிலைகளில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் திறந்தவெளியில் மலம் கழித்தல் போன்றவையாகும்.
தமிழ்நாட்டில் குழந்தைகள் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும், அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கு வதற்கான தனது கடமையை உறுதியாக கடைப்பிடிக்கவும், அதற்கான நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை அடையவும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை - 2021ஐ உருவாக்கியுள்ளது.
தமிழக அரசின் மாநில குழந்தை களுக்கான கொள்கை, குழந்தைகளின் ஒட்டுமொத்த நலன்களை குறிப்பிடத் தக்க அளவில் மேம்படுத்தவும் குழந்தைகள் நிலை குறித்த குறியீடுகளில் சர்வதேச தரங்களுக்கு இணையான அளவுகோல்களை அமைக்கவும் உத்தேசித்துள்ளது.
வழிகாட்டும் கோட்பாடுகள், இலக்கும் அதற்கான செயல் திட்டமும் வழிகாட்டும் கோட்பாடுகள்
தமிழ்நாடு அரசின், குழந்தைகள் கொள்கையின் வழிகாட்டும் கோட்பாடுகளானது கீழ்க்காண்பவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது.
குழந்தைகள் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை 1989 (UNCRC)
தேசியக் குழந்தைகள் கொள்கை 2013 (NPC 2013)
தேசிய செயல் திட்டம் 2016 மற்றும் நமது உலகத்தை உருமாற்றுதல் (NPA 2016)
ஐ.நா.வில் நீடித்த வளர்ச்சி குறித்த 2030க்கான திட்டம்(UN#SDG)
ஆகவே தமிழ்நாடு மாநில குழந்தை களுக்கான கொள்கை பின்வருவனவற்றை அங்கீகரித்து உறுதி செய்கிறது:
18 வயது நிரம்பாத எவரொருவரும் குழந்தை எனக் கருதப்படுவர்.
“குழந்தைகளுக்கே முதல் கவனிப்பு” என்ற கொள்கையின்படி குழந்தைகள் நலம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அவை பொதுத்துறை அல்லது தனியார்துறை அல்லது நிர்வாக அமைப்புகள் அல்லது சட்டமியற்றும் அமைப்புகள் என எவற்றால் மேற்கொள்ளப்பட்டாலும் அவை அனைத்திலுமே குழந்தைகளின் சிறந்த நலனே முதன்மையானதாக கொள்ளப்படும்.
அனைத்து விதமான துன்புறுத்தல், தவறான நடத்தப்படுவது, புறக்கணிப்பு, வன்முறை, கொடுமைப்படுத்துதல் மற்றும் சுரண்டலில் இருந்து பாதுகாக்கப்பட உரிமை உள்ளது.
குழந்தைகள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் அவர்களது கருத்துக்கள் கேட்கப்படவும், மதிக்கப்படவும் மற்றும் அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்த அவர்களுக்கு உரிமை உள்ளது.
நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை நிறைவேற்றுவது, குழந்தைகளின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கு அவசியமானதாகும்.
வாழ்வு (பிறத்தல்), உயிர் வாழ்தல், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து தமிழ்நாடு அரசு அனைத்து குழந்தை களுக்கும் சமமான வாழ்க்கைக்கான வழி, உயிர்வாழ்தல், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்தை அளிக்க உறுதி பூண்டிருக்கிறது. இந்த இலக்குகளை அடைய, குழந்தைகளின் அனைத்து வாழ்க்கை நிலையிலும் உடல்நலம் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம் என்ற அணுகுமுறையை அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
சுகாதார திட்டங்களுக்கிடையே கவனம் மற்றும் இணக்கத்தை அதிகரிக்க, தமிழ்நாடு மாநில, குழந்தைகளுக்கானகொள்கை பின்வரும் அணுகுமுறைகளை கண்டறிந்து கட்டாயப்படுத்துகிறது:
ஒரு பெண் கருவுற்ற நாள் முதல், அந்த குழந்தையின் இரண்டாவது பிறந்தநாளுக்கிடையேயுள்ள காலம் வரை, ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலத்தை கட்டமைக்க தனித்துவமான வாய்ப்பை வழங்குவதால், குழந்தையின் முதல் 1000 நாட்களில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அதிக முன்னுரிமை வழங்குதல், முதல் 1000 நாட்களில் ஒரு குழந்தைக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து, உறவுகள், புரிதல். சமூகமயமாக்கல், உடல் ரீதியான தகவல் தொடர்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை குழந்தையின் எதிர்காலத்தை குறிப்பாக குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் வளர்வதற்கான, கற்றல் மற்றும் மேம்படுவதற்கான திறனை வடிவமைக்கின்றன.
பிறப்பு, குழந்தை பிறப்பிற்கு இடையே யான இடைவெளி மற்றும் உடல்நலத்தில் அதன் தாக்கம் குறித்து தகவல்களை அறிந்து அதற்கேற்றவாறு செயல்பட சமூகத்திற்கு உதவும் வகையில் அனைத்து படிநிலைகளிலும் தகவல்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதை அதிகரிக்கச் செய்வது.
கர்ப்பகால பராமரிப்பு, பாதுகாப்பான மருத்துவமனைப் பிரசவம், மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு உட்பட இனப்பெருக்கம் மற்றும் தாய்சேய் நலம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த சேவைகளை மேம்பட்ட வகையில் வழங்கும் வண்ணம் பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துதல்.
அங்கன்வாடிகளை பலப்படுத்துவதன் மூலம் ஆறு வயதுக்குக் கீழ் உள்ள அனைத்துக் குழந்தைகளும் தரமான குழந்தை பருவப் பராமரிப்பு மற்றும் வளர்ச்சியையும் உலகளாவிய அளவில் சமமான அளவில் பெறுவதை உறுதி செய்தல். பிறப்பில் எச்ஐவி பாதிப்பை தவிர்த்தல் மற்றும் அவ்வாறு தொற்றுள்ள குழந்தைகளுக்கு சரியான பராமரிப்பு வழிமுறைகள், ஊட்டச்சத்து மற்றும் தொடர் பராமரிப்பு ஆகியவற்றை உறுதி செய்தல்.
குடும்பம் மற்றும் சமூக அளவிலுள்ள, சிசு மற்றும் குழந்தை பராமரிப்பு நடைமுறைகளை மேம்படுத்த தேவைப்படும் நடத்தை மாற்றத்தில் கவனம் செலுத்துதல், ஆதரவளித்தல் மற்றும் ஊக்குவித்தல்.
பிரசவத்திற்கு முன்னும், பிரசவத்தின் போதும், அதற்கு பின்னரும் தாய் மற்றும் சேய்க்கு ஏற்பட்டுள்ள குறைபாட்டை (உடல் மற்றும் மனம் தொடர்பான) தடுக்க உரிய நேரத்தில் தலையீடு செய்தல்.
பிரசவத்திற்கு முன்னும் பின்னும் ஏற்படும் குறைபாடுகளை ஆரம்ப நிலையில் கண்டறிதல், சிகிச்சை மற்றும் மேலாண்மை செய்வது போன்ற சேவைகளை வழங்குதல்.
குழந்தைகள் மத்தியிலுள்ள உடல்நல பிரச்சினைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, மேலாண்மை மற்றும் சிகிச்சை செய்ய அமைப்பு முறைகளை மேம்படுத்துதல்.
தற்போது கிடைக்கும் அத்தியாவசிய தாய்சேய் நல சேவைகளை மேம்படுத்துதல்.
பாதுகாப்புத் தரத்தை உறுதி செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொருட்கள் மற்றும் சேவைகளை மட்டுமே அங்கீகரித்தல்.
சுகாதாரம் சார்ந்த புதுமையான செயல்பாடுகளுக்கு ஆதார அடிப்படை யிலான ஆராய்ச்சியை கட்டமைத்தல்.
குழந்தைகளின் உடல்நிலையில் குறைந்த அளவுருக்கள் / தரநிலைகள் உள்ள பகுதிகளில் உரிய கவனத்துடன் தலையீடு செய்தல்.
அனைத்து குழந்தைகளுக்கும் போதுமான உணவு பாதுகாப்பு கிடைப்பதை உறுதிசெய்தல்.
வளரிளம் பருவத்தினர் பாலின ஆரோக்கிய உரிமை மற்றும் சேவையை பெற உறுதி செய்தல்.
நுண்ணூட்டச் சத்துகள் செறிந்த உணவுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவைகள் கிடைக்க பெறுதலை மேம்படுத்துவதன் மூலம் நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகளை தவிர்த்தல்.
கல்வி
ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றல், அறிவு மற்றும் கல்விக்கான சம உரிமை உள்ளது என்பதை தமிழக அரசு அங்கீகரிக்கிறது. சர்வதேச தரத்திற்கு இணையாக குழந்தையின் கல்வித் தேவைக்கும் நல்வாழ்வுக்கும் உகந்த அமைப்பை குழந்தைக்கு கிடைக்கச் செய்வதில், தனது பொறுப்பை அரசு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
கீழே குறிப்பிட்டுள்ளவற்றை உறுதி செய்ய, மாநில அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு அவர்களை பலமாக வைத்திருப்பதற்கு முக்கியத்துவம் தருவது: அவர்களின் வாழ்க்கை, உடல் மற்றும் நடத்தையை தாங்களே நிர்வகிக்கும் அளவுக்கு அவர்களை முழுமையாக ஆற்றல்படுத்துவதற்கான வசதி செய்தல்.
குழந்தையின் உடல், மனம் மற்றும் உணர்வை பாதுகாக்கும் மற்றும் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் பாதுகாப்பான, பத்திரமான கற்றல் அமைப்பை தருதல்.
5 வயது முடிந்த அனைத்து குழந்தை களுக்கும் அவர்களுக்கு அருகாமையில் பள்ளியை அமைத்து குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை உறுதிசெய்தல்.
மிகச் சிறப்பான இடைநிலைக் கல்வியை குறைந்த செலவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்க செய்தல், அதன் மூலம் அவர்கள் உயர்கல்வியை அடைவதற்கான உரிமை உடையவர்களாக்குதல்.
குறிப்பாக வசதியற்ற சமூக பின்னணியில் இருந்து வரும் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு ஆதரவளித்தல், ஊக்கமளித்தல் மற்றும் உதவுதல். பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்குள் மாண்புடன் கூடிய கண்ணியம் மற்றும் நேர்மறை ஒழுக்கமுடைய கலாச்சாரத்தை கட்டமைத்தல்; வகுப்பிற்குள் அல்லது வெளியில் எந்தவொரு வடிவத்திலும் உடல் ரீதியான தண்டனை அல்லது மனரீதியான துன்புறுத்தலை கண்டிப்புடன் தடைசெய்தல்.
அனைத்துக் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் வயதுக்கு ஏற்ற கணினி வழிக் (டிஜிட்டல்) கல்வி வழங்குதல். உள்ளூரில் எளிதில் அணுகும் விதத்தில் பொது நூலகங்களை மேம்படுத்தி குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல்.
இடைநிற்றல் மற்றும் அதற்கான காரணங்களை ஆய்வு செய்ய பள்ளிகளில் குழந்தைகளை தொடர்ந்து கண்காணித்தல்.
அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பான, இலவச, ஒருங்கிணைந்து, சமத்துவமான மற்றும் தரமான கல்வியை உறுதி செய்ய பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்துதல்.
அனைத்து குழந்தைகளையும் பொறுப்புள்ள குடிமக்களாக மேம்படுத்த வழக்கமான பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அரசியலமைப்பு உரிமைகளை அறிமுகப்படுத்துதல்.
உள்ளாட்சி அமைப்புகளுடன் பல்துறையினரின் ஆதரவு மற்றும் ஒருங்கிணைந்து பணிகளை செய்து சமூகம் சார்ந்த அமைப்புகளை வலுப்படுத்துதல்.
பாதுகாப்பு
பல்வேறு வகையில் தவறான நடத்தப் படுதல் (உடல், உணர்வு, பாலியல், புறக்கணிப்பு, மறுப்பு மற்றும் இணையவழி சார்ந்த), பாகுபாடு, சுரண்டல், வன்முறை அல்லது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது அவர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஊறுவிளைவிக்கும் எல்லா செயல்பாடுகளிலிருந்தும் குழந்தைகளை பாதுகாப்பதற்காக சமூகம் சார்ந்த கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நிலைநிறுத்துதல்.
அனைத்து பள்ளிகளையும் குழந்தைகள் பாதுகாப்புக்கு உகந்ததாக மாற்ற குழந்தை பாதுகாப்புச் கொள்கையை அனைத்து பள்ளிகளிலும் அறிமுகப்படுத்துதல்.
பள்ளி அளவில் எழும் புகார்களை விசாரிக்க, பாலியல் ரீதியாக தவறாக நடத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பு சட்டத்திலிருந்து (டஞநஐ) சட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் புகார் குழுவை அமைத்தல்.
தற்போதுள்ள குழந்தை பாதுகாப்பு அமைப்புகளை,குறிப்பாக கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு (யகஈடஈ) மற்றும் அருகாமை குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களை வலுப்படுத்துதல்.
பாதுகாப்பான, மரியாதையான பராமரிப்பு, குழந்தைநேய, பொது கற்றல், ஊடக மற்றும் இணைய வெளிகளை உருவாக்குதல்.
சிறப்பு கவனம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு உரித்தானவற்றை அவர்கள் பெறுவதை உறுதிப்படுத்த சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
குடும்பப் பராமரிப்பு/மாற்றுப் பராமரிப்பை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவன பராமரிப்பை கடைசி முயற்சியாக கருதுதல்.
தங்களின் பாதுகாப்புக்கென இருக்கும் சேவைகள் மற்றும் அமைப்புகள் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் மேம்படுத்துதல்.
குழந்தைகள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் கண்டறிந்து, தலையிட்டு தீர்வு காண கிராமம், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான அமைப்புகளை உருவாக்குதல்.
மனநலம் மற்றும் உளவியல் சார்ந்த-சமூக ஆதரவில் சிறப்புக் கவனம் செலுத்தி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் கீழ் மறுவாழ்வு சேவைகளை தரம் உயர்த்துதல்.
பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் குழந்தைகளின் தனியுரிமையை உறுதி செய்தல்; அவர்கள் தொடர்பான தரவுகளை ரகசியமாக வைத்திருத்தல்.
பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் குழந்தைகள் மீண்டும் பாதிக்கப்படாமல் தடுத்தல் மற்றும் தொடர் கண்காணிப்பு செய்தல்.
குழந்தைகளை பாதுகாப்பதற்கென்றே பிரத்யேகமாக பேரிடம் மற்றும் அவசரநிலை மேலாண்மை அமைப்பை உருவாக்கி செயல்படுத்துதல்.
பல்வேறுபட்ட நிலைகளில் குழந்தை உரிமைகளை பாதுகாப்பதற்கான குறைதீர் அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல்.
பங்கேற்பு
தமிழ்நாடு அரசின் கொள்கையின் பொருத்தப்பாடு, தாக்கம், கூடுதல் மதிப்பு மற்றும் நடைமுறையில் பொருந்தும் தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துகையில், குழந்தைகள் தங்கள் கருத்துக்களை உருவாக்கும் திறன் கொண்டவர்கள் என்பதை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கிறது.
தேவையான பிற நடவடிக்கைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியது:
குழந்தைகளின் வயது, முதிர்ச்சி மற்றும் திறன்களுக்கு ஏற்ப அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், அவர்களில் லட்சியத்தை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், அவர்களின் உரிமைகள் பற்றி அவர்கள் அறிந்து கொண்டனர் என்பதை உறுதிப்படுத்துதல்.
குழந்தைகள் தங்களின் கருத்துக்களையும் தேவைகளையும் வெளிப்படுத்து வதற்கான தளங்களை பலப்படுத்துதல் மற்றும் அவற்றிற் கிடையே இணைப்பை ஊக்குவித்தல்.
குழந்தைகளுக்கான கொள்கை மிகவும் பின்தங்கிய குழந்தைகளைக் கண்டறிதல், புதிய நிரூபிக்கப்பட்ட செலவு குறைந்த செயல்பாடுகளில் ஈடுபடுதல், தடைகளை சமாளித்தல், சர்வதேச, தேசிய அமைப்புகளுடனும் மற்றும் சமூகங் களுடனும் இணைந்து செயல்படுவதன் மூலம் வலிமையான சமபங்கு அணுகுமுறைக்கான தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கையின் அடிப்படையில் குழந்தைகளுக்கான வலிமையான நிலையான மாதிரி வடிவமைப்பை உருவாக்குதல்.
குழந்தைகள் தங்கள் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவதற்காக வாய்ப்புகளை உருவாக்குதல்.
குழந்தையின், குறிப்பாக பெண் குழந்தையின் கருத்துக்களுக்கு மிகுந்த மதிப்பளிப்பதை ஊக்குவித்தல்.
பல துறை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க, உள்ளாட்சி அமைப்புகள், சமூகம் சார்ந்த அமைப்புகள், துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புகள் ஆகியவற்றை பலப்படுத்துதல்.
12 முதல் 18 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் பாலர் சபைகளை உருவாக்குதல்.
பாலர் சபைகள் வருடத்திற்கு நான்கு முறையாவது பாலர் கிராம சபையாக கூடி, குழந்தைகள் தொடர்பான விஷயங் களில் தீர்மானங்களை நிறைவேற்றி, கிராம சபையில் சமர்ப்பித்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்தல்.
புதிய கொள்கை
தற்போதைய கொள்கையின்படி, தமிழ்நாடு அரசு தன் மாநிலத்தின் குழந்தைகளுக்கான தனது கடமையைத் தெளிவுப்படுத்துகிறது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் அவர்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சூழலை பெற்றிருப்பதை உறுதி செய்கிறது. அவர்களின் உரிமைகள் அவர்களின் குழந்தை பருவம் முழுவதும் தொடர உத்தரவாதம் அளிக்கிறது.
இந்த கொள்கையின் முக்கிய நோக்கம், அனைத்து விதமான வன்முறைகளில் இருந்தும் / எந்த வகைப்பட்ட வன்முறையானாலும் குழந்தைகளை, குறிப்பாக எளிதில் பாதிக்கப்படும் குழந்தைகளை பாதுகாக்க பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தற்போதுள்ள நடைமுறையை பலப்படுத்தல்.
இந்தக் கொள்கை நடைமுறைப் படுத்துவதை கண்காணிக்க ஒரு முறையான வழிமுறையை உருவாக்குதல்.
சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பை உருவாக்குதல்.
மாநிலத்தின் அனைத்து குழந்தை களுக்கும் அரசின் கொள்கையை நடைமுறைப்படுத்த தொழில்நுட்ப முன்னேற்றத்தை உகந்த அளவில் பயன்படுத்துதல்.
மாநிலத்தில் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது, அதன் மூலம் அனைத்துக் குழந்தைகள், குறிப்பாக எளிதில் பாதிக்கப் படும் சமூகத்தில் இருந்து வரும் குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கு தமிழ்நாடு அரசு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும்.
குழந்தை பங்கேற்பை ஊக்குவிக்கும் அதேவேளையில் பொது முடிவுகள் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகள், சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆலோசனைகள் மற்றும் கலந்தாய்வுகள் அடிப்படையில் செயல்திட்டம் உருவாக்கப்படும். இந்த செயல்திட்டமானது, பல்துறை ஒருங்கிணைப்பு மற்றும் சிறப்பான பலன்களைத் தரும் விதத்தில் அமையும்.
கொள்கையை செயல்படுத்துவதற்கும் மேலும் கண்காணிப்பதற்கும் மாநில அளவில் பிரத்தியேகமான பல்துறை ஆலோசனை குழு அமைக்கப்படும்.
மேலும், குழந்தைகளின் வளர்ந்து வரும் தேவைகள், விளைவுகள் குறித்த மதிப்பீடு, இந்த கொள்கையின் வரம்பிற்குள் வரும் பல்வேறு அம்சங்களின் அளவீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் போதுமான நிதி ஆதாரத்தை ஒதுக்குவதற்கு தமிழ்நாடு அரசு ஒரு குழந்தை வரவு-செலவுத் திட்டத்தை ஆய்வு செய்யும்.